அன்னை மரியாள் Mother Mary Talks in Tamil

 

அன்னை மரியாள்

1. அன்னை மரியாள் எனும் முன்மாதிரி

உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் இறைமகன் இயேசுவுக்கு அடுத்தபடியாக அவரை ஈன்று, வளர்த்து உலகுக்குத் தந்த அன்னை மரியாளை வழிபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் ஆரோக்கிய அன்னை வேளாங்கன்னியாக அருள்பாலித்துவரும் மரியாளின், விண்ணேற்றப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல அன்னை மரியாளின் பிறந்தநாளான செப்டம்பர் 8 ஆம் தேதியைஆரோக்கிய அன்னை திருவிழாவாககொண்டாடுகிறார்கள்.

கத்தோலிக்க மதத்தின் தாய்தெய்வ வழிபாட்டில் முக்கிய அங்கமாக இருக்கும் அன்னை மரியாளின் வாழ்வு மலர்பாதையில் நடந்து வந்தது அல்ல. ஒரு தன்னலமற்ற தாயாக அவர் இருந்தார். அவர் வாழ்ந்து காட்டிய முன்மாதிரி அபூர்வமானது.

மனித குலத்தை மீட்கப் போகும் தனது மகனை, ஆண்-பெண் பாலுறவு எனும் முதல் பாவத்தின் வழியாக உலகுக்கு அனுப்பப் பரலோகத் தந்தை விரும்பவில்லை. தன்னலமற்ற, ஆனால் தேவச் சட்டத்தையும், தீர்க்க தரிசனங்களையும் மதித்து நடக்கும் ஞானம் நிறைந்த ஒரு கன்னியின் வயிற்றில் பரிசுத்த ஆவியின் வல்லமையால் இயேசுவைக் கருக்கொள்ளச் சித்தம் கொண்டார். அதற்கு அவர் தேர்வு செய்த உத்தமப் பெண்மணிதான் மரியாள்.

அப்போது மரியாளுக்கு நசரேத்தூர் யோசேப்புடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.தனது வாழ்வின் முக்கிய பகுதியாகிய திருமண வாழ்வை எதிர்கொள்ளக் காத்திருந்த நேரத்தில், காபிரியேல் இறை தூதன் அவர் முன் தோன்றி அறிவித்தார். மரியாளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

முதலில் பயந்தார். பிறகு ஆச்சரியப்பட்டார். ஒரு கன்னிகையாக இருந்ததால், “என் கணவனை நான் அறியேனே? எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்?” என தெளிந்த சிந்தனையுடன் கேட்டார். இந்தப் பிறப்பு பரிசுத்த ஆவியால் சம்பவிக்கும் என்பதை இறைதூதன் அறிவித்தபோது, பரலோகத் தந்தை அனுப்பிவைத்த அந்தச் செய்தியை தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு, “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவதுஎன்று கூறினார்(லூக்கா 1:30-38).

கடவுள் தன்னைத் தேர்ந்துகொண்டதை தனக்குக் கிடைத்த மாபெரும் பாக்கியமாக மதித்து ஏற்றுக்கொண்டாலும் அதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளையும், கஷ்டங்களையும், தாங்கிக்கொள்ள முடிவு செய்தார். எனினும் மனபோராட்டங்கள் அவரை தாக்காமலா இருந்திருக்கும்? நமக்கென்று நிச்சயயிக்கப்பட்ட ஆண்மகன் திருமணத்துக்கு முன்பே நாம் கர்ப்பமானதை அறிந்துகொள்ளும்போது, என்னை மணரத்து செய்ய நினைத்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் மரியாளைத் துன்புறுத்தாமலா இருந்திருக்கும்? ஆனால் கடவுள் அனைத்தையும் வழிநடத்துவார் என்று மரியாள் திடமான விசுவாசம் கொண்டார்.

தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் கர்ப்பமுற்றிருப்பதை அறிந்து கடும் மனப்போராட்டத்தில் இருந்த யோசேப் மரியாளை ரகசியமாக மணரத்து செய்துவிட நினைத்தார் ஆனால் கடவுள் யோசேப்பை ஆற்றுப்படுத்தினார்.

நம்பிக்கை வைத்த நல்லாள்

யோசேப்புக்குத் தோன்றிய தேவதூதன்உன் மனைவியாகிய மரியாளைக் காக்கத் தயங்காதே; அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்என்றார்.

அந்தத் தெய்வீகக் கட்டளையைப் பெற்ற பிறகு, யோசேப்பு அதற்கேற்ப செயல்பட்டு மரியாளைக் கண்டு அவரைக் கண்ணும் கருத்துமாக காத்து வந்தார்(மத்தேயு 1:20-24). ஏழைக் குடும்பத்தின் தாய்

பரலோகத் தந்தை தனக்குக் கொடுத்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு தெய்வத்தாயாக மாறிய மரியாள், இயேசு பிறந்து சுமார் 40 நாட்களுக்குப் பிறகு, எருசலேமுக்குச் சென்று நியாயப் பிரமாணத்தில் சொல்லப்பட்டிருந்தபடி பலி செலுத்தினார்கள். நியாயப் பிரமாணக் கட்டளைப்படி, காட்டுப்புறாவுடன் செம்மறியாட்டுக் கடாவையும் பலியாகச் செலுத்த வேண்டும்.

ஆனால் அவர்களால் அந்தப் பலியை செலுத்த முடியவில்லை. ஏழைகளுக்காக நியாயப் பிரமாணத்தில் ஓர் ஏற்பாடு இருந்தது. அதன்படி யோசேப்பும் மரியாளும்ஒரு ஜோடி காட்டுப் புறாவை அல்லது இரண்டு புறாக் குஞ்சுகளைகாணிக்கையாகச் செலுத்தினார்கள்(லூக்கா 2:22).

விலை குறைந்த ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்தியதால் அவர்கள் ஏழைகள் என்பது தெரியவருகிறது. ஒரு ஏழைக் குடும்பத்தின் இல்லத் தலைவியாக மரியாள் வாழ்ந்தார்.

எருசலேம் தேவாலயத்துக்குக் தன் கணவரோடு சென்று பலிசெலுத்தித் திரும்பியபோது, சிசுபாலன் குழந்தை இயேசுவைக் கண்டார் ஒரு முதியவர். அவர் சிமியோன். பக்தியும் ஞானமும் மிக்க முதிய இறைவாக்கினரான அவர் மரியாளிடமிருந்து குழந்தையை வாங்கி ஆசீர்வதித்த அதேநேரம்உன் இதயத்தை ஒரு வாள் உருவிப்போகும்”(லூக்கா 2:25-35) என்று கூறினார்.

பெண்ணே பின்னாளில் உன் மகன், சிலுவை மரணத்துக்கு தீர்ப்பிடப்படுவன். அப்போது உன் இதயம் நொறுங்குண்டு போகும் என்பதையே சிமியோன் அவ்வாறு முன்னுரைத்தார். சிமியோன் அப்படிக் கூறியதைக் கேட்டு அந்தத் தாய் எப்படித் துடித்திருப்பார்?

காணமல் போன மகன் கண்ணீர் சிந்திய தாய்

பிறகு இயேசு பதின் பருவத்தைத் தொட்டு நின்ற சிறுவனாக இருந்தபோது பாஸ்கா பண்டிகைக்காக யோசேப்பு தனது குடும்பத்தை எருசலேமுக்குக் கூட்டிச் சென்றார். ஆண்கள் மட்டுமே செல்ல வேண்டியதாக இருந்தபோதிலும், ஆண்டுதோறும் குடும்பமாக எருசலேமுக்குச் செல்வது அவரது வழக்கமாக இருந்தது.

நாசரேத்திலிருந்து எருசலேம் செல்வதற்கு அவர்கள் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது. கணவரின் சொல்லைத் தட்டாமல் மரியாள் ஒவ்வொரு ஆண்டும் அவரோடு நடந்து வந்தது மட்டுமல்ல, வழிநெடுகிலும் அவர்களுக்கு சமைத்துத் தந்து, அவர்கள் களைப்படையாமல் பார்த்துக் கொண்டார்.

இப்படிப்பட்ட பாஸ்கா பயணத்தில் தன் மகன் காணாமல் போய்விட்டால் ஒரு தாயின் மனநிலை எப்படியிருக்கும். கண் முன்னால் நடந்து போய்க்கொண்டிருந்த மகன் இயேசுவைக் காணவில்லை என்றதும் தவித்துப்போனார்.

உள்ளம் பதைபதைக்க எருசலேமை அடைந்ததும் அங்கே தேவாலயத்தில் தன் மகனைக் கண்டார். அந்த தெய்வத்தாய்க்கு மகன் மீது கோபம் கோபமாக வந்தது. ஆனால் அங்கே நியாயப் பிரமாணத்தில் தேர்ச்சி பெற்ற போதகர்கள் மத்தியில் அமர்ந்து அவர்களிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார் இயேசு பாலன்.

இதைப் பார்த்துக் கோபம் அத்தனையும் வடிந்துபோனது. 12 வயதே நிரம்பிய தன் மகன் கடவுளுடைய வார்த்தையில் அதிக ஞானமுடையவராகவும் அறிவுடையவராகவும் உரையாடுவதைப் பார்த்து மரியாள் வியந்தார். மகனின் மேதமை அந்தத் தாயை கனிய வைத்தது.

மகனின் மரணத்தைத் தாங்கிய தாய்

இவை எல்லாவற்றையும்விட கண் முன்னால் ரத்தம் சொட்டச் சொட்ட சிலுவையைச் சுமந்தபடி கல்வாரி மலை நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட மகனைச் சந்தித்த தாயின் பார்வை மொழியை எண்ணிப்பாருங்கள்.

பிறகு குற்றுயிரோடு கள்வர்கள் நடுவே மகன் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டபோது எப்படித் துடித்திருப்பார். பிறகு அவர் உயிர் விட்டதும், சிலுவையிலிருந்து இறக்கிய மகனின் உடலை மடியில் கிடத்திக்கொண்டபோது அந்தத் தாயின் இதயத்தை சீமோன் குறிப்பிட்ட கொடுந்துயர் எனும் வாள் எத்தனையாவது முறையாக ஊடுருவிச் சென்றிருக்கும்? இறைமகனை கர்ப்பத்தில் சுமந்து, பெற்று, வளர்த்து பிறகு மரணத்துக்குக் கொடுக்க வேண்டும் என்பதை ஒரு பெண் அறிந்திருந்து வாழ்நாள் முழுவதும் துயர் கொள்வது எத்தனை பாரமானது? இத்தனை பாரங்களை மரியாள் சுமந்த காரணத்தால்தால் இன்று உலகம் அவரைக் கொண்டாடுகிறது.

2.கிறிஸ்தவ வாழ்க்கையில் அன்னை மரியாளின் பங்கு                    

மீட்பராகிய தன் மகன் மீது மரியாளுக்கு பலமான விசுவாசம் இருந்தது. அவருடைய மரணத்திற்குப் பிறகும் அந்த விசுவாசம் தணிந்துவிடவில்லை. அவருடைய உயிர்த் தெழுதலுக்குப் பின், ஜெபம் செய்வதற்காக ஒன்றுகூடி வந்த உண்மையுள்ள சீடர்களுடன் அவரும் இருந்தாள். அவர் ஏற்றுக்கொண்ட வலிகள், அவரை வழிபாட்டுக்குரிய அன்னையாக மாற்றியிருக்கின்றன. இவர் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்.

 

 

கிறிஸ்தவ வாழ்க்கையில் அன்னை மரியாளின் பங்கு மிக முக்கியமானது. இறை  மகன் இயேசு, மானிட மகனாக மண்ணில் வருவதற்கு கடவுள் தேர்ந்தெடுத்த கருவி தான் மரியாள். எனவே தான் மரியாளின் இடம் கிறிஸ்தவத்தில் மிகவும் முக்கியமானதாகிறது. அன்னை மரியாளைப் பற்றி சிந்திக்கும்போது இந்த பத்து விஷயங்களும் மனதில் நிழலாடுகின்றன.

  1. தூய்மை ! கடவுள் தனது விண்ணக மகனை மனிதனாக மண்ணில் அனுப்ப வேண்டும் என முடிவெடுத்தபோது அவருடைய கண்ணுக்குத் தெரிந்த ஒரே தூய்மையான பெண்மணி மரியாள். அவருடைய சிறு வயது வாழ்க்கை அந்த அளவுக்கு இறை அர்ப்பணமும், தூய்மையும் நிரம்பியதாய் இருந்தது !
  1. அற்பணிப்பு ! திருமணத்துக்கு முன்பே தாயாகவேண்டும், இறைவனின் குழந்தையை ஏந்த வேண்டும் எனும் அழைப்பு வானதூதர் மூலம் வந்தபோது தன்னை முழுமையாய் அற்பணித்தார் மரியாள். உலகின் எதிர்ப்புகளுக்கோ, அவமான வார்த்தைகளுக்கோ கலங்காமல், இறைவனின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
  1. இயேசுவை கருவாய் சுமந்தது முதல், உயிரற்ற உடலாய் கல்வாரி மலையில் சிலுவை அடியில் சுமந்தது வரை இயேசுவோடு கூடவே இருந்தார் மரியாள். இயேசுவின் பணிவாழ்வில் குறுக்கிடாமல் அதையும் இறைவனின் விருப்பத்துக்காய் அர்ப்பணித்தார்.
  1. மண்ணகத் தாய்க்குரிய பரிதவிப்பும், பாசமும் அன்னை மரியாளிடமும் இருந்தது. இயேசுவுக்கு பன்னிரண்டு வயதானபோது திடீரென ஒருமுறை காணாமல் போய்விட்டார். அப்போது பதட்டமும், பாசமுமாய் அன்னை அவரைத் தேடி நாள் கணக்கில் அலைந்து திரிந்தது அவருக்கு மகன் மீது இருந்த பாசத்தைக் காட்டுகிறது.
  1. தாழ்மையின் இலக்கணமாய் அன்னை மரியாள் இருந்தார். கடவுளைக் கருவில் சுமந்திருந்த காலத்திலும் உறவினர் எலிசபெத் தாய்மை நிலையில் இருப்பதை அறிந்து தொலை தூரம் கடந்து அங்கு சென்றார். அவரை வாழ்த்தினார்.

5.       மரியாள் புரட்சிப் பெண்ணாய் இருந்தார். எலிசபெத்தை வாழ்த்திய மரியாள், இறைவனுக்கு புகழ் பாடல் ஒன்றைப் பாடினார். அது புரட்சி கீதமாய் இருந்தது. “உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்என்றெல்லாம் அவர் பாடல் ஒலித்தது. பின் அவருடனே மூன்று மாதங்கள் வரை தங்கி உதவியாய் இருந்தார்.

  1. இயேசுவின் முதல் அற்புதத்தை துவக்கி வைத்தவர் அன்னை மரியாள் தான். கானாவூரில் திருமண வீட்டில் திராட்சை ரசம் தீர்ந்து விட்டது. அப்போது அன்னை இயேசுவிடம் சென்று தகவலைத் தெரிவித்து முதல் புதுமை நிகழக் காரணமாய் இருந்தார்.

7.       ஒருமுறை அன்னை இயேசுவைக் காணச் சென்றார். இயேசுவோஎனது வார்த்தைகளின் படி வாழ்பவர்களே எனது தாயும், சகோதரர் சகோதரியும்என்றார். அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அன்னை அமைதியாக அகன்றார். இயேசுவின் சிந்தனைகளுக்கும், போதனைகளுக்கும் குறுக்கே வரவேயில்லை. அங்கும் இறை சித்தமே முக்கியம் என்றார். சுயநலத்தை ஒதுக்கி வைத்து இறைநலத்தை முன்னிறுத்தினார் அன்னை.

  1. அன்னை மரியாள் வலிகளைத் தாங்கினார், விலகி ஓடவில்லை. இயேசு சிலுவையின் உச்சியில் சொட்டுச் சொட்டாய் மரணித்துக் கொண்டிருந்தபோது சிலுவையின் அடியிலேயே உயிர் துடிக்கத் துடிக்க நின்றிருந்தார் அன்னை மரியாள். விலகி ஓடவில்லை. அழுது புலம்பவில்லை. இயேசுவின் மாபெரும் மீட்பின் திட்டத்துக்காக வலிகளை தாங்கிக் கொண்டார்.
  1. அன்னை மரியாள் விசுவாசத்தில் ஆழமாய் வேரூன்றியிருந்தார். தன் மகன் செய்வதெல்லாம் சரியானதாகவே இருக்கும் எனும் விசுவாசம் அவருக்கு இருந்தது. அவரால் புதுமைகள் செய்ய முடியும் எனும் விசுவாசம் இருந்தது. அவர் கடவுளின் மகன் எனும் விசுவாசம் அவருக்கு இருந்தது.
  1. மரியாளை கத்தோலிக்கத் திருச்சபையினர் வேண்டுதல்களின் இடையாளராகப் பார்க்கின்றனர். அதாவது மரியாள் மூலமாக இயேசுவிடம் வேண்டலாம் என போதிக்கின்றனர். பிரிவினைச் சபையினர் அவரை ஒட்டு மொத்தமாக ஒதுக்குகின்றனர். இந்த இரண்டு மனநிலைகளையும் தாண்டி, மரியாளின் பணிவு, உண்மை, அர்ப்பணம், விசுவாசம், உறுதி, சுயநலமற்ற தன்மை போன்ற குணாதிசயங்களை கற்றுக் கொள்வதே சிறந்த வழியாகும்.

 

3.தாழ்ச்சியை ஆடையாக கொண்டவள்

தாழ்ச்சி எனும் பொருளில் பொதிந்துள்ள அடையாளங்களை சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

பொறுமை:
நாம் எந்த அளவு தாழ்ச்சியைக் கொண்டுள்ளோமோ அதே அளவு பொறுமையும் கொண்டுள்ளவர்களாக திகழ்கின்றோம். காரணம் சகிப்பு தன்மை இங்கே மேலோங்கும். கோபம் அறவே குறையும். கோபத்தினால் எதையும் சாதிக்க இயலாது. பொறுமையினால் எதையும் முடியும்.

எளிமை:
நம் பேச்சிலும், சொல்லிலும் செயலிலும் வாழ்க்கை முறையிலும் எளிமையை கடைபிடித்தால் இங்கே தாழ்ச்சி மேலோங்கி நிற்கும். எளிமையானது அதிகார போக்கினை அறவே அகற்றுகிறது. ஏழைஎளியோரை நம்மவராக ஏற்கின்றது.

அன்பு செயல்:
தான் சொல்வது, செய்வது தான் சரி என்று எண்ணுபவர்கள் புத்திசாலிகளாக இருக்கமுடியாது. அடுத்தவர்களை அன்பு செய்து அவர்களது நல்ல எண்ணங்களை ஏற்று செயலாக்கம் செய்வதே தாழ்ச்சியின் அடையாளமாகும்.

மன்னித்தல்:
உறவுகளில் பிளவுகள் ஏற்படுதும் இயல்பு. அந்த உறவுகள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் உறவு வளர வேண்டும். இவ்வாறு நல்ல எண்ணங்களை கொண்டுள்ளவர்கள் இருப்பின் அவர்கள் தாழ்ச்சியில் வளர வேண்டியவர்கள் என்பதை உணர்ந்திடுவீர்.

குறைகளை ஏற்றுக் கொள்ளுதல்:
நாம் சில நேரங்களில் தவறுகளை நியாயப்படுத்துகின்றோம். பிறர் குறைகளை சுட்டிக் காட்டுகின்றோம். ஆனால் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் நமக்கு ஆசிரியராக அமையமுடியும். நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு பாடமாக அமையும். எனவே குறைகளை ஏற்றுக் கொள்ளும் போது இங்கே தாழ்ச்சி மேலேதங்கி நிற்கின்றது. வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் தாழ்ச்சி தேவையாகும்.

துன்பங்களை ஏற்றுக் கொள்ளுதல்.
நம் வாழ்வில் துன்பம் ஓர் அம்சமாகும். தோல்விகள், இழப்புகள் ஏதோ ஒரு வழியில் பலன் தரலாம். தரமால் போகலாம். ஆனால் மாற்றமுடியாத துன்பங்களை ஏற்றுக் கொள்வதே சரி! கடந்த காலம்ää எதிர்காலங்களை சிந்திக்காமல் நிகழ் காலத்தை சிறப்பாக செய்வதே தாழ்ச்சியின் அடையாளமாகும்.


 
 

மேற்கண்ட கருப்பொருயை நம் வாழ்வாக்கி கொள்ளும்போது மாமரியின் தாழ்ச்சியை நாம் ஆடையாக அணிந்துக் கொள்கின்றோம். எனவே தாழ்ச்சி தரணியை ஆளட்டும். ஒவ்வொருவரின் இதயங்களை ஆட்கொள்ளட்டும். தாழ்ச்சியின் அடையாளங்களை ஆடையாக அணிந்துக்கொள்வோம். அன்னை மரியின் சீடர்களாக வலம் வருவோம்.

 

 

 

 

4.அன்னையின் பிறப்பே ஓர் அதிசயம்

அருள்பணி MI.ராஜ்.SSS

''அன்னையைப் போல ஒரு தெய்வமில்லை, அவள் அடிதொழ மறப்பவர் மனிதரில்லை. மண்ணில் மைந்தரில்லை.'' கிறிஸ்தவர்களின் பக்திக்கும், வணக்கத்திற்கும் மரியாதைக்கும், போற்றுதலுக்கும் மிகவும் உரித்தானவள் அன்னை மரியாள். தன் மகன் இயேசுவைப் போல, சகல மனிதரின் விடுதலைக்காக மௌனமாய்ப் போராடி, தன் அன்பு மகனின் மீட்பு போராட்டத்தில் ,தனது பங்கை வல்லமையாய் நிருபித்து , ஏழை மக்களின் கண்ணீர் துடைக்கக் காலமெல்லாம் இயேசுவிடம் பரிந்துப் பேசி மக்களின் சுகமே தனது சுகம் என, தன் சுகம் மறந்து, ஒரு நிமிடம் கூட வாழ்நாளில் தனக்காக வாழாத ஒரு மாபெரும் தாய்மையின் பொக்கிஷம் மரியாள் தனது மகிழ்ச்சியே, தனது மக்கள் தான் என்பதை வாழ்ந்துக் காட்டியவள் மரியாள். சுயநலமும், போட்டியும், பொறாமையும், அகங்காரமும், அசிங்கமும், ஆணவமும் தலைவிரித்தாடும் இத்தரணியில் பெண்ணாய் பிறந்துப் புனிதையாய் வாழ்ந்தவள் நம் தாய் மரியாள். இவள் சாதாரணப் பிறவி, இறைவனின் புனிதகரத்தால் பரிசுத்தமாய் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதை அன்னை மரியாளின் வாழ்வு நிருபித்துக் காட்டுகிறது.

மாசற்ற குழந்தையாய் பிறந்து, ஏழைபெண்ணாய் பருவம் எய்தியபோது இறைவனின் சவாலை ஏற்று, ஒரே மகனை இந்த மனுகுலத்திற்கு வார்த்துக் கொடுத்ததல்லாமல்விதவையான பருவத்தில் உயிர் இழக்க வேண்டிய மகனின் சிலுவையின் அடியில் நின்று, "உலகத்திற்குத் தாயாய் இருப்பீர்" என்று சொன்ன மகனின் வார்த்தையை, மறுக்காமல், மரியாள் ஏற்றாளே! இவள் என்ன சாதாரணப் பெண்ணா? ''உமக்கும் பெண்ணுக்கும், உன் வித்திற்கும் அவள் வித்திற்கும் இடையே பகையை உண்டாக்குவோம். அவள் உன் தலையை நசுக்குவாள்'' (தொ.நூ.3:15) என்று இறைவன் சொன்னபோதே, மரியாளை ஆண்டவர் முன்குறித்து வைத்திருந்தார் என்பது தெளிவாகிறது. '' என் அன்பே ...உன்னில் மாசுமருவே கிடையாது " இனிமைமிகுப் பாடல் 4: வரிகளும் அன்னைமரியாளின் பிறப்பின் இயல்பை எடுத்துச் சொல்கிறது. அருள் மிகப் பெற்றவரே (லூக். 1:42) என்ற எலிசபெத்தின் வாழ்த்துரை மரியாளின் அமலோற்பவத்திற்குச் சிறந்த எடுத்தக்காட்டு.

தாய் வயிற்றில் கருவான நேரம் முதல் பிறப்பு வரை மரியாள் ஜென்மப் பாவமாசு எதுவுமின்றி, காப்பாற்றப்பட்டாள். ஆகவே இறைவன் மரியாளைக் கருவிலே புனிதப்படுத்தி, மரியாளைத் தன் மகனின் வழியாய்க் கொணரவிருக்கும் மீட்பின் போராட்டத்திற்குத் தயார்படுத்தினார் என்பதுதான் உண்மை. ஆகவே அவளின் பிறப்பு அமலோற்பவமாக மாறியது. நாம் தூயவராகவும் மாசற்றோராகவும் தன் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாக தேர்ந்தெடுத்தார்.(எபேசி.1:4) என்ற வசனங்கள் மரியாளுக்குப் பொருத்தமாக அமைகிறதுஅன்னைமரியாள் இயேசுவைக் கருவிலே தாங்குவாற்காக, மரியாளுக்கு ஆண்டவர் தொடக்க முதல் சிறப்புக் கவனம் செலுத்தி, தன் பாதைக்குப் பக்குவபடுத்தி இன்று அமலோற்பவி என்று போற்றுதற்குரியவராக மரியாளை இறைவன் மாற்றினார்.அதற்கேற்ற வண்ணமாக மரியாள் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துக் காட்டி '' இன்னாள் முதலாய் எல்லாத் தலைமுறையும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே "" என்று தன்னைப் பிரகடனப்படுத்தினாள். எனவே நாமும் திருமுழுக்கால் நமது ஜென்மப் பாவத்திலிருந்து விடுபடுகிறோம். பாவத்தை விட்டு, பாதைகளை மாற்றிக் கொள்கிறபோது நாமும் மரியாளின் பங்காளிகள் தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

5. அன்னை மரியின் பிறப்பு விழா.

திருமதி அருள்சீலி அந்தோணி-சென்னை.

mother mary

செப்டம்பர் 8ஆம் நாள் அன்னையின் பிறப்பு விழா.
அன்னையின் பிறப்பு மானிடர் அனைவருக்கும் சிறப்பு!
இது திருச்சபையின் மாபெரும் சிறப்பு விழா.
உலகின் பிறப்புகள் அனைத்திற்கும் மீட்பின் வித்திட்டநாள்!
 
வாழ்வின் வித்தான விந்தைகளை
நன்றி விதைகளாக தரணியில் முளைத்துள்ளாய்.
கருவின்போதே கறையொன்றும்
படியாத இறைமகளாய்
அழைப்பு பெற்றவளே மாமரி.
அருள் நிறைந்த மரியே! என்று
அன்று வானதூதரால் வாழ்த்துப்
பெற்று அழகின் முழுமையானவள்.
 
அனைத்து அருள் வரங்களோடுஅழகில் மிளர்பவள்!
ஆதவனை ஆடையாய் அணிந்த சுடரொளி!
படைப்புகளிலே ஜென்ம பாவம் அறியாதவள்!
சாலமோனின் எழினிகளைப் போல்
அழகு வாய்ந்தவள் அன்னை மாமரி!
 
காண்போரை கவர்ந்திழுக்கும் காந்தசக்தி மரியா!
மரகதம் சூடிய வானவில் போன்ற அரியணை அவள்!
மாந்தரை காத்திடும் ஓர் உன்னத ஓவியம்!
தவறிய மாந்தரை வென்றெடுக்க இறைவன்
சுவக்கின் அன்னம்மாள் கருவறையில்
வரையப்பட்ட வண்ண ஓவியம் மரியா!
 
நமது பார்வைகள் பெலிவு பெற!
எண்ணங்கள் ஏற்றம் பெற!
அன்னையின் வழி தூயதாக்கிட
நம் சிந்தையில் ஏற்போம் 
மாமரியின் பதம் சேருவோம்..
 
அன்று வான தூதரின் வார்த்தைகளை
"அப்படியே ஆகட்டும்" என்று தாழ்ந்து ஏற்றவளே!
நற்செய்தியின் முதல் சீடத்தியாக
யூதேயா மலைநாட்டிற்கு கடந்து சென்றவளே!
 
மனிதநேயம் இங்கே நிரம்பி வழிகிறது!
மரியா அருள் ஊற்றாகி முழுமையானாள்!
அன்னை அன்பின் நிறைகுடம்!
பிறர்குறை நீக்கும் மணிமகுடம்!
கருணையின் ஊற்று!
 
மீட்பின் அருள்கொடை மாமரியே!
உம் பிறப்பு விழாவில் மானிடர் யாம் இன்புற
எம் பாவசேற்றில் செந்தாமரையாய் மலர்பவளே!
எம்மை காத்தருள்வாய் மரியே!
 
அன்னையின் ஆசீரை நாளும் பெற்றிட இந்நாள்
நம் வாழ்வின் பொன்னான நாள்.
அன்னையின் அருள்வரங்களை நாளும் பெற
அன்னையின் தாழ்ச்சியை ஆடையாக அணிவோம்!
 
வறியோர் எங்களின் வாழ்த்துக்களை ஏற்றருள்வாய்.
இத்தரணியரை மகிழ்விப்பாய் தாயே!
அழகோவியமே! உமை வணங்குகின்றோம்!   
 
 

6. அருள் நிறைந்த மரியே நின்னடி பணிந்தேன்

திருமதி அருள்சீலி அந்தோணி -ஆலந்தூர்



ன்பினில் உதித்த இனிய நல் இயேசுவே

ருவினில் தாங்கிய கன்னிமேரியே

அருள் தனைப் பொழியும் அமலியே! நாளும்

உளம் நினைந்து வேண்டுவோர் வாழ்வை

வளம் நிறைப் பொழிந்து மலரச் செய்வாய்!

மானிடரை மீட்க ண்ணில் மனு வுருவான

இறையினை ரிவுடன் உவந்து

அளித்திடும் தாயே! வருந்துவோர்

குறையை நீக்கிடும் நிர்மலனின் பேழையே!

மண்ணேர் பாவத்தை ன்னிக்க நாளும்

விண்ணோர் அரசியே கன்லின் சுவையே

அஞ்சலி புரிந்து அண்டிடும் வறியோர்

சஞ்சலம் போக்கும் இன்ச்சுடரே!

வேளை மாநகரிலிருந்தே இராணியே!

வேண்டிடும் ஏழைக்கு வேண்டிய வரந்தனை

உன் திருமகனின் உளம் மகிழ்ந்தே தாரும்
நாளும் துதித்து மகிழ்ந்துப் பணிந்தேன்

 

 

 

 

7.பாத்திமாவில் அன்னையின் அழைப்பு

நவராஜன்

1916ஆம் ஆண்டு வசந்தக் காலத்தில், ஐரோப்பாவில் பகையும் புகையும் சூழ்ந்து முதல் உலகப் போர் நடைப்பெற்று வந்த நேரம். ஐரோப்பியக் கண்டத்தின் தென்மேற்குக் கடற்கரை ஒட்டிய போர்ச்சுக்கல் நாட்டின் பாத்திமா என்ற சிற்றூரின் வயல்வெளிகளில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த லூசியா சாந்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ ஆகியோருக்கு மூன்று சிறுவர்களுக்கு அன்னை மரியாள் தோன்றி, உலக அமைதிக்குத் தேவையான சில செய்திகைளை வெளிப்படுத்தினார். அந்தத் திருக்காட்சி நிகழ்வுகளின் நூறாவது ஆண்டுக் கொண்டாடப்படும் இவ்வேளையில் அன்னை மரியாவின் செய்திகைளை இன்றைய உலகம் மீண்டும் அலசிப்பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

அன்னை வெளிப்படுத்திய மூன்று இரகசியங்கள் நிறைவேறிவிட்ட நிலையில் அன்னை உலகமக்களுக்கு விடுத்த செய்திகளையும், அவற்றில் நமக்குள்ள கடமைகளையும் நாம் புரிந்துக் கொள்ளதல் அவசியமாகிறது. அன்னைக் கொடுத்த காட்சிகள் அனைத்திலும் அவர் விடுத்த வேண்டுகோள்: ”தவம், செபமாலைச் செபித்தல், அன்னையின் மாசற்ற இதயப் பக்தி.”

1 தவம்: - மக்கள் தங்கள் பாவ வாழ்க்கை முறைகளிலிருந்து திருத்தி வாழ வேண்டும், அவர்கள் தங்கள் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர்கள் பாவங்களால் இறைவனைப் புண்படுத்தியது போதும். மேலும் அவரை வருத்தும் செயல்களை மனிதர்கள் நிறுத்தாவிடில் இதனை விடக் கேடானது நிகழும். எனவே பாவங்களுக்குப் பரிகாரமாகத் தவம் செய்ய வேண்டும்என்று அழைப்பு விடுத்தார் அன்னை. இதன்படி முதல் உலகப்போர் 1918 ஆண்டு முடிவிற்கு வந்தது. 1938 ஜனவரி 25-ஆம் நாள் அன்னை முன்னறிவித்த பேரொளி ஒளி, வானில் தோன்றி, பூமியின் வட அரைக்கோளம் முழுவதும் ஒளிர்ந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் மூண்டது. மீண்டும் மாபெரும் உயிர்சேதங்களும், பொருள்சேதங்களும் ஏற்பட்டன.

2 செபமாலை: - பாவங்களுக்காகப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று மூன்று பிள்ளைகளுக்கும் அன்னைச் சொன்ன அதே வேளையில், செபமாலைச் செபிக்கவும் அழைப்பு விடுத்தார். அன்னைக் காட்சிக் கொடுத்த ஆறுமுறைகளிலும் உலக அமைதிக்காகச் செபமாலை ஒரு கருவியாகத் தினசரி பயன்படுத்த வேண்டும் என்று மொழிந்தார். முதல் உலகப்போர் முடியும் வரை செபமாலையைத் தியானித்துச் செபமாலை அன்னைக்குக் காணிக்கையாக ஒப்புகொடுக்கப் பணித்தார். ஆனால் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் முடிந்தலும் உலகத்தில் போர்களும் பயங்கரவாதமும் மாறிமாறி ஒரு சூழற்சியாக நடைப்பெற்றுக் கொண்டே தான் இருக்கின்றது. அவைகள் இன்னும் முடிவுக்கு வர இல்லை.

3. அன்னையின் மாசற்ற இதயப் பக்தி:- 1917 ஆம் ஆண்டு ஜூலை மாதம் காட்சிக் கொடுத்த அன்னை லூசியாவிடம்ஜெசிந்தாவும், பிரான்சிஸ்கோவும் விரைவில் விண்ணகம் வந்துவிடுவார்கள். ஆனால் நீ மட்டும் உலகில் சிறிதுக் காலம் இருந்து இருக்க வேண்டும். மக்கள் என்னைப் பற்றி அறியவும், என்னை அன்புச் செய்யவும் உன்னை ஒரு கருவியாக இயேசு தேர்ந்தெடுக்க விரும்புகிறார். என் மாசற்ற இதயப் பக்தியை உலகம் முழுவதும் உருவாக்க விரும்புகிறார்என்று கூறினார். இந்த மாசற்ற இதயப் பக்கதியைப் பற்றி 1917ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் பல தடவை லூசியாவிடம் எடுத்துக் கூறியுள்ளார் அன்னை மரியாள். ரஷ்யா மனந்திருந்த அன்னை செபமாலைச் செபிக்கவும், ரஷ்யாவை அன்னையின் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கவும் அன்னைக் கேட்டுக்கொண்டார்.

இதன்படி 1942ம் ஆண்டுத் திருத்தந்தை 12ம் பயஸ் முதலில் உலகத்தையும், 1952 ஜூலை 7ஆம் தேதிசாக்ரோ வெர்ஜெந்தே அன்னோ” (Sacro Vergente Anno) என்ற தனது திருத்தூது மடல் வழியாக ரஷ்யாவையும் மரியாவின் மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணித்தார். 1984ல் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் உலகத்தை மீண்டும் மரியாவின் மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணித்தார். 1990களில் ரஷ்யா கம்யூனிசக் கொள்கைகளில் இருந்து மனந்திரும்பியது.

அன்னை அறிவித்த மூன்று இரகசியங்கள் நிறைவேறியது. 1917 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி அன்னை முன்னறிவித்தபடி நடைப்பெற்ற அதியங்களை 70ஆயிரம் மக்கள் கண்டு அன்னையால் ஈர்க்கப்பட்டன. திருஅவையும் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் அன்னையின் காட்சியளித்த நிகழ்வுகளை ஏற்றுக்கொண்டது. பாத்திமா அன்னையின் மாசற்ற இதயப் பக்தி முயற்சிகளும் உலகெங்கும் பரவியது.

அன்னை கூறியபடி ஜெசிந்தாவும், பிரான்சிஸ்கோவும் சிறு வயதிலேயே இறந்துவிட, லூசியா பல ஆண்டுகள் உயிரோடு இருந்து, திருக்காட்சிகளுக்குச் சாட்சியாக வாழ்ந்து, தனது 97ஆம் வயதில் 2005 ஆம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் 13ம் தேதி இறைவனடிச் சேர்ந்தார்.

அதுபோலவே 1981 மே 13ஆம் தேதி பாத்திமா அன்னையின் திருக்காட்சி நாளன்று, அலி ஆக்கா என்ற துருக்கிய இளைஞனால் துப்பாக்கியால் சுடப்பட்ட திருத்தந்தை 2ம் ஜான் பால் அந்த நேரத்தில் அன்னையின் கரங்களால் தான் பாதுகாக்கப்பட்டதை உணர்ந்ததாக அவர் கூறினார்.. திருத்தந்தை துப்பாக்கியால் சுடப்பட்ட இந்தச் சம்பவம், பாத்திமாவின் மூன்றாவது இரகசியத்தின் நிறைவேறுதலாகக் கருதப்படுகிறது.

தன் வாக்குறுதியை நிறைவேற்றி அன்னை நமக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறார் என்பதை மறவாமல் அவர் விடுத்த அழைப்பை ஏற்று நம் வாழ்நாள் முழுவதும் உலக அமைதிக்கும், அன்னையின் மாசற்ற இதயத்தின் மகிமைக்காகவும் செபமாலைச் செபிப்போம். பலன் அடைவோம்..

புனித பாத்திமா அன்னையே! உமது பரிந்துரையால் உலகில் சமாதானம் நிலைக்கட்டும்! எங்கள் வாழ்வு மலரட்டும்.

8. நமது அருமை அன்னை விண்ணேற்பு

அருள்தந்தை தம்புராஜ் சே..

இயேசுவின் இனிய நாமத்தில் என் நெஞ்சுக்கினிய உள்ளங்களே வணக்கம்!

ஆகஸ்டு மாதம் என்றாலே நமக்கு நினைவு வருவது இரண்டு முக்கிய நிகழ்வுகள். ஒன்று, இந்தியா சுதந்திரம் பெற்ற மாதம் - 15 ஆம் தேதி. இரண்டாவது, நமது அருமை அன்னை , இயேசுவின் தாய், திருச்சபையின் தாய் விண்ணகம் ஏறிச் சென்ற நிகழ்வு.

அன்னை மரியாவுக்கு இத்துணைப் புகழைக் கடவுள் கொடுத்ததற்குக் காரணம், இறைவன் சொற்படியே நடந்தது. இறைச் சித்தத்திற்கு அடிபணிந்து 'ஆம்' என்று சொன்னதால்தான், ஒருவரை நாம் அன்பு செய்கின்றோம் என்றால், அவர் சொல்வதை எல்லாம் தட்டாமல் செய்வதாகும்.

ஒரு பெற்றோருக்கு ஒரு பிள்ளை இருந்தான். அவன் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதே இல்லை. ஒரு நாள் அவன் பள்ளிக்குச் செல்வதற்கு முன் கடைக்குப் போய்ச் சில பொருட்களை வாங்கி வரச் சொன்னாள் தாய். அதற்குச் சிறுவன் 'முடியாது" என்றான். அவனது தகப்பன் அலமாரியில் இருக்கும் நூல்களை அடுக்கி வைத்து விட்டுப் பள்ளிக்குப் போகச் சொன்னார். அதற்கும் 'முடியாதுஎன்றான் சிறுவன்.

சிறுவன் பள்ளிக்குச் சென்று திரும்பி வந்தான். தாய் பத்திரிகை ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தாள், தந்தையோ தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார், வழக்கம்போல் சிறுவன் "அம்மா காப்பி" என்றான். "என்னால் உனக்குக் காப்பித் தயாரித்துக் கொடுக்க முடியாது" என்றாள் தாய், தன் தந்தையிடம் சென்று அவன் "என்னை ஹோட்டலுக்குக் கூட்டிப் போங்கள்" என்றான். தந்தையோ "முடியாது" என்றார்,

"இன்றைக்கு உங்க இரண்டு பேருக்கும் என்ன ஆச்சு? உண்மையிலேயே நீங்க என்னை அன்பு செய்றீங்களா?" எனக் கேட்டு அழத் துவங்கினான். தாயும், தந்தையும் "மகனே, உன்னை நாங்கள் அன்பு செய்கிறோம். ஆனால் நீ சொல்கிறபடி மட்டும் நாங்கள் நடக்க மாட்டோம்" என்றனர்,

சிறுவனோஇது பொய்யான அன்பு" என்றான்.

"எங்களுடைய அன்பு பொய்யான அன்பு என்றால், என்றான், அவனது தகப்பன் உன்னுடைய அன்பும் பொய்யான அன்புதான்என்றனர். பள்ளிக் சிறுவன் உண்மையை உணர்ந்துத் திருந்தி வாழ்ந்தான்.

ஆம், அன்பார்ந்தவர்களே, நாம் அனைவரும் மரியாவின் மைந்தர்கள் என்றால், நாமும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடந்து கீழ்ப்படிய வேண்டும்.

மலைப்பொழிவில் இதைத் தான் இயேசுவும் கற்பித்தார். “என்னை நோக்கி 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்" (மத்தேயு 7:21) என்கிறார்.

 

அன்னை மரியா விண்ணரசுக்குள் நுழைந்ததால் ஆர்ப்பரிப்போம்! அக்களிப்போம்! அவருடைய பிள்ளைகளாகிய நாமும் ஒரு நாள் விண்ணரசுக்குள் நுழையும் பாக்கியம் பெறுவோம் என்ற நம்பிக்கையில் வாழ்வோம்.

9. இதயத்திலிருந்து...

தந்தை தம்புராஜ் சே..

ஆகஸ்டு மாதம் அன்னை மரியா விண்ணேற்றம் அடைந்த பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். நமது நாடு அடைந்த சுதந்திரத்தையும் நினைத்து ஒரு விழா எடுக்கின்றோம். மேற்கூறிய இரண்டு விழாக்களும் சாத்தியமானதன் காரணம் நம்பிக்கை! அன்னை மரியாவுக்கு இறைவனது பராமரிப்பின் மீது நம்பிக்கை இருந்ததனால் தான் அவர் இறைவனின் தாயாகும் பேற்றினைப் பெற்றார். மங்கள வார்த்தை அவருக்குச் சொல்லப்பட்டபோது இறைவனின் வாக்கில் நம்பிக்கை வைத்து 'ஆம்' என்று சொன்னார். இறைவனின் தாயானதால் அவரை இறைவன் ஆன்மாவோடும், உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொண்டார் என்று திரு அவை நம்புகிறது.

ஒரு நாள் நாம் சுதந்திரம் பெறுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததால்தான் நம் முன்னோர்கள் தங்கள் உயிரையே தியாகம் வைத்து, சுதந்திரத்திற்காகப் போராடினார்கள்.

எபிரேயருக்கு எழுதிய நாலில் இது விளக்கிக் கூறப்படுகின்றது: "நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்" (எபிரேயர் 11:1-2).

இதை விளக்க ஒரு சிறுகதை :

காட்டுக்குள்ளே முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டிருந்தார். காட்டுக்கு வேட்டையாடச் சென்ற அரசனின் அம்பு ஒன்று தவறி முனிவரின் மீது பட்டுவிட்டது. முனிவர் மயங்கிக் கீழே விழுந்தார். செய்யக்கூடாத செயல் ஒன்றை செய்துவிட்டதாக எண்ணி அரசன் குதிரையில் தப்பி ஓடினான்.யாரோ அவனைத் துரத்துவது போன்ற பிரமை.

அவன் தப்பித்துச் சென்ற வழியிலே ஒரு குடிசை. அதற்குள் எட்டு வயது சிறுவன் ஒருவன். தாய் விறகு பொறுக்க வெளியில் சென்றிருந்தாள். அரசன் அந்த வீட்டுக்குள் புகுந்து அங்கே இருந்த சிறுவன் காலில் விழுந்து தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சினான்.சிறுவனோ "கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை " என்ற பாடத்தைத் தாயிடமிருந்து நன்றாகக் கற்றுத் தேர்ந்தவன். ஆகவே, அரசனைப் பார்த்துஅரசே, மண்டியிட்டு மூன்று முறை 'இறைவா, என்னை மன்னித்து விடு' என்று சொல். உன் மனதிலே அமைதி பிறக்கும்என்றான். அரசனும் அப்படியே செய்தான். அமைதி பிறந்தது. திரும்பிச் சென்று முனிவரிடம் மன்னிப்புக் கேட்டு, அவருக்கு வேண்டிய உதவியைச் செய்தான்.

தாய் வீடு திரும்பியதும் சிறுவன் நடந்ததைச் சொல்ல, தாய் அழுதாள். "ஏனம்மா அழுகிறாய்? நான் நற்செயலைத்தானே புரிந்திருக்கிறேன்?" என்றான் மகன். அதற்குத் தாய், "மூன்று முறை ஏன் கடவுளைப் பார்த்து மன்றாடச் சொன்னாய்? ஒருமுறை செபித்தால் போதும், கடவுளின் கருணை கிடைக்கும் என்று சொல்லும் அளவுக்கு உன் விசுவாசம் வளரவில்லையே என்பதை நினைத்து அழுகிறேன்" என்றாள்.

ஆம் அன்பார்ந்தவர்களே, நூற்றுவர் தலைவன்கூட தனது பணியாளருக்குக் குணம் தேடி வந்தவன், இயேசுவிடம், 'ஒரு வார்த்தை சொல்லும், என் ஊழியர் நலமடைவார்' என்று நம்பிக்கையோடு வேண்டினான். அதேபோல், நாமும் நமது செபத்திலே அதிக வார்த்தைகளைச் சொல்லிப் பிதற்றாமல், நம்பிக்கையோடு சிறு வார்த்தைகளின் வழியாக இறைவனிடம் செபிக்கும் வரத்தை மன்றாடுவோம். இறையாசீர் என்றும் உங்களோடு!.

10.           ரியன்னையின் விண்ணேற்பு

அருள்பணி மரியஅந்தோணிராஜ் -பாளை மறைமாவட்டம்




மரியன்னையின் விண்ணேற்பைக் குறித்து சொல்லப்படும் தொன்மம். மரியா தன்னுடைய கடைசி காலத்தை சியோன் மலையருகிலே இருந்த ஓர் இல்லத்தில் செலவழித்தார். அவருக்கு 60 வயது நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள் வானதூதர் அவருக்குக் காட்சி கொடுத்து, அவர் எப்படி இறப்பார், இறந்த பிறகு என்ன ஆவார் என்பது குறித்து சொல்லிவிட்டுச் சென்றார். அதுபோன்று ஒரு குறிப்பிட்ட நாளில் மரியாள் இறந்துபோனார். அவருடைய இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்டு எல்லாச் சீடர்களும் அங்கு வந்தார்கள், தோமாவைத் தவிர. பின்பு அவர்கள் மரியாவைக் கல்லறையில் அடக்கம் செய்துவிட்டுத் திரும்பிவிட்டார்கள். இதற்குள் மரியாவின் இறப்புச் செய்தி தோமாவின் காதுகளை எட்டியது. அவர் சீடர்களிடம் வந்து, “நான் இறந்த மரியன்னையின் உடலைக் கண்டால் ஒழிய எதையும் நம்பமாட்டேன்என்று சொன்னார். உடனே சீடர்கள் தோமாவை, மரியா அடக்கம் செய்து வைக்கப்பட்ட கல்லறைக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கு கல்லறையைத் திறந்து பார்த்தபோது, மரியாவின் உடல் இல்லாததைக் கண்டு, அவர் உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை நம்பத் தொடங்கினார்கள்.

வரலாற்றுப் பின்னணி

இன்று நாம் கொண்டாடும் மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவிற்கு நீண்ட நெடிய பாரம்பரியங்கள் உண்டு. மரியாவின் விண்ணேற்பைக் குறித்து தொடக்கத்தில் தூய ஜெர்மானுசும், தமஸ்கு நகர யோவானும்தான் பேசத் தொடங்கினார்கள். அவர்கள்தான் மரியாவின் விண்ணேற்பைக் குறித்து மறையுரை ஆற்றினார்கள். மூன்றாம் நூற்றாண்டில் மரியா விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைக் குறிக்கும் விதமாக மக்கள் விண்ணகம் நோக்கி ஜெபிக்கத் தொடங்கினார்கள். ஐந்தாம் நூற்றாண்டில் இவ்விழா மரியாவின் துயில் என்ற பெயரில் கொண்டாடப் பட்டது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அதிரியான் என்பவர் மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா என்ற பெயரிலேயேமரியாவின் விண்ணேற்பைக் கொண்டாடத் தொடங்கினார்.

இப்படி வளர்ந்து வந்த இவ்விழா 1950 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. அவர் எழுதிய Magnificatissimus Deus’ என்னும் திருமடலில் அதனை இவ்வாறு உறுதி செய்தார்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தினாலும், தூய திருதூதர்களான பேதுரு, பவுலின் அதிகாரத்தினாலும், நமது தனிப்பட்ட அதிகாரத்தினாலும் நாம் எடுத்தியம்பி, அறிவித்து கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட மறைகோட்பாடாக வரையறுப்பது என்னவென்றால், அமல உற்பவியாகிய கடவுளின் தாய், எப்பொழுதும் கன்னியான மரியா தனது மண்ணக வாழ்க்கைப் பயணத்தை முடித்தபின், விண்ணக மகிமைக்கு ஆன்மாவோடும் உடலோடும் எடுத்துக்கொள்ளப்பட்டார். எனவே, யாராவது வரையறுக்கப்பட்ட இதை மறுத்தாலோ, சந்தேகித்தாலோ, அவர் இறை விசுவாசத்திலிருந்தும் கத்தோலிக்க விசுவாசத்திலிருந்தும் பிரண்டு விட்டார் என்று அறிந்து கொள்ளட்டும்”. திருத்தந்தை அவர்கள் மரியாவின் விண்ணேற்பை ஒரு விசுவாசப் பிரகடனமாக அறிவித்ததில் இருந்து இன்றுவரை மரியாவின் விண்ணேற்பை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் கொண்டாடி மகிழ்கின்றோம்.

விவிலியப் பின்னணி

மரியா விண்ணகத்திற்கு உடலோடும் ஆன்மாவோடும் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது, அவர் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்ததால், கடவுள் அவருக்குக் கொடுத்த மிகப்பெரிய கொடை என நாம் புரிந்துகொள்ளலாம்.

கடவுளால் படைக்கப்பட்ட மனிதனுடைய உடலும் அவனுடைய ஆன்மாவும் தூயது, மாசற்றது (தொநூ 2: 1-7) அப்படிப்பட்டதை மனிதன் தன்னுடைய தவற்றால் தூய்மையற்றதாக, மாசு உள்ளதாக மாற்றிக்கொண்டான். எனவே பாவத்தின் சம்பளம் மரணம் (உரோ 5:12) என்பதைப் போன்று மரணமில்லா பெருவாழ்வைக் கொடையாகப் பெற்றிருந்த மனிதன், தான் செய்த பாவத்தினால் அக்கொடையை இழந்தான்; மரணத்தைத் தழுவினான். இது ஒரு பக்கம் இருந்தாலும் பாவக்கறையோடு இந்த மண்ணுலகத்தில் பிறந்தாலும், கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தனால் மரணத்தைத் தழுவாமல் விண்ணகத்திற்கு இருவர் எடுத்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் வேறுயாருமல்ல ஏனோக்கும், இறைவாக்கினர் எலியாவுமே ஆவார் (தொநூ 5:24, 2 அர 2:1). ஏனோக்கு கடவுளோடு நடந்தார். அதனால் அவர் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இறைவாக்கினர் எலியா கடவுளுக்கு உகந்த இறைவாக்கினராய் விளங்கினார். அதனால் அவரும் நெருப்புத் தேரோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.

மரியாவைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது அவர் கருவிலே பாவக்கறையில்லாமல் பிறந்தாள், ஆண்டவரின் தூதரால்அருள்மிகப் பெற்றவளேஎன அழைக்கப்பட்டாள் (லூக் 1:28). அது மட்டுமல்லாமல் ஆண்டவர் இயேசுவையே தன்னுடைய உதிரத்தில் தாங்கிடும் பேறுபெற்றாள், இறைவனுக்கு உகந்த வாழ்ந்தாள். இத்தகைய பேற்றினால் மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என நாம் உறுதியாகச் சொல்லலாம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்” (யோவா 12:26). மரியா தலை சிறந்த சீடத்தியாக வாழ்ந்ததனால் அவர் இயேசு இருக்கும் விண்ணக வீட்டில் இருப்பார் என நாம் உறுதிபடச் சொல்லலாம்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

மரியன்னையின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

கடவுளுக்கு உகந்த வாழ்ந்த வாழ்தல்

மரியாவின் விண்ணேற்பு என்பது அவர் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்ததனால் கிடைத்த மிகப்பெரிய பேறு என்று சொன்னால் அது மிகையாகாது. மரியா தன்னுடைய வாழ்வை கடவுளுக்கு உகந்த தூய, மாசற்ற பலிபொருளாகத் தந்தார்; தாழ்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினார்; தேவையில் இருந்த மக்கள்மீது அன்பும் அக்கறையும் கொண்டு அவர்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்தார்; எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுடைய திருவுளத்தை இறுதி வரைக்கும் கடைப்பிடித்து வாழ்ந்தார்; அதற்காக பல்வேறு இன்னல்களையும் இடையூறுகளையும் சந்தித்தார். இத்தகையதோர் வாழ்க்கை வாழ்ந்ததால்தான் மரியாவை இறைவன் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொண்டார். நாம் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழும்போது இறைவன் அளிக்கும் விண்ணக மகிமையைப் பெறுவோம் என்பது உறுதி.

லேவியர் புத்தகம் 19:2 ல் வாசிக்கின்றோம், “தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவராக இருக்கின்றேன்என்று. ஆம், கடவுளின் மக்களாகிய நாம் அனைவரும் கடவுளைப் போன்று தூயவராக இருக்கும்போது அவர் மரியாவுக்கு அளித்த அதே பேற்றினை நமக்கும் அளிப்பார் என்பது வெள்ளிடை மலை. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் தூய மாசற்ற வாழ்க்கை வாழ முற்படுவோம்.

நம் அன்னையருக்கு மதிப்பளிப்போம்

மரி(அன்னை)க்கு விழா எடுத்து அவரை மகிமைப்படுத்தும் இந்த நாளில் நம்மோடு வாழும் நம் அன்னையருக்கும் நாம் மதிப்பும் மரியாதையும் செலுத்துவோம். ஏனென்றால் பல நேரங்களில் நாம், பல்வேறு இடங்களில் உள்ள அன்னையின் ஆலயங்களுக்குச் சென்று, அவரை வழிபடுகிறோம். அவர் முன்பாக உருகி நிற்கின்றோம். ஆனால் நம் அன்னையரை நாம் சரியாகக் கவனிக்கத் தவறிவிடுகின்றோம். இது ஒருவிதத்தில் வெளிவேடம்தான். மரியன்னையின் மீது அன்பு வைத்திற்கும் நாம், நம்மைப் பெற்றெடுத்த அன்னையின்மீது அன்புகொண்டு அவருக்கு தக்க உதவிகளைச் செய்யவேண்டும். அப்போதுதான் நாம் அன்னையின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ளமுடியும்.

இன்றைக்கு நாம் நம்முடைய அன்னையரை எப்படி பார்த்துக்கொள்கிறோம் என்பதைச் சுட்டிகாட்ட வேடிக்கையாகச் சொல்லப்படும் நிகழ்வு.

அன்று அன்னையர் தினம்! தங்கள் அன்னையை எங்கேனும் வெளியே சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று மகிழ்விக்கவேண்டும் என்று விரும்பிய அவள் பிள்ளைகள், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்வதற்கு ஏற்றவகையில் ஓர் வாகனத்தை ஏற்பாடு செய்தார்கள். சுற்றுலாவுக்கு எடுத்துச் செல்லவேண்டிய தின்பண்டங்கள் தயாரிப்பதில் அவர்களின் அன்னை மிகவும் மும்முரமாக ஈடுபட்டிருக்கப் (பாவம்! அந்தத் தாய்க்கு அன்றுகூட ஓய்வு இல்லை!) பிள்ளைகள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு வாகனத்தில் இடம்பிடித்து அமர்ந்தார்கள். கடைசியில் மிஞ்சியிருந்ததோ ஒரே ஓர் இடம்! ஆனால் அங்கே அமர்வதற்காக எஞ்சியிருந்ததோ இருவர்!

ஒருவர் அந்த அன்னையின் கடைசிப் பிள்ளையான மரியான் எனும் சிறுவன், இன்னொருவர்விழா நாயகியானஅந்த அன்னை. இருவரில் யாரை அழைத்துச் செல்வது என்று புரியாமல் வண்டியில் அமர்ந்திருந்தோர் விழிக்க, சுற்றுலாச் செல்லவேண்டும் என்று மிகுந்த ஆசையோடு புத்தாடைகளையெல்லாம் அணிந்துகொண்டு வண்டியில் ஏறத் துடித்துக் கொண்டிருந்த அந்தக் கடைக்குட்டிப் பையன் மரியான், தன் அன்னையின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தான். அந்தப் பார்வையின் பொருளை உடனே புரிந்துகொண்டுவிட்டாள் அன்புவடிவான அந்த அன்னை!. உடனே அவள், ”நான் வயதானவள்; பிறிதொரு சமயம் சுற்றுலாவுக்கு வருகிறேன். மரியானை அழைத்துச் செல்லுங்கள்! அவன் மகிழ்ச்சியாக இருக்கட்டும்!” என்று அன்போடு கூறித் தன் மகனை வாகனத்தில் ஏற்றி அமரச் செய்தாள். வாகனத்தில் அமர்ந்திருந்த அனைவருக்கும் அந்த அன்னை அன்போடு கையசைத்து விடைகொடுக்க, அவளை ஏற்றிக்கொள்ளாமலேயே அந்த வாகனம் மற்றவர்களோடு சுற்றுலாவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

அன்னைக்கு விழா எடுத்த நாளில் அன்னையையே மறந்துபோனது வேதனையிலும் வேதனையான ஒரு செயல். பல நேரங்களில் நாமும் இதே தவற்றைத்தான் செய்துகொண்டிருக்கிறோம்.

ஆகவே, மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவான இன்று மரியன்னைக்கு மகிமை செலுத்துவோம், அதே நேரங்களில் நம்முடைய அன்னையருக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் செலுத்துவோம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

11.           மரியாளின் விண்ணேற்புப் பெருவிழா

அருட்தந்தை அந்தோனிராஜ் - பாளையங்கோட்டை

ஒரு தாய் தன்னுடைய ஒருமாதக் குழந்தையுடன் தரையில் பாய் விரித்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். அப்போது திடிரென்று கருநாகம் ஒன்று வாசல் வழியே வந்து அவர்களுக்கு முன்பாக படமெடுத்து நின்றது.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்து வீட்டார் எல்லாரும் பதைபதைத்துப் போனார்கள். ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றார்கள். பின்னர் அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பார்த்தார்கள். அவளிடமிருந்து ஒரு பதிலும் வராததால் ஒரு நீளமான தடியை எடுத்து அவளைத் தட்டிப் பார்த்தார்கள். அப்போதும்கூட அவள் எழுந்திருக்கவில்லை. இறுதியாக ஒரு மல்லிகைப் பூவை எடுத்து குழந்தையின்மீது எறிந்தார்கள். அடுத்த நிமிடம் தன்னுடைய குழந்தைக்கு ஏதோ ஆயிற்று என்று தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த அவள், குழந்தையின் மீது விழுந்திருந்த மல்லிகைப்பூவை எடுத்து தூர எறிந்தாள். அதன்பின் தன் முன்னால் இருந்த பாம்பிடமிருந்து குழந்தையும், தன்னையும் எந்த ஒரு பதற்றமுமின்றிக் காப்பாற்றினாள்.

அக்கம் பக்கத்து வீட்டார் தன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டபோதும், தடியால் அடித்தபோதும்கூட எழாத தாய், தன்னுடைய குழந்தைக்கு எதோ ஒன்று நடக்கிறது என்றவுடன் எவ்வளவு பதறிப்போகிறாள்!. ஒவ்வொரு நொடியும் குழந்தையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கின்ற ஒருதாயால் தான் இப்படிச் செயல்பட முடியும். இதுதான் தாயின் உண்மையான அன்புஇன்றைக்கு நம் மரியன்னைக்கு விழா எடுத்துக் கொண்டாடுகிறோம். ஒரு சாதாரண தாயைவிட மேலாக, மரியாள் பிள்ளைகளாகிய நம்மீது முழுமையான அக்கறை கொண்டிருப்பவள். கண்மணிபோல கருத்தாய் காப்பவள். அதனால் நாம் அவருக்கு விழா எடுத்துக்கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது ஆகும்.

மரியன்னையின் விண்ணேற்பு விழா என்பது உலகிலுள்ள அனைத்துக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படக்கூடிய ஒரு விழா. இயேசுக்கிறிஸ்து தனது தாயாரை நம் அனைவருக்கும் தாயாக இவ்வுலகில் விட்டுச் சென்றார். “பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்ட தாய்”, “அருள் நிறைந்த பெண்மணிஎன்று பெண்குலத்திற்கு மட்டுமல்லாது உலகத்தில் உள்ள தாய்மார்களின் பொக்கிஷமாக திகழ்பவள் தான் நம் மரியன்னை. எனவே அப்படிப்பட்ட அன்னையின் விழாவைக் கொண்டாடுகிற இவ்வேளையில் அவள் நமக்கு என்ன செய்தியைத் தருகிறாள் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவது கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 15 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. திருத்தந்தை முதலாம் நிக்கோலாஸ் (கி.பி.858- 867) இவ்விழா வரலாற்றில் என்றும் மறையாத அளவிற்கு திருவழிபாட்டில் ஊன்றச் செய்தார். திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் 1954 ஆம் ஆண்டில் அன்னை மரியாள் ஆன்மாவோடும், உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள் என்றும், திருச்சபையின் போதனையை விசுவாச சத்தியம் என்றும் பிரகடனப்படுத்தினார். இதற்கு ஓர் இறையியல் அடிப்படையென்றால், “பாவமறியாத மரியாளை மரணம் எப்படித் தீண்ட முடியும்?” என்பதுதான். இதன்வழியாக அன்னை மரியாள் மரணத்தின் பிடியில் சிக்காமல் விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்ற நம்பிக்கை வேரூன்ற ஆரம்பித்தது.

திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர், தனது சாசனத்தில், அன்னை மரியாளின் மரணம் பற்றி திட்டவட்டமாக எதுவும் கூறாமல்தனது வையக வாழ்வு நிறைவெய்தியவுடன் மரியா விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள்என்று மட்டும் குறிப்பிடுகிறார். மரியாள் இயேசுவை தமது உள்ளத்தில் ஏற்று, உதரத்தில் தாங்கி, அவருடைய உணர்வுகளோடு ஒன்றாகி, மீட்புத் திட்டத்தில் முழுமையாகத் துணை நின்றதால், அவள் இயேசுவின் உயிர்ப்பிலும் முதன்மையாக பங்கு பெறுவது தகுதியும் நீதியுமாகும். இது நாம் அனைவரும் பெறப்போகும் விண்ணக மகிமையின் முன்னாக்கமாகவும், முன்னடையாளமாகவும் இருக்கும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில்கூட பவுலடியார், “இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பட்டது போன்று நாமும் உயிர்த்தெழுவோம்என்று உறுதிபடுத்துகிறார். ஆக ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவை போன்று - அன்னை மரியாளைப் போன்று - இறைவனின் திருவுளத்தின் படி நடக்கின்ற நாம் ஒவ்வொருவருமே விண்ணக மகிமையைப் பெறுவோம் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை.

நற்செய்தி வாசகத்தில் அன்னை மரியாள் தான் இயேசுவைக் கருவுற்றிருந்த போதிலும், தன்னுடைய உறவினரான எலிசபெத் பேறுகால வேதனையில் தவிக்கிறார் என்பதை அறிந்து ஓடோடிச் சென்று உதவுகிறாள். தூய ஜெரோம் அன்னை மரியாளைக் குறித்துச் சொல்கிறபோது இப்படியாகச் சொல்வார், “அன்னை மரியாள் இந்த மண்ணுலகில் வாழ்ந்தபோது பிறர் படக்கூடிய துன்பத்தை தன்னுடைய துன்பமாகப் பார்த்தாள். மேலும் அத்துன்பத்தைக் களைய பெருதும் பாடுபட்டாள்”. ஆம் அன்னை மரியாள் பிறரின் துன்பத்தை தனது துன்பமாகப் பார்த்தார்.

எனவே நாம் நமது அன்னை மரியாவைப் போன்று பிறர்படும் துன்பத்தை நம் துன்பமாக எண்ணி அவற்றைக் களைய முன்வரும்போது இறைவன் தரக்கூடிய மகிமையை நம்மால் நிறைவாய்ப் பெறமுடியும். ஆனால் நமது அன்றாட வாழ்வில் நாம் இறைத் திருவுளத்தின்படி நடக்கிறோமா? நம்மோடு வாழக்கூடிய உடன்பிறப்புகளை, பெற்றோர்களை, அயலாரை முழுமையாக அன்பு செய்கிறோமா என்று சொன்னால் அது ஒரு மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

ஒருவன் முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்த தனது தாயை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கச் சென்றான். அப்போது அவன் தனது தாயிடம், “அம்மா உனக்கு ஏதாவது வசதி செய்துதரச் சொல்லட்டுமா? என்று கேட்டான். அதற்கு அவனுடைய தாய், “எனக்கென்று எதுவும் வேண்டாம், ஆனால் என் காலத்திற்குப் பிறகு இங்கே ஒரு மின் விசிறி போட்டுக்கொடுத்தால் நன்றாக இருக்கும்என்றாள்.

இதைக் கேட்டு அவன் மிகுந்த கோபத்தோடு, “அம்மா உனக்கு வேண்டும் என்றால் கேள். உன் காலத்திற்குப் பிறகு எதற்கு மின் விசிறி போடவேண்டும்என்றான். அதற்கு அவனுடைய தாய், “இல்லை மகனே! நாளைக்கு உன் பிள்ளைகள் உன்னை இங்கே கொண்டுவந்து சேர்த்தால், உனக்குக் கஷ்டமாக இருக்கும் அல்லாவா? அதனால் தான் அப்படிக்கேட்டேன்என்றாள். இதைக் கேட்டு அவன் உள்ளம் குத்துண்டு போனான். என்னதான் பிள்ளைகள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் சேர்த்தாலும் பெற்றோரின் - தாயின் - அன்பு ஒருபோதும் மாறாது என்பதே உண்மை.

எனவே அன்னையின் விண்ணேற்பு பெருவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் நமது இல்லங்களில் இருக்கக்கூடிய அன்னையரைப் பேணிப் பாதுகாப்போம்; அவர்களுக்கு தொண்டு செய்து வாழ்வோம். இன்னும் சிறப்பாக அன்னை மரியாளைப் போன்று நம்மோடு வாழும் மக்களின் துன்பம் கண்டு இறங்கி, அவர்களின் துயர் துடைப்போம். அதன் வழியாக இறையருள் பெறுவோம். அனைவருக்கும் மரியன்னையின் விண்ணேற்புப் பெருவிழா நல்வாழ்த்துகள்.

அன்னை தன்னைத் தேடிவரும் அனைவருக்கும் அடைக்கலம் தரும் நகரம்” – புனித தமசீன் நகர அருளப்பர்.

 

 

 

 

 

12.           ஒரு தேவஇரகசிய ரோஜாச் செடி

திருமதி அருள்சீலி அந்தோணி -ஆலந்தூர்- சென்னை.

அக்டோபர் மாதம் செபமாலை அன்னையின் மாதம். எனவே செபமாலை ஒரு தேவஇரகசிய ரோஜாச் செடி என்பதை பற்றி இங்கே அறிவோம்.

விண்ணகத்திலிருந்த நேராக வந்துதிக்கும் இந்த தேவஇரகசிய ரோஜாச் செடியை உங்களுக்கு இங்கே அர்ப்பணிக்கின்றார் புனித லூயி மாண்போர்ட்.
இந்த செடியை உங்கள் ஆன்மாவாகிய பூத்தோட்டத்தில் நடுவீர்களாக. தேவஅன்பின் தியானம் எனும் நறுமணமலர்க்குள் இணைத்திடுங்கள். ஏனென்றால் இது ஒரு விண்ணக செடி. அதன் வாசனை இனியது. உங்கள் ஆன்மாவாகிய மலர்பாத்திக்குள் இதனையும் இணையுங்கள். இந்த செடியானது மிகவும் தூய்மையானது. உங்களின் பண்பட்ட ஆன்மாவாகிய நிலத்தில் நட்டு பராமரித்த வரும்போது வியத்தகு உயரமாக வளர்ந்து பல கிளைகள் விட்டு தழைத்து வளரும். மற்ற பக்திமுயற்சியையும் தடைசெய்யாமல் அனைத்தையும் பாதுகாத்து பரமனின் பாதம் சேர்க்கும். இதுவே வாடாத மலர் -செபமாலையாகும்.

நீங்கள் ஞானத்துடன் இருப்பதால் இதனை நான் என்ன நோக்கத்துடன் கூறுகிறேன் என்ற அறிந்து கொள்வீர்கள். அந்த தேவ இரகசிய ரோஜாச் செடியின் பொருள் என்னவென்று தெரியுமா? இயேசுவும், மரியின் வாழ்வில் இறப்பிலும், நித்தியத்திலும் அவர்கள் இந்த ரோஜா செடியாக திகழ்கின்றார்.
இச்செடியின் பசுமையான இலைகள் - சந்தோஷ தேவஇரகசியம்
இங்கே இயேசு மாமரியின் வாழ்வின் சந்தோஷ நிகழ்வுகளை தியானிக்கின்றோம்.
முட்கள் - துக்கதேவஇரகசியம்.
இங்கே முட்கள் குத்தி ஊடுருவிய கூர்மையான முட்களாக உள்ளன. இங்கே இயேசு, மாமரியின் துன்பதுயரங்களை காண்கின்றோம்.
மொட்டுகள் - மகிமைதேவஇரகசியம்.
மொட்டுக்கள் மலர்ந்து மணம் பரப்பும் என்று ஆவலோடு எதிர்பார்க்கும் நமது ஆவலை மேலும் அதிகரித்து தூய ஆவி.இயேசு,மரியின் மாட்சிமையை விளக்குகின்றது.
மலர்கள் - ஒளியின் தேவஇரகசியம்
மலர்கின்ற மொட்டுகள் மலர்ந்து அனைவருக்கும் மணம் வீசுவதைப்போல் இயேசு மரியாவின் வாழ்வில் மலர்ந்த புதுமைகள், இறையரசு, உருமாற்றம், என்றும் நம்மோடு வாழ்கின்ற இயேசு திரு பிரசன்னம் ' திவ்விய நற்கருணை " ஏற்படுத்தி அவர்களது உடனிருப்பை வெளிப்படுத்துவதாகும்.

அன்பர்களே! இந்த விண்ணக செடியை உங்கள் ஆன்மாவில் நட்டு வையுங்கள். திருச்சபை வழங்கிய மூவொரு இறைவனின் வெளிப்பாடாகிய விசுவாசப்பிரமாணத்தை முதன்மை செபமாக கொண்டு இயேசுவின் செபம் பரலேகமந்திரத்தையும் இறைவன் கபிரியேல் வானத்தூதர் வழியாக கூறிய மங்களவார்த்தையை பத்துமணிகளிலும் தமத்துவபுகழ் மாலையை இணைத்து ஒவ்வொரு பத்துமணியாக செபிக்கும்போது ஒவ்வொரு ரோஜாஇலைகள், முட்கள்,மொட்டுகள், மலர்கள் என்று இணைத்து ஒரு தேவ இரகசிய ரோஜாச்செடியாக நாம் அர்ப்பணிக்கின்றோம்.
இந்த தேவஇரகசிய ரோஜாச் செடியை கண்காணித்து விசுவாசம் என்னும் நீர் பாய்ச்சி,எங்கும் சிதறிக்கிடக்கும் ஆன்மாக்களை ஒன்றிணைத்து, அருள் நிறைந்த மரியென்னும் விதையை ஊன்றி, தமத்திருத்துவ புகழென்றும் நீர் ஊற்றி, பராமரித்து வரும்போது எதிர்காலத்தில் சிதறும் ஆன்மாக்கள் வந்து இந்த இரகசிய ரோஜா செடியில் அமர்ந்து அருளென்னும் மலர் மணத்தை முகர்ந்து பல ஆன்மாக்களை காத்திடும் அருள் சுனையே இந்த அழகிய இரகசிய ரோஜாச் செடி என்பதை உணர்ந்திடுவோம்.

என்றும் செபமாலை செபித்திடுவோம். அன்னை மடியினில் தவழ்ந்திடுவோம்.

13.           நம்பிக்கையின் அன்னை மரியா

மேதகு ஆயர் முனைவர் .செ. சூசைமாணிக்கம்

குலமுதுவர் ஆபிரகாம் நம்பிக்கையின் தந்தையாக (உரோ 4:17-21) விளங்குகிறார் என்றால் மரியா நம்பிக்கையின் தாய் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. நம்பிக்கை பற்றி நாம் பெற்றுள்ள புதிய புரிதலின் ஒளியில் மரியா எவ்வாறு நம்பிக்கையின் அன்னையாகத் திகழ்கிறார் என இப்பொழுது காண்போம்.

'வரலாற்று மரியா' என இறையியலார் சுட்டும் நாசரேத்து மரியா இறை வார்த்தைக்கு முற்றிலும் திறந்த மனத்துடன் செவிமடுத்து அவரை முழுவதும் நம்பினார். தாம் கேட்டதைத் தம் வாழ்வில் கடைப்பிடிப்பதிலும் மிகக் கருத்தாய் இருந்தார் என்னும் உண்மையை லூக்கா நற்செய்தி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

1.இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு நிகழ்ச்சியில் வானவரின் வாழ்த்துரையைக் கேட்ட மரியா குழப்பமும் மனக்கலக்கமும் அடைந்தார். "இது எப்படி ஆகும்? நான் கன்னி ஆயிற்றே!" என்று வியப்பு மேலிட்டவராய் விளக்கம் வேண்டி நியாயமான ஒரு வினாவைப் பெற்றார். அச்செய்தியின் உள்ளீட்டை முழுமையாகப் புரிந்து கொள்ளாத நிலையிலும் கடவுளை முற்றிலும் நம்பினார். தம் ஆற்றல் அனைத்தையும் இணைத்துத் தம்மை முழுவதும் இறைவனுக்குக் கையளித்தார்.(லூக் 1:26-38)

சொந்த விருப்பம் இன்றிச் சூழ்நிலை, சந்தர்ப்பத்தினால் கட்டாயப்படுத்தப்பட்டு மரியா கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார் எனச் சொல்வதற்கு இடமே இல்லை. மனமகிழ்ச்சியுடனும், தன்னுரிமையுடனும் இறைவனின் மீட்புத்திட்டதோடு ஒத்துழைக்கத் தமது முழு ஒப்புதலையும் தெரிவித்தார். "நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக் 1:38-48) என்று கூறித் தம்மை முழுவதும் இறைவனின் கைகளில் ஒப்படைத்தார்.

" தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும் (லூக் 22:24) என்ற இறைமகன் இயேசுவின் கூற்று இறைவனின் அன்னை மரியாவின் கூற்றை ஒத்திருக்கின்றது. தூய அகுஸ்தின் கூறுவது போன்று மரியா இறைவார்த்தையை முதலில் தம் உள்ளத்தில் ஏற்றுக் கொண்டார். அதன் பின்னரே அதைத் தம் உதரத்தில் ஏற்றுக் கருவுற்றார்.

அன்றொரு நாள் கானாவில் நடந்த திருமண விழாவில் (யோவான் 2:1-12) திராட்சை இரசம் தீர்ந்திடவே மரியா தம் மகனிடம் முறையிட்டுக் குறை தீர்த்து வைக்க வேண்டுகிறார். "எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்று தெளிவுபடுத்திய நிலையிலும் "அவர் (இயேசு) உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்பது மரியா இயேசுவில் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. புரிந்து கொள்ளாத நிலையிலும் மரியா கடவுளை நம்பினார். தம்மை முழுவதும் இறைவனுக்குக் கையளித்தார். மரியா கடவுளை நம்பினார். தம்மை முழுவதும் இறைவனுக்குக் கையளித்தார். மரியா கடவுள் மட்டில் கொண்டிருந்த நம்பிக்கையின் உறவு நிலையை இது காட்டுகிறது.

மரியாவுடன் கடவுளுக்கு இருந்த மிக நெருக்கமான உறவை மரியாவினுடைய ஆன்மாவின் சொல்லோவியம்" என அழைக்கப்பெறும் பாடல் (லூக் 1:47-55) சிறப்பாக எடுத்துரைக்கிறது

2. சாரா போன்று காலம் போன காலத்தில் கருவவுற்றிருந்த தம் உறவினர் எலிசபெத்து ஒரு மகனைத் தன் வயிற்றில் கருவற்றிருப்பது கடவுளின் அரிய செயல் என்பதை அறியவந்த மரியா (லூக் 1:36) உடனடியாக அவருக்க உதவி தேவைப்படும் என்பதை முன்னுணர்ந்தார். தான் வாழ்ந்து வந்த நாசரேத்திலிருந்து ஏறத்தாழ 150 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த எலிசபெத்தின் ஊரான அயீன்கரிமுக்குச் செல்ல மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகும். பயணம் செய்வதில் பல தொல்லைகள் இருந்தன. இவற்றை எல்லாம் கணக்குப் போட்டுப் கவனத்தில் கொள்ளாது எலிசபெத்தைச் சந்திக்க அவர் உடனடியாகச் சென்றார்(லூக் 1:39) "விரைந்து" என்பதற்கு மிகுந்த ஆர்வத்தோடு "தாம் பெற்றிருந்த இறைவெளிப்பாட்டுக்குக் கீழ்ப்படிந்து" (லூக் 2:16) என்றும் பொருள் கொள்ளலாம். அப்பொழுது மரியாளிடம் விளங்கிய மனநிலையை இச்சொல் விளக்குகிறது.

ஏறத்தாழ மூன்று மாதம் - அதாவது எலிசபெத்து பிள்ளை பெற்றெடுக்கும் வரை அங்கேயே தங்கி அவருக்கு தேவைப்பட்ட உதவிகளைச் செய்த பின்பு மரியா தம் வீடு திரும்பினார் (லூக் 1:56) குறிப்பறிந்து செயல்படும் பணியாளராக அன்பின் திருத்தூதராக மரியா இங்கு அடையாளம் காட்டப்படுகிறார்

மேலும் இயேசுவின் பிறப்பை அடுத்துப் பல்வேறு காலக்கட்டங்களில் இடம் பெற்ற மரியாவின் தூய்மைச் சடங்கு. இயேசுவின் விருத்தசேதனம், பெயர் சூட்டுதல், அர்ப்பணம் ஆகிய நான்கு சமயச் சடங்குகள் திருச்சட்டப்படி முறையாக நடைபெறுகின்றன. (லூக்கா 2:21-24,27,39)

14.           பாத்திமா திருக்காட்சிகளின் நூறு ஆண்டு நிறைவு

பாதசந்தரன்

 

1917 ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் நாள் முதல் அக்டோபர் மாதம் 13-ஆம் நாள் வரை (ஆறு மாதங்களாக ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாதத்தின் 13-ஆம் நாளன்று) போர்த்துக்கல் நாட்டிலுள்ள பாத்திமா என்னும் கிராமத்தின் வயல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறார்கள் மூவர் இறையன்னை கன்னி மரியாவின் திருக்காட்சியைக் காண்டார்கள் என்பது நாம் அறிந்ததே. இந்த 2017-ஆம் ஆண்டில் பாத்திமா திருக்காட்சிகளின் நூற்றாண்டு விழா உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.

இந்தத் திருக்காட்சிகளில் கத்தோலிக்கத் திருமறையின் விசுவாசக் கோட்பாடுகளான சில மறையுண்மைகளையும், பக்தி முயற்சிகளையும் முதன்மைப்படுத்தி, சிறப்பாக மூவொரு கடவுள், திருநற்கருணை, தவமுயற்சிகளின் பயன், ஜெபமாலை ஜெபிப்பதன் அவசியம், பாவிகள் மனந்திரும்ப நாம் செய்யவேண்டிய ஒறுத்தல்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு இறையன்னை சில செய்திகளை அளித்தார். மேலும், நிறைவாழ்விற்கு நம்மை கூட்டிச்செல்லுகின்ற மெய்யான வழியாகவும், அன்னையின் அன்புக்கு இலக்கணமாகவும், அல்லல்படுவோருக்கு அடைக்கலமாகவும் திகழ்கின்ற "மரியாவின் மாசற்ற இதயம்" குறித்த முக்கிய செய்திகளை, இறையன்னை தன் வாய்மொழியாகவே வெளிப்படுத்தினார். மனிதகுலத்தின் மேல் தீயோன் தொடுத்துள்ள போரில், மரியாவின் மாசற்ற இதயமே இறுதியில் வெற்றி பெறும் என்றும் அன்னை எடுத்துரைத்தார்.

பாத்திமாவில் இறையன்னையின் திருக்காட்சிகள் நிகழ்ந்த காலமும், அந்தக் காலகட்டத்தில் உலகத்தில் நிலவிய சூழ்நிலையும் மிகவும் முக்கியமானவை ஆகும். உலக வரலாற்றில் அதுவரை மனித இனம் கண்டிராத மோசமான போராயுதங்களும், யுத்த நடைமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு, 1914 ஆம் ஆண்டு முதல் 1918 ஆம் ஆண்டு வரை நடந்த முதல் உலகப் போரின் தாக்கத்தால் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் மக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி இருந்தனர். மூன்றரை கோடிக்கும் மேலான இராணுவ வீரர்கள் அந்தப் போரிலே இறந்து போனார்கள். மேலும், ரஷ்யாவின் சமூக வாழ்வியல் முறைகளையும், கடவுள் நம்பிக்கையையும் முற்றிலும் புரட்டிப்போட்டு, ஏறக்குறைய பாதியளவு உலக மக்களின் வாழ்வையே மாற்றியமைக்கக் போகின்ற மாபெரும் கம்யூனிஸ புரட்சி ஒன்றுக்கு லெனின் வித்திட்டுக் கொண்டிருந்த நேரம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், மக்களின் மனக்குழப்பங்களை நீக்கி, இறைநம்பிக்கையை நெறிப்படுத்திட இறையன்னை தன்னை வெளிப்படுத்த முற்பட்டு, விண்ணிலிருந்து இறங்கிவந்தார். பாத்திமா திருக்காட்சிகளில் அன்னை உரைத்தபடியே, இன்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யாவில் கம்யூனிஸ ஆட்சி தகர்ந்து வீழ்ந்தது, உலக வரலாற்றில் ஒரு உண்மைப் பதிவு.

13.05.1917 அன்று தான் பாத்திமா நகரில் அன்னையின் முதல் காட்சி நிகழ்ந்தது. அதே நாளில் திருச்சபையின் தலைமைப் பீடமாகிய வத்திக்கானில் இன்னொரு முக்கியமான நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அன்றைய தினம் வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் யூஜினியோ பசேலி என்ற குரு, திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் அவர்களால் ஆயராக அருள்பொழிவு செய்யப்பெற்றார். இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், 1939 ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் பயஸ் என்ற பெயரில் பாப்பரசராக தேர்வு செய்யப்பட இந்த அருள்தந்தை தான், 1940 ஆம் ஆண்டில் பாத்திமா திருக்காட்சிகளுக்கு திருப்பீடத்தின் முத்திரையை பதித்து, அதிகாரபூர்வமான அங்கீகாரத்தை அளித்தார்.

 

1917 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் தான் பாத்திமாவில் இறை அன்னையின் முதல் திருக்காட்சி நிகழ்ந்தது. 1981 ஆம் ஆண்டு அதே மே மாதம் 13 ஆம் நாளில் தான், அப்போதைய பாப்பரசர் இரண்டாம் ஜான்பால் வத்திக்கானில் புனித பேதுரு சதுக்கத்தில் நடந்த கொலை முயற்சியிலிருந்து தப்பினார். பாத்திமா நகர் அன்னைதான் அன்று தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றினார் என்று திருத்தந்தை உறுதியாக கூறினார். அன்று தனது உடலில் பாய்ந்தும் தன்னைக் கொல்ல இயலாத தோட்டாவை, பாத்திமா நகர் அன்னைக்கு காணிக்கையாக செலுத்தினார் திருத்தந்தை. பாத்திமா திருத்தலத்தில் அன்னையின் கிரீடத்தில் இந்தத் தோட்டா பொருத்தப்பட்டுள்ளது.

கவலை தருகின்ற இன்றைய உலக நடப்புகளை பார்க்கும்போது, பாத்திமா திருக்காட்சிகளில் இறையன்னை மொழிந்த செய்திகளை இன்றைக்கும் மக்கள் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்என்று கூறுகின்ற திருத்தந்தை பிரான்சிஸ், "அன்பிற்கும், கருணைக்கும் ஊற்றான இறைஇரக்கத்தை அவமதிக்கின்ற எந்தவொரு செயலையும் செய்வதை நாம் தவிர்க்கவேண்டும் என்பதே அன்னையின் வேண்டுகோள்" என்று சுட்டிக் காட்டுகின்றார்.

அன்னையை நேரிலே தரிசித்த மூன்று பேரில் ஒருவரான அருள்சகோதரி லூஸியா, 2005 ஆம் ஆண்டு ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, "புதுமைகள், இரகசிய செய்திகள் - இவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்ற மக்களின் மனநிலை ஏமாற்றம் அளிக்கின்றது. புதுமைகள், அருள் அடையாளங்கள் இவற்றைவிட, பத்துக் கட்டளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். இறுதி தீர்வை நாளில் பத்துக் கட்டளைகளின் அடிப்படையிலேயே நாம் தீர்ப்பிடப்படுவோம் என்பதை உணர்ந்தால், மீண்டும் மீண்டும் கடவுளை அவமதிக்கின்ற எந்த செயலையும், பாவத்தையும் தவிர்ப்பது இயலும். இதனை பதினொன்றாவது கட்டளை என்று நான் சொல்லுவேன். 'அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என்று அன்னை கூறுவதன் பொருள் இதுதான்" என்றுக் கூறினார்.

ஆண்டுதோறும் உலகெங்கிலுமிருந்து இலட்சக்கணக்கான மக்கள் திருப்பயணமாக வருகின்ற பாத்திமா திருத்தலத்திற்கு, நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகின்ற 2017-ஆம் ஆண்டில் இன்னும் அதிகமான திருப்பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பாத்திமா திருத்தலத்திற்கு இந்த ஆண்டு திருப்பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஒரு முக்கிய திருப்பயணியாக நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பது, அந்தக் கொண்டாட்டங்களுக்கு இன்னும் சிறப்பு சேர்க்கின்றது.

கடவுளை வெறுத்து ஒதுக்குவதை உலகம் தொடர்ந்து செய்துவந்தால், அது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று பாத்திமா செய்திகள் நமக்கு நினைவூட்டுகின்றன. ஆனால், இன்றைய உலகில் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெறுகின்ற போர்கள், தீவிரவாத செயல்கள், புலம் பெயர்ந்த அகதிகளின் துயர நிலை, பெண்கள்-சிறுவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள், பற்பல வல்லரசு நாடுகள் போட்டிபோட்டுக் கொண்டு உற்பத்தி செய்து அடுக்கிவைத்திருக்கும் அபாயகரமான போர்க்கருவிகள், மதத்தின் பெயரால் நடத்தப்படும் வெறியாட்டங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் - இவையெல்லாம் உலகம் தொடர்ந்து கடவுளை ஒதுக்கியே வைத்திருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. நூறு ஆண்டுகள் கடந்த பின்னும் பாத்திமாவில் அன்னை விடுத்த வேண்டுகோள், இன்றைய காலகட்டத்திற்கும் ஏற்ற செய்தியாகவே இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

15.            லூர்து நகரில் அன்னை மரியா காட்சிகள்

தந்தை தம்புராஜ் சே.சு.



பிப்ரவரி மாதம் என்றாலே நமக்கு முதற்கண் ஞாபகம் வருவது லூர்து நகரில் அன்னை மரியா காட்சி கொடுத்த நிகழ்வாகும். 2017 ஆம் ஆண்டு கொச்சி நகருக்கு அருகே இருக்கும் தூய அம்புரோசியார் ஆலயத்தில் அன்னை மரியா நவம்பர் மாதம் 21 ஆம் தேதி பள்ளி மாணவிகளுக்குக் காட்சிக் கொடுத்துத் தனது பணி இன்னும் தொடர்கிறது என்று நிரூபித்துள்ளார்கள்.

காதிலே நோயிருந்த ஒரு பள்ளி மாணவிக்குச் சுகம் கொடுத்தார்கள் அன்னை மரியா. இந்தப் பள்ளிச் சிறுமிகள் அதிக அளவில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். கோவிலின் பீடத்தின் கீழ் அன்னை மரியா பள்ளிப் பிள்ளைகளுக்குத் தோன்றிய போது, கோவிலெங்கும் மல்லிகைப் பூ மணமும் பரவியது. தனது செய்தியில் மக்கள் மனம் மாறவேண்டுமென்றும், அந்தப் பிள்ளைகளைப் பராமரித்துப் பாதுகாத்து, படிப்பில் நல்ல முன்னேற்றம் தந்து, ஒரு நாள் அவர்களை விண்ணகத் திற்குக் கூட்டிச் செல்வதாகவும் அன்னை மரியா உறுதிமொழி தந்துள்ளார்கள்.

இரண்டு முறை அன்னை மரியா இந்தப் பள்ளி மாணவிகளுக்குக் காட்சித் தந்துள்ளார்கள். வயதில் பெரியவர்கள் அன்னை -- மரியாவின், காட்சியைக் காண முடியாதிருந்தாலும், கோவிலில் பீடத்தின் அடியிலிருந்து புறப்பட்ட மல்லிகைப் பூவின் மணத்தை நுகர்ந்திருக்கின்றார்கள். விண்ணகத்தில் - ஆகாயத்தில் இயேசு கசையடி பெறுவது போல ஒரு காட்சியையும் கண்டிருக்கிறார்கள். ஆம், அன்பார்ந்தவர்களே லூர்து நகரில் சிறுமிக்குக் காட்சி கொடுத்த அதே அன்னையின் நற்செய்திப் பணி இன்னும் ஓயவில்லை என்பதை நாம் உணர முடிகின்றது.

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நபர்களோடு அன்னை மரியாவின் மகிமையைப் பற்றி புகழ்ந்து, பகிர்ந்து கொள்வோம்.

தாயில்லாப் பிள்ளைகளைப் போல், அன்னை மரியாவின் பக்திக்கு எதிராகப் பேசுபவர்களின் மனமாற்றத்திற்காக மன்றாடுவோம். ஒரு நாள் வரும், அவர்களும் அன்னை மரியாவை இறைவனின் தாய் என்று ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுடைய குடும்பங்கள் நலமாக, வளமாக இருக்கும். கட்டாயம் அன்னை மரியா தனது மகனிடம் பரிந்து பேசுவார்கள். "

ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கை, புதுமை நிறைந்த வாழ்க்கையாக இருக்க வேண்டுமென்று மன்றாடுவோம்.

இயேசுவுக்கே புகழ்! - மரியே வாழ்க! - இறையாசீர் என்றும் உங்களோடு!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

16.           மலரடி வணங்குவோம்..

திரு.அல்போன்ஸ்

 

 


மரியாள்
இதயம் விழித்து இறைமையை
தனிமையில் தவம் செய்த பெண்மை

மழைத்துளி பருகும் சாதக புல்
இறையருள் பருகும் மறைநாயகி

மரியே
இதோஉன் அடிமை எனக் கூறிய
சம்மதத்தின் மதிப்பு என்ன தெரியுமா?

உயிருள்ள நீர் தாழ்ந்து, பணிந்து, உன்னிடம்
உயிர் உருக உட்புகுந்து கொண்டது

காத்திருந்த சூரியோதயம் கருவறையில் உதித்தது
பூமி தன் தூக்கம் கலைய இறந்தோர் உயிர்க்க
மண்ணும் விண்ணும் கைகோர்த்து கொண்டது

இது வெறும் நிகழ்ச்சியல்ல வரலாற்று திருப்பம்
நீ சரியென்ற பொழுதான்
கிமு கிபி காலம் தொடங்கியது

சிங்கார வனத்தை ஆதி பெற்றோர்க்கு
திறந்த வைத்தான் ஆண்டவன்
அந்த வாசல் வழியே
பாம்பல்லவா படி ஏறி வந்தது

மரத்தில் அமர்ந்து மந்திரம் பேசி
கனியை தந்து தந்திரம் செய்தது
முடிவில் ஆதாம் ஏவாள்
அந்த அலகை குதிகாலில்
அழுத்தியவள் நீ

மூர்ச்சை தெளிவிக்கும் மூலிகையே
கிழக்காக வந்தவளே விளக்காக நின்றவளே

கூண்டுகள் திறந்து வைத்த பறவைகள் போல்
குதுகலத்துடன் உந்தன் மலரடி வருகிறோம்

இது உன்னுடைய ஆலயம்
எங்கள் ஆன்ம பறவைகளின் சரணாலயம்

இனி நாங்கள் என்றும் உன் ஆலயத்தில் ...
எம் வாழ்வு என்றும் மலரும் ஆனந்தத்தில் ...

 

 

17.            அன்னை மரியா என்னும் ஏதேன் தோட்டம்

திருமதி.அருள்சீலி அந்தோணி



மரியாவை நாம் கண்டுணர வேண்டுமாகில் சற்று பின்னோக்கி செல்வோம். மரியாளே நவீன ஆதாம் வசித்த உண்மையான சிங்கார தோப்பு என்பதை நாம் உணர்ந்திடல் வேண்டும். ஆதாம் வாழ்ந்து பின்னர் விரட்டப்பட்ட சிங்காரத் தோப்பு, மரியாவை குறிக்கும் ஓர் முன் அடையாளமாகும். விவரிக்க இயலாச் செல்வங்களும், வளமும், இனிமையும் அனைத்தும் அடங்கிய விண்ணகம் மரியாள்தான்!

இயேசு எனும் நவீன ஆதாம் உறைந்திருந்த மரியம்மையின் கருவறையான சிம்மாசனம் தெய்வீக ஞானத்தையும், தூய ஆவியாரின் அருள்மாரியையும் பொழிந்தது. அனைத்து தெய்வீக செல்வங்களோடு மரியன்னை எனும் சிங்காரத் தோட்டத்திலிருந்து அருள் வரங்கள் வாரியெடுத்துக்கொண்டு வையகம் எனும் புவியிரங்கி மானிடரை வென்றெடுக்கும் பேறுபெற்றார். இயேசு

மாமரி இயேசு எனும் கனியினைத் தந்த சீவிய மரமே மரியா! ஞானம் நிறைந்த கனியே மாமரி! மிகவும் செளந்தர்யமுள்ள இப்பூங்காவில் பல விதமான வண்ணமயமான வானதுதர்களையும் நறுமணம் வீசும் நறுமண மலர்களையும் இச்சிங்காரத் தோப்பில் காணலாம். இங்கே வல்லமையின் கோபுரங்களும், நம்பிக்கையின் நட்சத்திரங்களும், அடக்கமும், அமைதியும் அடங்கிய மாளிகைகளும் ஓங்கி நிற்பதை காணலாம்.

இங்கு வீசும் தென்றல் தூய்மையானது. பரிசுத்தமானது என்றும் ஒளி எங்கும் ஒளி பரிசுத்தம் வாசம் செய்யும் பகற்பொழுது தெய்வீக சூரிய ஒளி பயனற்ற உலோகங்களையும் தம் ஒளியினால் தங்கமாக மாற்றும் தெய்வீகஒளி. தாழ்ச்சி எனும் தூய்மையான ஊற்று தலையான புண்ணியங்களின் அடையாளமாக நான்கு வாய்க்கால்கள் பிரிந்து அப்பூஞ்சோலையை முற்றிலும் புண்ணிய நதிகளாக மாற்றுகிறது.

நித்தியகுரு இயேசு கீழ்த்திசை வாசலின் வழியாக இவ்வுலகிற்கு வந்தாரென்றும், அந்த வாசல்தான் இந்த சிங்கார தோப்பு மரியா என்றும் பரிசுத்த பிதாபிதாக்கள் நமக்கு முன்னறிவித்தார்கள்.

ஒருமுறைவந்த அவர் மீண்டும் அதே வழியாக மீண்டும் வருவார். தூய ஆவி மரியாளை குறித்து, இன்னும் கூறுகிறார், அவளே இறைவனின் சிம்மாசனம்! தமத்திருத்துவம் தங்குமிடம்! கடவுளின் திருநகர், கடவுளின் ஆலயம், உலகமே மரியாவின் தாயகம்! விண்ணகத்தின் வாசல் விடியற்காலத்தின் நட்சத்திரம்!

ஏதேன் எனும் நவீன நந்தவனத்திற்கு இறைமகன் தன் சிம்மாசனமாக தெரிந்துகொள்ளப்பட்ட மரியன்னையின் கருவறையும் ஒருவருக்கு கிடைக்குமேயானால் எவ்வளவு ஆசீர். எத்தகைய பாக்கியம்? எத்தகைய ஆனந்தம்! பேரானந்தம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

18.           தூய ஆவியாரின் கனிகளுடன் பயணிக்கும் அன்னை

அருள்சகோதரி சகாயஜோஸி பிரமிளா. SAT

அன்பு



விண்ணுக்கு அரசியாய் விடுதலை நாயகியாய்
வீறுகொண்டு எழுந்து விடியலாய் என்றும் புலர்ந்து
உம் விழிகளுக்குள் எம்மை வைத்துக் காத்து
உறுதியோடு நாங்கள் உழைக்க 
உயரிய நோக்கில் நாளும் பயணிக்க 
உம்மையே எங்களுக்குப் பாதையாய்க் காட்டினீர்!
உலகம் விழித்தெழுந்து உம் அன்பை உணர
உன்னையே எங்களுக்குக் கையளித்தாய்

அன்பு அன்னையே! பரிந்துரை என்னும் ஒரே வார்த்தையில் எங்கள் ஒவ்வொருவரையும் கவர்ந்து எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி, விண்ணரசை நோக்கிப் பணயிக்க எங்களுக்குப் பாதைக் காட்டினீர். அன்பு அன்னையே இறைவனின் அன்பை நாங்கள் சுவைத்து வாழத் தகுதியுடையவர்களாக எங்களை உருவாக்கப் பரிந்துரைச் செய்வீராக. ஆமென்

விண்அருள்தந்தை

அன்னை மரியே ! எங்களுக்காக உம் மகனிடம் மன்றாடும் அம்மா!

மகிழ்ச்சி



வீட்டுக்கொரு விவிலியம்
நாளுக்கொரு அத்தியாயம்
இல்லத்திற்க ஒரு மரியாள் சரித்திரம்
இதயத்தில் ஒரு பேரானந்தம்
அன்னையவள் நம் இல்லத்தில்
அரசியாய் வீற்றிருந்தால்
அவள் அன்பர் தூய ஆவி வரவால் 
அருள் பொழிய செய்திடுவாய்

அன்னையே! எங்கள் எண்ணங்கள், ஏக்கங்கள், ஆவல்கள், ஆசைகள், தேவைகள், திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி, எங்களது உழைப்பையும், வியர்வையையும் ஒன்றும் வீணாக்காமல் மகிழ்ச்சியாய் மாற்றினீர். இறைவனின் மகிழ்ச்சி எங்கள் ஒவ்வொருவரிலும் வந்து தங்கப் பரிந்துரைச் செய்வீராக. ஆமென்

விண்அருள்தந்தை

அன்னை மரியே ! எங்களுக்காக உம் மகனிடம் மன்றாடும் அம்மா!

அமைதி



எளிமையை வாழ்வாக்கினாய்
ஒளியானவரை உலகிற்குத் தந்தீர்
பணியைப் பண்பாக்கினாய்,
பாருலகிற்கு இணை மீட்பாளரானீர்
ஆம் என்ற இரண்டெழுத்தால்
மீட்பு" என்ற மூன்றெழுத்திற்குக் காரணமானீர்

அன்பு அன்னையே! அமைதியால் அனைத்தையும் பெற்றுத் தந்து, அமைதியின் மகத்துவத்தை உணர வைத்து, எங்களை அமைதி வழியில் நடத்திச் சென்றாய். எங்கள் உடல் தூயஆவி குடிக் கொள்ளும் ஆலயமாக இருக்கச் செய்யவும், அமைதியைக் கடைபிடித்து வாழவும் இறைவனிடம் பரிந்துரைச் செய்வீராக. ஆமென்

விண்அருள்தந்தை

அன்னை மரியே ! எங்களுக்காக உம் மகனிடம் மன்றாடும் அம்மா!

பொறுமை



பொறுமையின் பொற்பீடமாய்
தூய்மையின் கண்ணாடியாய்
விடியலின் விடிவெள்ளியாய்
உண்மையில் வாழ்ந்து
உயர்வை எட்டிப் பிடிக்க
பொறுமை என்னும் ஒன்றை
எங்களின் நாடித்துடிப்பாக்கினீர்

அன்பு அன்னையே! எங்களுக்கு ஏற்படும் இழிவுகளையும், இடையூறுகளையும் பொறுமையோடு ஏற்று உம்மைப் போன்று நாங்களும் தூய்மை அடையும் வரத்தைத் தர உம் மகனிடம் பரிந்துப் பேசுவீராக. ஆமென்

விண்அருள்தந்தை

அன்னை மரியே ! எங்களுக்காக உம் மகனிடம் மன்றாடும் அம்மா!

பரிவு



அருள் நிறைந்தவளாக,
இயேசுவின் அன்னையாக,
வைகறைத் தாரகையாக,
நம்பிக்கை நட்சத்திரமாக,
பரிவுக் குணத்தின் அரசியாக,
பரிந்துப் பேசும் தாயாக
எம் உள்ளச் சோர்வைப் போகத் தாதியானீர்

மாசு அறியா அன்னையே! விண்ணகக் கொடைகளால் நிரப்பப்பட்டு, இறைத் தந்தையுடன் நெருங்கிய உறவில் பிணைக்கப்பட்டீரே! தேவையில் இருக்கும் போது எமது அயலார் மீது பரிவு கொண்டு அவர்களைத் தேற்றும் நல்ல மனம் பெற்றிட உம் மகனிடம் பரிந்துப் பேசுவீராக. ஆமென்

விண்அருள்தந்தை

அன்னை மரியே ! எங்களுக்காக உம் மகனிடம் மன்றாடும் அம்மா!

நன்னயம்



ஆன்மபலன் நிறைந்தவளாய்
இதயத்திற்கு இதமளிப்பவளாய்
ஈடில்லா நிறைவளிப்பவளாய்
உள்ளத்திற்கு ஊக்கமளிப்பவளாய் 
ஊன்றுகோலென உறுதியளிப்பவளாய்
நன்னயம் கொண்டு நாள்தோறும் காத்தாய்

விண்ணக அரசியே! பிறப்பின் பலன் வாழ்வில் தெரியும், வாழ்வின் பலன் செயல்களில் புரியும், செயல்களின் பலன் பிறரின் வாழ்வில் பிரதிபலிக்கும் என்பதற்கு அடையாளமாய் வாழ்ந்துக் காட்டினாய். உம்மைப் போல் நாங்களும் வாழ உம் மகனிடம் பரிந்துப் பேசுவீராக. ஆமென்

விண்அருள்தந்தை

அன்னை மரியே ! எங்களுக்காக உம் மகனிடம் மன்றாடும் அம்மா!

நம்பிக்கை



அசைத்துப் பார்க்க முடியாத நம்பிக்கை
ஆல்போல் வளர்ந்திருக்கும் கீழ்படிதல்
அணுஅணுவாய் அனுபவிக்கும் செபகோபுரங்கள்
ஆயிரம் சுமைகளோடு வந்தாலும்
பரிந்துரையை ஆயுதமாய் கொண்டு
பாரெங்கும் ஒளி வீசுகிறாய்

மகிழ்ச்சியின் தாயே! உம் வாழ்க்கையை இறைத்திட்டம் நிறைவேறத் தியாகமாகக் கொடுத்தாய், எளிமையின் மறு உருவாய் வாழ்ந்துக் காட்டினீர். உம்மை நம்பி வருவோரைக் கைவிடாமல் காத்தீர். அன்பு அன்னையே எங்களது வாழ்வில் இறைநம்பிக்கையைப் பிறருக்குக் கொடுக்கும் வரத்தை நாங்கள் அடைந்திட உம் மகனிடம் பரிந்துப் பேசுவீராக. ஆமென்

விண்அருள்தந்தை

அன்னை மரியே ! எங்களுக்காக உம் மகனிடம் மன்றாடும் அம்மா!

கனிவு



சாந்தம் நிறைந்த முகத்தைத் தாங்கி
இரக்கம் செறிந்தப் பார்வையைப் பொழிந்து
கனிவு கொண்ட வார்த்தைகளைத் தெளித்து
காவியமாய் எம் நெஞ்சில் நிறைந்து
எம் தேவைகளைப் உம் பரிந்துரையால் 
ஏற்றமுற நிறைவு செய்தாய்

அரவணைப்பின் அன்னையே! எங்களின் வேதனைகளை வேரோடு அறுத்துச் சோதனைகளைத் தூளாக்கி, முடியாது என்பதை முடியும் என்று உணர வைத்தீர். அன்பு அன்னையே கனிவு என்னும் குணத்தால் அனைவரையும் கவர்ந்தீர். உம்மைப் போல் நாங்களும் பிறர் மீது கனிவு கொண்டு வாழ உம் அன்பு மகனிடம் பரிந்துப் பேசுவீராக. ஆமென்

விண்அருள்தந்தை

அன்னை மரியே ! எங்களுக்காக உம் மகனிடம் மன்றாடும் அம்மா!

தன்னடக்கம்



ஆயிரம் மலர்களில் இறைவன் தேடிய மலராய்
ஆயிரம் மாந்தரில் இறைவன் தேடிய மங்கையாய்
ஆயிரம் விளக்குகளில் இறைவனின் அணையாவிளக்காய்
ஆயிரம் புகழ்மாலைகளில் இறைவனின் வாடாமாலையாய்
ஆயிரம் இடர் வந்தாலும் தன்னடக்கத்தைக் காத்தீர்
அன்பின் தேவதையாய் வாழ்ந்துக் காட்டினாய்

அன்பின் நாயகியே! தன்னடக்கம் என்பது குனிந்தத் தலை அல்ல. மாறாக உடல், நா, மனம் இவற்றின் கட்டுப்பாடே. இவற்றைக் கட்டுப்படுத்தி ஆழ்மனதில் மகிழ்ச்சியை அனுபவித்து எங்களுக்குத் தன்னடக்கத்தின் மேன்மையைப் புரிய வைத்தீர். அன்பு அன்னையே நாங்கள் அனைவரும் தன்னடக்கத்தைக் கையாண்டு வாழ உம் அன்பு மகனிடம் பரிந்துப் பேசுவீராக

விண்அருள்தந்தை

அன்னை மரியே ! எங்களுக்காக உம் மகனிடம் மன்றாடு அம்மா!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

19.           இறைவனின் தாய் மரியாள்

திரு. சார்லஸ் சென்னை-24

 

கத்தோலிக்கத் திருச்சபையில் அன்னை மரியாளின் வணக்கம்-பக்தி என்பது கடந்த 21 நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்துள்ளது. கத்தோலிக்கத் திருச்சபையில் மரியாவின் வணக்கம் இரண்டறக் கலந்த ஓன்று. தந்தையாகிய கடவுள் தன் மகன் இயேசுகிறிஸ்துவில் உலகிற்கு வெளிப்படுத்திய மீட்பின் நற்செய்தியை, கத்தோலிக்கத் திருச்சபை மரியா வணக்கத்தின் வழியாகப் பறைசாற்றுகின்றது. நான்கு நற்செய்திகளும், திருத்தூதர்களும், தொடக்கத் திருச்சபைக் கிறிஸ்துவர்களும் இயேசுவைப் பற்றிய செய்திகளை வாய்வழியாக வழங்கியபோது, அச்செய்திகளின் முக்கியப் பின்னணியாக விளங்கியவர் அன்னை மரியா.

மரியியல் சிந்தனைகளும், தொடக்கத் திருச்சபையினரிடையே மரியா பெற்றிருந்த பங்கும், இடமும் தான் மரியாளின் வணக்கத்தைக் கத்தோலிக்கத் திருச்சபையின் உயிரோட்டத்துடன் நெருங்கியத் தொடர்புடையதாக ஆக்கியுள்ளது. திருத்தூதர்களைத் தொடர்ந்து, திருத்தந்தையர்களும் மரியியல் சிந்தனைகளை வழங்கியுள்ளனர். புனிதர்களாகிய ஜஸ்டின், இரேனியுஸ், தெர்த்தூலியன், அலெக்ஸான்டிரியா கிளமெந்து, ஓரிஜன், நீசா நகரக் கிரகோரி, அம்புரோஸ், அகுஸ்தினார், இரேணிமுஸ் போன்றோரின் மரியியல் சிந்தனைகள் வணக்கத்திற்கு மேலும் மெருகூட்டுவதாக அமைந்தன.

மரியாவைப் பற்றிய விசுவாசக் கோட்பபாடுகள்:

மரியாளைப் பற்றி எத்தனையோ நம்பிக்கைகள் இருந்து வந்துள்ள போதிலும், நான்கு கோட்பாடுகள் விசுவாசக் கோட்பாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

  1. இறைவனின் தாய் மரியாகி.பி 431
  2. என்றும் கன்னி மரியாகி.பி 553
  3. அமல உற்பவி மரியாகி.பி 1854
  4. விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்ட மரியாகி.பி 1950

மேற்கண்ட நான்கில்மரியா இறைவனின் தாய் (Theotokos)” என்னும் விசுவாசக் கோட்பாடே காலத்தால் பழமையானதும், முதன்மையானதும் ஆகும்.

இறைவனின் தாய் மரியா - கி.பி 431

  • தாய் அன்பை உலக மொழிகளில் எடுத்துரைக்கப் போதிய வார்த்தைகளே இல்லை. அதையே தூய அகுஸ்தினார், “ஒரு மனிதனின் உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் நாக்குகளாக மாறினும் மரியன்னையை, அவருடைய தாய்மைக்கு ஏற்றவாறு புகழ முடியாதுஎன்கிறார்.
  • இரண்டாம் வத்திக்கான் சங்கம், ”ஆராதனை கடவுளுக்கு மட்டும் தான். மற்ற வணக்கங்கள் புனிதர்களுக்கு. இவ்வடிப்படையில் மரியா கிறிஸ்துவின் தாயும், இறைவனின் தாயுமாக இருப்பதால் அவருக்குச் சிறப்பான வணக்கம் செலுத்தப்படுகின்றதுஎன்று கூறுகின்றது.
  • தந்தையில்லாமல் கடவுளால் பிறக்க முடிந்தபோது, தாயில்லாமல் அவரால் பிறக்க முடியவில்லை. மரியாளினால் கடவுள் மகிமைக்குள்ளானர் என்பதல்ல பொருள்; மகிமை பொருந்திய கடவுளை ஈன்றெடுத்ததால் மரியா இறைவனின் தாயாகும் பேறுபெற்றார் என்பதே கத்தோலிக்க விசுவாசம்.
  • அன்னை மரியாளுக்கு ஆயிரம் சிறப்பியல்புகள் இருந்தாலும், இறைவனின் தாய் என்பதே இயேசுகிறிஸ்துவின் தாய்க்கு மகிமை சேர்ப்பதாக உள்ளது.

கி.பி 431ஆம் ஆண்டு ஜுன் மாதம் 7ஆம் நாள் முதல் 31ஆம் நாள் வரை நடைபெற்ற எபேசு திருச்சங்கம்மரியா கடவுளின் தாய்” (Mary is Theotokos) என்று உறுதியிட்டுப் பிரகடனம் செய்தது. இந்தத் திருச்சங்கம் நடைபெற்றபோது மன்னராக இருந்தவர் இரண்டாம் தியோடோசிஸ். எபேசு திருச்சங்கம், அலெக்ஸாண்ட்ரியா ஆயர் சீரில் தலைமையில் நடைபெற்றது. அந்தத் திருச்சங்கம் கூட்டப்பட்டதற்கு முக்கியக் காரணம், கொன்ஸ்தாந்திநோபிளின் ஆயராக இருந்த நெஸ்டோரியஸின் தப்பறைக் கொள்கைகளே. “இயேசு ஓர் ஆள் அல்ல, அவர் இரண்டு ஆட்கள். ஒன்று இயேசு மனிதன்; இன்னொன்று இயேசு கடவுள். இயேசு மரியாவிடமிருந்து பிறக்கும்போது, சாதாரண மனிதராகத் தான் பிறந்தார். பின்னர் தம் வாழ்க்கைக் காலத்தில் கடவுளாக மாறினார்என்று ஆயர் நெஸ்டோரியஸ் கூறினார்.

இயேசு மனித இயல்பு, இறை இயல்பு (Human & Divine nature) ஆகிய இரண்டு இயல்புகளையும் கொண்டவர். இதற்கு மாறாகப் போதித்த நெஸ்டோரியஸின் போதனையைச் சரி செய்வதும், “இயேசு பிறக்கும்போது சாதாரண மனிதனாகப் பிறந்தார் என்பதால் மரியாவைக் கடவுளின் தாய் என்று சொல்லக்கூடாது. மாறாக இயேசுவின் தாய் என்று தான் சொல்லவேண்டும்என்ற போதனைத் தவறானது என்பதை ஐயந்திரிபுற உலகிற்கு அறிவிப்பதும், ஆயர் சிரில் தலமையில் நடந்த எபேசு திருச்சங்கத்தின் நோக்கமாக இருந்தது. அந்தத் திருச்சங்கம் நெஸ்டோரியஸின் தப்பறையான போதனைகளைக் கண்டித்ததோடு, அவரையும் அவரது கூட்டத்தையும் திருச்சபையை விட்டு வெளியேற்றியது.

இந்தத் திருச்சங்கத்தில், “இயேசு, இறை மற்றும் மனித இயல்புகளைக் கொண்ட ஒரே ஆள்என்ற விசுவாசக் கோட்பாடு மீண்டும் பிரகடனம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில்மரியா கடவுளின் தாய்” (Theotokos) என்று அறுதியிட்டு உறுதி செய்தது. அதாவது மரியா கடவுளாகிய இயேசுவைப் பெற்றெடுத்ததால் கடவுளின் தாய் என்றே அழைக்கப்படவேண்டும் என்று எபேசு திருச்சங்கம் ஆணித்தரமாக இவ்விசுவாச சத்தியத்தை உறுதியுடன் பிரகடனம் செய்தது.

மரியாவின் தனிப்பெரும் பேறானக் கடவுளின் தாய் என்பது, இயேசு இறை-மனித இயல்புகளை உள்ளடக்கிய ஒரே கடவுள் என்பதால் உண்மையாகிறது. இயேசு கடவுளின் மகன் மட்டுமல்ல. இயேசு கடவுள் ஆவார். இயேசு கடவுள் என்றால் மரியா கடவுளின் தாயே!

20.            விவிலியத்தில் மரியா இயேசுவின் தாய்

இறைவனின் தாய் மரியா என்னும் கோட்பாட்டிற்கு நிறைய விவிலிய ஆதாரங்கள் உள்ளன.

  1. அனைத்து நற்செய்தியாளர்களும் மரியா இறைவனின் அன்னை என ஏற்றுக் கொள்கின்றனர்.
  2. அனைத்து நற்செய்தியாளர்களும் அவர்களின் நோக்கம் இயேசுவை இறைவனாகக் காட்டுவதாகும்.
  3. அன்னை மரியாவை இறைவனின் அன்னை என்றழைக்கும் விவிலிய மேற்கோள்கள்.
  4. மத்தேயு 2:18, 2:11, 12:46, 13:55, மாற்கு 3:31, லூக்கா 2:34,48,51, 8:19, யோவான் 2:5, 19:25.

புதிய ஏற்பாட்டில்

  • புதிய ஏற்பாட்டில் 25 இடங்களில்அன்னைஎன்றும், லூக்கா நற்செய்தியில் எலிசபெத்து வாயிலாகஆண்டவரின் தாய்” (லூக்கா 1:43) என்றும் கன்னி மரியாஅழைக்கப்படுகின்றார்.
  • இயேசுவின் மனுவுருவை, இறைமனிதப் பிறப்பை நிரூபிக்கும் ஆதாரமாக மரியாவின் தாய்மை உள்ளது. மேலும் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில், “காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்படிருந்த நம்மை மீட்டு, தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும், திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்” (கலா.4:4) என்று திருத்தூதர் பவுல் கூறுவதன் வாயிலாக நாசரேத்தூர் இயேசுவின் மறை உண்மைகளை விளக்குகின்றார்.
  • நான்கு நற்செய்தியாளர்களும் மரியாவின் தெய்வீகத் தாய்மையைப் பற்றிப் பேசுகின்றனர்.
  • தெய்வத்தின் பிறப்பை தெய்வீகத் தாயின்றி எப்படி அறிவிக்கமுடியும்? (மத் 13:55 மாற்கு 6:3 யோவான் 6:42)
  • லூக்கா நற்செய்தியில் எலிசபெத்தைச் சந்திக்கும் மரியா, பழைய ஏற்பாட்டு உடன்படிக்கைப் பேழையின் (வி.. 40:34) புதிய உருவகமாகக் காட்டப்படுகின்றார். பழைய ஏற்பாட்டில் தன்னை நோக்கி இறைவனின் உடன்படிக்கைப் பேழைக் கொண்டு வரப்பட்டபோது தாவீது அரசர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததைப் போல, அன்னை மரியாள் எலிசபெத்தைத் தேடிச் சென்று வாழ்த்துக் கூறியபோது எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது.
  • நான்கு நற்செய்திகளிலும் இறைவனின் அன்னைப் பற்றிய செய்திகள் அனைத்தும்இயேசு கிறிஸ்துவின் மனுவுருஎன்னும் மாபெரும் உண்மையைச் சொல்வதற்காகவே தரப்பட்ட செய்திகள்.

இரண்டாம் வத்திக்கான் சங்கம் - இறைவனின் தாய்

  • இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில்திருச்சபைஎன்ற ஏடு மரியாவின் தெய்வீகத் தாய்மையை முன்வைத்ததற்கு முக்கியக் காரணம், “இறைவனின் அன்னைஎன்ற பழைய மறைபொருளில் ஒரு புதிய உண்மையைத் திருச்சங்கம் கண்டது தான். மரியாவின் தெய்வீகத் தாய்மை உருவகத்தில் திருச்சபையே ஓர் அன்னையாகிறது.
  • நற்செய்தியாளர் யோவான் அன்னை மரியாவைச் சீடர்கள் குழுவின் ஓர் அங்கமாகவே காண்கின்றார். அதன் பொருள்: உலகெல்லாம் ஆள்பவரைப் பெற்றெடுத்தார் நம் அன்னை மரியாள். “உலகை வழிநடத்தும் கிறிஸ்துவைத் திருச்சபைத் தொடர்ந்து ஈன்றெடுக்கின்றதுஎன்கிறார் ஹிப்போலிட்டஸ்.
  • புனித அகுஸ்தினார், “கிறிஸ்துவின் சகோதரர்களைப் பெற்றெடுக்கும் திருச்சபை, மரியா போன்று கன்னி அன்னைஎன்று வலியுறுத்துகின்றார்.
  • மக்களின் மீட்புக்காக அவரின் சேவையில் மலர்ந்தது அவருடைய தாய்மை.
  • தூய ஆவியின் பிரசன்னத்தினால் உருவானது அன்னை மரியாவின் தாய்மை. இயேசுவின் இறைஇயல்பும், மனித இயல்பும் பிரிக்க முடியாத அளவுக்கு மரியாவால் ஒன்றானது.
  • மரியா இறைவனின் தாய் என்பதுஇறையாட்சி ஏற்கனவே உங்களிடையே உள்ளது” (லூக்கா 17:21 மத்தேயு 4:17) என்பதற்குச் சமமாகும். இறைவன் ஒருபெண் வயிற்றில் கருவானார் என்பது அனைத்து மனிதக் குலத்துக்கும் இறை அந்தஸ்து தருகிறது.
  • மரியா மீட்பரின் அன்னையாகவும், எவரையும் மிஞ்சும் முறையில் ஆண்டவரோடு தாராளமாக ஒத்துழைத்த துணையாளராகவும், தாழ்மை கொண்ட அடியாராகவும் விளங்குகின்றார்.
  • கிறிஸ்துவைக் கருத்தாங்கிப் பெற்றெடுத்துப் பேணி வளர்த்தார், மரியா; கோவிலில் தந்தைக்கு அர்ப்பணித்து, இறுதியாகச் சிலுவையில் உயிர்விடும் தம் மகனோடு அவரும் துன்பப்பட்டார். எனவே மனிதருக்கு அருள் வாழ்வைப் பெற்றுத் தரக் கீழ்ப்படிதல், நம்பிக்கை, விசுவாசம், அன்பு போன்ற நற்குணங்களால் நிறைவாழ்வுச் செயலில் மிகச் சிறப்பான விதத்தில் ஒத்துழைத்தவர். எனவே அருள் வாழ்வில்மரியாதாயாக அமைந்துள்ளார்.
  • எனவே மரியா உண்மையாகவே இறைவனும்,மீட்பருமானவரின் தாய் என ஏற்றுக் கொள்ளப் பெற்று, போற்றப் பெறுகின்றார்.
  • இறைவனின் தாயான தூய கன்னி மரியா, இறைத்தந்தையிடமிருந்து பெற்ற கொடைகளாலும், தனது அர்ப்பண வாழ்வின் பணிகளாலும், மீட்பரான தன் மகனுடன் என்றும் ஒத்துழைக்கின்றார்; ஒன்றித்துள்ளார்.


தாமார்தன் முயற்சியில் பிள்ளையை பெற்றெடுக்கிறார்.
இராகாபு - இவர் ஒரு புறவினத்துப்பெண், இவர் காட்டிக் கொடுத்ததினால் பிள்ளையைப் பெற்றெடுக்கின்றார்.
ரூத்து - இவர் ஒரு மோவாபிய பெண், தன் இனத்தைச் சொந்தமாக்குகின்றார்.
பத்செபாவழிமரபை முடிவு செய்பவராக இருக்கின்றார். யூத மரபில் தான் அரசனாக இருந்தாலும் வாரிசை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணிடம் இருந்தது. (.கா) சாராள், யாக்கோபு, பத்செபா.
மரியாகடவுளின் மீட்புத்திட்டத்தில் இறை இரக்கம் பெறுகின்றார்.
Sanctifying -
புனிதப்படுத்தும் அருள், மீட்பதற்காக கொடுத்தது.
DivineGrace
எனவே மேலே சொல்லப்பட்ட நான்கு பேரும் புனிதப்படுத்தும் அருளில் பங்கெடுக்கின்றனர். ஆனால் அன்னை மரியா தெய்வீக அருளில் ஒரு தனிப்பட்ட அழைப்பால் பங்கெடுக்கின்றார். எனவே மரியா அருளால் மீட்புத் திட்டத்தை நிறைவேற்ற வந்தவர் (வீட்டிலிருந்து பணிச் செய்வது). நிக்கதேம், அரிமத்தியா ஊர் யோசேப்பு ஆகியோர் தத்தம் பணியிலிருந்து இயேசுவால் அழைக்கப்பட்டவர்கள்.

மரியா என்ற பெயர்ச் செமிதிய அக்காடியா மொழியில் மரா, மரியா, மரியம், மிரியாம் என்று கூறப்படுகின்றது. “மராஎன்றால் அழகானது, நிறைவானது என்று பொருள். “மாரிஎன்றால் கடவுள் என்று எகிப்திய மொழியில் பொருள். எனவே அன்னை மரியாள் கடவுளால் அழைக்கப்பட்டவர். சீடர்கள் ஆவியால் நிரம்பப் பெற்றவர்கள். ஆவியால் நிரப்பப்பட்ட அன்னை மரியாஆம்என்று தன்னை இறைத்திட்டத்திற்கு முழுமையாக அர்ப்பணித்தார். அந்த முழுமையான, நிறைவான, அர்ப்பண வாழ்வை அடிப்படையாகக் கொண்டே மரியாவைஇறைவனின் தாய் - நம் அனைவரின் தாய்என்று திருச்சபை உலகிற்குப் பறைச்சாற்றுகின்றது.

அன்னையின் சீடத்துவம் நம் தனிமனித வாழ்விலும் இறை மனித உறவிலும் ஒன்றித்திருக்க வேண்டிய ஒன்று.

 

21.            அன்னை மரியாள் ஆறுதல் அளிப்பவர்!



திருமதி அருள்சீலி அந்தோனி - சென்னை

 

செபமாலை அன்னையின் பெருவிழாவை கொண்டாடும் மாதம் அக்டோபர். அவரது இரக்கம் எத்தகையோரிடம் உள்ளது என்பதை இந்த கட்டுரையின் வழியாய் அறிந்து அதனை வாழ்வாக்கவே, இந்த சிறு உண்மை நிகழ்வு சமர்ப்பணம்.
ஆஸ்திரேலியாவில் ஓர் ஏழைப் பெண் வாழ்ந்து வந்தாள். தாயை இழந்தவள். தந்தையின் விருப்பபடி தங்களுடைய ஆடுகளைமேய்த்து வந்தாள். வசதி இல்லையென்றாலும் கடவுளின் திருவுளத்தை ஏற்று தன் வாழ்வில் கடைப்பிடித்து வந்தாள். என்றும் கையில் செபமாலை, வாயில் செபங்கள் சொல்லிக் கொண்டே காடு மேடெல்லாம் ஆடுகளை மேய்த்துக் கொண்டே செபித்து வந்தாள்.

ஒரு நாள் காட்டிற்குள் ஆடுகள் வெகு தொலைவில் மேயச் சென்றுவிட்டன. அவைகளை தொடர்ந்து சென்றபோது, அங்கே ஒரு காட்சியை கண்டாள். ஓர் பாழடைந்த ஆலயம் இருப்பதைக் கண்டாள். அங்கே ஓடோடிச் சென்று பார்த்தாள். அங்கே சிதைந்து போன பீடம். அதன் மீது அழுக்கு படிந்த மரியாவின் அழகிய சுரூபம் கிடப்பதைக் கண்டு ஆனந்தம் கொண்டாள். ஓடோடிச் சென்று சுரூபத்தை தன் துணியால் துடைத்து அந்த பீடத்தையும் சுத்தம் செய்தாள்.

அன்று முதல் அன்னைமரிக்கு தினசரி ஜெபமாலை, காட்டு மலர்கள் பறித்து, அலங்கரித்து மகிழ்ந்து வந்தாள். காலம் உருண்டோடியது. ஆண்டுகள் பல கடந்தன. ஒரு நாள் அவள் தந்தை இறந்து விட்டார். அவள் யாருமில்லா அனாதையானாள். ஆனால் மாதா பக்தியை மட்டும் கைவிடவில்லை. தினசரி பலமுறை செபித்தாள். அவரது மகிழ்வு அன்னையை அலங்கரிப்பதிலேயே இருந்தது.

ஒரு நாள் உடல் சுகமில்லாமல் படுத்த படுக்கையாகி விட்டாள். ஆடுகளை மேய்க்கவும் செல்ல முடியவில்லை. அன்னைக்கு மலர் அலங்காரம் செய்ய முடியவில்லையே என கண்ணீர் கலங்கினாள். அவளது நோயும் அதிகரித்தது. படுத்த படுக்கையானாள். மரணம் நெருங்கியது. வைக்கோல் படுக்கை தான் அவளது மெத்தையானது. அன்று பிரான்சிஸ்கன் துறவியர் இருவர் அவ்வழியே பயணம் போய்க் கொண்டிருந்தார்கள். பயணக் களைப்பால் அந்த காட்டில் ஒர் மர நிழலில் இளைப்பாற தங்கினார்கள். ஒருவர் உறங்கிவிட்டார். அடுத்தவர் அமர்ந்திருந்தார். திடீரென ஒளி வெள்ளத்தை கண்டு உறங்கியவர் விழித்தெழுந்தார்.

அவர் ஓர் அழகிய அரசி இவ்வழியே செல்வது போல் கனவு கண்டேன் என்றார். அந்த வழியில் இன்னமும் ஒளி வெள்ளம் இருப்பதைக் கண்டு, இருவரும் பின் தொடந்தனர். அந்த ஏழைப் பெண்ணின் குடிசையை அந்த அதிசய ஒளி சூழ்ந்திருந்தது. அங்கே அரசியாக இருந்தவள் ஆண்டவரின் தாய் என்பதைக் கண்டு கொண்டனர். அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை தந்தது.

அன்னை மரியா, அந்த ஏழை பெண்ணை தேற்றி, அவள் தலையில் பூ முடியொன்றைச் சூட்டினார். சுற்றிலும் நின்ற பெண்கள் அந்தப் பெண்ணுக்குப் பணிவிடைச் செய்தார்கள். இயேசுவின் திருப் பெயரை மகிழ்வுடன் கூறிய அந்த பெண் தன் ஆன்மாவை இறைவனிடம் ஒப்படைத்தாள். காட்டுமலர்களால் அன்னையை அலங்கரித்த அந்த ஏழைப் பெண் அன்னையின் அருளால் விண்ணக பேறுபெற்றாள்.

அன்பார்ந்தவர்களே!

புனித அன்னையை மகிமைப்படுத்தும் ஒவ்வொருவரையும் அவருடைய திருமகன் மகிமைபடுத்துகின்றார். மாதா இறைத்திட்டத்திற்கேற்ப சிலுவையருகே நின்று தன் மகனோடு துன்புற்று, அவரது பலியுடன் இணைந்தாள். அதனால் மாதாவின் பிள்ளைகளை இயேசு விரைந்து வந்து காக்கின்றார். மீட்கின்றார். இதனால் தான் சாத்தான் தான் அழிக்க விரும்பும் நபர்களை மாதாவின் அடைக்கலத்திலிருந்து விளக்கிட பற்பல முயற்சிகளை கையாள்கின்றது. அவ்வழியில் விழுந்த பலர் மாதாவை புறக்கணிக்க தொடங்கி விரைவில் திருச்சபையை விட்டே விலகி தனி சபைகளைத் தொடங்கி விடுகின்றார்கள்.

செபமாலையை பக்தியோடு செபிக்க தொடங்கினாலே பேய்கள் பறந்து ஓடும். "அம்மா" என்று அழைப்பவர் மனதில் மகிழ்வு குடிக் கொள்ளும். அவர்களது ஆன்மா வளம் பெறும். பிணிகள் நீங்கு. பிரசனைகள் தீரும். துன்ப துயரங்கள் விலகும். அனைத்து ஆசீர்களும் வந்தடையும் என்கிறார் தேம்பாவானி ஆசிரியர். அன்று கபிரியேல் தூதர் பணிவுடன் மங்களச் செய்தியை மகிழ்வுடன் வாழ்த்தினார். நாமும் அனுதினமும் "ஆவே மரியா! மரியே வாழ்க!" என போற்றவும் வாழ்த்தவும் கடமை பட்டுள்ளோம். எல்லா நேரத்திலும், எல்லா வேளையிலும் அன்னையை வாழ்த்தலாம். ஆலய மணியோசை கேட்டதும் மூவேளைச் செபத்தை செபிப்போம். இத்தகைய மாதாவின் பக்தியை இன்று நாம் காணும் பக்தக்கோடிகளின் பாத யாத்திரை நம்மை மண்ணக மாந்தரின் நடுவில் அன்னை மரியா வலம் வந்து கொண்டிருகின்றாள் என்பதை அனைத்து சமயங்களும் வியந்து மகிமைபடுத்துகின்றனர். ஏன் பிரிந்த சபையினரும் வியந்த வண்ணம் அவர்களும் தன்னையே மறந்து அன்னையிடம் வந்து சரணடைகின்றார்கள். இதனை இந்த காட்சியை வேளாங்கண்ணியில் கண்டு களிக்கலாம். வாருங்கள் வாசகக் பெரும்மக்களே!

எங்கள் சந்தோஷத்தின் காரணமே!

" எங்கள் சந்தோஷத்தின் காரணமே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் " என்று மாதா பிராத்தனையில் நாம் தவறாதுச் செபித்துவருகின்றோம். ஆனால் அந்தச் சந்தோஷத்தின் காரணங்கள் என்னவாக இருக்கும் என்று தியானித்துப் பார்த்தால் விவிலியத்தில் தக்க ஆதாரம் கிடைக்கும். மூன்று நிகழ்வுகள் உள்ளன, மரியாளின் உடனிருப்பையும் அதன் மகிழ்ச்சியை எடுத்துரைக்க...



எலிசபெத்து -மரியாள் சந்திப்பு: லூக்கா நற்செய்தி முதல் அதிகாரம் 23ஆம் வசனத்திலிருந்து 56ஆம் வசனங்கள் வரையிலான நிகழ்வுகளில் ஒரு மகிழ்ச்சிகரமான உண்மையை உணரலாம்.

மரியாளுக்குக் கபிரியேல் வானதூதர் அருளிய வாக்குகளின்படி எலிசபெத்துக் கருத்தாங்கியிருப்பது மாபெரும் அதிசயம். மரியாள் ஆவியானவரின் தூண்டுதலால் 70 வயது முதாட்டியைச் சந்திக்கச் சுமார் 120 கிலோமீட்டர் தூரத்திலுள்ள யூதேய மலைநாட்டிற்கு நடந்து செல்கிறார். தானும் ஓரு கர்ப்பணிப் பெண் என்பதைக் கூட நினையமால் அன்னையின் கரிசனையோடு எலிசபெத்துச் சந்திக்கின்றார். யூதர்கள் குலமுறைப்படி ஒருபெண் அதுவும் திருமணத்திற்கு முன்பே கருத்தாங்கிய பெண் வெளியே செல்வது என்பது இயலாத காரியம். அன்னை மரியாளின் அன்புக்குத் தடையேதும் உண்டோ?

கருத்தாங்கிய இருவர் அதுவும் 70ம், 18ம் சந்திப்பது என்பது எவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும்!? எத்தனை மகிழ்ச்சியைத் தந்திருக்கும்! கற்பனைக்கு எட்டாத ஓர் அதிசயம். ஆண்டவரின் தாயார் தன்னிடம் வரக் கண்ட எலிசபெத்து மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் மரியாளை வரவேற்க வந்தகாட்சி எப்படி இருந்திருக்கும்! இந்த மகிழ்ச்சின் காரணம், மரியாளின் அர்ப்பண அன்புத் தானே!

இருவரும் ஒருவர் ஒருவரை வாழ்த்துக்கூறவும், எலிசபெத்தின் வயிற்றில் குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியதும், ஆவியானவரின் அருள்பொழிவும் பெற்றதும், அங்கே நிறைவான மகிழ்ச்சி தந்தது. எலிசபெத்தின் பயம் நீங்கிச் சந்தோஷம் நிறைகிறது என்றால் அதன் கனியே மரியாளின் பாடலாக ஒலிக்கிறது. மரியாளின் உடனிருப்பு, நிறைவு, ஆவியின் அருள்பொழிவு என எத்தனை நிகழ்வுகளைத் தந்தது. இது தான் நாம் சந்தோஷத்தின் முதல் விவிலியப் பதிவு.

கானவூர் திருமணம்: கானவூர் திருமணத்திற்கு இயேசுவுடன் மரியாள் செல்லுகிறார். மணவீடு மகிழ்ச்சியின் எல்லை இருக்கவேண்டிய இடம். ஆனால் திராட்சை இரசம் பற்றக்குறையால் சோகமாய் மாறுகிறது. இதனை உணர்ந்த மரியாள் மணவீட்டாரின் துன்பத்தில் பங்குக் கொள்ளுகிறார்.அங்கே மகிழ்ச்சி நிறைந்திட எழுந்தார். மகனிடம் சென்றார்.முதல் அற்பும் நிகழ்த்திட அமைத்தார்.அன்னை மரியாள் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார். இறைமகனும் அன்னையின் பரிந்துரையை உணர்ந்தார்.கற்சாடியிலுள்ள தண்ணீர் இயேசு கண்ட மாத்திரத்தில் இரசமாகியது. எங்கும் கிடைக்காத இனிய திராட்சைஇரசத்தை அன்னையின் பரிந்துரையில் பெற்றார்கள் அந்த மணவீட்டார்கள். சோகம் நிறைந்த இடத்தில் மகிழ்ச்சி நிறைகொள்வது அன்னையின் உடனிருப்பலே.சந்தோஷத்தின் இரண்டாவது விவிலியப் பதிவு ஆகும்.

ஆவியானவரின் அருள்பொழிவு: உயிர்த்த இயேசு வானகம் சென்றபின் சீடர்கள் அஞ்சி நடுங்கியவர்களாய் ஒரு வீட்டின் மாடி அறையில் தங்கி இருந்தனர். அன்னை மரியாளும் அவர்களுடன் இருந்தார். வெளியே செல்வதற்கும் பயம்,எங்கே தங்களையும் கொன்றுவிடுவார்களோ என்று. இயேசுவின் உடனிருப்பு இல்லாததால் சோகமே உருவாகி இருந்தார்கள். அனைவரும் ஓன்றாய் செபத்தில் கூடியிருந்தபோது ஆவியானவர் நெருப்பு வடிவில் வந்து பெரும் அருள்பொழிவைச் செய்கிறார். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். சோகம் மறைந்து மகிழ்ச்சியும்,கோழையாக இருந்தவர்கள் தைரியமும் பெற்றனர்.சந்தோஷத்தின் முன்றாவது விவிலியப் பதிவு ஆகும்.

இப்போது நமது உண்மையான சந்தோஷத்தில் மரியாளின் உடனிருப்பின் பங்கு எவ்வளவு என்பது விவிலியச் சான்றுகளுடன் நிருபிக்கப்பட்டுள்ளது. அன்னையின் கரம் பற்றி இறைமகன் இயேசுவைப் பின்பற்றிச் செல்வோம்.

22.           மரியா திருச்சபையின் முன்னோடி

அருள் முனைவர் இருதயராஜ்

அக்காவின் திருமணத்தைக் காணும் தங்கை தனக்கும் அப்பா மிகவும் சிறப்பாகத் திருமணம் நடத்துவார் என்ற எதிர்நோக்குடன் மகிழ்கின்றார். அவ்வாறே கடவுள் மரியாவை மகிமைப்படுத்தியது போல நம்மையும் மகிமைப்படுத்துவார் என்பது முற்றிலும் உறுதி.

திருத்தூதர் பவுல் கூறுகிறார். "கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களை அவர் முன் குறித்து வைத்தார். அவர் முன் குறித்தவர்களை அழைத்தார். அவர் அழைத்தவர்களை தமக்கு ஏற்புடையவராக்கினார். தமக்கு ஏற்புடையவர்களாய் செய்தவர்களைத் தம் மாட்சியில் பங்குபெறச் செய்தார். (உரோ 8:23-30)

கடவுள் மரியாவை மீட்பின் தாயாக முன் குறித்தார். அவரை அழைத்தார். தமக்கு ஏற்புடையவராக்கினார். தம் மாட்சிமையில் பங்கு பெறச் செய்தார். மரியாவுக்குச் செய்தவற்றைக் கடவுள் நமக்கும் செய்தார். அதே கடவுள் நம்மையும் கிறிஸ்து வழியாகத் தெரிந்து கொண்டார். கிறிஸ்துவின் சாயலுக்கு ஏற்ப உருமாற்றமும் அடையும்படி அழைக்கிறார். நம் பாவங்களை மன்னித்து நம்மை அவருக்கு ஏற்புடையவராக்குகின்றார். நமக்கும் இறைமாட்சிமையில் பங்களிக்கிறார். எனவே மரியா நமது முழுமையான மீட்பின் முழு அடையாளம்.

மரியாவின் அமல உற்பத்தில், இயேசுவின் மணமகளாகிய மாசுமருவற்ற எழில் மிகுந்த, திருச்சபையாகிய புதிய சமுதாயத்தின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது என்று கன்னிமரியின் அமலோற்பவத் திருவிழாத் திருப்பலியின் தொடக்கவுரையில் திருச்சபை அறிக்கையிடுகிறது.

ஆம், மரியாவின் அமல உற்பவத்தில் கறைதிரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும், மாசற்றதுமாய் (எபே 5:27) விளங்க வேண்டிய திருச்சபை தொடங்கிவிட்டது. மரியாவின் மகிமை திருச்சபையின் மகிமையே.

மரியன்னையின் அமல உற்பவம் திருச்சபைக்கும், மனதிகுலத்திற்கும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறது. மரியன்னையின் அமல உற்பவத்தில் கடவுள் மனித குலத்துடன் நட்புறவு கொள்ள ஆரம்பித்துவிட்டார். மனித குலமும் அலகையின் தீமைக்கு எதிரானப் பேராட்டத்தில் கடவுள் பக்கம் சேர்ந்து விட்டது. மாசுமருவற்ற மரியாவின் அமல உற்பவத்தில் திருச்சபையும் மனிதகுலமும் அருளின், மீட்பின் நிறைவை அடைய அழைக்கப்பட்டுள்ளன.

  • பெண்ணின் வித்து அலகையின் மீது வெற்றி கொள்ளும் (தொநூ 3:15)
  • பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது (உரோ 5:20)
  • கடவுள் நம் சார்பில் இருக்கும்போது நமக்கு எதிராக இருப்பவர் யார்? (உரோ 5:31)
  • நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் கடவுள் முன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்துள்ளார். (எபே 1:4)
  • திருச்சபையானது மாசுமறுவோ வேறு எக்குறையோ இன்றி உருமாற்றம் அடையும் (எபே 5:27)
  • நாமும் மரியன்னையுடன் இறைமாட்சிமையில் பங்குபெறுவோம் (உரோ 8:26-30)




இறுதியாக மரியா அமல உற்பவியாகப் பிறந்ததும் மீட்பின் தாயாக அழைக்கப்பட்டதும், முப்பொழுதும் கன்னியாகத் திகழ்ந்ததும், விண்ணக மகிமைக்கு உயர்த்தப்பட்டதும், நமக்காக இவ்வுண்மைகளைத் திறந்த மனதுடன் ஏற்று, அவற்றை உலகிற்குப் பறைசாற்றி, மரியன்னையுடன் இணைந்து அலகையின் அச்சாணியை முறித்து புனிதம் கமழும் புத்துலகம் படைப்போம்.




"அழகின் முழுமையே தாயே! அலகையின் தலை மிதித்தாயே"

 

 

23.           அன்னை மரியாவின் மகிமை!

அருள்சகோதரி. ஜோவிட்டா, தூய சிலவை மடம், திருச்சி

அன்னைக்கு கரம் குவிப்போம்

 

மாதாவே துணை நீரே! உம்மை வாழ்த்தி போற்ற வரம் தாரும் என்று மாதாவின் மகிமையை போற்றுகிறது உலகம். அன்னைக்கு கரம் குவிப்போம் அவள் அன்பை பாடிடுவோம் என்று அன்னையின் அன்பை பாடல் மூலம் பாடிப் போற்றுகிறோம். எனவே, அம்மாவின் அன்பு துணை இருக்கும் போது நாம அஞ்ச வேண்டாம். எனவே, தான் பெருமையிணை, அவளின் தாழ்ச்சினை நாம் நன்கு அறிந்து அதன்படி வாழ மே மாத பக்தி முயற்சி பெரும் துணை புரிகின்றது. அம்மா என்றாலே தியாகம்! தியாகத்தின் தாய் என்பதால் நாம் அடைய தன் ஒரே மகனை சிலுவை சாவை ஏற்று தந்தையின் சித்தத்தை நிறைவேற்றிட துணை புரிந்தவர் நம் அன்னைமரி.

அன்னையின் அருங்குணங்கள்:

தாழ்ச்சி, பொறுமை, நம்பிக்கை, இடைவிடாது செபித்தல், குடும்ப பொறுப்பு, துன்பத்தை ஏற்றல். கரியேல் தூதரின் வாழ்த்தினை கேட்ட அன்னை கலங்கி இது எபடியாகும்? நான் கணவனை அறியேன் என்றார். உன் வழியாக உலகத்திற்கு மீட்பு உண்டு, நீ அஞ்சாதே, தூய ஆவி உன்னில் நிழலிட நீ கருவுற்று ஓர் ஆண் மகவைப் பெறுவாய் என்றதும், “இதோ, உமது அடிமைஎன்று கீழ்ப்படிந்து இறைத் திட்டத்தை ஏற்றார்.

கீழ்ப்படிதலும், நம்பிக்கையும்:

வயது முதிர்ந்த உன் உறவினர் எலிசபெத் கருவுற்று இது ஆறாம் மாதம்என்று தூதர் கூறிட மரியா அதை நம்பினார். அது மட்டுமல்லாமல், உடனே விரைந்து சென்று எலிசபெத்திற்கு உதவி செய்து ஆறு மாதம் அங்கு தங்கி பணி செய்தார். நம்பியதால், கீழ்ப்படித்தால் உதவி செய்ய விரைந்து சென்றார். இருவரின் சந்திப்பால் இரு உள்ளங்க பொங்கிட ஒருவர் ஒருவரை வாழ்த்தி இறை அன்பில் நம்பிக்கையை வளர்த்தனர். இறைவனின் தாயாக போகிறோம் என்ற பெருமை இன்றி சாதாரண பெண்மணி போல் மாதா எசலிபெத்திற்கு உதவியது அவரின் அடக்கம், தற்பெருமை இல்லாமையை சுட்டிக் காட்டுகிறது.

துன்பத்தில் துணைபுரியும் தாய்!

கானாவூர் திருமண விழாவிற்குச் சென்ற தாய் பரிவு உள்ளத்தோடு அவர்களுக்கு இரசம் இல்லாமையை அறிந்தார். ஆனால் மற்றவர்கள்போல் கண்டும் காணாதிருக்கவில்லை. யார் எக்கேடு கெட்டால் என்று தன்னலமாக இருக்கவில்லை. தன் மகனிடம் சென்றார். பரிந்துபேசி "மகனே, இரசம் தீர்ந்துவிட்டதுஎன்றார். மகன் "என் நேரம் வரவில்லைஎன்று கூறினாலும் மகன்மீது நம்பிக்கை கொண்ட தாய் பணியாளர்களிடம் "அவர் சொல்வதைச் செய்யுங்கள்என்கிறார்.

துன்பத்தை தன் வாழ்வில் ஏற்றல்

குழந்தை பிறப்பதற்கு இடமின்றி நாடு விட்டு நாடு சென்றார் மாதா. பிறந்த குழந்தையை வளர்க்கும் முன், கனவில் தோன்றிய தூதரின் கட்டளையை ஏற்று எகிப்து சென்றார். ஆலய விழாவில் பங்கு பெற்று திரும்புகையில் குழந்தை இயேசு பெற்றோரிடம் திரும்பி வராது தலைவர்களின் மத்தியில் போதித்துக் கொண்டிருந்தார். மூன்று நாட்களுக்குப் பின் சூசையும், மரியும் மகனைக் கண்ட போதும், "நான் என் தந்தையின் பணியில் ஈடுப்பட்டுள்ளேன்' என்று கூறியதும் மாதாவிற்கு அதிர்ச்சி அளித்தது. இயேசுவை கோவிலில் காணிக்கையாக்கும் போது சிமியோன் கூறியவார்த்தை மாதாவின் இருதயத்தில் ஒரு வாள் ஊடுருவியது போல் ஆயிற்று. பெற்று வளர்த்த மகன், ஒரே மகன் சிலுவைச் சுமந்தபோது உடன் இருந்தது மாதாவிற்கு எத்தகைய துன்பமாக இருந்திருக்கும்! துன்பங்களின் மத்தியில் மாதா இறை சித்தத்தை ஏற்று, நமக்கு மீட்பின் தாயானது உலகு அறிந்த உண்மை. எனவே, உலகம் அன்னையின் அன்பைப் போற்றிப்பாடுகிறது.

சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகள் நம் தாயிடம் இல்லை. எங்கு மாதா காட்சி கொடுத்தாலும் செபம், தவம் மிகத் தேவை என்று கூறி நம்மை இறைவனோடு இணைந்து செயல்படத் துண்டுகிறார். "மனம் மாறுங்கள்" என்பதால், பாவத்திலிருந்து விடுதலை பெறுவது மிக முக்கியம் என்பதை மாதா பலமுறை உணர்த்துகிறார். போர்ச்சுக்கீசியர் வணிகத்திற்கு இந்தியா வரும்போது பெரும் காற்று, புயல் அடித்து படகு மூழ்குகையில் அன்னையிடம் செபிக்கவே மாதாவின் கருணையால் காற்று அடங்கி, கப்பல் வேளாங்கண்ணி அடைந்தது. உலகு போற்றும் வேளாங்கண்ணி ஆலயம் தம்மை நாடி வந்த யாவருக்கும் வரங்களை வாரிக் கொடுக்கிறது. எனவே, துன்பத்தில் துணை புரியும் அம்மா நம் தாய் மரி என்பது தெளிவாகப் புரிகின்றது.

மாதாவின் பல ஆலயங்கள்

பூண்டி புதுமை மாதா, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா, பாத்திமா மாதா, லூர்து மாதா, சலேத் மாதா, கார்மேல் மாதா, செபமாலை மாதா, உத்தரிய மாதா, அமலோற்பவ மாதா என்று மாதா பெயர் சூட்டப்பட்ட பல புண்ணிய ஸ்தலங்கள் மாதாவிற்கு உள்ளன. இலங்கையில் மடுமாதா, மெட்சுகோரியே மாதா, நற்கருணை மாதா என்றும் மாதாவைப் போற்றி மக்கள் புகழ்ந்துப் பாடுகின்றனர்.

குடும்பப் பெண்

இவ்வாறு பல பெயர்களால் சூட்டப்பட்டு பலரால் போற்றப்பட்டாலும் கற்புள்ள பெண்மணி மாதா கணவராம் சூசையப்பருடன் கடினமாக உழைத்து குடும்பக் கடமையைச் சரிவரச் செய்தார். இறைச் சித்தத்தை ஏற்று நடத்திட குடும்பப் பெண்ணாகிய மரியா பெரும் துணை நின்று அன்பு, அமைதி, மகிழ்ச்சி நிறைக் குடும்பமாக செயலாற்றிட மாதா குடும்பப் பொறுப்பை ஏற்று, சிந்தையில் தெளிவுடன் செயல் பட்டார். எனவே, வறுமையிலும் வளமுடன் வாழ தன் மகனுக்குக் கற்றுக் கொடுத்தார். எனவே தான் லூக்கா நற்செய்தி "இயேசு வளர வளர ஞானத்திலும், பக்தியிலும் வயதிலும் வளர்ந்தார்என்று கூறுகின்றது. தாய்மைநிலையில் இருக்கும் பெண்கள் அன்னை மரியாவைப்போல் உள்ளது போதும் என்ற மன நிறைவு பெற்று, மகிழ்ச்சியுடன் வாழும்போது அன்பு, அமைதி, மகிழ்ச்சி நிறைந்த தாயாக அவர்கள் மாறி புதிய சமுதாயம் உருவாக்கிட முடியும்.

இவ்வாறு நற்குணங்கள் பல பெற்ற அன்னைக்கு வணக்கம் செலுத்தவே மே மாதம் மாதாவின் வணக்க மாதம் என்று அழைக்கப்படுகின்றது. கோழை உள்ளத்தினராய் பயந்து வாழ்ந்த சீடர்களை மாதா ஒன்று கூட்டி சேர்த்து செபித்து, தூய ஆவியால் நிரப்பி இயேசுவைப் போதித்திடத் துணை நின்றார்.

முதலும் முடிவும், அகரமும் னகரமும், ஆதியும் அந்தமுமான இயேசுவை அகிலத்திற்கு அளித்தவர் நம் தேவதாய். எனவே, மாதாவின் பாத மலரின் அடிச்சுவட்டினைப் பின்பற்றி வாடாத மலராக நாம் வாழ்ந்திட அன்னையின் அருள் வேண்டி இடைவிடாது செபிப்போம். செபமாலை சொல்வோம். கூடிச் செபிப்போம். குடும்பத்தில் நம்பிக்கையின் ஒளி வீசி அமைதிப் பூங்காவாய் குடும்பம் மாறிட அன்னையின் அருள் வேண்டிச் செபிப்போம்.

 

 

 

 

24.           இளைஞர்களுக்கு அன்னை மரியா

அருட்தந்தை தம்புராஜ் சே..

இளைஞர்களுக்கு அன்னை மரியா ஒர் எடுத்துக்காட்டாக, ஒரு முன்மாதிரியாக இருக்கின்றார் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. அன்னை மரியா இளம் பெண்ணா? என்ற கேள்விக்குறி பலரிடம் எழலாம்.இறைவல்லுநர்கள் ஆராய்ச்சி செய்து என்ன கூறுகிறார்கள் தெரியுமா? கன்னி மரிக்கு வானதூதர் மங்கள வார்த்தை சொன்னபொழுது அவருக்கு வயது 14. யோசேப்புக்கு வயது 17.

அக்காலத்தில் நம் நாட்டைப்போல் பாலிய விவாகம் நடப்பது ஒரு பாரம்பரியமாக இருந்தது. இந்த இளம்பெண்ணை தான் இறைவன் தாம் வைத்திருந்த ஒரு பெரிய திட்டத்திற்கு ஒப்புமை கொடுக்க அழைப்பு விடுக்கின்றார். அத்திட்டம் - மனுக்குலத்தை மீட்க ஒரு மீட்பரை மரியாவிடமிருந்து பிறக்க வைப்பது, எவ்வளவு பெரிய பொறுப்பு!

சாதாரண, சாமானியப் பெண்ணை இறைவன் தேர்ந்தெடுக்கின்றார். கன்னியாக இருந்து கொண்டே தாயாக மாற வேண்டும். ஒரு பெரிய புரியாத புதிர்தான். இளைஞர்கள் அடிக்கடிக் கேள்வி கேட்டுப் புதுப்புதுக் காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

கன்னி மரியாவும் வானதூதரிடம் "இது எப்படி நிகழும்?" என்ற கேள்வியைக் கேட்கின்றார். வானதூதர் பொறுமையோடு இறை திட்டத்தை விளக்கிக் காட்டுகின்றார். புரியாவிட்டாலும் இச்சவாலை ஏற்றுக் கொள்கின்றார். ஏன் இது ஒரு சவாலாக இருக்கின்றது!

இஸ்ரயேல் நாட்டில் ஒர் இளம்பெண் திருமணம் ஆவதற்கு முன் கர்ப்பமானால் அதற்கு என்ன தண்டனை தெரியுமா? அவள் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும். மரியா இவ்வளவு பெரியஆபத்து நிறைந்த சூழ்நிலையைச் சந்திக்கத் தயாராகின்றார். கடவுள் சித்தம் இதுதான் என்று  தெரிந்தவுடன் அதற்கு அடிபணிகின்றார். இவரால் இதை எப்படிச் சந்திக்க முடிந்தது? கடவுள்  இத்திட்டத்தைத் தனக்கு வெளிப்படுத்தினாரென்றால் கட்டாயம் அவர் தன்னைக் காப்பாற்றுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவரிடம் இருந்தது.

இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை வந்து விட்டால் எதையும் செய்துகாட்டத் தயங்கமாட்டார்கள்துணிந்து செயலில் இறங்குவர். அவர் ஏமாந்து போகவில்லை. ஏனென்றால் இறைவன் திருமண ஒப்பந்தம் மட்டுமே செய்திருந்த யோசேப்புக்குத் தோன்றி (கனவில்) மரியாவை மனைவியாக ஏற்றுக் கொள்ளப் பணிக்கின்றார். யோசேப்பும் விசுவாசத்துடன் இந்த மறைபொருளை ஏற்று, அதன் படி நடக்கின்றார்.

இளைஞர்களுக்குரிய மற்றொரு துணிவும் மரியாவிடம் இருந்தது. இஸ்ரயேல் சமுதாயத்தில் ஒர பெண் தன்னந்தனியாக வெளி இடங்களுக்குச் செல்லக்கூடாதுஆயினும் இந்த மறைபொருளை எலிசபெத்தோடு பகிர்ந்து கொள்ள தன்னந்தனியாக மலைநாட்டுக்குப் பயணம் செய்கின்றார். இத்துணிவு எப்படி அவருக்கு வந்தது? யாரை அவர் தாங்கி செல்கின்றாரோ அவர் தன்னைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆகவே தான் அவரை  நம்பிக்கையின் நட்சத்திரம் என்று  வாழ்த்துகிறோம். இளைஞர்க்குப் புரட்சி என்றால் உடனே தங்களது வலது கரத்தை வைத்து செயலில் குதிப்பர். கன்னி மரியா ஒரு புரட்சிப் பெண் என்று நாம் கூற முடியும். எலிசபெத்தைச் சந்தித்தபின் ஒரு புரட்சிப் பாடலை இயக்கி இறைவனை நோக்கி தனது இதயத்தை எழுப்பிப் பாடுகின்றார்.

இந்த புரட்சி பாடலை நாம் சிறிது அலசிப் பார்த்தோமென்றால் மூன்று வகையான புரட்சிக் கருத்துக்களை நம் முன் வைக்கின்றார்:

1. பொருளாதாரப் புரட்சி 2, சமுதாயப் புரட்சி 3. ஆன்மீகப் புரட்சி.

இளைஞர்கள் இப்பாடலைப் படித்துத் தியானித்துக் செயலில் இறங்கவேண்டும். "எனக்கு ஒரு கனவு உண்டு" என்று கர்ஜித்த மார்ட்டின் லூத்தார் கிங் அவர்கள் அமெரிக்காவில்; உள்ள கறுப்பு இனத்தவர்களின் விடுதலைக்கு வித்திட்டார். இதன் விளைவாக இன்று அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக நுழைந்து அரசு அமைத்திருக்கிறார். மனுக்குலத்தின் விடுதலைக்கு வித்திட்டவர் கன்னி மரியா. அப்புரட்சியின் வித்தையே தனது உதிரத்தில் தாங்கியவர்.

இளைஞர்கள் தங்களது நேரத்தை, திறனை, பணத்தை பிறர் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும்  என்று துடிதுடிப்பாகச் செயல்படுபவர்கள். இவ்வகையான துடிதுடிப்பை இளம்பெண் அன்னை. மரியாவின் வாழ்க்கையில் நாம் காண்கின்றோம்.
கானாவூர் திருமணத்தில் வந்த பற்றாக்குறையை அக்கறையோடு அகற்ற களத்தில் குதிக்கின்றார். இறை தந்தை திட்டமிருந்த நேரத்தை இயேசுவின் வாழ்க்கையில் முன்கூட்டியே வரவழைக்கின்றார்.
எத்துணைத் துணிவு! இதன் வழியாக மூன்று காரியங்களுக்குக் காரணியாகத் திகழ்கின்றார்:

1. இயேசுவின் பணி வாழ்க்கையில் அவர் செய்த புதுமைகளில் இந்நிகழ்வு முதல் புதுமையாக அமைகின்றது.
2.
இயேசுவின் மாட்சிமையை எல்லோரும் கண்டு பாராட்ட வழிவகுக்கின்றார்.
3.
இப்புதுமையின் வழியாக சீடர்கள் இயேசுவின் மீது ஆழ்ந்த விசுவாசம் கொள்ள ஓர் உந்து சக்தியாக இருக்கின்றார்.

ஆகவே இளைஞர்களே, அன்னை மரியாவை முன்மாதியாகக் கண்முன் வைத்து இளைஞர்கள்  இயேசுவின் மாட்சியை உணர இயேசுவின்மீது விசுவாசம் வைக்க, ஏழை எளியோர்களின் விடுதலைக்கு தம் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தூண்டுகோலாய் இருந்து செயல்படுங்கள்.

25.            கார்மேல் - உத்தரியமாதா திருவிழா

திருமதி அருள்சீலி அந்தோணி

 

பரிசுத்த பூமியாம் பாலஸ்தீன நாட்டின் மேற்குத் திசையில் மத்தியதரைக் கடலுக்கு அருகாமையில் ஓர் உயர்ந்த மலை இருக்கிறது. இதற்குக் கார்மேல் மலை என்று பெயர். கடற்கரையோரத்தில் இருக்கும் இம்மலையைப் பற்றி விவிலியத்தில் அருமையான வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.

அதன் அழகிய சிகரம் எபிரேய மொழியில்தோட்டம்அல்லதுநடப்பட்ட திராட்சைத் தோட்டம்என்ற சிறப்புப் பெயர் பெற்றிருக்கின்றது. இந்த மலையில் எலியாஸ் இறைவாக்கினரும் அவருக்குபின் எலிசேயுஸ் என்பவரும் தங்கிச் செப,தபங்களால் பல அரிய வல்லச் செயல்கள் செய்து வந்தனர். இவர்கள் கார்மேல் மலை சன்னியாசி என்ற அழைக்கப்பட்டனர்.

இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் என்னும் கார்மேல் மாதா சபையைச் சார்ந்த ஒரு மடம் இருந்தது. இச்சபையின் தலைவர் புனித சைமன்ஸ்தாக் என்பவராவார்.

1251ஆம் ஆண்டு ஜீலை மாதம் 16 ஆம் நாள் தேவான்னையின் அடைக்கலத்தை நாடிப் பக்தியாகச் செபித்துக் கொணடிருந்தார். அச்சமயத்தில் அன்னை மரியா தமது கரத்தில் ஓர் உத்தரியத்தை ஏந்திவளாய் அவர்க்குக் காட்சி தந்தார்.

அவரைப் பார்த்துஎன் பிரிய மகனே, இதோ இந்த உத்தரியத்தை என் விருதாக (வெற்றிச்சின்னமாக) ஏற்றுக் கொள். இதை அணிந்து கொண்டு மரிக்கின்றவன் நித்திய நரக ஆக்கினையின்று தப்பித்துக் கொள்வான். இது பாதுகாப்பின் சின்னமாகவும், அட்டையாளமாகவும், ஆபத்தானச் சமயத்தில் கேடயமாகவும், என்னுடைய உதவியின் ஆரம்பமாகவும் இருக்கிறது.” என்று சொன்னார்கள்.

1301 ஆண்டு உத்தரியமாதா 22ஆம் அருளப்பர் என்ற திருதந்தைக்குக் கனவில் தரிசனமாகி உத்தரியம் அணிந்த உத்தரியச் சபையார் மரித்து உத்தரிக்கிறஸ்தலத்திற்குப் போயிருந்தால் கூடிய விரைவில் நான் அவர்களை மீட்டுக் கொள்வோன். என்றார். மேலும் மரணத்திற்குப் பிறகு வரும் முதல் சனிக்கிழமைகளில் அவர்கள் அவ்விடத்திலிருந்து விடுதலை ஆவார்கள் என மொழிந்தர்கள்.

கார்மேல் மாதாவுடைய பேருதவியைக் கார்மேல் சபையினர் மட்டுமல்ல, அவரது உத்தரியத்தை அணியும் அனைவரும் பலன் அடைவார்கள். உத்தரியத்திற்குப் பதிலாக உத்தரியச் சுருபத்தை அணியலாம். இந்தப் பக்தியானது மோட்ச இராக்கினியின் ஞானபிள்ளைகளாக வாழ்வதற்கு உதவிபுரியும்.

புனித கன்னிமரியாளைப் பின்பற்றி அவரைப் போல் பரிசுத்தமாய் வாழ்ந்து அவர்களுக்குச் சொந்தமானவர் என்று வெளிப்படையாக வாழ்ந்துக் காட்டுவது பெரும் பாக்கியமாகும்.

பரிசுத்த உத்தரியத்தை நாமும் அணிந்துத் தீயோனிடமிருந்து நம்மைக் காப்போம். எல்லா நேரங்களிலும் உத்தரியமாதா நம்மைக் காத்திடுவாள் என்பது திண்ணம்.

உத்தரியமாதாவே! எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துப் பேசுவீராக!

 

 

 

 

 

 

26.           விசுவாசத்தின் தாய்

தந்தை தம்புராஜ சே..

 

அன்னை மரியாவை 'விசுவாசத்தின் கருவூலம்' என்று சொல்லலாம். பழைய ஏற்பாட்டில் ஆபிரகாமை 'விசுவாசத்தின் தந்தை' என்று கூறுகின்றோம், புதிய ஏற்பாட்டில் அன்னை மரியாவைவிசுவாசத்தின் தாய்' என்கின்றோம், ஆகவேதான் அவருடைய பரிந்துரையை நாம் நாடும்பொழுது 'அருள்மிகப் பெற்றவரே' என்று அழைக்கின்றோம்.

வானதூதர் கபிரியேல் மங்கள்வார்த்தை சொன்ன நேரத்திலிருந்து தூய ஆவியார் அவர் மீதும், திருத்தூதர்கள் மீதும் வரும்வரை தினமும் மரியா அருள் வளங்களைப் பெற்றுக்கொண்டே இருந்தார், நமக்கும் இறைவன் பல அருள் வளங்களை கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றார். ஆனால் நாம் அவற்றை மண்ணிலே புதைத்து விட்டு வாளாயிருப்பதால் தான் ஆவியின் வல்லமையைப் பயன்படுத்தாமல் இருக்கின்றோம்,

ஸ்காட்லாந்து நாட்டில் ஒரு வயோதிகப் பெண்மணி வாழ்ந்து வந்தாள். அவள் எவ்வளவு ஏழையாக இருந்தாளென்றால் அந்த வட்டாரத்திலிருந்த கிறிஸ்தவ சமூகத்தினர் அவளுக்கு உதவி செய்ய வேண்டியதாயிருந்தது. இவளுடைய மகன் அமெரிக்காவிற்குச் சென்று பெரிய செல்வந்தனாக மாறியிருந்தும், ஸ்காட்லாந்திலே இவள் வறுமையில் வாடி வந்தாள். ஆமாம், இவளுடைய மகன் தான் அமெரிக்காவில் பெரிய பணக்காரனாக இருக்ககிறானே, அப்படி இருக்க இவளுக்கு ஏன் உதவி செய்யாமல், இருக்கிறான்? என்று அக்கம் பக்கத்தில் வாழ்ந்த மக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்,

ஒரு நாள் அண்டை வீட்டுப் பெண் ஒருத்தி இவளிடம் வந்து, "ஏன் பாட்டி, நீ இங்கு இவ்வளவு வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறாய் என்பது உன் மகனுக்குத் தெரிந்தால், நிச்சயமாக அவன் உனக்கு உதவி செய்வான்" என்று அக்கறையோடு சொன்னாள். அதற்கு அந்தப் பாட்டிகண்ணே , பாவம் அவனுக்கு எவ்வளவு செலவோ? 'விரலுக்கேற்ற வீக்கம்' என்பார்கள் அல்லவா? ஒன்று மட்டும் நிச்சயம் - என் மகன் மிகவும் நல்லவன், வாரம் தவறினாலும், அன்போடு கடிதம் மட்டும் எழுதத் தவறுவதே இல்லை. ஒவ்வொரு தடவையும் கடிதம் எழுதும் பொழுதும் ஓர் அழகான படத்தையும், அதில் வைத்து அனுப்புகிறான். அப்படங்கள் எல்லாம் வினோதமாக உள்ளனஎன்று தன் மகனைப் பாட்டி கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காமல் பேசினாள், அதற்கு அந்தப் பெண்மணி "அவற்றையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறாயா பாட்டி?" என்று கேட்க, அதற்கு அவள் "கண்ணே, எல்லாக் கடிதங்களையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அந்த அற்புதமான படங்களை எல்லாம் இந்த நல்ல புத்தகத்திலே வைத்திருக்கிறேன்" என்று சொல்லி, பைபிளை எடுத்துக் காட்டினாள்.

பைபிளின் பக்கங்களில் நூற்றுக்கணக்கான அமெரிக்க டாலர் நோட்டுகள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டபோது வந்திருந்த அண்டை வீட்டுப் பெண்மணி மலைத்துப் போனாள், தன்னிடம் விலை உயர்ந்த ஒரு கருவூலம் இருந்தும் அவள் அதை அறியாதிருக்கின்றாளே என்று ஆச்சரியப்பட்டாள்,

ஆம், அன்பார்ந்தவர்களே! நாம் அனைவரும் கடவுள் அருள்கின்ற பொக்கிஷங்களை, அருள் வளங்களைப் பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றோம், ஆனால், அதைப்பற்றி அறியாமல் வாழ்ந்து வருகின்றோம். அவற்றை அறிந்து வாழ்ந்தோமென்றால் நமக்கு வல்லமைகள் பல வந்தடையும். அவற்றைப் பயன் படுத்தி நாம் விண்ணரசைக் கட்டிக் காக்க முடியும். ஏனெனில் நாம் அனைவருமே நடமாடும் விண்ணரசின் கருவூலங்கள்!

 

 

 

 

 

 

 

27.           இன்னுமா செபமாலை பைத்தியம்?

திருமதி அருள்சீலி அந்தோனி

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!
1890
ஆம் ஆண்டு பாரிஸ் நகருக்கு சென்று கொண்டிருந்த இரயிலில் ஒரு முதியவரோடு ஒரு கல்லூரி மாணவன் பயணம் செய்தான். அவன் என்ன கூறினான் கொஞ்சம் அறிந்து கொள்வோமா?
எதிரில் அமர்ந்திருந்த முதியவர் கையில் செபமாலை வைத்து செபித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த மாணவன்மன்னியுங்கள் ஐயா! கிழவர்களுக்கே உரிய பத்தாம் பசலித்தன பக்தி முயற்சியை தாங்கள் இன்னுமா நம்புகிறீர்கள்?” என்று கேட்டான் அந்த இளைஞன்..
முதியவர்நிச்சயமாக நம்புகிறேன். நீ அதை நம்பவில்லையா?
இளைஞன்ஐயா உங்கள் முகவரியைக் கொடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு சில புத்தகங்களை நான் உங்களுக்கு அனுப்பிவைக்கலாம்என்றான் அதிகம் படித்த கல்லூரி மாணவன்..
முதியவர் தன் முகவரி அட்டையை நீட்டினார். அதில் லூயி பாஸ்டர், விஞ்ஞான ஆய்வகம், பாரிஸ் என்று எமுதப்பட்டிருந்தது. இளைஞனின் முகம் வெளிறியது. அடுத்த ஸ்டேஷனிலேயே இளைஞன் இறங்கி வண்டி மாறினான்.
ஆனால் அந்த முதியவரோநுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் வேதியியலாளர். Bio-Therapeutics என்ற சிகிச்சை முறையை உண்டாக்கியவர் என்றெல்லாம் உலகபுகழ் பெற்ற உயர் திரு லூயிபாஸ்டர். நிறைவான ஆயுளும் மகிமைகளும் பெற்றுள்ள எளிமை மிக்க கத்தோலிக்கர். மானுடத்திற்கு மாபெரும் உதவிபுரிந்த நல்லவர். 1894 செப்டம்பர் 28ல் அமைதியாக உயிர் துறந்தார் என்று பிரித்தானிக் கலைகளஞ்சியம் அவரது வரலாற்றை முடிக்கின்றது.
அன்பர்களே!
ஒரு கையில் செபமாலையும் மறு கையில் பாடுபட்ட சுரூபமும் ஏந்தி அவர் மரித்தார்.

செபமாலை சொல்லும் போதுமௌனமாகவோ, வாய்விட்டோ கர்த்தர் கற்பித்த செபத்தையும், மங்களவார்த்தை செபத்தையும் சொல்லும் போது மறையுண்மைகளை தியானிப்பது எப்படி?
நம் முழுகவனத்தையும் ஒருமுகப்படுத்திச் செய்ய வேண்டிய ஆக்கப்பணியிலும் கூட, இந்த உணர்வுகள் அடங்கிய அறிவு உதவுவதைப் பற்றி ஜோசப் ஹேய்டன் என்ற இசை வல்லுநர் கூறுவதை சற்று கேளுங்கள். “படைப்பு என்ற இசைக் காவியத்தை இசைத்தபோது, கற்பனையோட்டம் தடைபட்டப்போதொல்லாம் மேசையிலிருந்து எழுவேன். அறையில் முழந்தாளிட்டு செபமாலை சொல்லத் தொடங்குவோன். ஒரு சில மங்கள வார்த்தை சொல்லியிருப்பேன். உடனே தேவையான இசைக்கோர்வை ஊற்றெடுக்கும்என்றார்.

செபமாலைக்கு இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வலிமை உண்டு என்று வரலாறே எண்பித்துள்ளது.
சோவியத் படைகன் ஆஸ்திரியாவை அபகரித்துக் கொண்டனர். மக்கள் செபஇயக்கத்தினால் அதை எதிர்க்கொண்டனர். நாள்தோறும் செபமாலை சொல்வதாக பெரும் தொகையினர் வாக்களித்தனர். அதன் விளைவு 1955 மே மாதம் 13ஆம் தேதி பாத்திமா காட்சியின் ஆண்டு நாளில் சோவியத் படைகள் வாபசாக தொடங்கின. சில நாளில் எல்லா படைகளுமே வெளியேறின. இதை கண்டு உலகமே வியந்து போனது. ஆனால் திரேசா நைமன் அம்மையார் வியப்படையவில்லை. ஐந்து காய வரம் பெற்ற அப்புனிதைசோவியத் ஆதிக்கத்திலிருந்து ஆஸ்திரியாவைக் காப்பாற்றியது செபமாலை தான்என்று பெருமிதத்துடனும் ஐயமின்றியும் அறிக்கையிட்டார்.
ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு 1964லில் புனித வாரம் முழுவதும் நடைபெற்று செபமாலை பவனிகள் ரஷியாவுக்கு இரையாகயிருந்த பிரேசில் நாட்டை காப்பாறின. காரணம் கியூபாவில் காஸ்ட்ரோ செய்தது போல பிரேசில் நாட்டையும் ரஷியாவுக்கு அடிமையாக்க அதன் அதிபர் யோவாவோ கூலார்ட் திட்டமிட்டிருந்தார். அதை திருச்செபமாலை தான் தவிடு பொடியாக்கியது..
அயர்லாந்தில் நடைபெற்ற மதகலவரத்தின் போது என்ன நடந்தது தெரியுமா? ஒரு குருவுக்கு இடம் தந்தாலோ, அல்லது திருப்பலியில் பங்கேற்றாலோ சித்திரவதைக்குள்ளாகி இறந்தனர். அவ்வேளையில் செபமாலையைத் தவிர வேறு எந்தவிதத்திலும் தங்கள் விசுவாசத்தைக் காப்பாற்றிக் கொள்ள தெரியவில்லை. ஒவ்வொரு குடும்பமும் செபமாலை செய்தது. அதுவே எங்களதுஉலர் திருப்பலிஎன்றனர். இப்படியாக எத்தனையே வரலாற்று நிகழ்வுகளை சான்று பகரலாம்.

அன்பர்களே!
திருப்பலிக்கு பின் அடுத்த அதிக மாபெரும் தெய்வீகம் கொண்டது செபமாலை” - புனித சார்லஸ் பொரோமோயு.
செபமாலை சொல்லும் ஒரு படையை எனக்குத் தாருங்கள். இந்த உலகை வென்று காட்டுறேன்என்றாரே திருத்தந்தை 11ஆம் பத்திநாதர்! அவை பொருளற்ற சொற்களா? சிந்திங்கள்.
மரியாவின் கோணத்தில் இயேசுவை உற்று பார்க்க செபமாலை உதவுகிறது. இதுவே சிறந்த காட்சிக் கோணம். செபமாலையின் வழியாக கிறிஸ்துவின் பொறுமை, அமைதி, மகிழ்ச்சியை நாம் பெறுகிறோம்என்கின்றார் ஆறாம் சின்னப்பர்.
அற்புதமான செபம்! எளிமையிலும் ஆழத்திலும் அற்புதமான செபம்! ஆவேமரியா பின்னணியில் நம் ஆன்மாவின் கண்களில் முன்னே இயேசு கிறிஸ்துவின் வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் கடந்து செல்கின்றன!” என்கின்றார் மக்களின் திருத்தந்தை இரண்டாம் அருள்சின்னப்பர்.
எண்ணிக்கையில் அதிகமான முஸ்லீம்களை 1571 அக்டோபர் 7தேதி லெபாண்ட்டாவில் கிறிஸ்துவப் படைகள் முறியடித்த போது அன்று வரை தோல்வியே அறிந்திராத முஸ்லீம்கள் தாக்கப்பட்டபோது ஐந்தாம் ஆம் பத்திநாதர் என்ன சொன்னார்? உரோமையில் அமர்ந்தபடியே லேபாண்ட்டோ வெற்றியை காட்சியில் கண்டுசெபமாலையின் வெற்றி இதுஎன்றார். அதன் நினைவாக நிறுவப்பட்டதே செபமாலை அன்னை திருநாள் -அக்டோபர் 7.
தீராத பொறுமையாலும் மாறாத அன்பினாலும் 70000 கால்வின் மார்க்கத்தினரை மனந்திருப்பிய புனித பிரான்சிஸ் சலேசியார்ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் செபமாலையின் மறையுண்மைகளை தியானித்தால் புனிதராவோம்என்றார்.
ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்கிறவன் ஒரு போதும் வேதவிரோதியாக மாட்டான். அவனிடம் பசாசின் முயற்சிகள் பலனற்று போகும். இதை மகிழ்ச்சியோடு என் குருதியினால் கையொப்பமிட்டு அறிக்கையிட நான் தயார்என்றார் புனித லூய் தெ மாண்ட்ஃபோர்டு.
1987
மார்ச் 25ல்மீட்பரின் தாய்என்ற சுற்று மடலை வெளியிட்ட திருத்தந்தை இரண்டாம் அருள்சின்னப்பர், ஜீன் ஆறாம் தேதி புனித மேரி மேஜர் பேராலயத்தில் பல மொழிகளில் செபமாலையை உரத்த குரலில் சொல்ல உலக முழுவதிலும் உள்ள பல்வேறு மரியன்னைத் திருத்தலங்களிலிருந்து பதில் குரல்கள் செயற்கைக்கோள் மூலம் எதிரொலித்தன.
இன்றுஇறுதியில் என் மாசற்ற இதயம் வெற்றிக் கொள்ளும். ரஷியா மனம் திரும்பும்என்ற பாத்திமா அன்னை இறைவாக்கு வீணாகவில்லை என்பதை வரலாறு காண்பித்து விட்டது.
அன்பார்ந்த கத்தோலிக்க நெஞ்சங்களே இப்போது சொல்லுங்களேன்செபமாலைப் பக்தி தேவையா?"

28.            ஒரு ரோஜா மொட்டு சிறுவர்களுக்காக

திருமதி அருள்சீலி அந்தோனி

அன்பார்ந்த நண்பர்களே!
ஒரு அழகிய ரோஜா மொட்டு உங்களுக்கு தான்! அது என்னவென்று கேட்கிறீர்களா? பதில் கீழே...
உங்கள் செபமாலையில் உள்ள ஒவ்வொரு மணியும் ஒரு ரோஜா மொட்டு!
அது உங்களுக்கு மிகச் சிறிய பொருளாக தென்படலாம். ஆனால் இந்த செபமாலை மணி ஒவ்வொன்றும் எவ்வகையில் உயர்ந்தது என்பதை நீங்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டுமானால் ஒவ்வொரு மணியையும் பரலோகமந்திரத்தையும் - அருள்நிறைந்த மந்திரத்தையும் உணர்ந்து தியானித்து சொல்வீர்களானால் உமது கரங்களில் அழகியரோஜா மொட்டு ஒரு ரோஜா மலர் மாலையாக விரியும் என்பதை உமது கண்களால் உணரமுடியம்.
குட்ஸஸ்!
நீங்கள் தினசரி இருபது தேவஇரகசியங்களை தியானித்து சொல்வது சற்று கடினம் தான். ஆனால் நீங்கள் பக்தியுடனும், அன்புடனும் ஐந்து தேவஇரகசியங்களை தினந்தோறும் செபியுங்கள். இவ்வாறு நீங்கள் செபிக்கும் செபம் குழந்தை இயேசுவுக்கும் அன்னை மரியாவுக்கு சூட்டும் ரோஜா மலர்மாலையாகும் என்பதை உணர்ந்திடுங்கள்.
அன்பு மழலைகளே!
ஒரு சின்ன உண்மை கதையை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். ஓர் ஊரில் இரு குட்டீஸ், தங்கள் வீட்டின் முன்பு அமர்ந்து பக்தியாக செபமாலைச் சொல்லி கொண்டிருந்தார்கள். திடீரென்று ஓர் அழகிய பெண் அவர்கள் முன் தோன்றினாள். அங்கு வந்த அந்த அழகிய பெண் இளைய பெண்ணின் கரத்தைப் பிடித்தக் கூட்டிக் கொண்டு சென்று விட்டாள்.
மூத்த சிறுமி திகிலடைந்தாள். தன் தங்கையை காணது தேடினாள். பயம் அவளை ஆட்கொண்டது. சென்று தன் பெற்றோரிடம் தெரிவித்தாள். மனம் உருக நாங்கள் செபமாலை சொல்லிக் கொண்டிருந்தோம். யாரோ ஒர் அழகிய பெண் வந்து என் தங்கையை தூக்கிக் கொண்டு சென்று விட்டார்கள் என்று அழுதபடி கூறினாள். பாவம் பெற்றோர் மூன்று நாட்களாக பிள்ளையை தேடியும் காணவில்லை.
மூன்றாம் நாள் மாலையில் காணாமல் போன பிள்ளை வீட்டின் தலைவாசலில் மிகுந்த மகிழ்வோடு நிற்பதை கண்டார்கள். உடனே நீ எங்கே போயிருந்தாய்? என்று வேதனையுடன் கேட்டார்கள். 'அம்மா நான் தினமும் செபமாலை சொல்வேனே அந்த அம்மா வந்து என்னை ஓர் அழகிய இடத்திற்கு கூடிச்சென்றார்கள். அதுமட்டுமல்ல எனக்கு அழகான குழந்தை பாப்பாவை என் கையில் கொடுத்தார்கள். அந்த குட்டி பாப்பாவை திரும்பதிரும்ப முத்தம் கொடுத்தேன். அந்த பாப்பா என்னை பார்த்து சிரித்து விளையாடியது. இதை கேட்ட பெற்றோர்கள் பரவசமடைந்தார்கள்.
இந்த சிறுமியின் பெற்றோர் சமீபத்தில் தான் கத்தோலிக்கராய் மாறியவர்கள். தங்களுக்கு மறைக்கல்வியை கற்று தந்த சேசுசபை குருவை உடனே வரவழைத்தனர். நடந்ததையெல்லாம் அக்குருவிடம் கூறினர். இது நடந்தது பராகுவே நாட்டில்..
அன்பார்ந்த சிறுவர் சிறுமியர்களே!
இச்சிறு குழந்தையைப் போல நீங்களும் நாள்தோறும் செபமாலைச் சொல்லுங்கள். நீங்களும் மழலை இயேசுவையும் மாதாவையும் காண்பீர்கள் என்பது இந்த கதை உங்களுக்கு உணர்த்தும் செய்தியாகும்.
அக்டோபர் மாதம் செபமாலை மாதம்!
செபம் செய்வோம். தினம் செபமாலைசெய்வோம்.
அன்பர்களே!
கற்றோர், கல்லாதோர், நீதிமான்கள், பாவிகளும், பெரியோர், சிறியோரும் எல்லா மாந்தரும் தினம்தோறும் செபமாலை சொல்வோம்.
மரியாளையும் இயேசுவையும் போற்றுவோம்!
"உங்களுக்காக உழைத்த மரியாவுக்கு மங்களம் சொல்லுங்கள்" (உரோ16:6) )

29.           வியாகுல அன்னை

திருமதி அருள்சீலி அந்தோணி ஆலந்தூர்- சென்னை



உன் இதயத்தையும் ஒரு நாள்
ஒரு வாள் ஊடுருவு மென
நீதிமான் சிமியோன்
உம்மிடம் கூறிய நாளிதுவோ
 
மரியே!
கொல்கதா மேட்டில்
நின்மகனைப் பறிக் கொடுத்து நின்றபோது
விம்மி அழ இம்மியும்
கண்ணீரின்றி வற்றியதோ உமது கண்கள்?
 
தாயே!
உயிரற்ற மைந்தனின் உடலை
நின்மடியில் தாங்கி
பயிரற்றப் பாலைநிலமாக
உளம் வெடித்துக் கதறினீரே அன்னையே!
 
துயரத்தின் சிகரத்தைத் தொட்டுவிட்ட
நும் இதயம் குமிறிச் சிதறியதோ!
கள்ளம் கபடமற்ற நின் மைந்தனின்
உடலில் பாரம் நின் இதயத்தைச் சிதைத்ததோ?
 
உமதுள்ளம் புயலெனச் சீறிச் சூறாவளியாக வீசியதோ!
நின் இதயத்தை ஊடுருவிய வாளிதுவென அறிந்தாயோ!
விழிமேல் விழிவைத்துக் காத்திருந்து
முப்பத்திமூன்று ஆண்டுகள் இதனைக் காணவா!
எம் தாயே!

 

 

 

30.            வியாகுல அன்னையின் ஏழு துயரங்கள்

சகோதரி. லூர்து ஐஸ்வரியா

1. எருசலேமில் சிமியோன் மரியாவை நோக்கிச் சொன்ன இறைவாக்கு. (லூக்கா 2:34-35)

மாசின்றி உதித்த மாணிக்கமே
மாபரனின் மங்கா ஜோதியே
மாந்தரின் மகிழ்ச்சியான மகுடமே - நின்
வயிற்றுதித்த பாலகனைக் கண்ணுற
அல்லும் பகலும் ஆருயிர் காத்த
சிமியோன் கண்டுனை வாக்குரைத்தாரே
நீவீர் பெற்ற இறைமனிதம் மானிடர் பலர் 
வீழ்தலுக்கும் வாழ்தலுக்கும் காரணம் என்றாரே!

சிந்தனை:-

பெற்ற மகனின் பாடுகளையும், மரணத்தையும் இறை விருப்பம்! என ஏற்றார் அன்னை. நமது சுயநலப் போக்காலும், வீண் சிந்தனைகளாலும் வருகின்ற தடைகளை, சவால்களை எந்த மனநிலையோடு ஏற்கிறோம். சிந்திப்போம்.

செபம்:

அன்பு அன்னையே! சிமியோன் சொன்ன இறைவாக்கினால் மகனின் மரணத்தை அறிந்து அதை ஏற்றக் கொண்ட உம்மை எம் அன்னையாகக் கண்டு பாவிக்கும் நாங்களும் பிறருக்காக எங்களை உவந்து கையளிக்கவும், தீமைக்குள் சிறைப்பட்டு விடாமல் நன்மை செய்து வாழவும் வரம் தரும். ஆமென்



2 குழந்தையைக் காப்பாற்ற எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல் (மத்தேயு 2:13)

அகிலவன் அமைத்த அமைதியாய் 
ஆண்டவன் காட்டிய இணையிலே, 
அர்ப்பணித்தாயே! அடிமையாய், 
பெற்ற மகனைப் பத்திரமாய், 
வானவர் இட்டக் கட்டளைக்குக் கடந்தனரே, 
கற்களையும் முட்களையும் எகிப்து நோக்கியப் பாதையிலே..

சிந்தனை:-

நம்மை விழத்தாட்டும் (விழச் செய்யும்) சூழல்கள் வரும்போது, அவற்றுக்கும் பலியாகும் பலவீனம் நம்மில் உண்டல்லவா.... இலட்சியத்தில் தெளிவு பெற்ற பயணம் செய்வதில் தான் இயேசுவைப் பின் செல்பவர்கள் ஆகமுடியும் என்பதை ஏற்கிறோமா? சிந்திப்போம்.

செபம்:-

அன்பு அன்னையே பெற்ற மகனின் உயிரைக் காக்க எகிப்துக்குத் தப்பி ஓடிய உம்மை மீட்பின் தாயாகப் போற்றும் நாங்கள் அன்றாடம் எமக்காய் உழைக்கும் எம் பெற்றோரின் அன்பையும், உடனிருப்பையும் உணர்ந்து வாழ வரம் தாரும்.ஆமென்.



3. எருசலேமில் மூன்று நாள் சிறுவன் இயேசு காணாமல் போதல் (லூக்கா 2:43-45)

மானுடப் பெண்களின் நல்லவரும்
கடவுளின் கொடையுமானக் கன்னியும்
அக்கன்னி ஈன்றக் கனியும், நல்லவர் (யோசேப்பு)
வளர்த்தக் காவியமும் சென்றனரே பாஸ்காவுக்கு,
எருசலேம் பெருநகர் நோக்கி
தன் தந்தை தங்குமிடனெ்றுத் தங்கியே போனரே!
காவியத்தலைவன் குலமுதல்வர் வியக்க
காணவில்லை என்றெண்ணி, கண்டுவிட
கண்டுவிடத் துடித்த நல்லவரும் கன்னியும்
ஆண்டவர் இல்லம் வந்தனரே!
கண்டனரே காற்றின் மொழியை..

சிந்தனை:-

நாமிருக்கும் இடத்தில் நன்மையே விளையும் என நாமே அறியும் வண்ணம் மனத்துணிவுக் கொள்கிறோமா.... நன்மை செய்ய வரும் வாய்ப்புகளையெல்லாம் 'நமக்கேன் வம்பு' என்று தட்டிக் கழிக்கின்றோமா... நல்லது என்று வரும்போது அதைச் செயல்படுத்த "நாம் ஏன்" முந்திக் கொள்ளக் கூடாது? சிந்திப்போம்..



செபம்:-

அன்பு அன்னையே ! ஆண்டவன் இல்லம் தங்கிய மகனைத் தேடிச் சென்ற உம்மைபோல் இலக்கு நோக்கிச் செல்லும் பயணத்தில் தடைகள் வந்தாலும், எதிர்ப்புகள் எதிர்ப்பட்டாலும் மாறாதுத் துணிவுடன் சென்று, எழுந்து நடக்கத் துடிக்கும் உள்ளங்களை ஏற்றிவிட உழைக்கம் கரங்களாகச் செயல்பட எமக்கு அருள் தாரும். ஆமென்.

4. துன்பப் பாதையில் இயேசு சிலுவைச் சுமந்துச் செல்லும்போது அவரைச் சந்தித்தல் (லூக்கா 23:27)

காவலன் தனக்கமைத்த பாதையில்
தான் சென்றிடக் கள்வர்கள் சூழ்ந்திட
கயவர்கள் அறைந்திடக் கண்மணியின்
கலைஇழநிலைக் கண்டு கண்ணீரில்
மிதந்தாளே பேழையாய் காத்த
மகனின் கோரநிலைக் கண்டு
மௌனியாய் நின்றாளே தம் மகவின்
திட்டத்தில் உறுதுணையானாளே!

சிந்தனை:-

பிறரின் வாழ்வுப் பயணத்தில் உடன்செல்லும் அன்னையாக இருக்கின்றோமா .. தடைச் சொல்லும் தரம் தாழ்ந்த வாழ்வு வாழ்கின்றோமா... நமது உறவுகள் பலன் விளையும் உறவுகளா... பலியாக விரும்பும் அர்த்தமுள்ள உறவுகளா.. சிந்திபோம்..

செபம்:-

அன்பு அன்னையே ! உம்மைப்போல அடுத்திப்பவரின் வாழ்வில் துணை நிற்கும் ஆர்வத்தையும் மாறாத கொள்கையில் நிலைத்து நின்று உம்மைப்போல் உண்மையான மனநிலையையும், உறவுகளில் உளம் பூரிக்கும் மனப்பக்குவத்தையும் எமக்குத் தாரும். ஆமென்.



5. கல்வாரியில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறத்தல். (யோவான் 14:25)

உருக்கலைந்த சிலுவையில் உயர்ந்து
நின்ற மகனை அயர்ந்து நோக்கியே அழுதாள்
ஊட்டிய பால் இரத்தமாய்க் கசிய
உயிரை எடுத்த மனிதர்களின் மீட்புக்காய்
தன் மகவைத் தந்துதவினாளே
பூவுலகின் தாயானாளே.

சிந்தனை:-

வாழ்கின்ற நாட்களில் யாருக்காக வாழ்கிறோம், வாழ்வு முடிந்தபின் யாரில் வாழ்கிறோம்... நமது தியாகச் செயல்களால் எத்தனைப்பேர் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சிந்திப்போம்.

செபம் :-

அன்பு அன்னையே ! எமக்காக வாழும் நாள்களை எண்ணிப் பெருமிதம் கொள்ளாமல், பிறருக்காகப் பலியாகும் வாய்ப்புகளைப் பெருமையென விரும்பி ஏற்று எங்களையே அர்ப்பணிக்கவும் இயேசுவைப் போல எல்லாரும் வாழ்வுப் பெற உம்மைப்போல், எம்மைக் கையளிக்கவும் வரம் தாரும். ஆமென்.



6. இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல். (மத்தேயு 27:57-59).

பெற்ற மகவைத் தவழ விட்ட
பேறுபெற்ற மடிப் புன்னகையுடன் அன்று,
வளர்த்த மகவைத் தவழவிட
பொறுப்பேற்ற மடி இன்று
தத்தெடுத்த மானுடத்தைத் தவழவிடும்
அன்னை மடி அன்புடனே என்றும்!

சிந்தனை:-

மகனைப் பலிகொடுத்தபோதிலும் அதில் இறைவருப்பம் ஏற்றுப் பணிந்த மரியா நமக்குப் பாடம் பலியான இறைவனை உள்ளத்தில் ஏற்கும் நாம் பிறரில் நம்பிக்கையை விதைக்கக் கடமைப்பட்டுள்ளோம் என உணர்கிறோமா.. சிந்திப்போம் .

செபம்:-

அன்பு அன்னையே ! மனமுவந்து இறைவிருப்பத்தை ஏற்ற உம்மை, எமது வாழ்வு பாடமாக ஏற்று, நம்பிக்கையில் தளராது வளரவும், எம்மையே பிறருக்காக அர்ப்பணித்து எடுத்துக்காட்டான வாழ்வு வாழவும் எமக்கு வரம் தாரும். ஆமென்.



7. அரிமத்தியா யோசேப்பு இயேசுவை அடக்கம் செய்தல் (யோவான் 19:40-42)

உலகினரின் நிலைகண்டு ஊனுடலாய்
வந்துதித்த வான்மகனை
வழியனுப்பி வைத்தனரே
பூவுடல் புவியனுக்குள்
தங்கிட இடமன்றி - தானடங்க
தயாரித்ததனைத் தந்துதவினாரே
அரிமத்தியா ஊர் யோசேப்பும்

சிந்தனை:-

முடங்கிக் கிடப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல, முயற்சிக்காகக் காத்திருக்கும் முன்னேற்ற வாதிகளாக இருக்க முடியும். நாம் எப்படி வாழ்கிறோம்? சிந்திப்போம்... சில சமயங்களில் நம்மோடு வாழ்வோரின் கனவுகளுக்குக் கல்லறைக் கட்ட நினைக்கிறோம். அக்கனவுகள் வரலாற்றைப் படைக்கக் கூடியவை எனில் அதை அடுத்தடுத்து அடக்கம் செய்யப்பட்டாலும் அவை அடங்கிப் போகா... மாறாக முளைத்து எழுந்துச் சாதனைகளாக உருப்பெறும்.

செபம்:-

அன்பு அன்னையே! கொள்கையில் உறுதிக் கொண்டவர்களாக அழிக்க நினைக்கு சக்திகளை அடையாளம் கண்டு எதிர்த்து வெல்லும் ஆற்றல் படைத்தவர்களாக வாழவும், அடுத்திருப்பவருக்குக் கல்லறைக் கட்ட நினைக்கும் கயமைத் தனங்களிலிருந்து விடுபடவும் ஆற்றல் தந்து வழிநடத்தும். ஆமென்.

31.            தாய்ப்பாசத்தின்சிறப்பு -அன்னை மரியா!

தந்தை தம்புராஜ் சே..

பிப்ரவரி மாதம்லூர்து மாதா திருவிழாவைக்கொண்டாடுகிறோம்‌. டிசம்பர்மாத இறுதியில்திருக்குடும்பத்திருவிழா கொண்டாடினோம்‌. இறை அன்னை திருவிழாவையும்ஜனவரி மாதம்முதல்நாள்கொண்டாடினோம்‌. தாயின்உயர்வை, மகிமையைத்திருச்சபை இவ்விழாக்களின்வழியாக நமக்கு நினைவூட்டுகின்றது.

குழந்தை வளர்ப்பில்தாய்க்கு மிகப்பெரிய பங்கு உண்டு. குழந்தை இயேசுவை பக்தியில்வளர வைக்க பல உக்திகளை அன்னை மரியா பயன்படுத்திருப்பார்.

'
ஐந்தில்வளையாதது ஐம்பதில்வளையுமா?' என்ற பழமொழியின்தத்துவத்தைக்குறிப்பிடும்போது, ஐந்து! என்பது ஐந்து வயதைக்குறிக்கவில்லை. தாயின்வயிற்றில்கருவாய்இருக்கும்போது, சிசு ஐந்தாவது மாதத்திலேயே வெளி உலகைப்பற்றிய அறிவை அறிந்து கொள்ளத்துவங்கி விடுவதால்‌, ஐந்து என்பது அன்னையின்கருவறையில்உள்ள ஐந்தாவது மாதத்தைக்குறிக்கும்என்றும்‌, அப்போதே குழந்தைகளுக்கு நல்லது செய்ய வேண்டும்என்பதே அதன்பொருள்என்பர்விஞ்ஞானிகள்‌...

குழந்தைகளை வளர்க்கும்போது, நமது பாரம்பரியத்தின்பெருமையைச்சொல்லி வளர்க்க வேண்டும்‌. தாலாட்டு என்பது குழந்தையைத் தூங்கச் செய்யும் முறை மட்டுமல்ல, தாலாட்டுப்பாடல்கள் நல்ல தர்மங்களும்‌, சித்தனைகளும்‌, பரம்பரைப்பெருமைகளும்தன்னகத்தே கொண்ட தத்துவப்பாடல்களாகும்‌. குழந்தைக்குத்தாலாட்டின்மூலமாக முதன்முதலாக ஞானத்தைப்போதிக்கும்குரு தாய் தான்‌. மங்கையர்க்கரசி என்பவர்தாய்ப்பாசத்தின்சிறப்பை உணர்த்தும்வகையில்தான்படித்த ஓர்அருமையான செய்தியைப்பற்றிக்கீழ்வருமாறு கூறுகின்றார்‌:

ஆஸ்திரேலியாவில்கருவுற்ற ஒரு தாய்க்குக்குறைப்பிரசவமாக ஏழு மாதக்குழந்தை பிறந்து, சுயநினைவின்றிக்கிடந்தது. மருத்துவர்கள்‌, குழந்தை பிழைப்பதற்கான வாய்ப்பில்லை என்று கூறி தாயிடம்கொடுத்தனர்‌. மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட அந்தத் தாய், குழந்தையை மார்போடு போட்டு தான்எப்படியெல்லாம்ஆசைப்பட்டு அந்தச் சிசுவை வளர்க்க எண்ணியிருந்தாரென்று குழந்தையின்காதில்சொல்லிச்சொல்லி அழுதாள்‌.

தாயின்உணர்ச்சிப்பெருக்கான அரவணைப்பிலே இரண்டு மணி நேரம் இருந்த அந்தக்குழந்தையின்அசைவைத்திடீரென உணர்ந்த தாய்‌, திகைத்துப்போய்மருத்துவர்களைக்கூப்பிட்டு, தன்குழந்தை பிழைத்துக்கொண்டதை அறிவித்தார்‌. மருத்துவர்கள்இதைப்பெரிய மருத்துவ அதிசயமாகக்குறிப்பிட்டனர். இறைவன்கருணையும்குழந்தையைப்பிழைக்க வைக்கும்அதிசயம்‌, புராண காலத்தில்மட்டுமல்ல, இப்போதும்நடைபெறும்என்பதற்கான சான்றுதான்இந்தச்செய்தி.

ஆம்‌, அன்பார்ந்தவர்களே! நாமும்இறைஅன்னையாம்கன்னி மரியாவின்அரவணைப்பில்இருப்போம்‌. அவரது குரலுக்குச்செவிமடுப்போம்‌. அவர்நமது ஆன்மீக வாழ்வை வழி நடத்துவார்‌. நாமும்உயிருள்ள விசுவாசத்தில்வளர்ந்து, முதிர்ந்து, அவரது மகன்இயேசுவுக்குச்சாட்சியாய்வாழ்வோம்.

 

                Sources from                 https://anbinmadal.org/mary/marianpages.html   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Fifty steps to a happy marriage life

 50 steps to a happy marriage life  Start each day with a kiss. *    Wear your wedding ring at all times. *    Date once a week. *    ...