நம்பிக்கையை பிறருக்கு அளித்தல்

 

HANDING ON THE FAITH: CATECHESIS

“மறைக்கல்வி”: நம்பிக்கையை பிறருக்கு அளித்தல்

முன்னுரை

துவக்கத்தில் மறைக்கல்வியை திருச்சபை முழுமைக்குமான பணியாகத் திருத்தூதர்களுக்கு அளிக்கப்பட்டது. 

மாற் 16: 15“இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 16நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்”.

நற்செய்தியை உலகெங்கும் சென்று கற்பிப்பதன் வழியாக கிரிஸ்துவின் உடலாகிய திருச்சபையை கட்டியெழுப்பும் படி தனது திருத்தூதர்களுக்கு கட்டளையிட்டர்.  இயேசுகிறிஸ்து தனது திருத்தூதர்களுக்கு கொடுத்த அதே கட்டளையை பரிசுத்த ஆவியால் திருமுழுக்குப் பெற்ற  ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் கொடுத்துள்ளார்.   மறைக்கல்வி என்பது உயிரோட்டமான திட்டவட்டமான ஒழுங்கு முறையில் (organic and systematic), கிறிஸ்துவின் போதனைகளை முழுமையாக, சிறுவர்கள் துவங்கி முதியவர் வரை,  கற்பிபதே ஆகும்.   மறைக்கல்வி என்பது சில திட்டவட்டமான கூறுகளை அடிப்படையாகக் கொண்டது. அவை

v நற்செய்தி போதனைகளை அறிவிப்பதன் மூலம் நம்பிக்கையை விதைப்பது,

v நம்பிக்கை கொள்வதற்கான அவசியத்தை அறிவுறுத்தல்

v கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்வை சுவைக்கச் செய்தல்

v திருவருட் சாதனங்களை ஏற்கச் செய்தல்

v இவை அனைத்தையும் திருச்சபை சமூகத்தின் அங்கமாக்குதல்

v மறைப்பணி மற்றும் திருத்தூது (அப்போஸ்தலிக்க) பணிகளுக்கு சான்று பகர்தல்.

மறைக்கல்வி என்பது திருச்சபையின் பிரிக்கமுடியாத அங்கமாகும். குறிப்பாக திருச்சபையை உலகமெங்கும் நிறுவும் மற்றும் உலகில் உள்ள எல்லா இனத்தாரையும் திருச்சபைக்குள் கொண்டுசேர்க்கும் பணியிலும் மறைக்கல்வி பெரும் பங்கு ஆற்றவல்லது.  திருச்சபையை புதுப்பித்தலிலும், அதற்கு புத்துயிர் அளிப்பதிலும் மறைக்கல்விக்கு சிற்ப்பான பங்கு உள்ளது. திருச்சபையின்  அருட்தந்தையர்களாக வாழ்ந்து பின்பு புனிதர்களாக உயர்த்தப்பட்ட புனித சிரில், புனித கிறிஸ்தொத்தம் அருளப்பர், புனித அம்புரோஸ் புனித அகுஸ்தினார் மற்றும் பல புனிதர்கள் எழுதியுள்ள திருச்சபை மற்றும் விசுவாச கோட்பாடுகள் மறைக்கல்வியின் ஆதாரமாக உள்ளன. 

இன்றைய மறைக்கல்வித் தொகுப்பு (Compendium) உருப்பெற்ற வரலாறு

மேற்கூறப்பட்ட கால கட்டங்களில் இருந்து 1985 வரை பல திருத்தந்தையர்கள்,  இரண்டாம் வத்திகான் சங்கம் போன்ற பல அமர்வுகள் மூலம் மறைக்கல்வியை மென்மேலும் பலம் வாய்ந்ததாக வடிவைமத்து வந்துள்ளார்கள். 1980களில் பல்வேறு தொழில்நுட்பங்களின்  அசுரவேக  வளர்ச்சி தனி மனிதனின் வாழ்க்கை முறை, சமூக உறவுகள், மனித விழுமியங்கள், போன்றவற்றை கேள்விக்குறிகளாக ஆக்கிவிட்ட காலக்கட்டம். அதேபோல் திருச்சபைக்கும், கிறிஸ்துவ சமூகங்களுக்கும் 1980கள் ஒரு சோதனையான அல்லது சவாலான காலக்கட்டம். இரண்டாம் வத்திகான் சங்க அமர்வுக்குப்பின் (1962-1965) பெரிய கலாச்சார மாற்றங்களின் விளைவாக கீழ்கண்ட கேள்விகள் மட்டில் பெரிதும் கிறிஸ்தவர்கள் குழப்பத்திலும், சங்கடத்திலும் இருந்தனர். அவை

அ)  கிறிஸ்துவர்கள் அடிபடையில் எதை விசுவசிக்கிறார்கள்?

ஆ)  கத்தோலிக்க திருச்சபை என்ன போதிக்கிறது?

இ) கத்தோலிக்க திருச்சபை எதையும் போதிக்கும் நிலையில் உள்ளதா?

ஈ) மனித கலாச்சாரம் அதன் அஸ்த்திவாரத்திலிருந்து பெரிதும் மாறுபட்ட சூழலில் திருச்சபையின் கோட்படுகள் அர்த்தமுள்ளவைகளா;  வாழத்தகுந்தவைகளா?

நல்ல கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் மத்தியிலும் கூட இத்தகைய கேள்விகள் எழ ஆரம்பித்த காலம்.  இத்தகைய காலகட்டத்தில்தான் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் ஒரு சவாலான முடிவை எடுத்தார்.  உலகத்திலிருக்கும் அனைத்து ஆயர்களும் ஒன்றிணைந்து மேற்குறிப்பிட்ட அடிப்படை கேள்விகளுக்கு முறையான பதில்களை உள்ளடக்கிய ஒரு நூலை அல்லது பதில்களின் தொகுப்பை (compendium) எழுதவேண்டுமென்று.  திருத்தந்தை 2ம்ஜான் பால்,  திருதந்தையாக திருச்சபையை வழிநடத்திய காலத்தில் திருச்சபைக்கு அளித்த மிக உறுதியான, அத்தியவசியமான கொடைதான் கத்தொலிக்க திருஅவையின் மறைக்கல்வி.  ஆங்கிலத்தில் Catechism of the Catholic Church (CCC) என்று அழைக்கப்படுகிறது.

1985: கத்தோலிக்க ஆயர்களின் சிறப்பு அமர்வு (Extraordinary Synod of Catholic Bishops) கத்தோலிக்கதிருச்சபையின் மறைக்கல்வி பற்றிய பரிந்துரையை திருத் தந்தை 2ம் ஜான் பால் அவர்களிடம் சமர்ப்பித்தது. 

1986: திருத்தந்தை 2ம் ஜான் பால் 1986ல் கர்தினால்மார்கள் மற்றும் ஆயர்கள் அடங்கிய ஆய்வுக் குழு ஒன்றை நிறுவி கத்தோலிக்க மறைக்கல்வி பற்றிய அனைத்து சித்தாந்தங்களையும் உள்ளடக்கிய (Compendium of Catholic Doctrine)  தொகுப்பு ஒன்றை வடிவமைக்குமாறு பணித்தார். 

1989: ஆய்வுக்குழு தாங்கள் வடிவமைத்த மறைக்கல்விக்கான ஆவணத்தை உலகமெங்கும் உள்ள ஆயர்களுக்கு அனுப்பி அவர்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அனுப்புமாறு வேண்டினர். 

1990: ஆயர்கள் அனுப்பிய 24,000 க்கும் மேற்பட்ட பரிந்துரைகளையும் ஆய்வு செய்தனர். 

1991: ஆயர்கள் பரிந்துரை செய்த கருத்துக்களையும் உள்ளடக்கி, மறைக்கல்விக்கான இறுதி படிவத்தை ஆவணமாக திருத்தந்தையிடம் சமர்பித்தனர். 

1992: திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல், ஜுன் மாதம் 25ம் நாள்  அந்த ஆவணத்தை உறுதிசெய்து அதிகாரப்பூர்வமாக அதற்கு ஒப்புதல் அளித்தார். 

1992: திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல், டிசம்பர் மாதம் 8ம் நாள் அந்த ஆவணத்தை அப்போஸ்தலிக்க சாசனத்தின் ஒரு அங்கமாக பிரகடனம் செய்தார்.

மறைக்கல்வி பற்றி அடிப்படைத் தகவல்கள்

மறைக் கல்வி என்றல் என்ன?

அ)  கிறிஸ்துவ வேதசத்தியங்களின் அடிப்படை விபரங்களை சரியாகவும், எளிதாகவும் புரிந்துகொள்ளக்கூடிய ஆவணமே மறைக் கல்வி எனப்படும். (அல்லது)

ஆ)  கிறிஸ்துவ வேதசத்தியங்களின் அடிப்படை உண்மைகளை திருச்சபை உருவக்கியுள்ள ஆவணங்களின்படி கற்பிப்பதே மறைக் கல்வி எனப்படும்.  (அல்லது)

இ)  கேள்வி மறுமொழி வடிவத்தில் வேதசத்தியங்களைக் கற்றுக்கொடுக்கும் இலகுவான கல்விமுறை.

மறைக் கல்வி கத்தோலிக்க கோட்பாடுகளின் தொகுப்பு மட்டுமல்ல; அது நமது விசுவாசம், நம்பிக்கை, இறை அன்பு, மற்றும் நம்மை இறைவனோடு ஒப்புறவாக்கும் வழித்தடம்.

மறைக் கல்வியில் உள்ள பகுதிகள் யாவை?

1.        விசுவாச அறிக்கை (Profession of faith)

2.        கிறிஸ்துவ மறைபொருள்களின் கொண்டாட்டம் (Celebration of the Christian Mystery)

3.        கிறிஸ்துவில் வாழ்வு (Life in Christ)

4.        கிறிஸ்துவ இறைவேண்டல் (Christian Prayer)

ஒரே வரியில் சொல்லவேண்டுமானால் - புனித பாரம்பரியம், புனித வேதாகமம் மற்றும் புனித அதிகரம் (Magisterium) அகியவற்றை உள்ளடக்கி இந்த கத்தோலிக்க மறைக்கல்வி உருவாக்கப்பட்டுள்ளது

மறைக் கல்வியில் என்ன இருக்கிறது?

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் மறைக் கல்வி நான்கு தூண்கள் மேல் எழுப்பப்படுள்ளது என்கிறார்– அவை

1.        திருச்ச்பையின் வேதசத்தியங்களும், நம்பிக்கைகளும் – (What Church believes)

2.        திருவருட்சாதனங்கள்(What church celebrates)

3.        திருச்சபை கட்டளைகள் (What church lives)

4.        கர்த்தர் கற்பித்த  ஜெபம்(What church Prays)

மேலும்

1.        கத்தோலிக்க மறையின் மிக முக்கியமன மற்றும் ஆடிப்படையான வேத சத்தியங்கள் -  முழுமையாக ஆனல் சுருக்கமாக.

2.        கதோலிக்க திருச்சபையின் வரலாறு மற்றும், பாரம்பரியங்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்ட கத்தோலிக்கக் கோட்பாடுகள்

3.        வேதாகம விளக்கங்கள்

4.        திருத் தந்தையின் மடல்கள்

5.        புனிதர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்களின் நூல்கள்

6.        திருப்பலி, மறையுண்மைகள் மற்றும் திருவருட்சாதங்கள் பற்றிய விளக்கங்கள்.

 

மறைக்கல்வியின் நோக்கங்களும், பணிகளும்

1.        உயிருள்ள, அத்தியாவசிய மற்றும் அடிப்படை கத்தோலிக்க வேத சத்தியங்களையும், ஒழுங்கு முறைமைகளையும் முழுமையகவும் சுருக்கமாகவும் நமக்குத் அளிப்பது

2.        தேசிய, மாநில மற்றும் மறை மாவட்ட மறைக் கல்வியை வடிவமக்க, மற்றும் போதிக்க ஒரு வழிகாட்டியாக (Point of reference) திகழ்வது

3.        கத்தோலிக்க சாசனமாக (Catholic Doctrine) வழி காட்டுவது

4.        குருக்கள், துறவரத்தார், வேதியர்கள், மறைக் கல்வி கற்பிப்போர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஆவணமாக அல்லது நூலாக இருந்து;  அனைவரின் ஆன்மீகத்தேடலுக்கு ஒரு வழிகாடியாகவும் பயன்படுவது

யாருக்கு மறைக் கல்வி ?

முதல் நிலையில் வேத சத்தியம் மற்றும் வேத போதக பொறுப்பாளர்கள் என்ற முறையில் ஆயர்களுக்கு.

இரண்டாம் நிலையில் ஆயர்களிடமிருந்து மறைக் கல்வியை வடிவமைப்பவர்கள், குருக்கள் துறவறத்தார் மற்றும் மறைக் கல்வியை போதிக்க நியமிக்கப்பட்டவர்கள்.  இந்த காலக்கட்டத்தில் மறைக் கல்வி பொது நிலையினருக்கு கொடுக்கப்படவில்லை.

மூன்றாம் நிலையில்;  திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் ’வற்றாத ஊற்றான  மீட்பின் பொக்கிசத்தை அதாவது  மறைக் கல்வியை’, கிறிஸ்த்துவ வேத சத்தியங்களை நம்பும் மற்றும்  ஏற்றுக்கொள்ளும்  அணைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்ற  கோட்பாட்டை பிரகடனப் படுத்தினார்.  அதன்படி கிறிஸ்துவ வேத சத்தியங்களில் முழுமையாக நம்பிகை கொண்டு கிறிஸ்த்துவ மறையை ஏற்று கிறிஸ்தவராக வாழும் ஒவ்வொருவருக்கும் மறைக்கல்வி அளிக்கப்பட வேண்டும்.

திருத்தந்தை மறைக் கல்வி வழி எதை சாதிக்க வேண்டும் என்கிறார்?

ஒவ்வொருவரும் கிறிஸ்துவ விசுவாசத்தில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.  மறைக் கல்வியில் போதிக்கப்படும் கத்தோலிக்க கோட்பாடுகள் உல்கில் உள்ள அனைத்து கத்தோலிக்க கிறிஸ்துவர்களையும் இறை நம்பிக்கையில் ஒன்றிணைக்க வேண்டும்

மறைக் கல்வியில் பொதுநிலையினரின் பணி என்ன?

1 மறைக் கல்வியை அறிவோம் –எப்படி?

v  நமதுஅடிப்படை கடமை என்பதை உணர்வோம்

v  தனியாகவோ குழுவாகவோ படிப்பதின் மூலம்,

v  வாரத்தில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் 1 அல்லது  2 மனி நேரம் இதற்க்காக ஒதுக்குவதின் மூலம்

v  நன்கு அறிந்தவர்களிடம் கேட்பதின் மூலம்,

v  விவாதிப்பதின் மூலம்,

v  இறை பிரசன்னத்தில் தியானிப்பதின் மூலம்,

2 மறைக் கல்வியை விசுவசிப்போம் - ஏன்?

v எதை நாம் நம்புகிறோமோ  அதைத்தான் ஆர்வமுடன் செய்வோம்.

v மறைக் கல்வியை  நாம் விசுவசித்தால் மட்டுமே அதனை அறிய முடியும், அதன் பயனை நாம் அடையமுடியும்.

3     மறைக் கல்வியை நமதாக்கிக்கொள்வோம் – எப்படி?

மூல மறைக் கல்வி  தொகுப்பை , அதன் அர்த்தம், ஆழம், வேத சத்தியங்கள் போன்றவற்றை, சிறிதும் சிதைக்காது, நமது தாய் மொழியிலும், எளிய நடையிலும், நமது  பன்பாடு, கலாச்சாரம், மனநிலை, ஆன்மீகம் இவற்றுக்கேற்ப  மொழி பெயற்க்கும் போது அதை நமதாக்கிக் கொள்கிறோம்.

4 மறைக் கல்வியை வாழ்வோம் – எப்படி?

v மறைக் கல்வியின் அடிப்படை நோக்கமே நமது வேத சத்தியங்களையும், கிறிஸ்த்துவின் விழுமியங்களை  நன்கு அறிந்து  அதன்படி நாம் வாழ்ந்து  ஒரு நாள் அவரை முகமுகமாய் தரிசித்து அவரோடு விண்ணக மகிமையில் நித்தியத்திற்கும் வாழ்வதற்க்காகவே.

v ”மத். 25:34 ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.”

v எனவே  மறைக்கல்வியின் வழி வாழும் போதுதான்  நாம் கற்கும் மறைக் கல்வி அர்த்தமுள்ளதாகிறது.

5       மறைக் கல்வியை பிறருக்கு அளிபோம் – ஏன்?

மத். 25:35-36 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;  நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’ என்பார்.  ஆம்  நாம் அறிந்த மறைக் கல்வியை பிறருக்கு அறிவிக்கும் போதும், மறைக் கல்வியின் படி நாம் வாழ்வதுபோல் பிறரையும் வாழச்செய்யும் போதும் இயேசுகிறிஸ்து  அன்புடன் இருகரம் நீட்டி நம்மைப்பார்த்து  ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள் உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள். என்றே சொல்வார்.

முதல் மறைக்கல்வி யாரால் யாருக்கு நடத்தப் பட்டது?

லூக் 24:27.  “மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்”. ஆம் நம் ஆண்டவராம் இயேசுகிறிஸ்துவே நம் திருச்சபையின் முதல் மறைக்கல்வி ஆசிரியர்.  அவர் மறைக்கல்வியை போதித்தது எம்மாவுஸ் சீடர்களுக்கு.

இரண்டாவது மறைக்கல்வி யாரல் யாருக்கு எப்போது, நடத்தப் பட்டது?

திப-2: 22-36 திருவசனங்களின்படி திருத்தூதர் பேதுருவால், பெந்தகோஸ்தெ நாளன்று யூதருக்கு மறைக்கல்வி கற்பிக்கப்பட்டது.

இத்தகைய சிறப்புமிக்க மறைக் கல்வியைத்தான் இந்த நூல் வழி கற்க்கப் போகிறோம்.

பாகம் -1

நம்பிக்கை அறிக்கை

துவக்க சிந்தனை

உரோ4:13-24உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை; நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது. 16ஆகவே கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் — திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப்போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும்  உரியது என்பது உறுதியாயிற்று.

‘நம்பிக்கை கிறிஸ்துவ மறையின் அடித்தளம்’. சரி;  எதை விசுவசிக்க வேண்டும்? ஏன் விசுவசிக்க வேண்டும்? இந்த கேள்விகளைப் பற்றிய அடிப்படை ஞனமும், தெளிவும் இருந்தால் மட்டுமே அந்த அடித்தளம் [நம்பிக்கை] நம்மில் நிலையாகவும் உறுதியாகவும் இருக்கும். இந்த இரு கேள்விகளுக்கும் தெளிவான பதிலை நாம் அறிந்திருந்தால் மட்டுமே நம்மில் கிறிஸ்துவ நம்பிக்கையைக் கொண்டிருக்க முடியும்; இந்த விசுவாசம் நம்மில் இருந்தால் மட்டுமே அதை பிறருக்கு அளிக்க முடியும்.  இந்த விளக்கத்தை சரியாக புரிந்துகொண்டால் அதில்  இரு பகுதிகள் இருப்பதை நாம் காண முடியும்.

1: நாம் இந்த இரு கேள்விகளுக்கான பதிலை மிக ஆழமாக அறிந்திருக்கவேண்டும்.  

2: நாம் அறிந்த விபரங்களை பிறருக்கு அறிவிக்க வேண்டும். இது நமது கடமையும் கூட.

நாம் அறிக்கையிடும் நம்பிக்கையே நம்மை திருஅவையின் அங்கமாக ஆக்குகிறது. என்றென்றைக்கும் நாம் கடவுளின் மக்களாக இருக்க வாக்களிக்கிறோம். நாம் வாழ்வது இறைவனின் மகிமைக்காக; சிலுவை ஒன்றே விண்ணகத் தந்தையை அடையும் வழி என்ற நம்பிக்கையை அறிக்கயிடும் போது விண்ணகத்தில் மகிழ்சியை ஏற்படுத்துகிறோம்.

பாகம் -1

மனித வாழ்க்கை கடவுளை அறியவும் அவரை அன்பு செய்யவும்.

001    இறைவன் நம்மை ஏன் படைத்தார்? எதற்காக நாம் இந்த பூமியில் படைக்கப்பட்டோம்?

v கடவுள் நம் மேல் வைத்துள்ள  அளவற்ற, நிபந்தனையற்ற அன்பால் நம்மைப் படைத்தார்.

v இறைவனை நாம் அறியவும், அவரை அன்பு செய்யவும், அவரது சித்தத்தின் படி நன்மை செய்து வாழவும், ஒரு நாள் அவரை அடைந்து, பரலோக ராஜியத்தில் நித்தியத்திற்கும் அவரோடு வாழவும் நாம் இந்த பூமியில் படைக்கப்பட்டுள்ளோம்.  [1-3, 358]

விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள எல்லா மிகிழ்ச்சி மற்றும் நன்மைத்தனங்கள் அனைத்தையும் தன்னுள் கொண்டிருக்கும் நம் இறைவனிடமிருந்து வந்து மீண்டும்   முடிவில்லாத காலத்திற்கும் அவரோடு விண்ணக மாட்சியிலும் பேரின்பத்திலும் வாழ அவரால் படைக்கப்பட்டவனே மனிதன். 

v  அதற்காகவே காலம் நிறைவுற்ற போது மனிதரை காக்கவும் மீட்கவும் தம் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார்.  தன் மகன் வழியாகவும் தூய ஆவியாரின் வழியாகவும் தனது பிள்ளைகளாகும் பேற்றை நமக்கு அளித்தார்.

v  இறைவனை உங்கள்பால் எத்துணை ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?  அவர் அன்பு செய்வதற்கு இந்த உலகத்தில் நீங்கள் மட்டும் தான் இருக்கிறீர்கள் வேறு யாருமே இல்லை என்பது போல் இறைவன் உங்களை அன்புசெய்கிறார்” ஜுலியன் க்ரீன்

v  உண்மையான அன்பு ஒருவருக்கு தன்நம்பிக்கையும், மனநிறைவையும் அளிப்பதைப் போல் வேறெதுவும் அளிக்க முடியாது.  பில்லி கிரஹாம் – இவாஞ்சலிஸ்ட்

v  அன்பின் அளவு அளக்கமுடியாதது. தூய பிரான்ஸிஸ் ஆஃப் சேல்ஸ்

தியானிக்க: யோவா17:3; 1திமோ2:3-4; திப4:12;  மத்28:18-20;  மாற்16:20: திப2:42;

002     அளவற்ற, நிபந்தனையற்ற அன்பால் நம்மைப் படைத்தார் என்று கூறப்பட்டதின் அர்த்தம் என்ன? 

 

பலநேரங்களில் நாம் படைப்பின் நோக்கத்தை மறந்து உலகின் போக்கின்படியும் பாவநாட்டங்களிலும் வாழ்ந்து விண்ணக மாட்சியில் அவரோடு வாழும் தகுதியை இழந்து விடுகிறோம்.

கடவுள் நம் மேல் கொண்டுள்ள அன்பு எத்தகையது என்றால்; தம் ஒரே நேச குமாரனை  இவ்வுலகதிற்கு அனுப்பி அவரின் பாடுகளாலும் சிலுவை மரணத்தாலும்  நம்மை  பாவங்களிலிருந்து மீட்டு விண்ணக மாட்சியிலும் பேரின்பத்திலும் வாழ நம்மை தகுதியுள்ளவர்களாக்கச் சித்தமானார்.   அவரே நம் மீட்பர் இயேசுகிறிஸ்து.  அவரே வழியும், உண்மையும், வாழ்வுமாவார். [1-3, 358]

003      மனித படைப்பின் சிறப்பு யாது?

            கடவுள் அனைத்தையும் மனிதருக்காகப் படைத்தார்;

Ø  தன்னை அன்பு செய்யவும்

Ø  தனக்கே பணிவிடை புரியவும்

Ø  தான் படைத்த அனைத்தையும் தன்னிடமே கொண்டுசேர்க்கவுமே மனிதரைப் படைத்தார்.

v  கடவுள் படைத்தவற்றிலேயே மிகச் சிறந்ததும் அதிசயக்கத்தக்கதுமான ஒன்றே மனிதன்.

v  கடவுளின் பார்வையில் மதிப்பேறப்பட்டவன்.

v  வானமும் பூமியும் கடலும் மற்றனைத்து படைப்புகளும் அவனுக்காகவே உள்ளன.

மனிதருக்கும் மனிதனை மீட்டெடுப்பதற்கும் எத்தனை சிறப்பிடம் கொடுத்துள்ளார் என்றால் அதற்காகத் தன் மகனையே பலியிடக்கூடத்  தயங்கவில்லை. அவன் விண்ணகம் வந்து அவனை தனது வலப்புறம் அமர வப்பது வரைக்கும் அயராது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். [358]

004      மற்றனைத்து படைப்புகளிலிருந்து மனிதன் எவ்வாறு மாறுபட்டுள்ளான்?

Ø  கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவன்.

Ø  சுய மதிப்புக் கொண்டவன் – அவன் ஏதோ ஒன்றல்ல – அவன் ஒருவன்.

Ø  சுயசிந்தனையும், சுய அறிவும், சுயமதிப்பும் கொண்டவன்.  சுயமுடிவு எடுக்கக் கூடியவன்.

Ø  பிறரோடு சமூகமாகவும் சமூகத்திற்காகவும் சுதந்திரத்தோடு செயல்படக் கூடியவன்.

Ø  தன்னை படைத்தவரால் தேர்ந்துகொள்ளப்பட்டவன். என்றுமுள்ள உடன்படிக்கையால் அவரின் இரக்கத்தில் அவரோடு வாழ்பவன்.

Ø  அவரில் நம்பிக்கை கொள்வதிலும், அவருக்கு பதில் அன்பு செய்வதிலும் மனிதனுக்கு இணையாக அல்லது மாற்றாக எந்தப் படைப்பையும் கடவுள் படைக்கவில்லை.

 

பாகம் -1

நம்பிக்கை அறிக்கை

அதிகாரம் 1: இறைவனை நாடும் மனிதர்

 

005     நாம் ஏன் இறைவனைத் தேடுகிறோம்

v  பரலோக ராஜியத்தில் இறைவனைக் கண்டு  அவரது மகிமையில் நாம் வாழும் ஏக்கத்தை நாம் பிறக்கும்போதே  நம் உள்ளதில் பதிய வைத்துள்ளார். 

v  புனித அகுஸ்தினார் கூறுகிறார்: ”நான் உமக்காகப் படைக்கப்பட்டேன்.   உம்மை வந்தடையும் வரை  என் இதயம் அமைதிஅடையாது”. 

v  இதையே நாம் இறை வேட்கை அல்லது தேடல் என்கிறோம்., [27-30]

v  திப-17: 27-28. கடவுள் தம்மை அவர்கள் தேடவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்; தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார். அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம்.

v  இறைத் தேடல் என்பது ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும்  இயற்கையாகவே உள்ள செயல்.  நமது வாழ்வில் ஒவ்வொருநாளும் நமது ஆன்மா உண்மையையும், உண்மையான மகிழ்வையும் நோக்கியே பயஇத்துக் கொண்டிருக்கிறது. 

v  இறை அன்பு நமது  இந்த பயணத்தில் நம்மை முழுமையாக, ஈடுபட வைக்கிறது,  அந்த இறைவனைச் சென்றடையும் போதுதான் நாம் மனிதத்தின் முழுமையை அடைகிறோம். 

v  சத்தியத்தின் தேடலே இறைதேடல் என்ற ஆன்மீகத்தை  உணர்கிறோம்.

v  மனிதனின் உன்னதமான சக்தி பகுத்தறிவு.  பகுத்தறிவின் அதி உன்னத நிலைதான் இறைவனைப் பற்றிய அறிவு.  புனித ஆல்பெர்ட் தி க்ரேட்

மத்13:22;  தொநூ3:8-10;  யோவா1:3;  திபா105:3

006     நமது அறிவாற்றலால் இறைவன் இருப்பதை உணர முடியுமா?

நிச்சயமாக முடியும். [31-36, 44-47]

v இந்த உலகமும், அதில் வாழும் ஜீவராசிகளும் தங்களைத் தாங்களே படைத்துக் கொள்ள முடியுமா?

v  இந்த பிரபஞ்சமும் அதில் உள்ள லட்சக்கணக்கான கோள்களும் தாமாகவே  உண்டாகி ஒரு ஸ்திரமான கோட்பாட்டின் கீழ் சிறிதும் பிறழாது தாமாகவே  இயங்க முடியுமா?   இவை அனைத்துமே நம்மை உணரவைப்பது இறைவனை மட்டுமே. 

v  ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதோ ஒன்று இது நல்லது இது  தீயது என்று அவனுக்கு ணர்த்துகிறதே –அது என்ன?

v  நம்மை நல்லதைச்செய்ய தூண்டுகிறதே, தீயது செய்ய முற்படும்போது நம்மை எச்சரிக்கிறதே, தடுக்கிறதே- அது என்ன? அதுதான் ஒருவரின் ஆன்மா. அதன் வழியில் நடப்பதுதான் ஆன்மீகம். இந்த ஆன்மீக பயணத்தின் முடிவில் நாம் காணப்போவது இறைவனை.  நாம் வாழப்போவது விண்ணக மாட்சியில் அவருடன்.

v  திருத்தந்தை பதினாரம் ஆசீர்வாதப்பரின் 2006. ஜனவரி 09 மடலில் இருந்து : இந்த உலக  ஜீவராசிகளில் மனிதனிடம் மட்டுமே உள்ள அதிசயமான அற்புதமான சக்தி ‘இது உண்மை, இது பொய், இது நல்லது, இது தீயது, இதை செய், இதை செய்யாதே என்று உணர்த்துவதுதான். அதுவே நம் உள் மனம் அல்லது ஆன்மா. 

v  இந்த ஆன்மாதான் நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவை நமக்கு உணர்த்துகிறது.   அவரின் மாட்சியில் பங்குபெற நமக்கு வழிகாட்டுகிறது.

உரோ1:19:20;  திப14:15,17;  17:27-28;  சாஞா13:1-9;  தொநூ1:27

007      நமது  அறிவாற்றலால் இறைவன் இருப்பதை உணர முடியும் என்றால் ஏன் மனிதர் கடவுளை ஏற்றுக்கொள்வதில்லை?

பெரும்பாலும் கீழ்கண்ட காரணங்களால் மனிதர் கடவுளை ஏற்றுக்கொள்வதில்லை.

Ø  கண்களால் காணமுடியாத கடவுளை நம்புவதென்பது ஒரு பெரிய சவால்தான்.  அதனால் நம்புவதற்கு தயக்கம் அல்லது பயம்.

Ø  கடவுளை நம்பினால் தனது (உலகு, சரிரம் சார்ந்த) வாழ்வை, இன்பங்களை கைவிடனுமே? ஹுஹும் சரிப்பட்டு வரது.

Ø  கடவுள் இருக்கிறார் என்று பிறரை நம்பவைப்பதைவிட இல்லை என்று நம்பவைப்பது அவர்களுக்கு எளிதாக இருக்கிறது. [37-38]357

008     இறைவனின் அனைத்து சுபாவங்களையும் உய்த்துணர முடியுமா?  அவரைப்பற்றி முழுமையாக எடுத்துரைக்க நாம் தகுதி பெற்றுள்ளோமா?

v எல்லையற்ற வல்லமையையும் நன்மைத்தனத்தையும் கொண்டுள்ள இறவனை நம் குறைபாடுள்ள மனித புத்திக்குள் உணரவோ புரிந்துகொள்ளவோ, அடக்கவோ முடியாது.  இருப்பினும் அவரிடம் நாம் கொண்டுள்ள விசுவாசத்தை முன்னிட்டு; அவரைப்பற்றி  தெரிந்துகொள்ளும் மற்றும் பேசும் தகுதியையும், ஆற்றலையும் அவரிடமிருந்து பெற்றுள்ளோம்.  அதனால் அவரின் அளப்பரிய குணங்களை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லமுடியும். அதற்காக நமது உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் அவசியம்.  தூய ஆவியின் துணையுடன் அவரைப்பற்றி பேசுவதற்குறிய தகுதியையும் ஆற்றலையும் மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.  [39-43,]

1 to 43 குறிப்புகளின் சுருக்கம்

v  தன் இயல்பாலும் இறைவனால் அழைக்கப்பட்டதாலும் மனிதன் சமயம் சார்ந்த ஒரு பிறவி.  இறைவனிடமிருந்து வந்து உலக வாழ்வின் போது தன் முழு சுதந்திரத்தோடு இறைவனோடு உறவில் வாழ்ந்து வாழ்வின் முடிவில் மீண்டும் அவரை சென்றடையும் போது அவனது வாழ்வு முழுமை பெறுகிறது.[44]

v  இறைவனோடு ஐக்கிய உறவில் வாழவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.  அவரில் மட்டுமே உண்மை மகிழ்ச்சியைக் கண்டடைகிறான்.[45]

v  படைப்பு சொல்லும் செய்திக்கும், தனது மனச்சாட்சியின் குரலுக்கும் செவிசாய்க்கும் போது கடவுள் இருப்பது உறுதி என்பதையும் அவரே அனைத்திற்கும் காரணமும் முடிவும் என்பதையும் மனிதன் அறிந்துகொள்கிறான்.[46]

v  உண்மைக்கடவுள் ஒருவரே, அனைத்தையும்  படைத்தவரும் அவற்றை ஆள்பவரும் அவரே. கடவுளின் செயல்களைக்கொண்டும் நமது பகுத்தறியும் ஆற்றலாலும் இதனை நாம் தெரிந்துகொள்ள முடியும் என்பது திருச்சபையின் போதனை.[47]

v  குறைபாடுள்ள நமது சொற்களால் படைத்த இறைவனை வரையறுக்க முடியாது. எனினும் அவரது பலவகைப்பட்ட படைப்புகளில் காணப்படும் அதிசயக்கத்தக்க அமைப்பையும், கச்சிதத்தையும் (perfection) கொண்டு அவற்றை படைத்தவர் கடவுளே என்று கூற முடியும்.[48]

v  படைப்பவர் இன்றி படைப்புகள் இல்லை.  அதனால்தான் என்றும் வாழும் இறைவனைப் பற்றிய அறிவை அவரை அறியாதவர்களுக்கும் ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கும் எடுத்துரைக்க கிறிஸ்துவின் அன்பு நம்மைப் பணிக்கிறது.[49]

அதிகாரம் 2: மனிதனை சந்திக்க வரும் கடவுள்

இறைவனின் வெளிப்பாடு

009      இறைவன்  தனது இறைத்தண்மையை மனிதராகிய நமக்கு வெளிப்படுத்துவதின் பொருள் என்ன?

மனிதன் தனது பகுத்தறியும் பண்பால் இறைவன் இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும்.  இருப்பினும்  இறைத்தன்மையின் முழு பரிமாணத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றல் அவனுக்கு இல்லை. தனது இறை பண்புகளை மனிதன் அறிந்துகொள்ளவேண்டிய அவசியத்தால் இறைவனே தனது இறைப் பண்புகளை நமக்கு வெளிப்படுத்திக்கொண்டு வருகிறார். [50-53, 68-69]

மனிதருக்கு தன்னை வெளிபடுத்த வேண்டும் என்ற அவசியமே இறைவனுக்கு இல்லை.  இருப்பினும் வெளிப்பகுத்துகிறார்.  நம்மை அன்பு செய்பவர்களிடம் மட்டும்தானே நம்மைப் பற்றி சொல்கிறோம்.

அதேபோல்தான், நாம் புரிந்துகொள்ள இயலாத, ஆதியும் அந்தமும் இல்லாத, இறைவன்; நம் மேல் கொண்டுள்ள அளப்பறிய அன்புக்காகவே தன்னையே நமக்கு வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். எபே1:4-5; 9;  2:18; 2பேது1:4;  1திமோ6:16

010     பழையஏற்பாட்டு காலத்தில் கடவுள் எவ்வாறு தம்மை வெளிப்படுத்தினார்?

இந்த பூமியை படைத்தவராக; தாம் படைத்தவற்றை நேசிப்பவராக; மனிதன் பாவம்செய்து தன்னை விட்டு விலகிச்சென்ற போதும் அவனை மன்னித்து  ஏற்று அன்பு செய்பவராக. [54-64, 70-72]

 இதனை வெளிப் படுத்தும் சில நிகழ்வுகள்

q  நோவாவுடன் செய்துகொண்ட உடன் படிக்கை – தொநூ.9:9-10

q  அபிரகாமுடன் செய்துகொண்ட உடன்படிக்கை.   தொநூ 17: 5

q  இஸ்ரயேல் இனத்தை தன் மக்களென அறிவிப்பவராக விப 3:7

q  மோசேக்கு ‘நாமே இருக்கிறவர்’ என்று தன்னை வெளிப்படுத்தியது – விப.3:14

q  சீனாய் மலையில் இஸ்ரயேல் மக்களுடன் உடன்படிக்கை செய்தவராக

q  இறைவாக்கினர் வழியாக பாவ வாழ்க்கையை விட்டு விலகி இறைவனிடம் ஒப்புறவு ஆகும்படி அழைப்பு விடுத்தவரக

011      இறை வெளிப்பாட்டின் நிறைவு எது?

வார்த்தை மனிதராகி (இயேசு கிறிஸ்து) இவ்வுலகில் பிறந்தபோது இறை வெளிப்பாடு முழுமையாகவும் உறுதியாகவும் நிறைவடைந்தது. [65-66, 73]

இறைத் தந்தை தம் மகனை அனுப்பியதிலும் தூய ஆவி என்னும் கொடையை வழங்கியதிலும் இறை வெளிப்பாடு இப்போது நிறைவடைந்துள்ளது.  இருப்பினும், அந்த நிறைவின் முழுப் பொருளையும், நோக்கத்தையும் திருச்சபை தன் நம்பிக்கையாலும் செயல்பாடுகளாலும் மெய்ப்படச் செய்யவேண்டும்.

”ஒரே வார்த்தையான தம் மகனை நமக்கு அளித்ததன் வழியாக இறைவன் எல்லாவற்றையும், எக்காலத்திற்கும் இந்த ஒரே வார்த்தையில் நம்மிடம் பேசியுள்ளார். அதற்குமேல் அவர் சொல்வதற்கு ஒன்றுமில்லை.” – புனித சிலுவை யோவான்.

 

q  ஏறக்குறைய 48 முறை தீர்க்கதரிசிகள் மற்றும் இறைவாக்கினர்கள் வழியாக, முன்னறிவித்தல் மற்றும் இறைவாக்குரைத்தல் மூலம் இறைவன் மனிதர்களுக்குத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு வந்துள்ளார்.

q  தன் ஒரே நேசக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் திருஇரத்தத்தின் வழியாக மனுக்குலம் முழுவதுடனும் அவர்கள் மீட்புக்காக என்றென்றைக்குமான நித்திய உடன்படிக்கையை இறைவாக்கினர் வழியாக அறிவித்தவராக.

தொநூ3:15; 9:16; 10:5;  11:4-6; 14:18;  யோவா1:3;  உரோ1:18-25;  2:6-7; திப17:26-27; சாஞா10:5;  லூக்:21:24; எபி7:3;  எசே14:14

012     இயேசு கிற்ஸ்து உலகத்திற்கு வந்து மரித்து உயிர்த்து விண்ணகம் சென்றதோடு இறைவனின் வெளிப்பாடு நிறைவு பெறுகிறதா அல்லது அதன்பின்னும் தொடர்கிறதா?

’வார்த்தை மனுவுருவானார்’ என்ற மறைஉண்மையின் படி இயேசு கிறிஸ்துவின் வழியாய் இறைவன் உலகத்திற்கு வந்தார்.  அவர் வழியாக எல்லா காலத்திலும் எல்லாமனிதரும் இறைவனை அறிந்து கொள்ள முடியும். தம் மீட்பைக் கண்டடைய முடியும்.  இந்த நற்செய்தியின் வழியாய் இறைவனின் வெளிப்பாடு முழுமை (நிறைவு) பெறுகிறது. தூய ஆவியின் ஆற்றல் இந்த பேருண்மையை நாம் புரிந்துகொள்ள வைக்க்கிறது. [66-67]

எபி 1:1-3 1பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், 2இவ்விறுதி நாட்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.  3கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப் படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

013      தன் ஏக மகனான இயேசுகிறிஸ்துவை இவ்வுலகுக்கு அனுப்பியதின் மூலம் தந்தையாம் கடவுள் நமக்கு எதை வெளிப்படுத்துகிறார்?

தன் ஏக மகனான இயேசு கிறிஸ்துவை இவ்வுலகுக்கு அனுப்பியதின் மூலம் தந்தையாம் கடவுள் மனுக்குலத்தின் மட்டில் தான் கொண்டிருந்த ஆழமான, இரக்கம் நிறைந்த அன்பை வெளிபடுத்துகிறார்.  [65-66, 73]

தன் மகனை மனித உருவில் பிறக்கச்செய்தார்.  இவ்வாறாக நம் கண்களுக்கு புலப்படாத இறைவனை இயேசுக்கிறிஸ்து வழியாய் நாம் காணச்செய்தார்.  அவர் (இயேசு கிறிஸ்து) நாம் நடந்துசெல்லும் பாதையில் நம்மோடு பயணிக்கிறார்.

நாம் நிற்கதியாய் நிற்கும்போதும், துன்பவேளையிலும், சாவின் பயத்திலும் (அந்தகாரத்திலும்) ஆறுதலாய் நம் அருகில் இருக்கிறார்;  நமது பாவங்களைத் தன்மேல் சுமந்து கொண்டு நம்மை இறைவனிடம் ஒப்புறவாக்குகிறார்; வாழ்வின் வழிதெரியாது திகைத்து நிற்க்கும்போது வாழ்வின் வழியில் நம்மை அழைத்துச் செல்கிறார். எபி1:1-2; தீத்2:13

50 to 67குறிப்புகளின் சுருக்கம்

v  தான் மனிதர் மேல் வைத்திருந்த அளவற்ற அன்பால் அவனுக்கு இறைவன் தன்னை வெளிப்படுத்தியது மட்டுமல்ல தன்னையே அவர்களுக்கு கொடையாகஅளித்தார். தான் இந்த உலகத்தில் பிறந்ததற்கான நோக்கம் மற்றும் அர்த்தம் பற்றிய மனிதனின் கேள்விகளுக்கு உறுதியான மற்றும் போதுமான பதிலை இந்த அன்புதான் அவனுக்குத் தருகிறது.[68] 

v  தன்னைப் பற்றிய மறைபொருளை படிப்படியாக தனது வார்த்தைகளாலும் செயல்களாலும் தொடர்ந்து அறிவித்ததின் வழியாகக் கடவுள் தன்னையே மனிதருக்கு வெளிப்படுத்தியிருக்கிருக்கிறார்.[69]

v  தனது படைப்புக்கள் வழியாக தன்னைப்பற்றி சான்று பகர்ந்த இறைவன் அதையும் தாண்டி நமது முதற் பெற்றோரிடம் பேசியதின் வழியாகவும், அவர்கள் பாவம் செய்து அவரை விட்டு விலகியபோது அவர்களை மீட்க உறுதியளித்து, அதற்கான உடன்படிக்கை செய்துகொண்டதின் வழியாகவும் தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.[70] 

v  நோவாவுடனும் மற்றனைத்து உயிரினங்களோடும் என்றும் நிலைத்திருக்கும் உடன்படிக்கை ஒன்றை இறைவன் ஏற்படுத்தினார். உலகம் இருக்கும் வரை அந்த உடன்படிக்கை செயலில் இருக்கும்.[71]

v  கடவுள் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து அவரோடும் அவர் வழிமரபினரோடும் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.  அந்த உடன்படிக்கையின்படி இஸ்ரயேலரைத் தன் இனமாக உருவாக்கி மோசே வழியாக அவர்களுக்குத் தன் கட்டளைகளை கற்பித்தார்.  மனிதகுலம் முழுமைக்கான மீட்புத் திட்டத்தை ஏற்க, இறைவாக்கினர்கள் வழியாக அவர்களைத் தயார் செய்தார்.[72]

v  தம் ஒரே மகனை இந்த உலகத்திற்கு அனுப்பியதின் வழியாக கடவுள் தன்னையே நிறைவாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்தினார்.  அம் மகனே அவரது வெளிப்பாட்டின்  இறுதி வார்த்தை. அந்த மகன் வழியாக மனிதரோடு நித்தியத்திற்குமான ஓர் உடன்படிக்கயை நிறுவினார். அந்த வெளிபபாடு இறுதியானதும் உறுதியானதும்  ஆகும். எனவே கிறிஸ்துவுக்குப்பின் உலகம் முடியுமட்டும் எந்தவொரு வெளிப்பாடும் நிகழாது.[73]

 

மனிதனை சந்திக்க வரும் கடவுள்

இறைவனின் வெளிப்பாட்டை பரவச் செய்தல்

014      திருத்தூது மரபு என்றால் என்ன? இந்த மரபு இந்த உலகம் உள்ளவரை எவ்வாறு பதுகாக்கப்பட்டு வருகிறது?

பெந்தகோஸ்த்தே நாளில் திருத்தூதர்கள் தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்டபின் தாங்கள் கிறிஸ்துவிடம் இருந்தும், தூய ஆவியாரிடம் இருந்தும் கற்றுக்கொண்ட மறை உண்மைகளை

v தங்களின் போதனைகளாலும்

v சாட்சிய வாழ்வாலும்

v இறை ஏவுதல் பெற்று எழுதப்பட்ட நூல்களாலும்

பாதுகாத்து, பிறருக்கு வழங்கி வந்த செயலையே திருத்தூது மரபு என்று அழைக்கிறோம். [75-79,83,96,98]

திருத்தூதர்களின் வழித்தோன்றல்களாகிய ஆயர்களுக்கும், அவர்கள் வழியாக உலகின் கடை எல்லைவரை வாழும் மாந்தர் அனவருக்கும் அந்த மறை உண்மைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்க்கை முறையிலும், மறைநூல் வழியாகவும் இந்த மரபு செயலாக்கம் பெற்று வருகிறது. 

1கொரி11:23:ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

015      உண்மையான விசுவாசத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்கிறோம்?

திருவிவிலியத்திலிருந்தும் கத்தொலிக்கத் திருச்சபையின் பாரம்பரியத்திலிருந்தும் பெற்றுக்கொள்கிறோம். [76, 80-82,85-87, 97, 100] 

திருவிவிலியத்தையும் கத்தொலிக்க திருச்சபையின் பாரம்பரியத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஆதித்திருச்சபை கோட்பாடுகளின் படி ‘திருவிவிலியம் ஏடுகளில் எழுதப்பட்ட ஒன்றல்ல. மாறாக திருச்சபையின் இதயத்தில் எழுதப்பட்ட ஒன்று’.  இதன் அர்த்தம் கிறிஸ்தவ விசுவாசம் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு ஏடுகள் வழியாகவோ நூல்கள் வழியாகவோ கொண்டுசெல்லப்பட்ட ஒன்று அல்ல மாறாக விசுவாசத்தை உணர்வாக, அனுபவமாக, வாழ்வாக, கொண்டுசெல்லப்பட்ட ஒன்று.   இதைத்தான் திப 2:42 ல் பின்வருமாறு காண்கிறோம் ‘அவர்கள், திருத்தூதர்கள் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் இறைவேண்டலிலும் நிலைத்திருந்தார்கள்’.  திருத்தூதர்கள் காலத்திலிருந்து இன்று வரை இந்த விசுவாசம் மாறாது, கறைபடாது எடுத்துச் செல்லப்படுகிறது. ஆதிகிறிஸ்தவர்கள் தங்கள் நட்புறவில் மற்றவர்களையும் இணைத்துக்கொண்டு வந்ததுபோல் இன்றும் இறைவனின் நட்புறவை மற்றவர்களும் அறியச்செய்வதும் அந்த நட்புறவுக்குள் மற்றவர்களையும் இணையச்செய்வதும் நமது கடமையாகும்.

016      ஏன்  நாம் பெற்றுக்கொண்ட விசுவாசத்தை பிறருக்கு அளிக்க வேண்டும்?

நற்செய்தியை அறிவிப்பதோ, மறைக் கல்வியை போதிப்பதோ குருக்கள், கன்னியர்கள், போதகர்கள், மறைக்கல்வி ஆசிரியர்கள், இவர்களது பணி; நமக்குக் கடமையில்லை என்று எந்த ஒரு நல்ல கிறிஸ்தவனும், கிறிஸ்தவளும் கூற இயலாது.  ஏனெனில் நாம்தான் மற்றவர்களுக்கு கிறிஸ்து.

 நாம் ஒவ்வொருவரும் ஒரு செய்தியை தீர்மானமாக உணரவேண்டும்:  “நான் தூய ஆவியால் திருமுழுக்கும் உறுதி பூசுதலும் பெற்றுள்ளேன்.  எனவே உயிரும், வாழ்வும், வழியுமான இறைவனை எனக்கு அடுத்திருப்பவர்களுக்கு அறிவிப்பது எனது கடமை.  இந்த பணியில் எனது பங்களிப்பை இறைவன் வேண்டுகிறார்.” [91]

q  1திமோ 2:4 எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்.

q  மத் 28:19-20  ” எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்”. 

அன்னை தெரேசாள்:  சாலையோரங்களில் மின்கம்பிகளை பார்க்கிறோம்.  அந்த கம்பிகளின் வழியாக மின்சாரம் கடத்தப்படும்போதுதான் மின்விளக்குகளில் இருந்து ஒளியைக் காண்கிறோம்.  நாம் தான் அந்த மின் கம்பிகள்.  இறைவன்தான் மின்சாரம். இறை சக்தியை எடுத்துச் செல்லும், சக்தி நம்மிடம் உண்டு. நாம் அந்த மின்சரத்தைக்கொண்டு உலகுக்கு ஒளியைக் கொடுக்க முடியும், அந்த பணியை செய்யாத போது நாமும் இருளில் இருக்கிறோம்;  இருளைத்தான் பிறருக்கும் கொடுக்கிறோம்.

017      விசுவாசம் நம்பிக்கை இவற்றில் கதோலிக்க திருச்சபை தவறிழைக்க முடியுமா?

விசுவாசம் நம்பிக்கை இவற்றில் கதோலிக்கத் திருச்சபை தவறிழைக்கவே முடியாது. [80-82, 85-87, 92, 100]

யோவா 14:16-17’உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன்.  அவரே உண்மையை வெளிப்படுத்தும் ஆவியானவர்’. எனவே  தூய ஆவியால் வழிநடத்தப்படும் திருச்சபை என்றும் தவறிழைக்கவே முடியாது.

v  கிறிஸ்து தனது திருத்தூதுப் பணியைத் தான் தேர்ந்துகொண்ட திருத்தூதர்களிடம் ஒப்படைதார்.  தூயஆவியாரின் தூண்டுதலால் அவர்கள் செய்த போதனைகள் வழியாகவும், எழுதிய மடல்கள் வழியாகவும் தங்கள் வழிவந்த ஆயர்களிடம் அந்த திருத்தூதுப்பணியை ஒப்படைத்தார்கள்.  கிறிஸ்து மாட்சியோடு வரவிருக்கும் இரண்டாம் வருகையின் மட்டும் அனைத்து தலைமுறைக்கும் இந்த பணி எடுத்துச்செல்லப்படும்.[96]

v  தூய மரபு மற்றும் திருவிவிலியம் ஆகிய இரண்டும் இணைந்ததே ‘இறைவார்த்தை’ என்ற தூய கருவூலம்.  அதனில்தான் அனைத்து நன்மைகளுக்கும் பிறப்பிடமான இறைவனை திருச்சபை தனது திருப்பயணத்தில் சிந்திக்கின்றது மற்றும் பிரதிபலிக்கிறது.[97]

v  தனது கோட்பாடுகள், வாழ்கை முறை மற்றும் வழிபாடுகள் வழியாக திருச்சபை தன்னை நிலைத்திருக்கச் செய்வதுடன், தான் விசுவசித்து போதிக்கும் வேத சத்தியங்களையும் அனைத்துத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்கிறது.[98]

v  இறைமக்களாகிய நாம் இறைவெளிப்பாட்டின்  கொடைகளை அ) மனமுவந்து ஏற்றுக் கொள்வற்கும் ஆ) அவற்றை ஆழப்படுத்திக்கொள்வதற்கும் இ) அவற்றை முழுமையாக வாழ்வதற்கும், என்றுமே தயங்கியதில்லை. இதை சாத்தியமாக்கியது நம்மில் ஆழமாக வேரூன்றியுள்ள உன்னத  விசுவாசமே.[99]

v  இறைவார்த்தையை விளக்கும் பணி திருச்சபையின் போதிக்கும் அதிகாரபீடத்திடம் [Magisterium] மட்டுமே முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அதாவது திருத்தந்தையிடமும் மற்றும் அவரோடு ஒன்றிணைந்து செயலாற்றும் ஆயர்களிடமும் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

v  மாஜிஸ்தேரியம் [Magisterium] என்றால் “போதிக்கும் அதிகாரம்”. இதன் பொருள் தூய ஆவியின் துணையோடு இறைவார்த்தையை விளக்குவதற்கும், அதனை  அறிவிப்பதற்கும் மற்றும் கத்தோலிக்கத் திருச்சபையின்  விசுவாசத்தை தப்பறை கொள்கைகளிலிருந்து பாதுகாப்பதற்குமான  அதிகாரம்.  [100]

74 to 95 குறிப்புகளின் சுருக்கம்

v  கிறிஸ்து தனது திருத்தூதுப் பணியைத் தான் தேர்ந்துகொண்ட திருத்தூதர்களிடம் ஒப்படைதார்.  தூயஆவியாரின் தூண்டுதலால் அவர்கள் செய்த போதனைகள் வழியாகவும், எழுதிய மடல்கள் வழியாகவும் தங்கள் வழிவந்த ஆயர்களிடம் அந்த திருத்தூதுப்பணியை ஒப்படைத்தார்கள்.  கிறிஸ்து மாட்சியோடு வரவிருக்கும் இரண்டாம் வருகையின் மட்டும் அனைத்து தலைமுறைக்கும் இந்த பணி எடுத்துச்செல்லப்படும்.[96]

v  தூய மரபு மற்றும் திருவிவிலியம் ஆகிய இரண்டும் இணைந்ததே ‘இறைவார்த்தை’ என்ற தூய கருவூலம்.  அதனில்தான் அனைத்து நன்மைகளுக்கும் பிறப்பிடமான இறைவனை திருச்சபை தனது திருப்பயணத்தில் சிந்திக்கின்றது மற்றும் பிரதிபலிக்கிறது.[97]

v  தனது கோட்பாடுகள், வாழ்கை முறை மற்றும் வழிபாடுகள் வழியாக திருச்சபை தன்னை நிலைத்திருக்கச் செய்வதுடன், தான் விசுவசித்து போதிக்கும் வேத சத்தியங்களையும் அனைத்துத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்கிறது.[98]

v  இறைமக்களாகிய நாம் இறைவெளிப்பாட்டின்  கொடைகளை அ) மனமுவந்து ஏற்றுக் கொள்வற்கும் ஆ) அவற்றை ஆழப்படுத்திக்கொள்வதற்கும் இ) அவற்றை முழுமையாக வாழ்வதற்கும், என்றுமே தயங்கியதில்லை. இதை சாத்தியமாக்கியது நம்மில் ஆழமாக வேரூன்றியுள்ள உன்னத  விசுவாசமே.[99]

v  இறைவார்த்தையை விளக்கும் பணி திருச்சபையின் போதிக்கும் அதிகாரபீடத்திடம் [Magisterium] மட்டுமே முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அதாவது திருத்தந்தையிடமும் மற்றும் அவரோடு ஒன்றிணைந்து செயலாற்றும் ஆயர்களிடமும் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

v  மாஜிஸ்தேரியம் [Magisterium] என்றால் “போதிக்கும் அதிகாரம்”. இதன் பொருள் தூய ஆவியின் துணையோடு இறைவார்த்தையை விளக்குவதற்கும், அதனை  அறிவிப்பதற்கும் மற்றும் கத்தோலிக்கத் திருச்சபையின்  விசுவாசத்தை தப்பறை கொள்கைகளிலிருந்து பாதுகாப்பதற்குமான  அதிகாரம்.  [100]

 

மனிதனை சந்திக்க வரும் கடவுள்

3.  திருவிவிலியம்

018      திருவிவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது அனைத்தும் உண்மையா?

            உறுதியாக, முற்றிலும் உண்மையாக , பிழையில்லாத நூல்தான் திருவிவிலியம்.  அது போதிப்பது உண்மை மட்டுமே.  காரணம் திருவிவிலியம் பரிசுத்த ஆவியாரின் தூண்டுதலால் எழுதப்பட்டது; இறைவனே அதன் ஆசிரியர். (இரண்டாம் வத்திகான் சங்கம், DV11). [103-107]

019     திருவிவிலியத்தை எவ்வாறு வாசிக்க வேண்டும்?

          திருவிவிலியம் புனிதமான இறை வார்த்தையைக் கொண்டுள்ள நூல்.  பரிசுத்த ஆவியின் வல்லமையால் எழுதப்பட்டது.  நமக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு உறவின் பாலமாக இருந்துவருகிறது.  எனவே பரிசுத்த ஆவியின் துணையோடும் ஆழ்ந்த ஜெபத்தோடும் பயபக்தியோடும் வாசிக்க வேண்டும்.[106-107, 109]

020     திருவிவிலியத்தில் காணப்படும் செய்திகள் அனைத்தும் சரியானவையா? இல்லையெனில் திருவிவிலியத்தை எப்படி உண்மைகளை உள்ளடக்கிய வேதபுத்தகமாக ஏற்க முடியும்?

v  திருவிவிலியம்  சரித்திர நிகழ்வுகளை துல்லியமாக அளிப்பதற்காகவோ அல்லது அறிவியல்  கண்டுபிடிப்புகளை வெளியிடுவதற்காகவோ எழுதப்பட்ட நூல் அல்ல.

v  சில நற்செய்தியாளர்கள் கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் சிறுவர்களாக இருந்தவர்கள். அவர்கள் தங்களைச் சுற்றி பேசப்பட்டவை,  நிகழ்ந்தவை, அன்றைய பண்பாட்டு செயல்பாடுகள், இவற்றை அடிப்படையாக வைத்தே நற்செய்தியை தொகுத்து எழுதினர். அத்தகைய மூலங்களில் சில தவறுகள் இருக்கலாம்.

v  அத்தகைய தவறுகள் நற்செய்தி நூலிலும் இடம் பெற்றிருக்கலாம்.  ஆனால் இறைவனைப் பற்றி, மீட்பின் வழிபற்றி வேதாகமத்தில் சொல்லப்பட்ட அனைத்தும் அப்பழுக்கற்ற துல்லியமான வேத சத்தியங்கள்.[106-107, 109]

 

021        திருவிவிலியம் உள்ளடக்கிய நூல்கள் எவை?

திருவிவிலியத்தை இரு பெரும் பகுதிகளாகக் காணலாம்.  அவை கிறிஸ்துவுக்கு முந்தய பகுதி பழைய ஏற்பாடு .  கிறிஸ்து பிறப்பு அறிவிப்புக்கு பிந்தய பகுதி புதிய எற்பாடு.

பழைய ஏற்பாட்டு நூலகளை மூன்றாக வகைப்படுத்தலாம்.

     i.     வரலாற்று நூல்கள் [தொடக்க நூல், விடுதலைப் பயணம், லேவியர் (ஆகமம்), எண்ணிக்கை, இணைச்சட்டம், யோசுவா, நீதித் தலைவர்கள், ரூத்து, சாமுவேல்- 1, சாமுவேல்- 2, அரசர்கள்- 1. அரசர்கள் – 2, குறிப்பேடு – 1, குறிப்பேடு – 2, எஸ்ரா, நெகேமியா, எஸ்தர், , தோபித்து, யூதித்து, மக்கபேர் – 1, மக்கபேர் – 2]

    ii.     ஞான நூல்கள்[யோபு, திருப்பாடல்கள், நீதிமொழிகள், சபைஉரையாளர், இனிமைமிகு பாடல், சாலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம்]

  iii.     இறவாக்கினர் நூல்கள்[எசாயா, எரேமியா, புலம்பல், எசேக்கியேல்,தானியேல், ஓசேயா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீக்கா, நாகூம், அபக்கூக்கு, செப்பனியா, ஆகாய், செக்கரியா, மலாக்கி, தானியேல்: இணைப்புகள்(இளைஞர் மூவரின் பாடல்; சூசன்னா; பேல் தெய்வமும் அரக்கப்பாம்பும்)]

புதிய ஏற்பாட்டு நூலகளை நான்கு வகைப்படுத்தலாம்

     i.     நற்செய்தி நூல்கள்[மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்]

  ii.    திருத்தூதர் பணிகள்

  iii.     தூய பவுல் எழுதிய திருமடல்கள் [உரோமையர், 1 கொரிந்தியர், 2 கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசியர், 1 தெசலோனியர், 2தெசலோனியர், 1திமொத்தேயு, 2 திமொத்தேயு, தீத்து , பிலமோன், எபிரேயர்]

  iv.     கத்தோலிக்க திருமுகங்கள் [யாக்கோபு, 1 பேதுரு, 2 பேதுரு, 1 யோவான்,  2 யோவான், 3 யோவான், யூதா,  திருவெளிப்பாடு.

022     கிறிஸ்தவர்களுக்குப் பழைய ஏற்பாட்டின் முக்கியத்துவம் என்ன?

பழைய ஏற்பாட்டில் இறைவன் தம்மை உலகை படைத்தவராகவும், காப்பவராகவும், மனித இனத்தை வழிநடத்துபவராகவும் வெளிப்படுத்துகிறார்.  பழைய ஏற்பாட்டு நூல்கள் அனைத்தும் இறை ஏவுதலால் எழுதப்பட்டவை.  பழைய ஏற்பாடு இல்லை என்றால் புதிய ஏற்பாடும் இல்லை; இயேசுகிறிஸ்துவின் பிறப்பு மற்றும் மீட்பின் வரலாற்றையும் புரிந்து கொள்ளவும் முடியாது.  [121-123, 128-130, 140]

இயேசுகிறிஸ்துவின் பிறப்பு மற்றும் மீட்பின் வரலாற்றை முன்னறிவிப்பவைகளாகவும், சாட்சியம் பகர்பவைகளாகவும் அமைந்துள்ளன.  பழைய ஏற்பாட்டில் இடப்பட்ட  விசுவாசத்தின் அடித்தளம் புதிய ஏற்பாட்டில் முழுமைபெற்று நம்மில் பரிணமிக்கிறது.

பழைய ஏற்பாடு, ஜெபங்கள் மற்றும் ஞானத்தின் ஊற்றாகவும், பொக்கிஷமாகவும் விளங்குகிறது – குறிப்பாக திருப்பாடல்கள் திருச்சபையின் அனுதின ஜெபங்களின் அங்கமாக அமைந்துள்ளது.

023     கிறிஸ்தவர்களுக்குப் புதிய ஏற்பாட்டின் முக்கியத்துவம் என்ன?

இயேசு கிறிஸ்துவை மையமாகக்கொண்ட நூல் மற்றும் இறைவெளிப்பாட்டின் முழுமை.  [124-127, 128-130, 140]

  i.     பகுதி1 நற்செய்தி நூல்கள்- (i) மத்தேயு, மாற்கு, லூக்கா& யோவான் நற்செய்திகள் (ii) விவிலியத்தின் மையம்  (iii)  இந்த நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவின் வாழ்விற்கும் போதனைக்கும் சாட்சியங்களாக விளங்குகின்றன. (iv) கத்தொலிக்க திருச்சபையின் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள்,  (v) இயேசு கிறிஸ்துவே நம்மோடு நம்மில் வாழும் அனுவத்தை பெறச்செய்கின்றன.

 ii.     பகுதி 2 திருத்தூதர் பணிகள்; திருச்சபையின் துவக்கம், ஆதிகிறிஸ்தவர்களின் விசுவாசம், வாழ்க்கை நெறி, மற்றும் பரிசுத்த ஆவியின் வல்லமையையும்,  ழிநடத்துதலையும் எடுத்துரைக்கிறது.

iii.     பகுதி 3 திருத்தூதர்களின் மடல்கள்; கிறிஸ்தவ வாழ்வின் அரிச்சுவடிகளாக அமைந்துள்ளன.  கிறிஸ்தவ சித்ததாந்தங்கள், நெறிகள், கோட்பாடுகள் பற்றியும் அவைகளை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளையும் அவசியத்தையும் தெளிவுபடுத்துகின்றன.

iv.     பகுதி 4  திருவெளிப்பாடு அ) புதிய எற்பாட்டின் இறுதி நூல். ஆ)  இயேசு கிறிஸ்து வரும்போது கொடியவர்கள், பாவிகள் என்றென்றைக்கும் அழிக்கப்படுவார்கள்; கடவுளின் மக்களோ நிலைவாழ்வு பெறுவார்கள்  என்ற கருத்து பற்பல காட்சிகள் மற்றும் அடையாளங்கள் வழியாக விவரிக்கப்படுகிறது. இ) உலகின் இறுதி காலதிற்கும், நடுத்தீர்வைக்கும் நம்மை ஆயத்தப்படுத்துகிறது. சுருக்கமாக கடவுளின் மகன் (வார்த்தை) மனுவுருவெடுத்து இந்த பூமியில் பிறப்பதன் தயாரிப்புதான் பழைய எற்பாடு.  இறைவன் மனிதர்களுடன் செய்துகொண்ட அனைத்து உடன்படிக்கைகளின் மற்றும் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளின் நிறைவுதான் இயேசு கிறிஸ்து.   இதை முழுமையாக புரிந்துகொள்ள நாம் விவிலியத்தை ஆழ்ந்து, தியானித்து படித்து அதன் கருத்துக்களை நமது வாழ்வாகிக் கொள்ள வேண்டும்.

024     திருச்சபையின் வாழ்வில் மறைநூலின் பங்கு என்ன?

திருச்சபை அதன் பணிகளுக்கு வேண்டிய சக்தியையும் வழி நடத்துதலையும் திருவிவிலியத்திலிருந்தே பெறுகிறது. இறைமக்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்துகிறது. இறையியலுக்கும் மறை போதனைக்கும் உயிர்நாடியாக உள்ளது.[131-133; 141-142]

திருப்பலியில் இறைவனின் பிரசன்னம் இருப்பதைப்போலவே திருவிவிலியத்திலும்இறை பிரசன்னம் இருப்பதை விசுவசிக்கிறோம்.  திருப்பலியில் நற்செய்தி வாசகத்தின் போது எழுந்து நின்று செவிமடுக்கிறோமே ஏன்? குருவானவர் நற்செய்தியை வாசிக்கும் போது இயேசு கிறிஸ்து நம்மோடு பேசுகிறார் என்று விசுவசிப்பதாலேயே எழுந்து நின்று அதற்கு செவிமடுக்கிறோம். திபா119:105105என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!  எனவே மறைநூலை அடிக்கடி வாசிக்க இறைமக்களை திருச்சபை அறிவுறுத்துகிறது.  திருவிவிலியத்தை வாசிப்பது இறைவனை நோக்கி அவரின் அறிவுறையை கேட்பதாக அர்த்தம் என்கிறார் தூய பிரான்சிஸ் அசிசி. புனித எரோணிமு கூறுகிறார்- மறைநூலை அறியாமல் இருப்பது கிறிஸ்துவை அறியாமல் இருப்பதாகும்.

101 to 133 குறிப்புகளின் சுருக்கம்

v  தன்னிலே பலநூல்களை உள்ளடக்கி இருந்தாலும் திருவிவிலியம் என்பது ஒரேநூல்; அந்த நூல் கிறிஸ்துவே. காரணம்: i) திருவிவிலியத்தில் உள்ள அனைத்து நூல்களும் கிறிஸ்துவைப்பற்றியதே; ii) திருவிவிலியத்தில் உள்ள அனைத்து நூல்களும் கிறிஸ்துவில் நிறைவுபெறுகின்றன.[134]

v  திருவிவிலியம்  “கடவுளின் வார்த்தை”யைக் கொண்டுள்ளது.  அவை தூய ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டதால்  அவை உண்மையாகவே  “கடவுளின் வார்த்தை”யாக உள்ளன.[135]

v  திருவிவிலியத்தில் உள்ள அனைத்து நூல்களுக்கும் இறைவனே ஆசிரியர். ஏனெனில் அவரின் தூண்டுதலாலே திருவிவிலியம் மனிதரால் எழுதப்பட்டது.  அவரே எழுதியவர்களின் உள் இருந்து அவர்களின் வழியாக எழுதியவர். இதன் வழியாக ‘திருவிவிலியத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் பிழையற்ற வேத சத்தியங்கள்’ என்பதற்கு உத்திரவாதம் அளிக்கிறார்.[136]

v  இறைவார்த்தையை விளக்கும்போது ‘நமது மீட்பிற்காக, விவிலிய ஆசிரியர்கள் வழியாக இறைவன் எதை வெளிப்படுத்த விரும்புகிறார்’ என்பதில் மிகக் கவனமாக இருத்தல் அவசியம்.  தூய ஆவியாரின் ஏவுதலால் எழுதப்பட்ட ஒன்றை தூய ஆவியாரின் துணையின்றி புரிந்துகொள்ள இயலாது.[137]

v  பழையஏற்பாட்டின் 46 நூல்களும் புதிய ஏற்பாட்டின் 27 நூல்களும் இறைவனின் ஏவுதலாலேயே எழுதப்பட்டன என்பதை திருச்சபை வணக்கத்துடன் ஏற்று அதன் புனிதத்தை மதிக்கிறது.[138] 

v  நான்கு நற்செய்தி நூல்களும் கிறிஸ்து இயேசுவை மையமாகக் கொண்டுள்ளமையால் அவை திருவிவிலியத்தின் மையமாகவும் திகழ்கின்றன.[139]

v  இறை திட்டமும் இறை வெளிப்பாடும் ஒன்றே. இது பழையஏற்பாடு மற்றும் புதியஏற்பாடு என்ற இரு நூல்களுக்கும் பொருந்தும். பழையஏற்பாடு புதியஏற்பாட்டிற்கு நம்மைத் தயாரிக்கிறது;  புதியஏற்பாடு பழையஏற்பாட்டை நிறைவுபெறச் செய்கிறது.  இவ்விரு நூலகளும் ஒன்றையொன்று தெளிவாக்குகின்றன; இவ்விரண்டுமே இறைவனின் உயிருள்ள வார்த்தைகள்.[140]

v  கிறிஸ்துவின் உடலுக்கு அளிக்கும் புனிதத்தையே திருச்சபை திருவிவிலியத்திற்கும் அளிக்கிறது.  இவை இரண்டுமே நமது கிறிஸ்தவ வாழ்விற்கு ஊட்டமளிக்கிறது மற்றும் அதனை ஆண்டு நடத்துகிறது. வாழச் செய்கின்றன.(திபா119:105;  எசா50:4)[141]

பாகம் 1 - அதிகாரம் 3

கடவுளுக்கு மனிதரின் மறுமொழி

நான் விசுவசிக்கிறேன்

025     தன்னையே வெளிப்படுத்தும் கடவுளுக்கு மனிதரின் மறுமொழி என்ன? 

இறைவனில் நம்பிக்கை கொள்வதே நாம் அவருக்கு அளிக்கக் கூடிய உண்மையான மற்றும் சிறந்த மறுமொழி. [142-149]

இறை வார்த்தையின் வழியாகவும், நம் உள்மன உணர்வுகள் வழியாகவும் இறைவன் நம்மோடு மிகத்தெளிவாகப் பேசுகிறார்.

அந்த இறைவனுக்கு நாம் எவ்வாறெல்லாம் மறுமொழி கூறலாம்:

       i.        முதலில் அவர்மேல் நம்பிக்கைக் கொள்வது.

      ii.        மென்மேலும் அவரை அறிந்துகொள்ள ஆவல் கொள்வது மற்றும் முயற்சிப்பது.

     iii.        முழுமையாக, எவ்வித தயக்கமும் இன்றி, அவரை ஏற்றுக்கொள்வது.

    iv.        அவர் குறலுக்கு செவிசாய்ப்பது மற்றும் அவர் திருவுளத்திற்குக் கீழ்ப்படிவது.

      v.        நம்மையே அவருக்கு கையளிப்பது.

லூக் 1:38 நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்

மத்17:20 இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து ‘இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ’ எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்”

026     நம்பிக்கை என்றால் என்ன?   

நம்பிக்கை = இறைவனைப்பற்றிய அறிதலும் அவரை ஏற்றுக்கொள்ளுதலும். [153-165, 179-180, 183-184]                  

நம்பிக்கையின் ஏழு பரிமாணங்கள்;

  i.     இறைவனிடம் மன்றாடிக் கேட்கும் போது அவர் நமக்கு அளிக்கும் வரப்பிரசாதம்.

 ii.     நாம் மீட்கப்படுவதற்கு  அத்தியாவசியமான அதீத சக்தி

iii.     இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொள்ளத் தேவையான திறந்த மனமும் தெளிந்த புரிதலும்

iv.     இயேசு நமக்கு வக்களித்துள்ள ஒன்று

 v.     செயல்பாடுள்ள அன்பு

vi.     இறை வார்த்தையை கவனமுடன் கேட்கக் கேட்க மற்றும் ஜெபிக்க ஜெபிக்க நம்மில் வளரும் சக்தி

vii.     விண்ணக மகிமையை இப்போதே முன்சுவைக்க வைக்கும் ஓர் உணர்வு.

எபி11:1,6; 12:1-2.  மாற்16:16; யோவா3:36; 6:40; 18:37; 12:32; மத்10:22;  திமோ1:18-19மாற்9:24;  லூக்17:5;  22:32;  கலா5:6; உரோ4:18;  15:13;  1யோவா3:2;  1கொரி13:12; 2கொரி5:7; 

027     ‘இறைவார்த்தைக்கு கீழ்ப்படிதல்’ – எடுத்துக்காட்டாக  மறை நூலில் யாரைக்கூறலாம்?

பலர் உண்டு.  இருப்பினும் மிகச்சிறந்த இருவர்

1.  விசுவாசத்தின் தந்தை என்ப் போற்றப்படும் அபிரகாம்

2.  உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் என்று கூறிய அன்னை மரியாள்.

028     கடவுளை நான் நம்புகிறேன் என்றால் நடைமுறையில் அதன் பொருள் என்ன?

 i.    கடவுளோடு ஒன்றித்து என்னையே அவரிடம் ஒப்படைப்பது

ii.    அவர் வெளிப்படுத்திய எல்லா உண்மைகளையும் ஏற்றுக்கொள்ளுதல்

iii.    தந்தை மகன் தூய ஆவி ஆகியோர் மூன்று ஆட்களாய் இருந்தாலும் ஒரே இறைவன் என்பதை விசுவசித்தல்.

யோவா 1:18 கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.  [150-152]

029     இறைநம்பிக்கைக்கும் அறிவியலுக்குமிடையே முறண்பாடு இருக்க முடியுமா?

இறை நம்பிக்கையும் அறிவியலும் உண்மையின் இரு பரிமாணங்கள்;  இவை இரண்டுமே கடவுளிடமிருந்தே வருகின்றன. எனவே (அறிவியல் மனித பண்புகளையும், மனித நேயங்களையும் சீர்குலைக்காதவரை)  இவ்விரண்டுக்கும் இடையே ஏற்றுக்கொள்ளத்தக்க முறண்பாடுகள் இருக்க வாய்ப்பில்லை. [159]

030     தனி மனித நம்பிக்கை  - திருச்சபை இவ்விரண்டுக்குமுள்ள தொடர்பு என்ன?

ஒருவன் தன்னிலே வாழ முடியாது.  அதேபோல் நம்பிக்கையும் தனி மனிதன் ஒருவன் மட்டும் சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல.  திருச்சபையிலிருந்து பெற்றுக்கொண்ட விசுவாசத்தை, அதே விசுவாசத்தை ஏற்றுக் கொண்டவர்களோடு, பகிர்ந்து கொண்டு அவர்களோடு இணைந்து அந்த விசுவாச வாழ்வில் வாழ்கிறோம்.  திருச்சபையிலிருந்து பெற்றுக்கொண்ட விசுவாசத்திற்கு சாட்சியம் பகர்கின்றோம். [166-169,181]

Ø நம்பிக்கை என்பது ஒரு தனி மனித சுதந்திரம்; ஆனால் அது அவனின் அந்தரங்கமான செயல்பாடு அல்ல.  எனது நம்பிக்கை பிறரோடு பகிந்துகொள்ள முடியாத அல்லது பிறருக்கு வெளிப்படுத்த முடியாத ஒன்றாக இருப்பின் நிச்சயமாக அந்த நம்பிக்கை குறைபாடுள்ள, எதிர்மறையான அல்லது முறன்பாடன விசுவாசமாகதான் இருக்கும்.

Ø நம்பிக்கையைப் பொறுத்தமட்டில் ’நான்’ மற்றும் , ‘நமது’ என்ற இரு சொற்களுமே சம நிலையில் காணப்படவேண்டும்;  காரணம் கத்தொலிக்க விசுவாசத்தைப்  பொறுத்தமட்டில்  ‘எனது அல்லது நமது’ விசுவாசத்தை திருச்சபயிடமிருந்து பெற்றுள்ளோம்.

Ø எனவே அந்த விசுவாசத்தை பிறரோடு பகிர்ந்துகொள்ளவும் அந்த விசுவாசத்தில் பிறரோடு வாழவும் அழைக்கப்பட்டுள்ளோம். விசுவாசத்திற்கே உள்ள தனித்தன்மை:  பிறரின் விசுவாசம் என் விசுவாச வாழ்க்கைக்கு சக்தியை அளிக்கவல்லது.  அதேபோல் எனது விசுவாசம் பிறரில் விசுவாசத்தைத் தூண்டும் மற்றும் விசுவாசத்தை வலுப்படுத்தும். 

மத் 18:20 உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

142 to 175 குறிப்புகளின் சுருக்கம்

v  தனது வார்த்தையாலும், செயல்களாலும் தன்னையே வெளிப்படுத்திய இறைவனை விசுவாசம் அறிவுப்பூர்வமாகவும் முழு உள்ளத்துடனும் பின்பற்றச்  செய்கிறது.[176] 

v  தந்தை மகன் தூய ஆவி ஆகிய மூவொரு கடவுளை மட்டுமே நாம் விசுவசிக்கவேண்டும்.[178]

v  ‘விசுவாசம்’ இறைவனிடமிருந்து நாம் பெறும் தெய்வீகக் கொடை.  எனெனில் தூய ஆவி நம்முள் செயலாற்றினால் மட்டுமே நாம் விசுவாசத்தைக் கொண்டிருக்க முடியும்,[179]

v  விசுவாசம் என்பது ஒரு மனித செயல்பாடும்கூட.  இது அவனது சுயநினைவோடும் சுதந்திரத்தோடும் மற்றும் மனித மாண்போடும் தொடர்புடைய ஒரு செயல்பாடாகும்.[180]

v  அடிப்படையில் விசுவாசம் திருச்சபையின் செயல்.

v  திருச்சபையின் விசுவாசத்திலிருந்தே இறைமக்களின் விசுவாசம் பிறப்பெடுக்கிறது.

v  அதுவே நமது விசுவாசத்தின் ஆதாரமாகவும், சக்தியாகவும், உறுதுணையாகவும்,  ஊக்கமாகவும் உள்ளது.

v  இதனால் திருச்சபை அனைத்து இறைமக்களின் தாயாக விளங்குகிறது.

v  திருச்சபையை தாயாகக் கொண்டிராதவன்  கடவுளைத் தந்தையாகக் கொண்டிருக்க முடியாது-புனித சிப்பிரியன் [181]

v  எழுதப்பட்டவை, மரபு வழி கற்ப்பிக்கப் பட்டவை மற்றும் இறைவனால் வெளிபடுத்தப்பட்டவை என்று திருச்சபை கூறுபவை இவை அனைத்தும் இறைவார்த்தையே. இதுவே நமது விசுவாசம்.[182]

v  மாற்16:16இயேசு உறுதியாகக் கூறுகிறார்: “நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்.  நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்”. விசுவாசம்  மனிதரின் மீட்புக்கு இன்றியமையாத ஒன்று.[183]

v  நாம் அடையவிருக்கும் மறுவாழ்வில் நாம் பெறப்போகும் பேரின்பத்தின் முன்சுவையே நம்பிக்கை. தூய தாமஸ் அக்குவினாஸ்[184]

பாகம் 1: பிரிவு 2-கிறிஸ்தவ விசுவாச அறிக்கை

வாய்பாடு

031     இறை நம்பிக்கை வாய்ப்பாடுகள் (definitions and formulas) என்றால் என்ன?

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் விசுவசிக்கவும், அறிக்கையிடவும் வேண்டிய, மறை உண்மைகளை இரத்தினச் சுருக்கமாக இறைமக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் திருச்சபை நமக்கு அமைத்து கொடுத்துள்ள பிரமாணம் ஆகும். இதனை நம்பிக்கை வாய்பாடுகளின் தொகுப்பு எனவும், நம்பிக்கைக் கோட்பாடுகள் எனவும் விசுவாச அறிக்கை எனவும் கூறலாம். [185-188, 192-197]

வாய்பாடு என்றால் நம் மனதில் என்ன தோன்றும்? ஓரஞ்சு அஞ்சு; ஈரஞ்சு பத்து; மூவஞ்சு பதினஞ்சு ….. இப்படியே போய்க்கொண்டிருக்கும். இதையே ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இதில் மூன்று அடிப்படை குணாதிசயங்களைப் பார்க்கலாம்.

i.   இதில் எதையும் நாம் மாற்றமுடியாது.(ஈரஞ்சு பதினஞ்சு என்று சொல்லமுடியுமா - முடியாது)

ii.   அப்படி மாற்றினால் அந்த கணக்கு எதுக்குமே உதவாது; யாரும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டர்கள். (ஒரு தொழிலதிபர் இது என்னுடய நிறுவனம்.  எனது நிறுவனத்தில் ஈரஞ்சு பதினஞ்சுதான் என்று தொழில் நடத்தினால் அதில் எத்தனை குளறுபடிகள் இருக்கும்; தொடர்ந்து அவர் தொழில் செய்ய முடியுமா?)

iii.   இந்த வாய்ப்பாடுகள் இல்லாமல் அவர் தொழில் செய்து வரவு செலவு கணக்குகளை நிர்வகிக்க முடியாது.

இதுபோல கத்தொலிக்க விசுவாசத்தில் சில ஜெபங்களும், கோட்படுகளும் உள்ளன. (உதாரணம்: விசுவாசப் பிரமாணம்). ஆதிக் கிறிஸ்தவர்கள் காலம் தொட்டு இன்றுவரை பாரம்பரியமாக உருவானவை.   அவைகளின் முக்கிய நோக்கம் சிந்திக்க, தியானிக்க, கற்றுக்கொள்ள, பிறருக்கு கற்பிக்க, நம் விசுவாசத்தை அறிக்கையிட, கொண்டாட மற்றும் அதன்படி வாழ.  இந்த அடிப்படை ஜெபங்களை திருச்சபை வடிவமைத்த படிதான் உபயோகிக்க  வேண்டும்.  நமது விருப்பத்திற்கேற்ப மாற்ற நமக்கு அதிகாரம் கிடையாது.  இத்தகைய ஜெபங்களின் எந்த ஒரு வாக்கியத்தையோ, வார்த்தையையோ சேர்க்கவோ, மாற்றவோ, விடவோ இயலாது.  இத்தகைய கண்டிப்பான வடிவமைப்பு இல்லாத படசத்தில் நமது விசுவாச சத்தியங்கள் காலப்போக்கில் மாற்றமடைந்து, வழுவிழந்து போய்விடும்.   தத்தம் உபயோகத்திற்கு தங்களது மொழிக்கு மொழிபெயற்கலாம். ஆனால் அடிப்படை சத்தியங்களும் அர்த்தங்களும் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும்.  திருச்சபையின் ஒற்றுமைக்கும் ஸ்திரத்தன்மைக்கும் இத்தகைய மாற்ற இயலாத பொது மற்றும் திருவழிபாட்டு ஜெபங்கள் அவசியமானவை.

032     நிசேயா-காண்ஸ்டாண்டிநோபுள் நம்பிக்கை அறிக்கை (கி.பி. 381): முழு வடிவத்தில் எப்படி உள்ளது?

இந்த நம்பிக்கை அறிக்கை கத்தோலிக்க திருச்சபையால் இன்று ஞாயிறு மற்றும் பெருவிழாக்களில் கொண்டாடப்படும் திருப்பலியில் அறிக்கையிடப்படுகிறது. "உரோமைத் திருப்பலிப் புத்தகம்" (Roman Missal) என்று அழைக்கப்படும் கத்தோலிக்க வழிபாட்டு நூலில் காணப்படுகின்ற பாடம் இதோ:

ஒரே சர்வேசுரனை விசுவசிக்கின்றேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல பிதா அவரே.  சர்வேசுரனின் ஏக சுதனாய்ச் செனித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, மெய்யங் கடவுளினின்று மெய்யங் கடவுளாகச் செனித்தவர். இவர் செனித்தவர், உண்டாக்கப் பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர்.  இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.

மானிடரான நமக்காகவும், நம் மீட்பக்காகவும் வானகமிருந்து இறங்கினார். பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்.  மேலும் நமக்காகப் போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.வேதாகமத்தின்படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.  சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கின்றார்.  அவரது அரசுக்கு முடிவு இராது.

பிதாவினின்றும் சுதனின்றும் புறப்படும் ஆண்டவரும், உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியையும் விசுவசிக்கின்றேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகின்றார். தீர்க்கதரிசிகளின் வாயிலாகப் பேசியவர் இவரே. ஏக பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன். பாவ மன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன். மரித்தோர் உத்தானத்தையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.

திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை: புதிய தமிழ்ப் பெயர்ப்பு

மேலே தரப்பட்ட தமிழ்ப் பெயர்ப்பில் வடமொழிச் சொற்கள் அதிகம் வருவதைத் தவிர்த்து, தூய தமிழில் கீழ்வரும் பெயர்ப்பு தமிழக ஆயர் குழுவால் செய்யப்பட்டது. அந்த "நம்பிக்கை அறிக்கை" பாடம் இதோ:

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த / எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய / நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறேன்.  இவர் தூய ஆவியாரால் கருவாகி /தூய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.

பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு / சிலுவையில் அறையப்பட்டு / இறந்து அடக்கம் செய்யப்பட்டார்.  பாதாளத்தில் இறங்கி / மூன்றாம் நாள் / இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகம் சென்று / எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.  அவ்விடத்திலிருந்து / வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் /தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்.  தூய ஆவியாரை நம்புகிறேன்.  தூய கத்தோலிக்கத் திருச்சபையையும் /  புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன்.  பாவ மன்னிப்பை நம்புகிறேன்.  உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்.  நிலை வாழ்வை நம்புகிறேன். / ஆமென்.

185 to 227 குறிப்புகளின் சுருக்கம்

v  இச6:4 “இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்”.    எல்லாம் வல்ல ஒருவர் ஈடு இணையற்ற, தன்னிகரற்ற ஒருவராகவே இருக்கமுடியும்.  ஒருவருக்கு இணையாக மற்றொருவர் இருந்தால் இருவருமே அனைத்தையும் கடந்த ஒருவராக இருக்கமுடியாது.  எனவே கடவுள் ஒருவரே.[228] 

v  இறைவனில் நாம் கொண்டுள்ள விசுவாசம்

          i.     நம்மை அவரை மட்டுமே நோக்கி பயணிக்க வைக்கிறது

         ii.     அவர் மட்டுமே நமது தொடக்கமும் இலக்கும் என்பதை உணர்த்துகிறது.

       iii.     அவரைவிட மேலான அல்லது அவருக்கு மாற்றாக ஒருவர் என்று எவரையும் கருத விடாது.[229]

v  இறைவன் தன்னையே நமக்கு வெளிப்படுத்தினாலும் கூட, நமது வார்த்தைகளுக்குள் அவரது பண்புகளை  முழுமையாக  அடக்க இயலாத ஒரு மறைபொருள் அவர். “உன்னால் முழுமையாக புரிந்துகொள்ளப்பட்ட ஒருவர் கடவுளாக இருக்க முடியாது”. புனித அகுஸ்தினார்[230]

v  கடவுள் தன்னை ‘நாமே இருக்கிறவர்’ என்றும் ‘பேரன்புமிக்கவர்’, என்றும், ‘நம்பிக்கைக்குரியவர்’ என்றும் வெளிப்படுத்தியுள்ளார்.  கடவுள் என்றாலே ‘அன்பும்’, ‘உண்மையும்’ என்று பொருள் கொள்ளலாம். விப34:6. [231]

பாகம் 1: பிரிவு 2- கிறிஸ்தவ விசுவாச அறிக்கை

அதிகாரம் 1 – தந்தையாகிய கடவுளை நம்புகிறேன்

033     கடவுள் ஒருவரே என ஏன் விசுவசித்து அறிக்கையிடுகிறோம்?

ஒரே கடவுள் என்று நாம் உறுதியாக நம்புவதற்கு இரண்டு ஆதரங்களைக் காட்டலாம்.

அ) மறை நூல்: இச 6:4 இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்.  எசா 45:22 மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே! என்னிடம் திரும்பி வாருங்கள்; விடுதலை பெறுங்கள்; ஏனெனில் நானே இறைவன்; என்னையன்றி வேறு எவருமில்லை. 

    மாற் 12:29ல்  “நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக என்பது முதன்மையான கட்டளை”,  என்று இயேசுவும் அதை உறுதிப்படுத்துகிறார்.  பழையஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு நூல்கள் அனைத்தும் மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுவது  “நான், நான் மட்டுமே கடவுள்”. ஆம் கடவுள் ஒருவரே.

ஆ)  பகுத்தறிவு வழியாக:  அனைத்தையும் கடந்த ஒருவரையே கடவுள் என்கிறோம்.  அனைத்தையும் கடந்தவர்கள் இருவர் இருக்க முடியாது.  காரணம் ஒருவருக்கு இணையாக இன்னொருவர் இருக்கிறார்.  இந்த இருவருமே அனைத்தையும் கடந்தவர்களாக இருக்கமுடியாது. எனவே இறைவார்த்தைகளின் அடிபடையிலும், பகுத்தறிவின் அடிப்படையிலும் கடவுள் ஒருவரே என்று உறுதியாக விசுவசித்து அதையே அறிக்ககையிடுகிறோம்.  [200-202, 228]

034     கடவுள் தமக்கென்று ஒரு பெயரை வைப்பதற்கு என்ன கரணம்?

கடவுள் தான்

Ø உணரமுடியாத ஒருவராகவோ;  அழைக்கமுடியாத ஒருவராகவோ;  உய்த்துணர வேண்டிய ஒருவராகவோ; கற்பனைக்கு மட்டுமே உட்பட்ட ஒருவராகவோ,  இருக்க விரும்பவில்லை.  மாறாக

Ø  இருக்கிறவராகவும்; அறியப்படக் கூடியவராகவும்; ஆற்றல் மிக்கவராகவும்; அழைக்கப்படக் கூடியவராகவுமே இருக்கவிரும்புகிறார். [203-213, 230-231]

விப 3:6 “உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே” என்று கூறி தம்மை வாழும் கடவுளாக வெளிப்படுத்தினார்.

விப 3:13-14  13மோசே கடவுளிடம், “இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, ‘அவர் பெயர் என்ன?’ என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?” என்று கேட்டார். 14கடவுள் மோசேயை நோக்கி, “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே” என்றார்.  எனினும்  கடவுள் மேலிருந்த அளவு கடந்த மரியாதையால் இஸ்ரயேல் மக்கள் பழைய ஏற்பாட்டில்  இறைவனை பெயர்சொல்லி அழைக்கவில்லை.  மாறாக ‘அதோனி” ’ஆண்டவரே’ என்றே அழைத்தனர். உரோ 10:9 ல் தூய பவுல்  “இயேசு ஆண்டவர்” என வாயார அறிக்கையிட்டு, ………… நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள் என்றுரைக்கிறார்.

035     கடவுள் எவ்வாறு “உண்மை” யாக இருக்கிறார்?

           ’உண்மையை’ சோதித்துப்பார்க்க எந்த ஒரு அறிவியல் சோதனையும் கிடையாது.  ஒருவரைப்பற்றி மற்றவர்கள் கூறும் சான்றுகளாலும், வரலாற்று பதிவுகளிலும் இருந்தும்  ஒருவரைப்பற்றி திட்டவட்டமாக அறிந்து கொள்ளமுடியும்.

v 1யோவா1:5. கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை.

v நீமொ8:7          என் வாய் உண்மையே பேசும்

v 2சாமு7:28         நீரே கடவுள்!உமது வார்த்தை நம்பிக்கைக்கு உரியவை

v திபா119:142     உமது திருச்சட்டம் என்றும் நம்பத்தக்கது.

v  யோவா14:6       வழியும் உண்மையும் வாழ்வும் நானே.         

v  யோவா18:37 உண்மையை எடுத்துரைப்பதே என் பணி.   இதற்காகவே நான் பிறந்தேன்;  இதற்காகவே உலகிற்கு வந்தேன்.

நாம் விசுவசிக்கும் இறைவார்த்தைகள் அனைத்தும் கடவுள் “உண்மையாக” இருக்கிறார் என்பதை திட்டவட்டமாக எடுத்துரைக்கின்றன.  [214-217].

036     கடவுள் தாம் “அன்பாக”இருப்பதை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?

பழைய ஏற்பாடு காலத்தில் தன் வார்த்தைகளாலும் செயல்களாலும் புதிய ஏற்பாடு காலத்தில் தம் மகன் வழியாகவும் கடவுள் தாம் அன்பாய் இருப்பதை ஆழமாகவும் திட்டவட்டமாகவும் வெளிப்படுத்தியுள்ளார். [218, 221]

தொநூ1:26அப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம்”.   

யோனா4:11வலக்கை எது, இடக்கை எது என்றுகூட சொல்லத்தெரியாத இத்தனை மக்களும், அவர்களோடு எண்ணிலடங்கா கால்நடைகளும் உள்ள இந்த மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?

எசா43:4,5என் பார்வையில் நீ விலையேறப்பட்டவன், மதிப்பு மிக்கவன், நான் உன் மேல் அன்பு கூறுகிறேன்………..அஞ்ஞாதே, ஏனெனில் நான் உன்னோடு இருக்கிறேன்

எசா49:15,16பால் குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ?  கருத்தாங்கியவள் தன் பிள்ளை மீது இரக்கம் காட்டாதிருப்பாளோ?  இவர்கள் மறந்திடினும்நான் உன்னை மறக்கவே மாட்டேன்.  இதோ என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்துவைத்துள்ளேன்.

1யோவ4:8கடவுள் அன்பாய் இருக்கிறார்.

1யோவ4:10நம் கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம் மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

யோவா15:13தம் நண்பர்களுக்கு உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.

யோவா3:16-17 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.  உலகிற்கு தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல,  தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

லூக்15:22-24தந்தை தம் பணியாளரை நோக்கி, ‘முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக்

           கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான் ; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.

லூக்23:34இயேசு, தந்தையே இவர்களை மன்னியும், ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொன்னார்.

உரோ5:7-8நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்.

மேற்காணும் இறை வார்த்தைகளிலிருந்து இறைவனின் அன்பை மூன்று பண்புகளாக நாம் அறிய முடியும்

அ)எந்த அளவு மனிதரை அன்பு செய்திருந்தால் அவர் சாயலிலும் உருவிலும் நம்மை படைத்திருப்பார்

ஆ)தன் மகன் எவ்வளவு தவறுகள் செய்தபோதும் அவனை அன்பு செய்யும் தாய் போல நாம் பாவம் செய்தாலும் நம்மை வெறுக்காமல் அன்பு செய்பவர்.

இ)நம்மை நமது பாவங்களிலிருந்து மீட்க தன் ஒரே நேசக் குமாரனை சிலுவைச் சாவுக்கு உட்படுத்தியவர்

037     கடவுள் ஒருவரே என்பதை ஏற்றுக் கொள்கிறோமா? எப்படி?

கடவுள் தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று ஆட்களாக இருந்தாலும் ஆளுமையில் தமதிரித்துவம் என்ற கடவுள் ஒருவரே என்பதை உறுதியாக விசுவசிக்கிறோம்.[232-236, 249-256, 261, 265-266]

கடவுள் தனியொரு ஆள் அல்ல மாறாக தம் மகனோடும் தூய ஆவியாரோடும் சமூக உறவில் வாழும் மூவொரு கடவுள்.  இயேசு தெளிவாகக் கூறுகிறார்- யோவா 10:30 நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்”.

தூய்மை மிகு மூவொரு கடவுள் என்னும் மறைபொருளே கிறிஸ்தவ வாழ்வுக்கும் நம்பிக்கைக்கும் மையமாக உள்ளது. என்வேதான் நாம் தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குப் பெறுகிறோம் (மத்28:19).

038      “மூவொரு கடவுள்” என்ற மறைபொருளை மனிதனின் பகுத்தறிவினால் அறிய இயலுமா? இதைப் பற்றி இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தியது என்ன?

கடவுள் ஒருவரே மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்பது ஒரு மறைபொருள்.  இதை மனித அறிவாலோ, முயற்சியாலோ அல்லது மனித சக்தியாலோ புரிந்துகொள்ள முடியாது;  மாறாக விசுவசிக்க வேண்டிய ஒன்று. இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளின் வழியாகத்தான் இந்த மறைபொருளை அல்லது பேருண்மையை நாம் அறிய முடியும்; அறிந்துள்ளோம்; விசுவசிக்கிறோம். [237]

லூக்11:13        அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!”

யோவா7:39 தம்மிடம் நம்பிக்கை கொண்டிருப்போர் பெறப்போகும் தூய ஆவியைக் குறித்தே அவர் இவ்வாறு சொன்னார்.

யோவா 20:22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.

திப 2:33            அவர் கடவுளின் வலதுப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார்

 

039     கடவுளை ஏன் தந்தை என்று அழைக்கிறோம்?

i.    மனிதர் தம் பெற்றோரை ‘தந்தை’ ‘தாய்’ என்றே அழைக்கிறார்கள்.  காரணம் நம்மை தோற்றுவித்தவர்களும், பாதுகாத்து வளர்ப்பவர்களும் அவர்கள் ஆவர். நம்மை படைத்தவரும் பாதுகாப்பவரும் கடவுள் என்பதால் கடவுளை நாம் தந்தை என அழைக்கிறோம்.

ii.    இயேசுவே தன் தந்தையை நம் தந்தை என அழைக்க நமக்குப் படிப்பித்திருக்கிறார். லூக்11:2 “தந்தையே உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக” என்று நமக்குக் கற்பித்திருக்கிறார்.  யோவா14:9 “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்து கொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்.

iii.    மூன்றாவதாக பழைய ஏற்பாட்டு காலத்திலும் இறைவனை தந்தை என்றழைத்தே மாட்சி படுத்தியுள்ளனர்: இச32:6.உங்களைப் படைத்து, உருவாக்கி, நிலை நிறுத்திய உங்கள் தந்தை அவரல்லவா? மலா2:10.நம் அனைவர்க்கும் தந்தை ஒருவரன்றோ? நம்மைப் படைத்தவர் ஒரே கடவுளன்றோ? [238-240]

விப4:22;  2சாமு7:14; எசா66:13; திபா27:10; எபே3:14எசா49:15;  மத்11:26-27;கொலோ1:12 

040     தூய ஆவி என்பவர் யார்?

 i.    மூவொரு கடவுளின் மூன்றாவது ஆள்

ii.    இவர் தந்தையோடும் மகனோடும் சமநிலையில் ஒன்றித்து இறைவனாக இருக்கிறார்

iii.    என்றும் உள்ள கொடையாக மகனுக்குத் தந்தையால் கொடுக்கப்பட்டவர்

iv.    தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் வல்லமை

v.    முழு உண்மையை நோக்கி திருச்சபையை வழிநடத்துபவர்.  [243-248, 263-264]

கலா4:6நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி “அப்பா, தந்தையே எனக் கூப்பிடுகிறது. 

உரோ8:15-16அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். யோவா14:17,26; 15:26; 16:13,14

041     மூன்று ஆள்களும் எவ்வாறு செயல்படுகிறார்கள்?

மூன்று ஆள்களும்  இயல்பிலும், செயல்பாட்டிலும் பிரிக்க இயலா இறைத்தன்மையில் ஒரே கடவுளாய் செயல்படுகிறார்கள். [257-260,267] 

எனவேதான் ‘பிதா சுதன் பரிசுத்த ஆவி ஆகிய மூன்றாட்களாய் இருந்தாலும் ஒரே இறைவனாய் இருக்கிற என் ஆண்டவரே தேவரீர் மாத்திரமே மெய்யான கடவுளாய் இருக்கிற படியினாலே உமக்கு மாத்திரம் செய்யத்தக்க தேவ ஆராதணையை உமக்கே செலுத்துகிறோம்’ என்று நமது காலை ஜெபத்தில் ஜெவிக்கிறோம்.

042     கடவுளை அறிந்தபின் ஒருவர் எவ்வாறு செயல்பட வேண்டும்?

முதலில் கடவுளை அறிவது என்றால் என்ன என்பதில் தெளிவு வேண்டும்.  கடவுளை அறிவது என்பது

i.    என்னை தனது அன்பால், சித்தத்தால் படைத்தவர் அவர்

ii.    நான் செய்யவேண்டியதை தீர்மானிக்கும் சுதந்திரத்தை  எனக்குக் கொடுத்தவர் அவர்

iii.    ஒவ்வொரு நொடியும் எனக்காக ஏங்கிக் காத்திருப்பவர்; என்னை அன்போடு பார்ப்பவர்; தனது ஆசீர்வாதத்தால் என்னை நிரப்புவர்

iv.    நான் அவரிடம் வருவதற்காக ஏக்கத்துடன் காத்திருப்பவர்.

v.    தன் கரங்களால் என்னைத் தாங்குபவர்; துவண்டு விழும்போது தன் தோளில் என்னை சுமப்பவர்.

vi.    என்னை நித்தியத்திற்கும் அவரோடு வாசம் செய்ய வைப்பவர்.

இறைவனின் இந்த பண்புகளை உணர்வதுதான் ‘கடவுளை அறிவதென்பது’.

v கடவுளை அறிந்து, விசுவசிக்கும் ஒருவர் அந்த கடவுளுக்கு மட்டுமே தன் வாழ்வில் முதலிடம் கொடுக்க வேண்டும். 

v அன்றிலிருந்து ஒரு புது வாழ்வைத் துவங்க வேண்டும்.

v  தன் எதிரியை மன்னிக்கவும், ஏற்றுக்கொள்ளவும். அன்பு செய்யவும் கூட அவரால் முடியும்.[222-227,229]

043     இயேசு கடவுளா? மூவொரு கடவுளில் ஒருவராக ஏற்றுக்கொள்கிறோமா?

‘தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே’ என்று சொல்லும்போது இயேசுக்கிறிஸ்துவை மூன்று ஆட்களில் ஒருவராகவும், அதன் வழி கடவுளாகவும் அறிக்கை இடுகிறோம்; ‘ஆமென்’ என்று சொல்லும்போது அதையே உறுதிப்படுத்துகிறோம்.

இயேசுவின் அருள் அடையாளங்களையும், புதுமைகளையும், உயிர்தெழுதலையும் கண்ட திருத்தூதர்கள் இயேசுவை கடவுள் என்று ஏற்றுக்கொண்டார்கள்; அவரை வழிபட்டார்கள்.  கத்தொலிக்க திருச்சபையின் விசுவாசமும் அதுவே. 

விவிலிய சான்றுகள்

யோவா13:13 நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான்.

மத் 3:17   அப்பொழுது, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது”.

மாற் 14:36 “அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும்”.

திப 4:12   இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.

044     கடவுள் எல்லாம்  வல்லவரா?

            கடவுளால் இயலாதது எதுவுமே இல்லை (லூக்1:37).  அவர் எல்லாம் வல்லவர். 

கடவுளை எல்லாம் வல்லவர் (omnipotence) என்றும் எங்கும் வியாபித்திருக்கிறவர் (omnipresence)  என்றும் விசுவசிக்கிறோம்.  இது மனிதருக்கு மறைபொருளே.  இருப்பினும் இறைவாக்கினர் எசாயா வழியாக (எசா55:8ல் என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர்) அவரது வல்லமையை நாம் அறிந்துகொள்ள இயலாது என்று தெளிவு படுத்துகிறார். கத்தொலிக்க திருச்சபையின் விசுவாசமும் அதுவே இதனால்தான் திருச்சபை “என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா” எனத் தனது மன்றாட்டில் வேண்டுகிறது. [268-278]

மற்றும் விவிலிய சான்றுகள்:

லூக் 1:37 வானதூதர் மரியாளிடம் “……..ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை”. 

எரே 10:12    அவரே தம் ஆற்றலால் மண்ணுலகைப் படைத்தார்; தம் ஞானத்தால் பூவுலகை நிலை நாட்டினார்; தம் கூர்மதியால் விண்ணுலகை விரித்தார். கடவுள் பூமியை ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்தார்.

தொநூ 1:2    மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது.

தொநூ 1:27 கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.

சாஞா11:24        படைப்புகள் அனைத்தின்மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத்திருக்கவே மாட்டீர்!

 

045     படைப்பின் நிகழ்வுகளை, அறிவியல்  நம்பமுடியாத ஒரு கோட்பாடாகக் காட்டுகிறதா?

இல்லை.  இறைவன் உலகைப் படைத்தார் என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட அல்லது அறிவியலால் ஏற்கத் தகாத ஒன்று அல்ல.  [282-289]

படைப்பின் நிகழ்வுகளை அறிவியல் நிகழ்வுகளாகவோ, கோட்பாடுகளாகவோ பார்க்கக்கூடாது.  மாறாக அதனை ஒரு இறையியல் தத்துவமாகவே காண வேண்டும்.  அதாவது படைத்தவர் மற்றும் படைப்புக்கள் இடையில் உள்ள உறவை விளக்குவதாகவே அதனை அர்த்தம் கொள்ள வேண்டும். மேலும் அ) கடவுள் தனது விருப்பத்தின் படியே உலகைப் படைத்தார்; ஆ) படைப்புகளை தனது சக்தியாலேயே சரியான ஒழுங்கு முறைமைகளின் படி இயங்கச்செய்கிறார் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்.

046     உலகம் ஏதோ ஒரு சந்த்ர்ப்பசூழலில் தானாகவே உருவானதா?

உலகம் உண்டானது ஏதோ ஒரு சூழலில் தன்னிலே நிகழ்ந்த ஒர் நிகழ்வு அல்ல. மாறாக இறைவனால் உருவாக்கப்பட்ட ஒன்று. அதன் தோற்றம், தன்னிலே அமைந்துள்ள அமைப்பு, உள் ஒழுங்கு, மாறாத, மாற்றமுடியாத நிலையன விதிமுறைகளின் படி இயங்குதல், கட்டமைப்பு,  உறுதியான நோக்கம்(மனிதன் வாழ தகுதியுள்ளதாக) இவை அனைத்துமே நோக்கமேயில்லாத ஏதோ சில காரணிகளால் தற்செயலாக உலகம் உண்டாகப்பட்டிருக்க முடியாது என்பதையே தெளிவாகக் காட்டுகின்றன.  உலகின் தூய்மை அழகு அனைத்தும் இறைவனின் கைவண்ணம் என்பதே நமது நம்பிக்கை. [317,318,320]

  i.     ஆயிரக்கணக்கான கோள்கள் ஒரு நியதியின்படி ஒரு நிர்னயிக்கப்பட்ட பாதையில் கோடான கோடி ஆண்டுகளாக சிறிதும் பிறழாது வளம் வருகின்றன.

 ii.     ஒவ்வொரு கோளுக்கும் ஒரு தெளிவான நோக்கம் உண்டு – சூரியன் ஒளிகொடுக்க,  பூமி உயிரினங்கள் வாழ.

அனைத்து கோள்களும் சந்த்ர்ப்ப சூழலால் தானே உண்டாகி தன் விருப்பத்திற்குத் தானே இயங்கினால் இந்த பிரபஞ்சம் ஒரு நொடியில் அழிந்துவிட்டாதா?

இந்த பிரபஞ்சமும், உலகமும், அதில் உள்ள அனைத்து உயிரினங்களும் சந்த்ர்ப்ப சூழலால் தானே உண்டாகியவை என்று கூறுபவர்களுக்கு 1985ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அளித்த பதில்: மிகவும் அதிசயக்கத்தக்க கட்டமைப்பும் நோக்கங்களும் கொண்ட இந்த பிரபஞ்சத்தையும் அது இயங்கும் கோட்பாடுகளையும் ஆராய்ந்து புரிந்து கொள்ள முடியாதவர்களின் விரக்தியின் வெளிப்பாடே “அனைத்து கோள்களும் சந்த்ர்ப்ப சூழலால் தானே உண்டாகி தன் விருப்பத்திற்குத் தானே இயங்குகின்றன” என்ற தத்துவம்.

047     உலகைப் படைத்தது யார்?

ஆதியும் அந்தமும் இல்லாதவரும், எங்கும் வியாபித்திருப்பவருமாகிய கடவுளால் மட்டுமே உலகையும் அதில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தையும் உண்டாக்க முடியும். உலகில் உள்ள அனைத்தும் அவர் விருப்பத்தினாலேயே இவ்வுலகில் உள்ளன; அவரை சார்ந்தே உள்ளன. படைப்பு அனைத்தும் தமத்திருத்துவத்தின் ஒருங்கிணைந்த விருப்பத்தாலும் செயல்பாட்டலேயுமே உண்டாயின.  தந்தை உலகைப்படைத்தார்.  உலகும் அதில் உள்ள அனைத்தும் மகன் வழியாக, மகனுக்காகவே படைக்கப்பட்டன. தொநூ1:1-3;  யோவா1:1-3;  கொலோ1:16-17;  திபா33:6.  [290-292,316]

048     உலகம் ஏன் படைக்கப்பட்டது?

தந்தையாம் கடவுள் தமது நன்மைத்தனம், உண்மை மற்றும் அழகு இவற்றை உள்ளடக்கிய தனது மாட்சியை வெளிப்படுத்தவும், பகிர்ந்துகொள்ளவுமே இந்த உலகைப் படைத்தார். எபே1:5-6;  1கொரி15:28

 [293-294,319] 

049     இயற்கையின் நியதிகளும், அமைப்புகளும் கடவுளால் வகுக்கப்பட்டவைகளா?

கண்டிப்பாக.  இயற்கையின் அமைப்புகளும், நியதிகளும், விதிகளும்,  படைப்பின் ஒரு பகுதியே.  [339,346,354]

மனிதனை எதுவுமே எழுதப்படாத ஒரு எழுது பலகையாக இறைவன் படைக்கவில்லை.  மாறாக, எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது, நல்லது எது, தீயது எது, பாவம் எது, புண்ணியம் எது போன்ற அனைத்து வாழ்க்கையின் நெறிகளையும், நியதிகளையும் அவன் உள்ளத்தில் பதித்தே உண்டக்கியுள்ளார். 

எனக்குத் தெரியாதா என்ன செய்யவேண்டுமென்பது? என் போக்கில்தான் வாழ்வேன் என்ற மனநிலையில் இயற்கையை அழித்தாலோ, மாசுபடுத்தினாலோ, இயற்கையின் நியதிகளை மீறினாலோ என்னையே நான் அழித்துக்கொள்கிறேன் என்பதை ஒரு கிறிஸ்தவன் அறிந்திருக்கிறான்; அறிந்திருக்கவேண்டும்; அதன்படி வாழவும் வேண்டும். 

 

050     படைப்பின் வேலையை 6 நாட்களில் இறைவன் செய்து முடித்தார் என்று தொடக்கநூலில் வர்ணித்திருப்பதின் பொருள் என்ன?

1.      இறைவன் அழகானவற்றையும் நன்மையானவற்றையும் ஞானத்தோடு வரிசைப்படுத்தி  படைத்துள்ளார் என்பதை விளக்குவதாகவும் கொள்ளலாம்.

2.      கடவுள் படைக்காத எதுவுமே இந்த உலகத்தில் (பிரபஞ்சத்தில்) இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

3.      இவ்வுலகில் இறைவன் படைத்த ஒவ்வொன்றும் தன்னிலே நன்மைத்தனத்தை கொண்டுள்ளன.  இறைவன் படைத்த எதிலேனும் நாம் தீயதைக் கண்டால் அதின் உள்ளேயும் ஒரு நன்மைத்தனம் உள்ளதைக் காணலாம்.

4.      இறைவன் படைத்த அனைத்துமே ஒன்றுக்கொன்று உறவு கொண்டிருப்பதையும்,ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதையும் விளக்குகிறது.  படைப்பில் ஒன்றை நாம் சிதைத்தால் அதன் தாக்கம் தொடர்நிகழ்வாக மற்றனைத்தையும் பாதிக்கும் என்ற உண்மையும் விளக்கப் படுகிறது

5.      படைப்புக்களின் உயர்வில் ஒரு வரிசைக்கிரமமும் ஒன்றோடு ஒன்று இசைவாய் செயல்படுவதும் இறைவனின் அளவுகடந்த அழகையும், நன்மைத்தனத்தையும், ஞானத்தையும் வெளிப்படுத்துகின்றன.

6.      படைப்புக்களின் உயர்வில் உள்ள வரிசைக்கிரமத்தில்

                i.    உயிரற்றவைகளைவிட உயிருள்ளவை உயர்ந்தவை

               ii.    உயிருள்ளவற்றுள் தாவரங்களைவிட மிருகங்கள் உயர்ந்தவை

              iii.    மிருகங்களைவிட மனிதன் உயர்ந்தவன் என்பதை ஒவ்வொரு நாளும் எதைப் படைத்தார் என்ற வரிசையில் காட்டப்பட்டுள்ளது.

7.     ஏழு நாட்கள் கொண்ட ஒரு வாரத்தில் ஆறு நாட்கள் உழைத்து ஒரு நாள் ஓய்ந்திருக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தை விளக்குவதாகக் கொள்ளலாம்

8.      அனைத்தின் மகுடமாக, உலகில் கிரிஸ்துவின் வருகை இறைவன் அனைவருக்கும் அனைத்துமாக உள்ளார் என்ற பேருண்மையையும், பேருவைகையையும் நமக்கு வெளிப்படுத்துகிறது. [337-342]

051      கடவுள் ‘ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்’ என்பதன் பொருள் என்ன?

i.     கடவுள் தனது படைப்பின் வேலையை நிறைவு செய்துவிட்டார் என்று உணர்த்துகிறது

 

 

ii.     நாம் உலத்தில் வாழும் நாட்களில், மீட்பு செயலைத்தவிர மற்றனைத்து படைப்பு செயல்களிலும் கடவுளுக்கு உடன் உழைப்பாளியாக வாழ்கிறோம்.  இறைவன் படைப்பு செயலை ஆறு நாட்கள் செய்ததை இதற்கு ஒப்பிடலாம்.

iii.     ஒவ்வொரு படைப்பு செயலுக்கு பின்பும் தான் படைத்தவற்றை நல்லது எனக் கண்டார்.  அதேபோல் நமது வாழ்நாளில் (=ஆறு நாட்களில்)நாம் செய்தது அனைத்தும் நல்லதாக இருக்கும் பட்சத்தில் நமக்கும் ஏழாம் நாள் ஓய்வு நாள்.  அதாவது நமக்கு ஏழம் நாள் என்பது விண்ணக வாழ்வைக் குறிக்கிறது.

iv.     தொநூ 2:3 “கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார்”. நமக்கு ஓய்வு நாள் என்பது நமது இறப்பிற்கு பின் கிடைக்கும் விண்ணக வாழ்வாகும்.

052      கடவுள் உலகை ஏன் படைத்தார்? 

கடவுளின் மகிமைக்காக. [293,294,319]

            அவர் அன்பு ஒன்றே படைப்புக்குக் காரணம்.  இறைவனின் அதிமிக மகிமை மற்றும் மாண்பின் வெளிப்பாடே இறைவனின் படைப்புகள்.  அதற்காக அவரைப் போற்றிப் புகழ்வது நம்மைப் பொறுத்தமட்டில் தகுதியும் நீதியுமானது மட்டுமல்ல, நமது கடமையும் நன்றியறிதலும் கூட.

இறைப் பராமரிப்பு [இதழ் 5 துவக்கம்]

053      இறைப் பராமரிப்பு என்றால் என்ன?                       

மனிதன் எந்த நோக்கத்திற்காகப் படைக்கப் பட்டானோ (கேள்வி 1: இறைவனை நாம் அறியவும், அவரை அன்பு செய்யவும், அவரது சித்தத்தின் படி வாழவும், ஒரு நாள் பரலோக ராஜியத்தில் அவரோடு வாழவும் நாம் இந்த பூமியில் படைக்கப்பட்டுள்ளோம்.)  அந்த இலக்கை நோக்கி அவனை அன்போடும், தாய்க்குறிய பாசத்தோடும் இறைவன் அவனை வழி நடத்திச் செல்வதையே இறைப் பராமரிப்பு என்கிறோம்.  இந்த செயலை இறை வல்லமையோடும் உடன் படைப்புக்களின் ஒத்துழைப்போடும் செயலாற்றுகிறார். [302-305]

054     கடவுள் இந்த உலகையும் என் வாழ்வையும் வழிநடத்துகிறாரா?

ஆம், ஆனால் நாம் புரிந்துகொள்ள முடியாத வழியில் அல்லது மறைபொருளாய்.  அனைத்தையும் அவர் பாதையில் நிறைவை நோக்கி இந்த உலகையும் என்னையும் வழிநடத்துகிறார். [302-305]

வரலாற்று நிகழ்வுகளானாலும், தனி மனித வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளானாலும்  இருந்தாலும், இறைவனின் இயக்கத்தை உணரலாம். (திப17:18 அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம்.)  ஆனால் பொம்மலாட்ட நிகழ்வின் பொம்மைகளாக நம்மை ஆட்டுவிப்பதுமில்லை, நமது சுதந்திரத்தில் தலையிடுவதுமில்லை.  நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும், மாற்றங்களிலும் இறைவன் இருக்கிறார். நாம் கோனலான பாதையில் பயணித்தாலும் அதையும் நேராக்குகிறார்.  நாம் பெற்றுக்கொள்வதும், இழப்பதும், நம்மை சோதிப்பதும், வலுப்படுத்துவதும் அனைத்துமே அவரது சித்தத்தின்படியே.  மத்10:30 உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது.

055      இறை பராமரிப்பில் மனிதனின் பங்கு என்ன?

இறை பராமரிப்பு என்பது நமக்கு மேலே அல்லது நம்மையும் தாண்டி இயங்கும் ஒரு நிகழ்வு அல்ல.  கடவுள் தனது படைப்பு மற்றும் பராமரிப்புப் பணியில் உலகம் முடிவு பரியந்தம் ஒத்துழைக்க நம்மை அழைக்கிறார்.  [307-308]

இந்த அழைப்பை மனிதன் நிராகரிக்கலாம் அல்லது ஏற்று இறைவனின் கரங்களில் ஒரு கருவியாக செயல்படலாம்.  “இறைவனின் கரங்களில் ஒரு கருவியாக” என்ற கருத்தை பின்வருமறு விளக்குகிறார் அன்னை தெரெசா:

இறைவனின் கரங்களில் நான் ஒரு ‘பென்சில்’.  அதை அவர் விருப்பப்படி வெட்டலாம், கூர்மையாக்கலாம்.  எதைவெண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வரையலாம், எழுதலாம்.  அவர் எழுதியதோ, வரைந்ததோ சிறப்பாக அமைந்துவிட்டால் அந்த பெருமை ‘பென்சில்’ க்கு அல்ல அதை உபயோகித்தவருக்கே. நான் செய்த செயல் சிறப்பாக

இருந்தால் அது என்னுடைய அறிவால், திறமையால்தான் என்று நினைப்பது தவறு.  கடவுள் என்னை கொண்டுதான் இந்த செயலை செய்யமுடியும் என்று நினைப்பதும் தவறு. நான் ஒத்துழைக்காவிட்டால் அவருக்கு எந்த இழப்பும் இருக்க முடியாது.

புனித அசிசி ஃப்ரன்சிஸின் செபத்தை இறைவன் முன் சொல்வோம்.

இறைவா, அமைதியின் தூதுவனாய் என்னைப் பயன்படுத்தும்! பகையுள்ள இடத்தில்

 பாசத்தையும், மனவேதனையுள்ள இடத்தில் மன்னிப்பையும், ஐயமுள்ள சூழலில் விசுவாசத்தையும், அவநம்பிக்கையுள்ள மனதில் நம்பிக்கையையும், இருள் சூழ்ந்த இடத்தில் ஒளியையும், துயரம் நிறைந்த உள்ளத்தில் மகிழ்ச்சியையும் வழங்கிட எனக்கு அருள் புரியும்!

ஓ, தெய்வீக குருவே, ஆறுதல் பெறுவதை விட ஆறுதல் அளிக்கவும்; பிறர என்னைப் புரிந்து கொள்ள விரும்புவதை விட, பிறரைப் புரிந்து கொள்ளவும்; பிறருடைய அன்பை அடைய ஆசிப்பதை விட, பிறருக்கு அன்பை அளிக்கவும், எனக்கு அருள்வீராக! ஏனெனில், கொடுக்கும் பொழுது மிகுதியாகப் பெறுகிறோம்; மன்னிக்கும் பொழுது மன்னிப்பை அடைகிறோம்; மரிக்கும் பொழுது நித்திய வாழ்விற்குப் பிறக்கிறோம்! எனவே சுயநலமற்ற வாழ்வில் அமைதியையே அடைகிறோம்! ஆமென்!"

056      கடவுள் சகலமும் அறிந்தவர், சகல வல்லமையும் கொண்டவர் என்றால் ஏன் அவர் தீமையைத் தடுப்பதில்லை?

தீமையிலிருந்து நன்மையை பெறவே கடவுள் தீமையை அனுமதிக்கிறார் என்கிறார் புனித தாமஸ் அக்வினாஸ். [309-314,324]

எடுத்துக் காட்டாக, மத்27:46 “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கதறுகிறார்.  கொலை என்பது ஒரு தீமை.  அனால் உலக மீட்புக்காக நிகழ வேண்டிய ஒன்று. 

             திருச்சபை தீமைகளை இரு வகைகளாகக் காண்கிறது

i.     நமது சக்தியை மீறிய ஒன்று (Physical): உடல் ஊனமுற்று பிறக்கும் குழந்தை; இயற்கை பேரழிவுகள்

ii.     இறைவன் நமக்கு அளித்த சுதந்திரத்தை தவறாகப் பயன் படுத்துவதால் (Moral): கொலை, கொள்ளை, திருட்டு.

‘தீமை ஏன் இந்த உலகில் உள்ளது’ என்பது நமது புரிதலுக்கோ, விளக்கத்துக்கோ அப்பாற்பட்ட ஒன்று.  அனால் ஒன்றுமட்டும் ஊறுதி – தீமை ஒருபோதும் இறைவனிடமிருந்து வருவதில்லை.  இறைவன் தான் படைத்த அனைத்தையுமே நல்லதெனக் கண்டார்.  அனால் அந்த படைப்பு செயல் இன்னும் முற்று பெறவில்லை அல்லது முழுமை பெறவில்லை.  வன்முறைகளும் துன்பதுயரங்களும் படைப்புக்களை நன்மையின் முழுமையை நோக்கி இட்டுச் செல்கின்றன.  தீமை ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை. இதைத்தான் கிறிஸ்துவின் இறப்பும் உயிர்ப்பும் நமக்கு உணர்த்துகின்றன.  தீமையின் உச்சம் நன்மையின் மகுடமாக மலர்ந்ததுதான் இயேசுவின் இறப்பும் உயிர்ப்பும்.   இறுதி தீர்ப்பு நாளில் அனைத்து அநீதிகளும் தீமைகளும் அழித்தொழிக்கப்படும்; துன்பங்களும் துயரங்களும் முடிவு பெறும்; நன்மை ஒன்றே நித்தியத்திற்கும் நிலைக்கும்.

தொநூ2:2; 45:8;  50:20;  உரோ5:20;  8:28  1கொரி13:12

279 to 314 குறிப்புகளின் சுருக்கம்

v  கடவுளின் வல்லமை நிறைந்த அன்புக்கும், ஞானத்திற்கும்  முதல் சான்றாக உள்ளது அவர் உலகத்தையும் மனிதனையும் படைத்தது.  இதன் வழியாக மனிதனுக்கான தனது திட்டத்தையும் தனது அன்புநிறைந்த நன்மைத்தனத்தையும் அறியச்செய்தார்.  அதன் நிறைவே கிறிஸ்துவின் வழியாக வரும் புதுப்படைப்பு.[315]

v  படைப்பின் வேலையை தந்தை செய்தார் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் படைப்பின் காரணமும் படைப்பின் செயலும் மூவொரு கடவுளின் ஒன்றிணைந்த செயலாகும் என்பதே நமது விசுவாசம்.[316]

v  தனது சுதந்திரமான விருப்பத்தால், தனிஒருவராக, யாருடைய உதவியுமின்றி, நேரடியாக கடவுள் இந்த பிரபஞ்சத்தைப் ஒன்றுமில்லமையிலிருந்து படைத்தார். தனது மாட்சியை மற்றும் வல்லமையை வெளிப்படுத்தவும், தனது உண்மையயும் நன்மைத்தனத்தையும் அழகையும் தனது படைபுக்களோடு பகிர்ந்துகொள்ளவுமே இந்த உலகைப் படைத்தார்.  கடவுள் இந்த பிரபஞ்சத்தைப் படைத்து தன் வார்த்தையான மகன் வழியாக அதை நிலைபெறச் செய்து தனது ஆவியாரால் அதற்கு உயிரூட்டி வருகிறார்.[317-320]

v  இறைவன் தனது திருவுளப்படி படைப்புக்களை தனது ஞானத்தாலும், அன்பாலும் அவற்றின் இறுதி இலக்கை நோக்கி நடத்திச் செல்கிறார்.  இதையே இறை பராமரிப்பு என்கிறோம்.[321]

v  பிள்ளைகளுக்கே உரிய நம்பிக்கையுடன் அவரது பராமரிப்பை நாம் நாட தந்தை நம்மை அழைக்கிறார். மத்6:26-34. இதையே தூய பேதுருவும் “உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்” என்று உறுதிப்படுத்துகிறார். 1பேது5:7.  தனது படைப்புக்கள் வழியாகவும் இறை பராமரிப்பை கடவுள் செயலாற்றிவருகிறார்.  தமது திட்டங்களில் சுதந்திரத்துடன் ஒத்துழைக்க கடவுள் மனிதருக்கு  ஆற்றல் தந்துள்ளார்.[322-323]

v  உடல் சார்ந்த, ஆன்மா சார்ந்த தீமைகளை இறைவன் அனுமதிப்பது நம்மால் புரிந்துகொள்ள முடியாத மறைபொருளாகவே இருந்து வருகிறது. ஆனால்  கிறிஸ்து பாடுகள் பட்டு இறந்து மீண்டும் உயிர்த்தது தீமையை வெல்வதற்கே என்ற உண்மை நமது கேள்விக்கு விடை தருகிறது.    தீமையிலிருந்து நாம் நன்மை பெறாவிட்டால் கடவுள் அந்த தீமையை நமக்கு அனுமதிக்கமாட்டார் என்பதே நமது நம்பிக்கை.  இது எவ்வாறு நிகழும் என்பதை முடிவில்லா வாழ்வை அடைந்தபின் நாம் முழுமையாக புரிந்துகொள்வோம்.[324]

v  இறைப் பராமரிப்பு

057      விண்ணகம் ஏன்றால் என்ன?

விண்ணகம் என்பது ஒரு இறை சூழல்.  வான தூதர்கள் மற்றும் புனிதர்களின் உறைவிடம்.  படைப்புக்கள் அனைத்தும் சென்றடைய வேண்டிய இலக்கு.[325-327]  

விண்ணகம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒரு இடம் அல்ல.  நாம் மறு வாழ்வில் வாழவிருக்கும் சூழல்.  இறை ஆசீரிலும்  இறைப் பிரசன்னத்திலும் வாழும் ஒரு சூழல்.  மண்ணகத்தில் உணர முடியாத ஒரு சூழல். விண்ணகமும் மண்ணகமும் படைப்பின் இரு எதார்த்தங்கள், நிஜங்கள்.

1கொரி2:9 -ஆனால் மறைநூலில் எழுதியுள்ளவாறு, “தம்மிடம் அன்பு கொள்ளுகிறவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை; செவிக்கு எட்டவில்லை; மனித உள்ளமும் அதை அறியவில்லை.”  

ஆம் இறைவனின் உதவியால் ஒருநள் நாம் விண்ணகம் சென்று அவரோடு அந்த மாட்சியில் நித்தியத்திற்கும் வாழ்வோம். இதுவே கிறிஸ்துவ விசுவாசம்.  அதற்காவே படைக்கப்பட்டோம், அதற்காகவே வாழ்கிறோம்.

058      நரகம் என்றால் என்ன?

நரகம் என்பது கடவுளிடமிருந்து நித்தியத்திற்கும் பிரிந்திருக்கும் ஒரு நிலை.  இறைவனின் அன்பையும் நன்மைத்தனங்களையும் அறிந்திருந்தும் தன் சுய சிந்தனையாலும்,  தீய செயல்களாலும் இறைவனை புறக்கணித்து மறு வாழ்வில் அவரை விட்டகன்று வாழும் நிலை. [1033-1036]

மத்8:12 அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்”.  அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆறுதல், அடைக்கலம், எதுவுமற்ற ஒரு இருள், வேதனை, ஒரு அந்தகாரம்.   நினைத்துப்பார்க்கவே பயங்கரமான நிலை அதுவும் நித்தியத்திற்கும்.

059      வானதூதர்கள் யார்?

விண்ணகத்தில் வாழும், தூய்மையான இறைவனின் படைப்புக்களே வானதூதர்கள்.  அவர்களை நம் கண்களால் பார்க்க முடியாது.  அவர்களுக்கு உடல் கிடையது, இறப்பு இல்லை.  அவர்கள் நித்தியத்திற்கும் இறைவனோடு வாழ்பவர்கள்.  இறைவனின் சித்தத்தையும் பராமரிப்பையும் நமக்கு பெற்றுத் தருபவர்கள். [328-333,350-351] 

இறைவன் மீது தாகம் கொண்டவர்கள். இறையன்பின் சுவாலையாய் இருப்பவர்கள், அல்லும் பகலும் இறைவனுக்கு ஊழியம் செய்பவர்கள், நித்தியத்திற்கும்  இறைவனை தூயவர், தூயவர் என்று புகழ்ந்து படிக்கொண்டிருப்பவர்கள்.  திபா91:11-12 நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார்.  உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்.

060      நாம் வானதூதர்களோடு உறவில் இருக்க முடியுமா?

முடியும்.  அவர்களை நம் உதவிக்கு அழைக்கலாம்.  நமக்காக இறைவனிடம் பரிந்துபேசும்படி கேட்கலாம்.[334-336.352] 

இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதரை கொடுத்துள்ளார்.  அவரிடம் நமக்காகவும் பிறருக்காகவும் செபிப்பது நல்லதொரு செயல்.  அவர்கள் இறைவனின் சித்தத்தை நமக்கு உணர்த்துபவர்கள்,  நல்வழி காட்டுபவர்கள்.

325 to 349 குறிப்புகளின் சுருக்கம்

v  விண்ணகத்தில் உள்ள படைப்புக்களை வானதூதர்கள் என்கிறோம்.  இவர்கள் இறைவனை இடையராது புகழ்ந்து துதிப்பவர்கள்; மற்ற படைப்புக்களுக்கான மீட்புத்திட்டத்தில் பணிபுரிபவர்கள். நம் அனைவரின் நன்மைக்காக ஒன்றுபட்டு உழைப்பவர்கள்- புனித தாமஸ் அக்குவினாஸ். தங்கள் ஆண்டவர் கிறிஸ்துவை புடைசூழ்ந்திருப்பவர்கள். அவரின் மீட்புத்திட்டத்தின்  வெற்றிக்காக உடன் உழைப்பவர்கள்.  திருச்சபையின் மண்ணக திருப்பயணத்தில் அதற்கு உதவுவதாலும் நம் ஒவ்வொருவருக்கும் காவல் தூதர்களாய் இருந்து நம்மை காப்பதாலும்  இவர்களுக்கு வணக்கம் செலுத்த திருச்சபை நமக்கு அறிவுறுத்துகிறது.[350-352]

v  தனது படைப்புகளில் i)பன்மய தன்மையையும் ii)ஒவ்வொன்றிலும் ஒரு தனித்துவ நன்மைத்தனத்தையும் iii)அவை ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும்  நிலையையும் iv) அந்த சார்புத்தன்மையில் ஒரு வரிசைகிரமத்தையும் விரும்பினார். அனைத்து படைப்புகளையும்  மனித இனத்தின் நன்மைக்கென படைத்தார்.  மனிதனையும் அவன் வழியாக அனைத்து படைப்புகளையும் இறைவனின் அதிமிக மகிமைக்காகவே படைத்தார்.[353]

v  படைப்புகளுக்குள் அதற்கென ஒரு நியதியை வைத்து, அவற்றுக்குள் உறவை ஏற்படுத்தி அந்த நியதிக்கும், உறவுக்கும் உரிய மதிப்பைக் கொடுத்தது: i) இறைவனின் ஞானத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது  ii) படைப்புகளுக்குள் ஒழுக்க நெறிக்கு அடித்தளமாக உள்ளது.[354]

மனிதர்

061     இறைவனின் படைப்புகளுள் மனிதன் தனி இடத்தை பெற்றுள்ளானா?

நிச்சயமாக. இறைவனின் படைப்புகளிலேயே சிகரமாக இருப்பது மனிதன், காரணம் அவனைத்  தன் உருவிலும், சாயலிலும் படைத்தார்.[343,344,353] 

தொநூ1:27கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்.  மனிதனின் படைப்பு மற்ற அனைத்து உயிரினங்களை விட முற்றிலும் தனித்துவம்வாய்ந்தது.  காரணம் நல்லது / கெட்டது; நன்மை / தீமை இவற்றுக்கு உள்ள வேறுபாடுகளை பகுத்தறியக்கூடிய ஆற்றல் கொண்டவன்.

062     மிருகங்களையும் மற்ற உடன் படைப்புக்களையும் மனிதன் எவ்வாறு நடத்த வேண்டும்?

அன்பால் மனிதனைப் படைத்த இறைவன்தான் அனைத்து உயிருள்ள உயிரற்ற படைப்புக்களையும் அதே அன்பாலேயே  படைத்தார் என்ற உண்மையை உணர்ந்து அவற்றை கவனமுடனும், பொறுப்புடனும் கையாள வேண்டும். 

மிருகங்களை அன்புடன் நடத்துவதே நல்ல மனித நேயம்.  தாவரங்களும், மிருகங்களும் மனிதனின் உணவாகவும், உபயோகத்திற்காகவும் படைக்கப் பட்டது உண்மைதான்.  அதற்காக அவற்றை கருணையின்றி நடத்துவது மனிதப் பண்பற்ற செயல்.  அது படைப்பின் மகத்துவத்தை இழிவு படுத்தும் செயலாகும்.  அதேபோல் உயிரற்ற படைப்புகளை தனது பேராசைக்கும் ஆடம்பர வாழ்வுக்கும் துஷ்பிரயோகம் செய்வதும் கடவுளை அவமதிக்கும் செயலாகும்.

திப8:3-6 உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?

ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.

063      மனிதன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டான் என்பதன் பொருள் என்ன?

(அ)மனிதரில் மட்டுமே ஆன்மா என்ற பொக்கிஷத்தை வைத்துள்ளார் (ஆ) மூவொரு கடவுள் சமூக உறவில் இணைந்திருப்பதுபோல் மனிதரும் அடுத்திருப்பவரோடு சமூக உறவில் வாழ படைத்துள்ளார். [335-337,380]

i.     உயிரற்ற படைப்புகளுக்கும், உயிருள்ள தாவரங்கள், மிருகங்களுக்கும் ஆன்மா கிடையாது. மனிதனுக்கு மட்டுமே ஆன்மா என்ற உயர்ந்த பொக்கிஷத்தையும் அவனுள் வைத்துள்ளார். இந்த ஆன்மாதான் மற்றெல்லா படைப்புக்களைவிட மனிதனை கடவுளுடன் இணைக்கிறது; கடவுளின் சாயலாக நம்மை ஆக்குகிறது. படைப்புகள் அனைத்திலும் மனிதன் மட்டுமே படைத்தவரை அறிந்து கொள்கிறான் அவரை நேசிக்கிறான். மனிதன் மட்டுமே படைத்தவரோடு நட்புறவோடு வாழ படைக்கப் பட்டவன்.

இறைவனை  மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்று குறிப்பிடுவதுபோல் மனிதரையும் ஆட்கள் என்றே குறிப்பிடுகிறோம்.  மனிதன் மட்டுமே தன்னை சுற்றியுள்ள வற்றையும் தாண்டி சிந்திக்கிறான்.  தன்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்கிறான்; தன்னை இன்னும் மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறான். அடுத்திருப்பவரையும் நல்ல மனிதராகக் காண்கிறான், ஏற்றுக் கொள்கிறான், அன்பு செய்கிறான்.   தந்தை மகன் தூய ஆவி ஆகிய மூவரும் சமூக உறவில் இணைந்திருப்பது போல மனிதரும் தனக்கு அடுத்திருப்பவரோடு சமூக உறவில் இணைந்து வாழ வேண்டும் என்பதே இறைத் திட்டம். 

யோவா15:15 இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். 

1யோவா4:7 அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள்.

மத்18:10;  லூக்16:22;  திபா34:7; 91:10-13; யோபு33:23-24;  செக்1:12

064      கடவுள் ஏன் மனிதனைப் படைத்தார்?

கடவுள் அனைத்தையும் மனிதனுக்காகப் படைத்தார்.  மனிதனை மட்டும் தனக்காகப் படைத்தார், தனது ஆசீர்வாதமாகப் படைத்தார்.  மனிதன் தன்னைப் படைத்தவரை அறிந்து, அன்பு செய்து, அவருக்கு ஊழியம் செய்து நன்றியுடன் வாழும்போதுதான் அவனை படைத்ததின் நோக்கம் முழுமைபெறுகிறது.[358]

        நன்றியோடு வாழும் போதுதான் மனிதன் கடவுளை நெருங்கிச்செல்கிறான், அவருடன்  ஆழமான நட்புறவில் வாழ்கிறான். இந்த நட்பு நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.

யோவான் 15:15 உங்களை நான் நண்பர்கள் என்றேன்.

065      ஏன் இயேசுக்கிறிஸ்து அனவரிலும் உயர்ந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்?

உண்மையான கடவுளாகவும் அனைத்து நற்குணங்களையும் கொண்ட எடுத்துக்காட்டான மனிதராகவும் திகழ்கிறார்.  அதாவது மனித பண்புகளின் அளவு கோலாகத் திகழ்கிறார். [358,359,381]

 நல்ல மனிதர்களாக தோன்றுபவர்களும் பாவிகளே.  கிறிஸ்துவில் மட்டுமே நல்ல மனிதர்களின் பன்புகளை முழுமையாகக் காண முடியும்.  அவரும் மற்ற மனிதர்களைப் போலவே ஊனுடலின் ஆசைகளுக்கும், சோதனைகளுக்கும் உட்படுத்தப் பட்டார் அனாலும் அவர் பாவம் செய்யவில்லை.  மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று கடவுள் விரும்புகிறாரோ அந்த பண்புகள் அனைத்தையும் கிறிஸ்துவில் மட்டுமே காணமுடியும்.

Ø 1 யோவான் 3:5 பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவம் இல்லை.

Ø எபிரேயர் 4:15 மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்.

Ø 2 கொரிந்தியர் 5:21 நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.

066      மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை எவ்வாறு அறியப்படுகிறது?

v அனைவரும் ஒரே கடவுளால் ஒரே அன்பால் படைக்கப் பட்டவர்கள்.

v இயேசுக்கிறிஸ்துவே அனைவரின் மீட்பர்

v அனைவருக்கும் ஒரே இலக்கு – நித்தியத்திற்கும் கடவுளோடு விண்ணக மாட்சியில் வாழ்வது. [360-361]

எனவேகிறிஸ்தவர்களுக்கு அனைத்து மனிதரும் சகோதரனும், சகோதரியுமாவர். சக கிறிஸ்தவர்களோடு மட்டுமல்ல மாறாக அனைவருடனும் நட்புறவோடு வாழ வேண்டும். ஜாதி மத பிரிவினைகளையும்,  ஆண் பெண் பாகுபாட்டையும், பொருளாதார ஏற்ற தாழ்வுகளையும்  வண்மையாக எதிர்க்க வேண்டும்

திப17:26;  தோபி8:6; 

067      எது ஆன்மா?

v ஆன்மீக ஒழுங்குகளையும், தத்துவங்களையும், நல்லவற்றையும் தீயவற்றையும், பாவங்களையும் புண்ணியங்களையும்  நமக்கு உள்ளிருந்து உணர்த்தும் ஒரு சக்திதான் ஆன்மா.

v நாம் நல்லது செய்யும் போது மன் நிறைவையும், தவறு செய்யும் போது குற்ற உணர்வையும் தருவதும் ஆன்மாதான்.

v ஒரு உடலை மனிதனாக ஆக்குவது, மனிதனாக அடையாளங் காட்ட வல்லது அவனது ஆன்மாவே.

v இந்த ஆன்மாவால்தான் நாம் அனைவர் முன்னும் “நான் கடவுளின் விலைமதிக்க முடியாத படைப்பு” என்று பெருமையுடன் கூறுகிறோம். [362-365,382]

ஒரு பொருளின் குணங்களை விளக்குவது போல் விளக்கவோ, அல்லது அறிவியல் சோதனைகளால் நிரூபிக்கவோ முடியாதது.  மாறாக நமது பகுத்தறிவாலும், உய்த்துணரும் சக்தியாலும் மடுமே, நமது இந்த உடலுக்குள் கண்ணால் பாக்க முடியாத,  தொட்டு உணர முடியாத ஓர் ஆன்மீக சக்தி இருப்பதைக் கண்டுகொள்ள முடியும். இந்த சக்தியைத்தான் ஆன்மா என்று அழைக்கிறோம்.

தொநூ2:7;  தானி3:57-80;  2மக்6:30;  மத்10:28; 26:38;  16:25-26;  யோவா12:27; 15:13;  திப2:41; 1கோரி6:19-20; 15:44-45

068      ஆன்மாவை மனிதன் எங்கிருந்து பெறுகிறான்?

நம் உடலை பெற்றோர் வழியாக நமக்குக் கொடுத்த இறைவன் ஞானம் நிறைந்த, அழிவற்ற ஆன்மாவை மட்டும் நேரடியாகவே நம்முள் வைத்துள்ளார். [366-368, 382]

v மனிதனுக்கு ஆன்மாவைத் தருவது கடவுள் மட்டுமே – பெற்றோர்கள் அல்ல. 

v தாய் தந்தை உறவாலோ, பரிணாம வளர்ச்சியின் போது ஏதொ ஒரு காலகட்டத்தில் மனிதனுக்குள் வந்த ஒன்றோ அல்ல.

v ஒரு மனிதன் பிறக்கும் போது ஒரு ஆன்மாவும் அவனுக்குள் பிறக்கிறது.  மனிதன் பிறப்பது தாய்-தந்தையரால்;  ஆன்மா பிறப்பது கடவுளால்.

v நாம் இறந்தபின் தாய்-தந்தையிடமிருந்து பெற்ற நம் உடல் அழிவுறும் ஆனால் இறைவனால் பிறந்த ஆன்மா நித்தியத்திற்கும் அழிவுறாது. மாறாக இந்த ஆன்மா நித்தியத்திற்கும் இறைவனின் உறவில் வாழும்.

v இந்த மறைபொருளை திருச்சபை நமக்கு போதிக்கிறது. 

1தெச5:23;  எரே31:33;  இச6:5; 29:3;  எசா29:13;  விப36:26;  மத்6:21; லூக்8:15; உரோ5:5

069      கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்ததின் பொருள் என்ன?

மூவொரு கடவுள் என்பது அன்பு மற்றும் சமூக உறவின் முன் உதாரணம்.   அந்த அன்பு மற்றும் சமூக உறவின் மறு அச்சுப் பதிவாகவே மனிதரை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்.  [369-373, 383]

தொநூ1:27 கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.

i.     தொநூ2:18 “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்”.  ஆணும் பெண்ணும் உறவில் இணைவதே அன்பின் நிறைவு.  அதுவே சமூக படைப்பின் வழி என்பதே இறைவனின் திட்டம். 

 ii.     ஆணும் பெண்ணும் ஒரே மதிப்புடயவர்கள் எனினும் படைப்புச் செயலில் ஆண்மையும், பெண்மையும் இணைவதில் தான் இறைவனின் படைப்புச்செயல் (இறைச்சித்தம்) நிறைவுபெறுகிறது. 

iii.     இறைவன் ஆணோ பெண்ணோ இல்லை எனினும் அவர் தாயும் தந்தையுமாய் இருக்கிறார் – எசா66:13 தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; லூக்6:36 உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.

iv.     திருமணம் என்ற அருட்சாதனத்தில் ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாய் ஒன்றிக்கும் போது (தொநூ2:24) ஒரே உடலாய் ஒரே மாமிசமாய் ஆகிறார்கள்.  அவர்கள் புதியதொரு வாழ்வை துவங்குகிறார்கள்

 v.     கணவன் மனைவியால் முழுமை பெறுகிறான்; மனைவி கணவனால் முழுமை பெறுகிறாள்;  இருவரும் இணைந்து இறைவனில் நிறைவு பெறுகிறார்கள்.

vi.     கடவுளின் அன்பு துய்மையும் நம்பிக்கைக்கு உரியதாயும் இருக்கிறது;  அதேபோல் கணவன் மனைவியின் அன்பும் தூய்மையும் நம்பிக்கை நிறைந்ததாகவும் இருக்கிறது.

vii.     கடவுளின் அன்பு படைப்புக்கு ஆதாரம்;  அதேபோல் கணவன் மனைவியின் அன்பு சமூக படைப்புச் செயலுக்கு ஆதாரம்.

தொநூ2:7,22; எசா49:14-15;  66:13;  திபா131:2-3;  ஒசே11:1-4; எரே3:4-19;  தொநூ2:18;  2:19-20; 2:23,24; 1:27,28;  1:28;  சாஞா11:24;

070      ஒருபால் ஈர்ப்பில் வாழ்பவர்கள் பற்றித் திருச்சபையின் கோட்பாடு என்ன?

      இறைவன் படைப்பின் வரிசைக்கிரமத்தில் தெளிவான, உறுதியான நோக்கங்கள் உள்ளன.  ஆணும் பெண்ணும் (எதிர் பாலினம்) மட்டுமே ஒருவரோடு ஒருவர் அன்பிலும் (உடல்) உறவிலும் இணைய வேண்டும்;  அதுவும் குழந்தைகளை பெற்றெடுக்கும் உன்னத காரணத்திற்காக.

       ஒருபால் அல்லது ஓரின ஈர்ப்பாலும் (உடல்) உறவினாலும் குழந்தையைப் பிறப்பிக்கும்  உன்னத நோக்கம் நிறைவேறாது.  எனவே ஓரினச் சேர்க்கை ஆண்-பெண் படைப்பின் நோக்கத்திற்க்கு எதிரானது என்பதால் திருச்சபை இத்தகைய உறவை ஏற்பதில்லை. [2358-2359].

071      மனிதர் துன்புறவும் இறக்கவும் வேண்டுமென்பது  இறைத்திட்டத்தின் ஒரு பகுதியா?

மனிதர் துன்புறவும் இறக்கவும் வேண்டுமென்பது  இறைத்திட்டத்தின் ஒரு பகுதி அல்ல என்பதை தொடக்க நூல் பிரிவு 1 மற்றும் 2ல் மிகத்தெளிவாக நாம் கண்டுகொள்ள முடியும்.  மனிதரை (ஆணும் பெண்ணுமாய்) இறைவன் படைத்த காரணம் பரலோக ராஜியத்தில் நித்தியத்திற்கும் தம்மோடு மனித குலம் வாழ வேண்டுமென்பதே.  [374-379,384, 400]

இதை மனிதனும் அறிவான்;  அதன்படி வாழவும் செய்கிறான்.  தொடக்கநூல் பிரிவு மூன்றில் விவரித்துள்ளதுபோல் பலசமயங்களில் மனிதன் தேவையற்ற ஆசையாலும், நேர்மையற்ற செயல்களாலும், தன் இச்சைகளை அடக்காததாலும், பயத்தாலும் அமைதியை இழந்து இந்த உலகத்தோடும் இறவனோடும் வைத்திருந்த நல்லுறவை இழந்து, துன்பத்தையும் மரணத்தையும் தனதாக்கிக்கொள்கிறான்

[தொநூ3:17-19 உண்ணக்கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது; உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய். முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும். வயல் வெளிப் பயிர்களை நீ உண்பாய். நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்].  பாவத்தின் மேல் உள்ள நாட்டமே மனிதன் துன்பப்படுவதற்கும், இறப்பதற்கும், பேரின்ப விண்ணக வாழ்வை இழப்பதற்கும் காரணம்.

தொநூ2:8,15,17,25; 3:7-16,17,19;  உரோ5:12; 8:21;  1யோவா2:16

355 to 379 குறிப்புகளின் சுருக்கம்

v  இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளை ஆளவும் தனக்கு பணிபுரியவும் தந்தையாம் கடவுள் மனிதனை தனது சாயலில் படைத்து உலகெங்கும் வாழச் செய்தார்.[380]

v  தம் மகனின் சாயலை,  அதாவது  கண்ணுக்குப் புலப்படாத இறைவனின் சாயலை மனிதன் பிரதிபலிக்கவேண்டும் என்றும், இவ்வாறு அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்றே கடவுள் மனிதரைப் படைத்தார்.(கொலோ1:15; எபே1:3-6; உரோ8:29).[381]

v  உடலும் ஆன்மாவும் பிரித்துக் காண இயலாதவனே மனிதன். இறப்பில்லா ஆன்மா கடவுளால் உடனடியாக படைக்கப்படுகிறது.[382]

v  மனிதனை கடவுள் தனிமையில் படைக்கவில்லை; மாறாக படைப்பின் தொடக்கத்திலிருந்தே மனிதரை ஆணும் பெண்ணுமாகவே படைத்தார்.  மனிதர்களுக்குள் உள்ள உறவுகளில் ஆணிற்கும் பெண்ணிற்கும் ஆன ஒன்றிப்பையே தலையாய  உறவாக எற்படுத்தினார்.[383]

v  பாவத்தைக் கட்டிக்கொள்ளும் முன், ஆணும் பெண்ணும் பரிசுத்தமான மற்றும் நேர்மையான தன்மையில் வாழ்ந்தார்கள் என்பதை திருவெளிப்பாட்டிலிருந்து அறிந்துகொள்கிறோம்.  அவர்கள் கடவுளோடு கொண்டிருந்த நட்புறவால் மகிழ்ச்சியான நிலையில் வாழ்ந்தனர்.[384]

வீழ்ச்சியுற்ற மனிதன்

072     பாவம் என்றால் என்ன?

இறைவனைப் புறக்கணிக்கும் மற்றும் அவரது அன்பை உதறித்தள்ளும் செயல்களே பாவம் எனப்படுகிறது.  இறவன் நமக்குக் கொடுத்த கட்டளைகளையும் இறவனின் உடலாகிய திருச்சபையின் கட்டளைகளையும் மீறுவதே இறைவனையும் அவரது அன்பையும் புறக்கணிக்கும் செயல் அல்லது பாவம் ஆகும். [385-390]

v  நம் வாழ்வில் நன்மைத்தனங்களை வெறுத்து ஒதுக்குவது இறைவனை வெறுத்து ஒதுக்குவது ஆகும்.  இதன் விளைவாக இறைவனிடமிருந்து பிரிந்து செல்கிறோம்.

v  இறைவனை பிரிவது என்பது நமது வாழ்வின் ஊற்றையே வேண்டாம் என்று உதறிச் செல்வதாகும்.  எனவேதான் பாவம் ஒரு அருவறுக்கத்தக்க செயலாகக் கருதப்படுகிறது.

v  இயேசு நம் அனைவரின் சாவுக்குறிய பாவங்களையும் தன் மேல் சுமந்துகொண்டதாலேயே தன் தந்தையாலும் கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டார்.

v  நம் மீட்புக்காக இயேசு கொடூரமான சிலுவைச் சாவை ஏற்றதிலிருந்து பாவத்தின் கொடூரமான தன்மையை நாம் உணர்கிறோம். பாவத்தின் விளைவு மரணம் என்று கூறப்படுவதின் அர்த்தைத்தை இத்தகைய சாவால் இயேசு நமக்கு உணர்த்தியுள்ளார்.

v கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள ஆழமான, உன்னத உறவை அறிந்து ஏற்றுக்கொள்ளும் போதுதான் பாவம் என்பது கடவுளை, அவர் நம்மேல் கொண்டுள்ள அன்பை உதறி தள்ளுதல் என்ற உண்மையை நாம் அறிந்துகொள்ள முடியும். 

            கடவுளின் திட்டத்தையும் அவர் மனிதனைப் படைத்ததின் நோக்கத்தையும் முழுமையாக உணர்ந்திருந்தால் மட்டுமே தன்னை படைத்தவரையும் தனுக்கு அடுத்திருப்பவரையும்  அன்பு செய்யாததும் இறைவன் மனிதனுக்கு அளித்த சுதந்திரத்தை தவறாக பயண் படுத்தியதும்  பாவம் என்பதை உணர முடியும்.

முதல் பாவம் – சுய முடிவு எடுக்கும் சுதந்திரந்தமும் இறைவனை பிரிதலும்

073      ஜென்ம (பிறப்பு நிலை) பாவம் என்றால் என்ன? 

v கடவுள் மனிதனைத் தன் சாயலில் படைத்து தனது நட்புறவில் அவனை நிலை நிறுத்தினார்.  மனிதன் கடவுளின் படைப்பு ஆதலால் தனது நிபந்தனையற்ற கீழ்படிதலால் மட்டுமே அந்த நட்புறவில் நிலைத்திருக்க முடியும்.

v தொநூ2:“16ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், “தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். 17ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டுச் சொன்னார்”. இதில் இரு கூறுகளைக் காணலாம்

       i.    மனிதனுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது; அதேசமயம் சில தடைகளும் வகுக்கப்பட்டிருந்தன; தடையை மீறினால் என்ன தண்டனை என்பதும் தெளிவாக்கப் பட்டிருந்தது.

      ii.    அந்த தடையை மதித்துக் கீழ்படியவும் அல்லது மீறவும் அவனுக்கு முழு சுதந்திரம் தரப்பட்டிருந்தது.

v  மனிதன் சாத்தானின் ஆசை வார்த்தைகளை நம்பினான்; படைத்தவரின் மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழந்தான்; கடவுளின் கட்டளையை மீறினான்;  இதுவே முதல் பாவம் என்று அழைக்கப் படுகிறது. [388-389, 402-404]  

v தனக்கு அளிக்கபட்ட சுத்ந்திரத்தை தறாகப் பயன்படுத்தி இறைவனின் நட்புறவை இழந்து அவரை விட்டு பிரிந்தான்.

v அதன் விளைவாக புறம்பே இருளின் ஆட்சியிலும், சாவின் ஆதிக்கத்திலும் ஆதிப் பெற்றோர்கள் தள்ளப்பட்டர்கள் (தொநூ3:17-19).  அவர்கள் வழி வந்த சந்ததியர் அனைவரும் இருளிலும், சாவின் ஆதிக்கத்திலும் (ஜென்ம பாவத்தில்) பிறப்பவர்கள் ஆனார்கள்.

v அதற்க்குப் பின் மனிதன் கட்டிக்கொண்ட அனைத்துப் பாவங்களுமே கடவுளுக்குக் கீழ்படியாமையாலும், அவரது நட்புறவில் மற்றும் நண்மைத்தில் நம்பிக்கை இழந்ததாலுமே நிகழ்ந்தவைகளே.

v இந்த பாவத்தின் வழி இறைவனையல்லாது தன்னை முன்னிருத்தினான். இது படைத்தவரை அவமதித்த செயலாகும். சாத்தானின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு இறைவனுக்கு இணையாக ஆகமுடியும் என்று நம்பினான்; அதையே விரும்பினான்.

v இத்தகைய செயலால் மனிதனுக்கு நடந்த கேட்டினை திருவிவிலியம் தெளிவாக படம்பிடித்துக் காடியுள்ளது.

Ø  தங்களது தூய்மையையும், இறைவனின் அருளையும் இழந்தார்கள்.

Ø  கடவுளைக் கண்டு நடுங்கினார்கள்.

Ø  அவனுக்காக படைக்கப்பட்ட அனைத்து இயற்கை வளங்களும் அவனிடமிருந்து எடுக்கப்பட்டன.

Ø  தன் உடலை அதன் இச்சைகளை அடக்கக்கூடிய ஆன்மீக பலம் தகர்க்கப்பட்டது.

Ø  ஆண் பெண் உறவின் மாண்பு அற்றுப்போய் காமத்தின் ஈர்ப்பாகவும் ஆதிக்கசக்தியாகவும் உருவெடுத்தது.

Ø  மனிதனுக்கு இயற்கையோடும் மற்ற படைப்புக்களோடும் இருந்த நல்லினக்கம் (hormony) சிதைக்கப்பட்டு அவற்றோடு அன்னியப்பட்டும் விரோதப்பட்டும் போனான்.  படைப்புக்கள் அனைத்தும் அவனால் அழிய ஆரம்பித்தன. தொநூ317-19.

v முதல் பாவத்திற்குப்பின் இந்த உலகமே பாவ பிரளயத்தில் மூழ்கத் துவங்கியது. 

Ø  காயின் ஆபெலைக் கொன்றது,

Ø  இஸ்ரயேல் மக்களின் வரலாற்றில் பெருக்கெடுத்தோடிய பாவங்கள்,

Ø  அடிமைத்தளையில் இருந்து மீட்ட இறைவனுக்கு எதிராக நடந்தது,

Ø  இறைவனோடு செய்துகொண்ட உடன்படிக்கைகளை மீறியது,

Ø  புதிய ஏற்பாட்டின் காலத்திலும் இன்றைய திருச்சபையில் கிரிஸ்தவர்கள் மத்தியிலும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் மத்தியிலும் எங்கும் நிறைந்திருக்கும் ஒன்றாக உள்ளது பாவமே.

v இத்தனை பாவங்களும் உலகில் நுழைந்தது ஆதாமின் வழியாகவே. உரோ 5:12ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. 19ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.

Ø மனிதரின் துன்பங்களுக்கும் பாவ நாட்டங்களுக்கும் மற்றும் சாவிற்கும் ஆதாமின் பாவமே காரணம் என்பதும்,

Ø ஆதாம் செய்த பாவத்தின் கறை மனிதர் அனைவரிலும் படிந்துள்ளது என்றும்

Ø அதன் விழைவாக ஒவ்வொரு மனிதனும் பிறப்புநிலை பாவத்தோடும் அவனது ஆன்மா இறந்த நிலையிலுமே பிறக்கிறான் என்பதும்

கத்தோலிக்கத் திருச்சபையின் போதனை.

v இந்த உறுதியான நம்பிக்கையால்தான் ஒருவன் தனி மனித பாவத்தைக் கட்டிக்கொள்ளும் முன்பே குழந்தைப் பருவத்திலேயே திருமுழுக்கின் வழியாக பிறப்புநிலை பாவத்திலிருந்து திருச்சபை அவனைத் தூய்மைப் படுத்துகிறது.

074      ஆதாம் செய்த பாவம் இந்த உலகில் பிறக்கும் அனைவரும் செய்த பாவமாக ஏன் கருதப்படுகிறது?

மனித குலம் முழுமையும் ஆதாமில் ஒரே மனிதனாக இருக்கிறது. ஆதாம் கட்டிக்கொண்ட பாவம் எப்படி ஆதாம் வழிவந்த அனைவரின் பாவமாகும் என்பது இன்றுவரை நாம் புரிந்துகொள்ளமுடியாத மறைபொருளாகவே உள்ளது.  இருப்பினும் திருவெளிப்பாடின் வழியாக ஒரு காரணம் வெளிப்படுத்தப் படுகிறது.  இறைவன் மனிதனைப் படைத்த போது புனிதத்தையும், நீதியையும் ஆதாமுக்கு மட்டுமல்ல அதாமின் வழியாக மனுக்குலம் முழுமைக்கும் அழித்தார். அவன் கீழ்படியாமையால் பாவம் செய்தபோது அந்த புனிதத்தை இழந்தான். அதன் பின் பாவ நிலையில் வாழ்ந்தான்.   அந்த பாவ நிலையில் அவன் சந்ததியினரைப் பெற்றெடுத்ததால் அவனது சந்ததியினர் அந்த பாவ நிலையிலேயே பிறக்கவேண்டியிருந்தது.  எனவே முதல் பாவம் ஒருவனின் தீய செயலால் கட்டிக்கொண்ட பாவம் அல்ல மாறாக பாவநிலையில் பிறந்ததால் வந்த பாவம் அல்லது புனித நிலையை இழந்த நிலையில் பிறத்தல் ஆகும்.  [388-389, 402-404]

i.      சாஞா1:13சாவை கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. 2:24 ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது.  அதைச சார்ந்திருப்போர் இறப்புக்கு உள்ளாவர். 

ii.        இறைவனுக்கு ஊழியம் செய்ய மறுத்து அவரை விட்டு பிரிந்து சென்ற வானதூதர்களே சாத்தான்கள்.  மனிதர்களை தங்கள் வலையில் விழச்செய்து கடவுளுக்கு எதிராக நடக்கத் தூண்டுவதே அவர்கள் திட்டம்.  கடவுள் மனிதனை புனித நிலையில் வாழவைத்தாலும் சாத்தானின் சூழ்சியால் படைப்பின் தொட்க்கத்திலிருந்தே இறைவன் அளித்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தினான்.  கடவுளுக்கு எதிரான செயல்களைச்செய்து அவரைவிட்டு பிரிந்து சென்றான். ஆதாம் தனது பாவத்தால் தனது புனிதத்தை மட்டும் இழக்கவில்லை மாறாக அவன் வழியாக வந்த மனுக்குலம் முழுவதி புனிதத்தையும்  இழக்கச் செய்தான். அதன் விழைவாக மனிதர் அனைவரும் தீயநாட்டங்களுக்கும் பாவங்களுக்கும் பலவீனமானான்.  அதன் விளைவாக அறியாமையையும், துன்பங்களையும் சாவையும் தனக்கே வருவித்துக்கொண்டான். 

075      ஆதிப் பெற்றோரால் வந்த ஜென்ம பாவம்தான் நாம் பாவம் செய்வதற்கு காரணமாய் உள்ளதா?

ஜென்ப பாவத்திற்கும் தனி மனிதன் செய்யும் பாவத்திற்கும் தொடர்பு இல்லை. நாம் திருமுழுக்கு பெற்றபோது அந்த  ஜென்ம பாவதிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு, தூய்மை கிவிட்டோம்.  நன்மைத்தனத்தில் மீண்டும் பிறப்பெடுத்து விட்டோம். நாம் விபரம் அறிந்த பின் நமது பலவீனத்தினாலும் , அறிவீனத்தினாலும், உடல் இச்சைகளாலும், தெரிந்தே தவறு செய்யும் போது (கர்ம) பாவத்தைக் கட்டிக்கொள்கிறோம். [405]

076      கடவுள் நம்மை எவ்வாறு பாவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கிறார்?

நாம் பாவச்சேற்றில் மூழ்கும் போது எனக்கென்ன என்று இருப்பவர் அல்ல கடவுள். நாம் பாவத்தால் கடவுளை பிரிந்து செல்லும் போது அவரது மனநிலை எப்படி இருக்கும் என்பதை இயேசு ‘ஊதாரிமந்தன்’ உவமையில் விளக்குகிறார் (லூக்15:20 தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்). அதற்கும் மேலாக தன் ஒரே நேச மகனையே உலகுக்கு அனுப்பி பலியாகக் கொடுத்து நம்மை பாவத்திலிருந்து மீட்டெடுக்கிறார்.  மகனும் ஒரே முறை தாம் செலுத்திய பலியால் ஒப்புறவு அருட்சாதனத்தின் வழியாக உலகம் முடியுமட்டும் பாவிகளை மீட்டு கடவுளுடன் ஒப்புறவாக்குகிறார். [410-412, 420-421]

385 to 412 குறிப்புகளின் சுருக்கம்

v  சாவை இறைவன் உண்டாக்கவில்லை; அதில் அவர் மகிழ்வதுமில்லை.  மாறாக சாத்தானின் பொறாமையாலே சாவு உலகில் நுழைந்தது.  (சாஞா1:13; 2:24). [413]

v  i) கடவுளின் திட்டத்திற்கு கீழ்படியாமலும் ii) கடவுளுக்கு எதிராக தங்களையே உயர்த்திக்கொண்டு, iii) அவருக்கு ஊழியம் செய்ய மறுத்தும், iv) கடவுளைவிட்டு பிரிந்த வானதூதர்களே சாத்தான்கள் ஆவர்.  இறைவன் மனிதனை பரிசுத்ததிலும் நண்மைத்தனத்திலும் வாழச்செய்த போதும்; அவன் தீயோனால் ஈர்க்கப்பட்டு தனக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தை படைப்பின் துவக்கத்திலேயே தவறாகப் பயன் படுத்தினான்.  கடவுளுக்கு எதிராக தன்னை உயர்த்தி அவரை புறக்கனிப்பதின் மூலம் தன் சுய இலக்கை அடைய முயற்சி செய்தான்.[414=415]

v  படைப்பின் முதல் மனிதனான ஆதாம் தான் செய்த பாவத்தால் இறைவனிடமிருந்து பெற்ற புனிதத்தையும் நேர்மையையும் இழந்தான்.   அந்த இழப்பு அவனுக்குமட்டுமல்ல மனிதகுலம் முழுமைக்கான இழப்பாகும்.[416]

v  தமது முதல் பாவத்தால் ஆதி பெற்றோர் மட்டும் இறைவனிடமிருந்து பெற்ற புனிதத்தையும் நேர்மையையும் இழக்கவில்லை மாறாக மனித குலமே அவற்றை இழக்கச் செய்தனர்.  புனிதத்தையும் நேர்மையையும் இழந்த நிலையில் மனிதன் பிறப்பதைத்தான் ‘பிறப்புநிலை பாவம்’ அல்லது ‘ஜென்மபாவம்’ என அழைக்கிறோம். இந்த பிறப்புநிலை பாவத்தின் விளைவுதான் i) மனித பலவீனம், ii) அறியாமை, iii) வேதனைகள், iv) பாவத்தின் மேல் நாட்டம்  v) மற்றும் சாவின் ஆதிக்கம்[417-418]

v  திரெந்து சங்கத்தின் கூற்றுப்படி ஜென்மப்பாவம் மனித இயல்போடு வழிவழியாக தொடருகிறது.[419] 

v  நாம் பவத்தால் இழந்தவற்றைவிட கிறிஸ்து சாவின்மேல் கொண்ட வெற்றி நமக்கு அதிகமான அருளைப் பெற்றுக்கொடுத்துள்ளது.உரோ5:20குற்றம் செய்ய வாய்ப்புப் பெருகும்படி சட்டம் இடையில் நுழைந்தது; ஆனால் பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது.[420]

v  கடவுளின் அன்பால் உலகம் படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது; உலகம் பாவத்திற்கு அடிமையாகி கடவுளைப் பிரிந்தது; கிறிஸ்து இந்த அடிமைத்தளையிலிருந்து தனது சிலுவை மரணத்தாலும் உயிர்ப்பாலும் நம்மை விடுவித்தார்;  தீயோனின் அனைத்து சக்திகளையும் தகர்த்தெறிந்தார்.[421] 

பாகம் -1   நம்பிக்கை அறிக்கை

பிரிவு இரண்டு - தந்தையின் ஏக மகனான இயேசுக்கிறிஸ்துவை விசுவசிக்கிறேன்

077      இயேசுவைப்பற்றிய செய்திகள் ஏன் ‘நற்செய்தி’ என அழைக்கப்படுகிறது?

ஒரு செய்தியை நல்ல செய்தி என்று எப்போது சொல்கிறோம்? அ)அது நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும் போது;  ஆ)நமக்கு நன்மையை விளைவிக்கும்போது; இ) நம் எதிர்காலத்திற்கு ஒரு நம்பிக்கயை உத்திரவாதம் செய்யும் போது.

மரணபடுக்கையில் உள்ள ஒருவரிடம் ‘நீங்கள் முழுவதும் குணமடைந்துவிட்டீர்கள்;  வீட்டிற்கு செல்லலாம்’ என்பதுதானே அந்த நோயாளிக்கு நல்ல செய்தி. பிறவிமுடவனிடம் ‘உன் கட்டிலைத் தூக்கிகொண்டு போ’ என்பது அவனுக்கு நல்ல செய்திதானே.

அதேபோல் அலகையால் உலகில் நுழைந்துவிட்ட எண்ணற்ற பாவங்களினால் மனித குலம் அழிவின் விளிம்பில் இருந்த நிலையில்,  கடவுள் நம் மேல் வைத்திருந்த அன்பால் தன் ஒரே மகனை உலகத்திற்கு அனுப்பி ‘பாவிகளான நம்மை மீட்டெடுத்து நித்தியத்திற்கும் கடவுளோடு அன்புறவோடு வாழச்செய்துவிட்டார்’ என்ற செய்தியைவிட நல்லசெய்தி நமக்கு வேறென்ன இருக்கமுடியும்.  நமக்காக இயேசு கிறிஸ்து பிறந்து, மரித்து, உயிர்த்தார் என்பதைவிட மனிதருக்கு பெரிய நற்செய்தி வேறெதுவும் இருக்க முடியாது.  [422-429]

v “ஏனெனில், மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” லூக் 2:30-32.

v வாழும் கடவுளின் மகன் நமக்காய் மனிதரானார். லூக்2:10-11 “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.

v 1திமோ2:4-5 எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார். ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்.

எனவேதான் கிறிஸ்துவைப்பற்றிய செய்தியை ‘நற்செய்தி’ என்று அழைக்கிறோம்

078      இயேசு என்ற பெயருக்கு அர்த்தம் என்ன?

        எபிரேய மொழியில் இயேசு என்பதன் பொருள் ‘கடவுள் மீட்கிறார்’. [430-435, 452]

         திப4:12 இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.

079      இயேசுவை ஏன் ‘கிறிஸ்து’ என்று அழைக்கிறோம்?

v  கிரேக்க மொழியில் ‘கிரிஸ்டோஸ்’ என்றால் மெசியா அல்லது அபிஷேகம் செய்யப்பட்டவர் என்பது பொருள். இங்கு கிறிஸ்து  என்ற சொல்லின் பொருள் ‘நாஸரேத்தில் வாழ்ந்த எளிய தச்சனின் மகன் இயேசு,  இஸ்ரயேல் மக்கள் நெடுநாள் எதிபார்த்திருந்த, மெசியாவும் மீட்பரும்’ ஆவார். [436-440, 453]

v  இஸ்ரயேல் குலத்தில் அரசர்கள், குருக்கள், மற்றும் இறைவாக்கினர்கள் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் அல்லது அருட்பொழிவு செய்யப்பட்டவர்கள்.

v  திப10:38  “கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார்”.

v  இயேசு அருட்பொழிவு செய்யப்பட்டவர்.

நாமும் திருமுழுக்கின் மூலம் இத்தகைய அழைத்தலின் பங்காளிகளாகிறோம்.  எனவேதான் ‘கிரிஸ்தவர்கள்’ என்ற பேற்றினைப் பெற்றுள்ளோம்.

080      கடவுளின் ஒரே நேசக்குமாரன் இயேசு என்பதின் பொருள் என்ன?

      கிறிஸ்துவே தான் கடவுளின் ஒரே மகன் என்றும் தான் இந்த உலகிற்கு வந்ததன் நோக்கம் எதுவென்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.யோவா3:16-17.  பேதுருவும் விண்ணகத் தந்தையால் வெளிப்படுத்தப் பட்டு கிறிஸ்து கடவுளின் ஒரே மகன் என்பதற்கு சாட்சியம் அளித்துள்ளார் மத்16:16-17. [441-445, 454]

v  மத்11:27 என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

v  யோவா1:18 கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும்  கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.

v  1யோவா4:9 நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.

v  எபி1:2-3 இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார்.

v  இன்னும் பல விவிலிய சான்றுகள் தெளிவு படுத்துவது

                 i.     இயேசு கடவுளாம் தந்தையின் ஒரே மகன் – தந்தையே இயேசுவின் திருமுழுக்கின் போதும், உருமாற்றத்தின் போதும் தெளிவுபடுத்தியுள்ளார்.  இயேசுவும் இதற்கு சான்றுபகர்ந்துள்ளார்.

                ii.     இயேசு தந்தைக்கு மிகவும் அன்புக்குரியவர் என்பதால்தான் அனைத்தையும் மகன் வழியாக நிறைவேற்றினார்.

               iii.     இயேசு மனிதர்கள் அனைவருக்கும் மேலானவர்.

கடவுளின் ஒரே நேசக்குமாரன் இயேசு என்பது  இயேயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பில் உறுதியாகிறது.

081      கிறிஸ்தவர்கள் இயேசுவை ஏன் கடவுள் அல்லது ஆண்டவர் என ஏற்றுக்கொள்கிறார்கள் (அழைக்கிறார்கள்)?

 “இயேசு பாதம் கழுவும் நிகழ்வின் போது “நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான்” (யோவா13:13). ஆம் இந்த மறையுண்மை இயேசு கிறிஸ்துவால் நமக்குக் கற்பிக்கப் பட்டது. [446-451, 455]

பழைய ஏற்பாட்டில் யூதர்கள்  “யாவே” இறைவன் மேல் கொண்டிருந்த அச்சத்தாலும், மரியாதையாலும் அவரை பெயர் சொல்லி அழைப்பதற்குப் பதிலாக  (அதொனெய்) கடவுள் அல்லது இறைவன் என்றே அழைத்தார்கள். [இச10:17ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவர்க்கெல்லாம் இறைவன்.  திபா8:1 ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது].   

இயற்கையின் மீதும், பேய்கள் மீதும்,  பாவத்தின் மீதும், சாவின் மீதும் இயேசு அதிகாரம் கொண்டிருந்ததையும், அவரே மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததையும் கண்டிருந்த திருத்தூதர்களும், ஆதி கிறிஸ்தவர்களும்  இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்றே அழைத்தார்கள்.  திருத்தூதர் தோமா உயித்த இயேசுவைக் கண்டுகொண்டபின் “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்று அறிக்கையிட்டு அதை உறுதிப் படுத்தினார்.

எனவேதான் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை “ஆண்டவரே” என அழைக்கிறார்கள்;  வேறு எந்த சக்தியிடமும் தெய்வத்திடமும் மண்டியிடுவதில்லை.

தந்தையின் ஏக மகனான இயேசுக்கிறிஸ்துவை விசுவசிக்கிறேன்

422 to 451 குறிப்புகளின் சுருக்கம்

v  இயேசு என்பதன் பொருள்  ‘கடவுள் மீட்கிறார்’. அன்னை மரியாளிடமிருந்து பிறந்த குழந்தையை இயேசு என்று அழைக்கிறோம்.  காரணம் (மத்1:21) ”அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்”; (திப4:12)இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.[452]

v  கிறிஸ்து என்பதன் பொருள்  ‘மெசியா’ அல்லது ‘அபிசேகம் செய்யப்பட்டவர்’.  இயேசுவே அந்த கிறிஸ்து.  காரணம்  கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். இஸ்ரயேலருக்கு வாக்களிக்கப்பட்டவரும், மனிதரை பாவங்களிலிருந்து மீட்க வரவிருந்தரும் அவரே.[453]

v  “கடவுளின் மகன்” என்ற சிறப்புப் பெயர் தந்தையாம் கடவுளுடன் இயேசு கிறிஸ்துவுக்கு நித்தியத்திற்கும் உள்ள, அவருக்கு மட்டுமே உள்ள, உறவை உறுதிப்படுத்துகிறது. கடவுளின் ஒரே மகன் அவர்; அவர் கடவுளாகவும் உள்ளார் இயேசு கிறிஸ்து கட்வுளின் மகன் என்பதை என்பதை விசுவசிப்பவனே கிறிஸ்தவன். யோவா (1:14, 18; 3:16, 18; திப 8:37; 1 யோவா 2:23)[454]

v  “ஆண்டவர்” என்ற சிறப்புப் பெயர் இயேசு கிறிஸ்துவுக்கு உள்ள இறைஅரசின் ஆட்சியுரிமையைக் குறிக்கிறது.  இதை தூய ஆவியே வெளிப்படுத்தியுள்ளார். இயேசுவே ஆண்டவர் என்பதை அறிக்கையிடுவதின்  வழியாக அவரது தெய்வீக தன்மையை விசுவசிக்கிறோம்.[455]  

தூய ஆவியால் கருவுற்று இயேசு கன்னி மரியாளிடமிருந்து பிறந்தார்

கடவுளின் மகன் மனிதரானார்.

082      எதற்காக் கடவுள் இயேசுவின் வடிவில் மனிதரானார்?

 i.    கடவுள் நம்மை அதிகம் அன்பு செய்ததால், நமக்காகவும், நமது மீட்புக்காகவும் தன் ஒரே மகனை உலகத்திற்கு அனுப்பினார்

ii.    நம்மை பாவத்திலிருந்து மீட்கவும், தந்தையாம் கடவுளோடு நம்மை ஒப்புறவாக்கவும் கிறிஸ்து பாவம் தவிர மற்றனைத்திலும் (உலக வாழ்க்கை, துன்பம், சாவு) நம்மை போலவே மனிதனாய் வாழ சித்தமானார். [456-460]

வாத்தை மனுவானார், நம்மிடையே குடிகொண்டார் – காரணம் 1. இறைவன் நம் மேல் கொண்டுள்ள அன்பின் ஆழத்தை வெளிப்படுத்த; 2.  நம் பாவங்களுக்குக் கழுவாயாக; 3. அவர் வழியாக மனிதர் மீட்புப் பெற; 4.  இறைவனோடு ஒப்புறவாக்க; 5. நிலை வாழ்வு பெற; 6. நமது புனித வாழ்வுக்கு முன் உதாரணமாக [நான் உங்களை அன்பு செய்தது போல நீங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள்]; 7.இறைத் தண்மையை நம்மோடு பகிர்ந்துகொள்ள; 8. இறைவனின் மக்களாகும் பேற்றை நமக்கு பெற்றுத் தர; 9. மனிதரை புனிதராக்க புனிதராம் கடவுள் மனிதனானார். 

083      இயேசு கிறிஸ்து எவ்வாறு உண்மையான இறைவனாகவும், உண்மையான மனிதராகவும் உள்ளார்?

1. இயேசு கிறிஸ்து கன்னி மரியிடமிருந்து பிறந்தவர், உண்டாக்கப் பட்டவர் அல்ல’ -  எனவே இவர் உண்மையான மனிதராக உள்ளார்.  2.  பாவம் தவிர மற்றனைத்திலும் நம்மைப் போல்  வாழ்ந்தார் என்ற கருத்து “அவர் பிறக்கும் போது இறைத்தன்மையை முழுவதுமாக விட்டுவிட்டு பிறக்கவில்லை என்பதையும் தெளிவு படுத்துகிறது.  3.  மேலும் மனிதராக வாழ்ந்த காலத்தில் இயற்கை மேலும், அலகை மேலும், சாவின் மேலும் வல்லமை (அதாவது இறைத்தன்மை) கொண்டிருந்தார்.    4. ‘வார்த்தை மனுவுருவானார் (மாமிசமானார்)’ என்ற மறைபொருளின் படி (Word became flesh in assuming a true humanity)  இயேசுவுக்கு வரையறுக்கப்பட்ட மனித உடலமைப்பும் (Christ's body was finite) அடையாலம் கண்டுகொள்ளக்கூடிய முகச் சாயலும் (the human face of Jesus can be portrayed ) அவருகிருந்தது. 5.  மாற்கு 2:8 உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?” என்றார். இயேசு மனித அறிவாற்றலோடு இருந்தாலும் மற்றவர் மனதில் மறைவாய் உள்ளவற்றை ஊடுருவி காணும் தெய்வீக ஆற்றலையும் பெற்றிருந்தார்.  எனவேதான் அவர் உண்மையான இறைவனாகவும், உண்மையான மனிதராகவும் இந்த உலகில் வாழ்ந்தார் என்பதை நாம் விசுவாச சத்தியமாக ஏற்று விசுவசிக்கிறோம். [464-467, 469]

ஆரம்பகாலத்தில் திருச்சபை பலவிதமான தப்பறை  கொள்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது

q  உலகில் இருந்தபோது மனிதரைப்போல் தோற்றம் அளித்தார் - அது ஒரு மாயை(human form was an illusion = Docetism).

q  இயேசுவின் இறைத் தன்மையும் மனிதத் தன்மையும் தனித்தனியானவை.  ஒரே நேரத்தில் அவர் இறைவனாயும் மனிதனாயும் இருக்கவில்லை. (Nestorianism)

q  இறைத்தன்மை முழுமையாக மனிதத் தன்மையை மேற்கொண்டுவிட்டது, இயேசு மனிதனாய்பிறந்தாலும் இறைத் தன்மையில்தான் வாழ்ந்தார் (Monophysitism)

இந்த மூன்று தப்பறை கொள்கைகளும் சொல்வது இயேசு பூமியில் இறைத்தன்மையில் மட்டுமே வாழ்ந்தார்.  அதாவது மனித பண்புகளான ஆசைகள், பசி, துன்பங்கள், உடல் இச்சைகள் போன்றவை அவரிடம் இல்லை.  உதாரணமாக அவரை சாட்டையால் அடித்தபோதோ, முள்முடி சூட்டிய போதோ, சிலுவையில் ஆணியால் அடித்தபோதோ அவருக்கு வலி இருந்திருக்காது.  கிபி451ஆம் ஆண்டு கால்செதோன் பொது சங்கம் இது போன்ற அனைத்து தப்பறைக் கொள்கைகளையும் நிராகரித்தது.  இயேசு கிறிஸ்து இந்த உலகில் வாழ்ந்த போது உண்மையான மனிதராகவும் அதே நேரத்தில் உண்மையான கடவுளாகவும் இருந்தார் என்பதை உறுதியாகப் பிரகடனப் படுத்தியது.

084      கிபி 451 ஆம் ஆண்டில் நடைபெற்ற கால்செதோன் பொதுசங்கம் இது பற்றி என்ன போதிக்கிறது?

   i.    இறைதந்தையின் ஒரே மகனும், நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து இந்த உலகில் வாழ்ந்த போது தமது மனித தன்மையில் நிறைவானவர். 

  ii.    அவர் உண்மையான (முழுமையான) கடவுளும், உண்மையான (முழுமையான) மனிதரும் ஆவார். 

 iii.    தமது இறைத்தன்மையில் தந்தையோடு ஒரே பொருளானவர்;  தனது மனிதத் தன்மையில் நம்மோடு ஒரே பொருளானவர்.

 iv.    இறைத்தன்மையில் காலங்களுக்கு முன்பே அவர் தந்தையிடமிருந்து பிறந்தவர்;  மனித தன்மையை பொருத்தவரை இந்த இறுதி நாட்களில் நமக்காகவும், நமது மீட்புக்காகவும் அன்னை மரியாளிடமிருந்து பிறந்தவர். [468]

085      இயேசுவை ஏன் ஒரு மறைபொருளாகவே காண்கிறோம்?

இயேசு மூவொரு கடவுளுக்குள் ஓர் இறை அங்கமாக உள்ளார். எனவே, கண்களுக்குப் புலப்படாத அவரது இறைத்தன்மையை தவிர்த்து விட்டுப் பார்த்தால் அவரது வாழ்வையும் அவர் செய்த செயல்களையும்  நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அவை அனைத்தையுமே நாம் மறை பொருள்களாக நமது விசுவாசத்தினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்,  ஏற்றுக்கொள்ள முடியும்.  அவர் கடவுளின் மகன்.  அவரது மனித பிறப்பு, பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பு என்பன மறை உண்மைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். [525-530, 536]

086     இயேசு நம்மைப் போல் உடல், அறிவு மற்றும் ஆன்மாவைக் கொண்டிருந்தாரா?

லூக்2:52 இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார். ஆம் அவர் தன் கைகளால் உழைத்தார்; தன் புத்தியால் சிந்தித்தார்; தாம் விரும்பிய செயல்களைச் செய்தார்;  மனித இதயத்தோடு பிறரை அன்பு செய்தார். [470-476]

மனித கூறுகளில்/பண்புகளில் (அதாவது உடல் அறிவாற்றல் மற்றும் ஆன்மா) முழுமையாக வாழ்ந்தார்.  அத்துடன் அவர் தந்தையுடனும் தூய ஆவியாருடனும் ஒன்றித்திருப்பதை அறிந்திருந்ததுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் வழிநடத்தலின் படி வாழ்ந்தார்.

தூய ஆவியால் கருவுற்று இயேசு கன்னி மரியாளிடமிருந்து பிறந்தார்

கடவுளின் மகன் மனிதரானார்.

456 to 478 குறிப்புகளின் சுருக்கம்

Ø  வர்த்தை மனுவுருவானது ஏன்?

Ø  கடவுள் மனிதனாதல்

Ø  உண்மையான கடவுளும் உண்மையான மனிதனும்

Ø  கடவுளின் மகன் எவ்வாறு மனிதனாக முடியும்?

v   குறித்த காலம் நிறைவுற்றபோது நித்தியதியத்திற்கும் வார்த்தையாயும், தந்தையோடு ஒரே சாயலாயும், ஒரே பொருளுமாயும், இருக்கும் மகன் தனது இறைத்தன்மையில் சிறிதும் குறைவு படாது,  மனித உடலெடுத்தார். தந்தை மற்றும் தூய ஆவியாரின் ஞானத்தையும், விருப்பத்தையும் அதேசமயம் மனித அறிவையும்  விருப்பத்தையும் நிறைவாயும், இசைவாய் பொருந்தியும் தன்னுள் கொண்டுள்ளார். இதுவே கடவுள் மனுவுரு எடுத்ததின் மறைபொருள்.  அவர் ஒரே சமயத்தில் உண்மையான மனிதராயும் உண்மையான கடவுளாயும்; [இவ்விரு தன்மைகளுக்குள் எவ்வித முறன்பாடுகளும் இன்றி;] இருப்பதால்தான் கடவுளுக்கும் மனிதருக்கும் இணைப்பாளராக இருக்கிறார். [479-483]

தூய ஆவியாரின் வல்லமையால் கருவுற்று கன்னிமரியாளிடமிருந்து பிறந்தவர்.

087      மரியாளை ஏன் கன்னி என்று விசுவசிக்கிறோம்?

          கடவுள் இயேசுவை உண்மையான (முழுமையான) மனிதராக உலகில் பிறக்கவைக்க சித்தமானார்.  எனவே மனித தாயார் வழியாகவே இயேசுவை பிறக்கவைக்க முடிவு செய்தார்.  அதே சமயம் இயேசுவுக்கு தான் மட்டுமே தந்தையாக இருக்கவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார். காரணம் மனிதரின் மீட்புச் செயல் எந்த உலக சக்தியாலுமல்ல தன்னால் மட்டுமே நிகழ்ந்தது என்பதே. [484-504, 508-510]

  i.     அன்னையின் கன்னித் தன்மை காலாவதியான ஒரு புராண நிகழ்வு அல்ல.     மாறாக தந்தையின் மீட்புத் திட்டத்திற்கும், இயேசுவின் மனித அவதாரத்துக்கும் (Incarnation) மரியாளின் கன்னித்தன்மை அடிப்படை ஆதாரம்.

 ii.     லூக்1:34-35 அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார்.

iii.     வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.

iv.     இயேசு உலக புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்பது தந்தையால் நியமனம் செய்யப்பட்டது.

 v.     இயேசுவின் பிறப்பால் மரியாவின் கன்னிமை குறைவுபடவில்லை மாறாக புனிதமடைந்தது. திருச்சபையின் கோட்பாடுகளின் படி மரியாளின் கன்னித்தன்மை என்பது உண்மையானது;  கத்தோலிக்க வேத சத்தியமானது.

088     மரியாள் யேசுவைத் தவிர இன்னும் சில குழந்தைகளைப் பெற்றெடுத்தாரா?

        இல்லை. இயேசு மட்டுமே மரியாள் பெற்றெடுத்த ஒரே மகன்.  [500, 510]

திருச்சபையின் தொடக்கக் காலத்திலிருந்தே மரியாள் நித்தியத்திற்கும் கன்னி என்ற கோட்பாட்டில் உறுதியாக இருந்தார்கள். மாற் 3:31  “அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்”. “இயேசுவின் சகோதரர்கள்” என்று விவிலியத்தில் சில இடங்களில் காண்கிறோமே, அதன் பொருள் என்ன?  இயேசு பேசிய ஆரமேயிக் என்ற மொழியில் உடன் பிறந்தவர்களுக்கும் நெறுங்கிய உறவினர்களுக்கும் சகோதரன், சகோதரி என்ற வார்தைகளே உள்ளன.   விவிலியத்தில் வரும் சகோதரன், சகோதரி என்ற வார்தைகள் யேசுவின் உறவினர்களையே குறிக்கிறது.

089      மரியாளை இறைவனின் தாய் என்று அழைப்பது தவறா?

        இல்லை.  எப்படி?மரியாள் சாதாரண ஆண் மகவை பெற்றெடுத்து, பிறந்தபின் அந்த குழந்தை இறை மகனாக மாறவில்லை.  மத்1:20ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்;  லூக்1:35 வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். 

விவிலியத்தில் மிக உறுதியாக உள்ள செய்தி “மரியாளின் உதிரத்தில் கருத்தரிக்கும் போதே இயேசு இறைமகனாக இருந்தார்.  மரியாள் பெற்றெடுத்ததும் இறைமகனையே.  எனவே மரியாளை இறைவனின் தாய் என்றழைப்பது முற்றிலும் முறையே. . [495, 509]

090     மரியாள் அமல உற்பவி என்பதன் பொருள் என்ன?

மரியாள் அனைத்து பெண்களையும் விட அருள் நிறைந்தவள்; பேறு பெற்றவள் என்பது இறை வார்த்தை மட்டுமல்ல (லுக்1:28வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார்.) திருச்சபையின் நம்பிக்கையும்கூட.  கடவுளின் ஏக மகனும், உலகத்தின் மீட்பருமான இயேசுவை தன் உதிரத்தில் சுமந்து பெற்றெடுக்க வேண்டியவர் மரியா.  எனவே கடவுள் தனது அருளாலும் வல்லமையாலும் மரியாள் கருத்தரித்த அந்த தருணத்திலேயே அனைத்து ஜென்ம பாவக் கறைகளிலிருந்தும் மரியாளைக் காத்தார் என்று கத்தோலிக்கத் திருச்சபை விசுவசிக்கிறது.  [487-492, 508]

 

091     மரியா இயேசுவை பெற்றெடுக்க இறைவன் தெரிந்துகொண்ட ஒரு கருவி மட்டும்தானா?

        லூக்1:30-33 வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” 38பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார்.

      இந்த இறை வார்த்தைகளில் இரண்டு நிகழ்வுகளைக் காணலாம்:

     i.    இறைவன் தன் மீட்பு திட்டத்திற்கு மரியாளின் உதவியை வேண்டுகிறார்.

    ii.    மரியா இறைவனின் வார்த்தைகளுக்கு முழுவதுமாகத் தன்னை அற்பணிக்கிறார்.

நாம் உபயோகிக்கும் கருவியிடம் “நான் உன்னை என் வேலைக்கு உபயோகித்துக்கொள்ளவா” என்று யாராவது ஒருவர் அதன் சம்மதத்தைக் கேட்பாரா?

ஆம்; இறைவன் மரியாளை தன் மீட்புத்திட்டத்தின் ஒரு சதாரண கருவியாக மட்டும் பயன்படுத்தவில்லை மாறாக தன் மீட்புத்திட்டத்தின் உடன் பங்காளியாகவே மரியாளை உயர்த்தினார்.  எனவேதான்  “மீட்பின் நுழைவாயில்” என திருச்சபை மரியாளைப் பெருமைப்படுத்துகிறது. [493-494, 508-511]

092     அன்னை மரியாளை ஏன் நமது தாயாகவும் போற்றுகிறோம்?

தான் மரிப்பதற்கு முன் கிறிஸ்துவே அன்னை மரியாளை நமக்குத் தாயாகக் கொடுத்துச் சென்றதால் அவரை நமது தாயாகவும் போற்றுகிறோம். [963-966, 973]

Ø யோவா19:26-27  “இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்பு சீடரையும் கண்டு தம் தாயிடம் “அம்மா இவரே உம் மகன் என்றார்.  பின்னர் தம் சீடரிடம் “இவரே உம் தாய்” என்றார்”   இயேசுவின் இந்தச் செயலால் அன்னை மரியாளை திருச்சபைக்குத் தாயாகவும், திருச்சபையை அன்னை மரியாளின் குழந்தையாகவும் ஏற்படுத்தினார் என்பது கத்தோலிக்கத் திருச்சபையின் விசுவாசம்.

Ø தந்தையாம் கடவுள் தனது மீட்புத்திட்டத்தில், மறைபொருளான கிறிஸ்துவை, பரிசுத்த ஆவியரின் துணையோடு இந்த உலகத்தில் பிறக்கச் செய்ததில் கன்னி மரியாள் பங்கெடுத்ததால் மறைபொருளான திருச்சபைக்கும் அவரே தாயகவும் விளங்குகிறார். 

Ø அன்னை மரியாள் இறைவனின் மீட்புச் செயலில், இயேசுவை கருத்தரித்ததிலிருந்து அவரது மரணம் மட்டும் அனைத்திற்கும் மேலாக அவரது பாடுகளின் போது மகனோடு இணைந்திருந்தார்.  தூய கன்னியான மரியாள் தனது மகனின் சிலுவைச் சாவு மட்டும் தனது விசுவாச பயணத்தில் உண்மையாகவும், நிலையாகவும் இயேசுவோடு ஒன்றித்திருந்தார்.  இயேசுவின் விண்ணேற்றத்திற்குப்பின் தூய ஆவியாரின் வரங்களை பெற திருத்தூதர்களோடும் மற்ற பெண்களோடும் செபத்தில் இணைந்திருந்தார்.  இவ்வாறாக திருச்சபையை நிறுவுவதில் அவர்களுக்கு உதவியாக இருந்தார்.

Ø இந்த பிரிக்க இயலா, ழுமையான ஒன்றிப்பினாலேயே (wholly united with her son) அவர் திருச்சபைக்கும் அதன் அங்கமாக இருக்கும் நமக்கும் தாயாக இருந்துவருகிறார். 

Ø   எனவேதான் அன்னை மரியாளை திருச்சபையின் மற்றும் நம் ஒவ்வொருவரின் தாயாகவும் போற்றுகிறோம்.  அன்னை நம் தாய் என்ற உரிமையில் அன்னையை நமக்காக கடவுளிடம் பரிந்து பேசக் கேட்கிறோம்.

093      அன்னை மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகம் எடுத்துக் கொள்ளப்பட்டதின் அர்த்தம் என்ன?

அன்னை மரியாள் பிறப்புநிலை பாவத்தின் எல்லா கறைகளிலிருந்தும் தூய்மைப் படுத்தப்பட்டதுபோலவே அன்னையின் இவ்வுலக வாழ்வு முடிந்ததும் விண்ணக மாட்சியில்  விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்பட உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்.  அன்னையின் விண்ணேற்பு தனது மகனின் உயிர்த்தெழுதலில் பங்குபெறுவதாகவும் கிறிஸ்தவர்கள் அனைவரும் இறுதிநாளில் உயிர்த்தெழுவார்கள் என்ற நம்பிக்கையின் முன் நிகழ்வாகவும் உள்ளது.[966]

கடவுளின் மகன் மனிதரானார்.

தூய ஆவியால் கருவுற்று இயேசு கன்னி மரியாளிடமிருந்து பிறந்தார்.

484 to 507 குறிப்புகளின் சுருக்கம்

v  ஏவாளின் வழி வந்தவர்களுள் கன்னி மரியாளை தனது மகனின் தாயாக இறைவன் தெரிவுசெய்தார். அவள் கருவுற்ற அந்த நொடியிலிருந்துஅனைத்து பாவக்கறைகளிலிருந்தும் மரியாளை பாதுகாத்தார்.  அவரை அருள்களால் நிறப்பினார் என்பதை வானதூதரின் “அருள்மிகப் பெற்றவளே,  ஆண்டவர் உம்முடனே” என்ற வர்த்தைகளிலில் இருந்து அறிந்துகொள்கிறோம்.  மரியாள் மிகச்சிறந்த மீட்பின் கனியாக, இருக்கிறார்.  மரியாள் தன் வாழ்நாள் முழுவதும் எந்தவொரு பாவமும் தன்னைக் கறைபடுத்தாது  தூய்மையாக வாழ்ந்தார்.[508]

v  என்றும் வாழும் இறைவனின் மகனான இயேசுவை மனிதராக பிறக்கச் செய்தமையால் மரியாள் உண்மையிலேயே இறைவனின் தாயாவார். ஏனெனில் அவர் பெற்றெடுத்ததும் கடவுளையே. தனது மகனான இயேசுவை  கருத்தரித்த போதும், அவரை தன் உதிரத்தில் சுமந்தபோதும்,  ஈன்றெடுத்த போதும் பாலூட்டி வளர்த்த போதும் , ஏன் தன் வாழ்வு முழுவதுமே கன்னியாகவே இருந்தார். தன் வாழ்நாள் முழுமையுமே இறைச்சித்தத்திற்கு கீழ்படிந்திருந்தார்.  தன் முழு உள்ளத்தோடும் முழு விருப்பத்தோடும் முழு நம்பிக்கையோடும் முழு தாழ்சியோடும் மனிதரின் மிட்புத் திட்டத்திற்கு நம் அனைவரின் சார்பாகவும் ஒத்துழைத்தார்.  தனது கீழ்படிதலால் புதிய ஏவாலாக பிறப்பெடுத்து வாழும் மாந்தர் அனைவருக்கும் தாயானார்.[509-511]

கிறிஸ்துவின் வாழ்வில் அடங்கியுள்ள மறைபொருள்கள்

குழந்தைப் பருவம் மற்றும் மறைந்த வாழ்வு

 

094    இயேசு தனது பகிரங்க வாழ்க்கையையும் மீட்புப்பணியையும் துவங்க ஏன் முப்பது ஆண்டுகள் காத்திருந்தார்?

இயேசு தனது பணியினைத் தொடங்குமுன் மனிதரின் எல்லா நிலைகளிலும் எல்லா தேவைகளிலும் வாழ்ந்து முழுமையான மனித வாழ்வின் பண்புகளில் தேர்ந்து தெளிய விரும்பினார்.  ஒரு குழந்தையாய் தன் பெற்றோரின் அன்பு, பாசம் அரவணைப்பு, தியாகம் அனைத்தையும் பெற்று (லூக்2:52 )“இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்”.  யூத சமூகத்தில் பிறந்ததால் அவர்கள் மதத்தின் ஆன்மீகத்திலும், சடங்குகளிலும் முழுமையாக பங்கெடுத்தார்.  தன் வாழ்வின் உணவிற்காகவும் மற்ற தேவைகளுக்காகவும் ஒருவன் உழைக்கவேண்டும் என்ற நியதியின் படி தன் தந்தையின் தச்சுத்தொழிலை நன்கு கற்று, உழைத்தார்’.  இறை மகன் உலகத்தில் ஒரு குடும்பத்தில் பிறந்து வளர சித்தமானதால் குடும்பங்களை இறை பிரசன்னம் இருக்கும் ஒரு அமைப்பாக ஆக்கினார்.  தான் வாழ்ந்த சமுதாயத்திற்கு தான் ஆற்றவேண்டிய கடமையையும்,  பணியினையும் ஆற்றினார்.  தன் பெற்றோர் தனக்கு நிபந்தனையற்ற அளவற்ற அன்பு செலுத்தியது போல தானும் பெற்றோரை நிபந்தனையற்ற அளவற்ற வகையில் அன்பு செய்தார்.  பிறர் தன்னை மதித்தது போலவே அவரும் பிறரை மதிக்கக் கற்றுக்கொண்டார்  பெற்றோரின் அன்பிலும், நற்பண்புகளிலும் இறைபண்புகளின் வெளிப்பாட்டை கண்டுணர்ந்தார்.இத்தகையய மனித மாண்புகளில் முழுமை பெற அந்த முப்பது ஆண்டுகளைப் பயன்படுத்திக்கொண்டார். [531-534]

095      இயேசு தனது முப்பது ஆண்டுகால மறைந்த வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய நற்பண்புகள் யாவை?

தனது வாழ் நாளான 33 ஆண்டுகளில் இயேசு 30 ஆண்டுகள் மறைந்த வாழ்வையே மேற்கொண்டார்.  இந்த முப்பது ஆண்டுகளில்

i.    தனது மாண்பை, வல்லமையை வெளிக்காட்டாத ஒரு யூத தொழிலாலியின் வாழ்வையே மேற்கொண்டார்.

ii.    ஆன்மீக (religious) வாழ்வை பொருத்தமட்டில் கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்த யூத சட்ட திட்டங்களைக் கடைப்பிடித்த யூத சமூக வாழ்வே வாழ்ந்துவந்தார் .

iii.    இந்த காலக்கட்டத்தில் அவர் வாழ்வைப்பற்றி நாம் விவிலியத்தின் வழி அறிவதெல்லாம் “லூக்2:51-52 51பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்.  52இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்’.

iv.    ‘அவர்களுக்குப் பணிந்து நடந்தார்’  என்பது

Ø இயேசுவின் பெற்றோர்களான அன்னை மரியாளுக்கும் இந்த உலகில் தந்தை யோசேபுக்கும் கீழ்படிந்ததின் மூலம் பத்து கட்டளையின் நான்காவது கட்டளையான “உன் தந்தையையும் தாயையும் மதித்து நட” என்ற கட்டளையை முழுமையாகக் கடைப்பிடித்தார்.

Ø தன் பரலோகத் தந்தைக்கும் கீழ்படிந்து வாழ்ந்ததை புனித வியாழன் அன்று “ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்” என்று தந்தையிடம் மன்றாடியதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.  அதற்கும் மேலாக ஆதாம் ஏவால் கடவுளின் வார்த்தைக்கு கீழ்படியாமையால் கட்டிக்கொண்ட பாவத்திற்கு தனது கீழ்படிதலால் பரிகாரம் செய்தார்.

v.    அதில் அன்னை மரியாள், தந்தை யோசேப்பு மற்றும் இயேசு வாழ்ந்த நாசரேத் இல்லம் இயேசுவுக்கும் நமக்கும் நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்த ஒரு ஆரம்ப பள்ளியாகவே திகழ்ந்தது.  அங்குதான் இயேசு

Ø அமைதி என்ற குடும்பத்தின் முதல் பாடத்தைக் கற்றுக்கொண்டார்.  அவரது மறைவான வாழ்வில் ஒரேஒரு முறைதான் (பண்ணிரண்டு வயதில்) ஆலயத்தில் போதகர்கள் நடுவில் உரையாடிக் கொண்டிருந்ததாக் காண்கிறோம்- லூக்2:46-47 அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார்.  இங்கு தன் விண்ணகத்தந்தையின் மகனாக உலகத்திற்கு வந்ததின் நோக்கத்தை நமக்கு உணர்த்துகிறார்.49நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?”

Ø சமூக உறவில் அன்பின் ஆற்றலை தெரிந்து கொண்டார்.

Ø ஆடம்பரமின்மையின் சுகம், எளிமையின் அழகு, ஒற்றுமையின் புனிதம் ஆகிய குடும்ப மாண்புகளில் வாழ்ந்தார்.

vi.    தன்னை ஒரு தச்சனின் மகன் என்று அழைத்ததின் வழியாக உழைப்பின் மேன்மையை உணர்ந்திருந்தார்.

vii.    நமது குடும்பங்களில் நாம் வாழவேண்டிய அனைத்துபண்புகளில் தானும் வாழ்ந்து நமக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார். [531-534,564]

       பகிரங்க வாழ்வின் மறைபொருள்

095      இயேசு தான் பாவமற்ற நிலையில் பிறந்து பாவமற்ற நிலையில் வாழ்ந்தாலும் ஏன் யோவானை தனக்கு திருமுழுக்கு அளிக்கும்படி கேட்டார்? [535-537, 565]

திருமுழுக்கு என்பது ஒருவரை தனது பாவங்களிலிருந்து கழுவும் சடங்காகும். திருமுழுக்க்கு யோவான் காலத்தில் பாவிகள், வரித் தண்டுவோர், விலைமாதர் போன்றோர் மனம் திருந்தி பாவ மன்னிப்புப் பெற யோவானிடம் திருமுழுக்கு பெற வந்தனர். இயேசு தான் பாவமற்ற நிலையில் பிறந்து பாவமற்ற நிலையில் வாழ்ந்ததால் அவருக்கு இத்தகைய திருமுழுக்கு அவசியமற்ற ஒன்று.

அப்படியென்றால் இயேசுவின் திருமுழுக்கு வேறு எதைக் குறிக்கிறது?

இயேசு தண்ணீரில் மூழ்குவது மனித குலத்தை பாவத்தினிறு  மீட்க, மனிதரின் பாவங்களுக்காக அவர் இறப்பதைக் குறிக்கின்றது.  அவர் தண்ணீரில் இருந்து எழுவது தந்தையின் சித்தத்தாலும், வல்லமையாலும் உயிர்தெழுதலைக்குறிக்கின்றது.  இவ்வாறு இயேசுவின் திருமுழுக்கு இரு பேருண்மைகளை உள்ளடக்கியுள்ளது

1.   இயேசு மனுக்குலத்தின் அனைத்து பாவங்களையும் தன் மேல் சுமந்துகொண்டார். 

2.   மனுக்குலத்தின் பாவங்களுக்காகப் பாடுகளையும் சிலுவை மரணத்தையும் ஏற்க உறுதியான முடிவெடுத்துள்ளதின் அடையாளம்.

096      நாம் பெறும் திருமுழுக்கின் மறைபொருள் யாது?

“துன்புறும் ஊழியராக”தந்தை தனக்கு கொடுத்த பணியை ஏற்றுக் கொண்டதின் அடையாளமாகவும் அந்த பணியின் துவக்கமாகவும் இயேசுவின் திருமுழுக்கு அமைந்துள்ளது.  லூக்கா 12:50  “ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்”.  இயேசு தனது பாடுகள் வழியாகவும் சிலுவை மரணத்தின் வழியாகவும்பெறவேண்டிய திருமுழுக்கை எதிர்நோக்கியிருந்தார்.  நம்மை நமது பாவங்களிலிருந்து மீட்க இந்த திருமுழுக்கின் வழியாக தந்தையின் விருப்பத்தை ஏற்கச் சித்தமானார். எனவேதான் தந்தை “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று பதிலளித்தார். மத்3: 17

ஆதாமின் பாவத்தால் மனித இனத்திற்கு மூடப்பட்ட விண்ணகம் இயேசுவின் இந்த திருமுழுக்கால் திறக்கப்பட்டது.   16இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்”. இயேசுவே மனித இனத்திற்கு தூய ஆவியாரின் ஊற்றாக உள்ளார் என்ற பேருண்மை வெளிப்படுத்தப் பட்டது.  உலகம் புதுபிறப்படைவதற்கு இயேசுவின் திருமுழுக்கே முன் அடையாளம்.

 

ஒவ்வொரு கிறிஸ்தவனும் தனது திருமுழுக்கின் போது கிறிஸ்துவுக்குள் ஐக்கியமாகிறான்.  இயேசுவின் திருமுழுக்கு அவரது இறப்பையும் உயிர்ப்பையும் சுட்டிக்காட்டுவதுபோல ஒவ்வொரு கிறிஸ்தவனும் தனது தாழ்ச்சியாலும் பாவ பரிகாரத்தாலும் கிறிஸ்துவோடு இணைந்து தண்ணீரில் மூழ்கி அவரோடு இணைந்து (உயிர்த்து) எழுகிறான்; கடவுளின் மகன் என்ற புதுப்பிறப்படைகிறான். திருமுழுக்கின் வழியாக அவரோடு (பாவத்திற்கு) மரிக்கிறோம்; விண்ணக மாட்சியில் நுழைய அவரோடு உயிர்த்தெழுகிறோம். [535-537]

097      இயேசு ஏன் அலகையினால் சோதிக்கப்பட்டார்?  அவரை சாத்தான் சோசதனைக்கு உட்படுத்தமுடியுமா?

இயேசு இவ்வுலகில் உண்மையான, முழுமையான மனிதப் பண்புகளில் வாழ்ந்தவர்.  எனவே பாவத்தில் விழக்கூடிய பவீனம் அவரிடமும் இருந்தது.  எனவே சாத்தான் அவரையும் சோதித்தலுக்கு உட்படுத்த முடியும்.  அவரிடமும் பாவத்தில் விழக்கூடிய பவீனம் இருந்ததாலும், அவரும் அலகையினால் சோதிக்கப்பட்டதாலும்

அ) நாம் பவத்தில் விழும்போது நமது பலவீனத்தை புரிந்துகொள்கிறார்.

ஆ) எனவே பாவிகளாகிய நம் மேல் இரக்கம் கொள்ள முடிகிறது

இ) எனவேதான் பாவிகளாகிய நம்மை மீட்கத் தம்மையே தந்தைக்கு பலியாக ஒப்புக்கொடுத்தார். [538-540, 566]

எபி4:15  ஏனெனில் நம் தலைமைக்குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல.  மாறாக எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்.  எனினும் பாவம் செய்யாதவர்.

098     இறை அரசை இயேசு யாருக்கெல்லாம் வாக்களிக்கின்றார்?

இயேசு எல்லா மனிதரும் இறை அரசை உரிமைச்சொத்தாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றே விரும்புகிறார் (1திமோ2:4).  இருப்பினும் மனிதர் அந்த பொக்கிஷத்தை உரிமையாக்கிக்கொள்ள தகுதியுள்ளவர்களாக இருப்பது அவசியமாகிறது.  இதைத்தான் இயேசு மலைப் பொழிவிலும் மற்றும் பல சந்தர்பங்களிலும் எடுத்துக் கூறுகிறார். இயேசு யாருக்கெல்லாம் வாக்களிக்கின்றார்

ஏழையரின் உள்ளத்தோர்; துயறுருவோர்; கனிவுடையோர்; நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டோர்; தூய்மையான உள்ளத்தோடு இறைவனைத் தேடுவோர்; அமைதி ஏற்படுத்துவோர்; நீதியின்பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர்; இயேசுவின் பொருட்டு இகழப்படுபவர்கள்; துன்புறுத்தப்படுபவர்கள்; இறைவனை அன்பு செய்வோர்; தன்னைப்போல் பிறரையும்; நேசிப்பவர்; பசித்திருப்போருக்கு உணவு அளிப்போர்;  தாகமாய் இருப்போரின் தாகத்தைத் தனித்தோர்; அன்னியருக்கு இறக்காம் காட்டுவோர்; ஆடையில்லாதோர்க்கு அடை அளிப்போர்; நோயுற்றோரை கவனித்துக்கொள்வோர்; தன் உடமைகளை இல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்பவர்கள்; இறைவனின் இறக்கத்தையும், அமைதியையும்,நீதியையும் தேடுவோர். [541-546, 567]

099     இயேசு உண்மையிலேயே புதுமைகள் செய்தாரா அல்லது அவை அனைத்தும் பக்தி கதைகளா?

இயேசு உண்மையிலே புதுமைகள் செய்தார்;  அவருடைய சீடர்களும் இயேசுவின் பெயரால் உன்மையிலேயே புதுமைகள் செய்தனர்.  ஆதாராம்:

 அ) இயேசு புதுமைகள் செய்தது பெரும்பாலும் ஆலயம், தெருக்கள், வீடுகள், போன்ற பொது இடங்களிலும், திருமணம் போன்ற பொது நிகழ்வுகளிலும், பெரும் திறளான மக்கள் மத்தியிலும்தான். மத்8:1-4; மத்14:13-21; 34-36; மாற்5:21-43; மாற்10:46-52

ஆ)  குணம் பெற்ற பலரின் பெயர்கள் நற்செய்தியில் குறிப்பிடபட்டுள்ளன –பார்வை பெற்ற பர்த்தலேமேயு;  பேதுருவின் மாமியார்.மத்8:14-15.

இ) சில புதுமைகள் யூதர்களுக்கு அதிர்ச்சியாகாவும், அவர்களின் கண்டனத்துக்கு உட்பட்டதுமாக இருந்தன. தொழுநோயாளிகள் குணமடைந்தது; கை சூம்பியவர் ஓய்வுநாளில் நலமடைதல் மத்12:9-14.

ஈ) அன்றிலிருந்து இன்றுவரை  இந்த வரலாற்றுப் பதிவுகள் யூத மதத்தினரால் பொய் என்று எதிற்கப்படவோ, மறுக்கப்படவோ, நிரூபிக்கப்படவோ இல்லை.[547-550]

100     இயேசு புதுமைகள் செய்ததின் பொருள் என்ன?

இயேசு தன்னுடய புகழுக்காகவும், பெருமைக்காகவும் நிகழ்த்திக்காட்டிய மாயாஜாலங்கள் அல்ல அவர் செய்த புதுமைகள்.  மாறாக

அ)              இயேசு மனுக்குலத்தை நேசிக்கிறார் என்பதை மீண்டும் உலகுக்குக் காட்ட..

ஆ)    தான் இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கத்தை மக்களுக்கு எடுத்துரைக்க. 

இ)              அவர்களுக்கு கடவுளால் வாக்களிக்கப்பட்ட மெசியா தான் என்பதை மெய்ப்பிக்க. 

ஈ)     எனவே தன் வழியாக இறையாட்சி உலகில் வந்துவிட்டது என்பதை உணர்த்த.

உ)    பேய்களை விரட்டியதின் மூலம் சாத்தான் மேல் (உலக தீய சக்திகள் மேல்) தனக்குள்ள அதிகாரத்தை காட்ட.  மத்12:28 “நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா?”

ஊ)    பசியிலிருந்தும்,அநீதிகளிலிருந்தும்,  வியாதிகளிலிருந்தும், சாவிலிருந்தும் மக்களை விடுவித்ததின் மூலம் இறை ஆட்சியின் விடியலை மக்கள் கண்டுணரவும்

இயேசு புதுமைகளைச் செய்தார். [547-550]

லூக்4:17-21 “இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: “ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.  ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர்

என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.”  பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார்.

மாற்7:37அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய் , “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொண்டார்கள்.

101     இயேசு ஏன் அப்போஸ்தலர்களை அழைத்தார்?

இயேசுவுக்கு அநேகர் சீடர்களாயிருந்தார்கள்.  அவர்களில் பன்னிருவரை மட்டும் அப்போஸ்தலர்களாக அல்லது திருத்தூதர்களாகத் தேர்ந்துகொண்டார்.   அவர்களை சிறப்பான விதத்தில் பயிற்றுவித்து அவர்களிடம் பல்வேறு பணிகளை ஒப்படைத்தார்.  அவர்களை பல்வேறு நகர்களுக்கு அனுப்பி இறை அரசைப் போதிக்கவும் வியாதியஸ்தர்களை குணப்படுத்தவும் பணித்தார்.  இந்த பன்னிருவரையும் மட்டுமே தனது இறுதி இரவு உணவிற்க்கு அழத்துச் சென்றார்.  அவர்களிடம் மட்டுமே “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்ற கட்டளையைக் கொடுத்தார்.

இந்த திருத்தூதர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சிகளாகவும், அவரைப்பற்றிய உண்மைகளுக்கு சான்று பகர்பவர்களாகவும் (guarantors) இருந்தார்கள்.  இயெசுவின் இறப்பிற்குப்பின் அவரின் பணியைத் தொடர்ந்து ஆற்றினார்கள். அவர்களுக்கு துணையாகவும் அவர்களுக்குப்பின்பும் இறைபணியை தொடர்ந்து ஆற்ற சீடர்களை தெரிவு செய்தார்கள் – இன்றைய திருச்சபையின் அமைப்பில் அவர்களை ஆயர்கள் என அழைக்கிறோம்.  இன்றுவரை இவர்கள் கிறிஸ்து அளித்த அப்பொஸ்தலிக்க அதிகாரத்தினால் திருச்சபையை ஆளவும், போதிக்கவும்,  திருப்பலி மற்றும் அருட்சாதனங்களை நிறைவேற்றவும் பணியாற்றி வருகிறார்கள். திருத்தூதர்கள் தொடங்கி  இந்த  ‘அப்போஸ்தலிக்க தொடர் பணி’  (Apostolic succession) அமைப்புதான் (திருத்தந்தை→கர்தினால்மார்கள்→ஆயர்கள்→குருக்கள்) திருச்சபையின் ஒற்றுமைக்கும், ஸ்திரத்தன்மைக்கும் அடித்தளம். இந்த திருச்சபையின் உள்கட்டமைப்பின் மணிமகுடமாக இயேசு திருத்தூதர் பேதுருவை தலைமைப் பீடத்தில் வைத்து சிறப்பு அதிகாரத்தை அவருக்குக் கொடுத்தார்.  திருத்தூதர் பேதுருவில் தொடங்கி இந்த சிறப்பு திருத்தூது பணி (Papal Ministry) அடுத்தடுத்து வந்த, வரும் திருத்தந்தையர்களால் நிறைவேற்றப்படுகிறது. 

லூக் 6:12-16 12அந்நாள்களில் அவர் வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். 13விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார். 14அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான் பிலிப்பு, பர்த்தலமேயு, 15மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன்) 16யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.

லூக்9:2 இறையாட்சிபற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.

மத்16:18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்

102     பேதுருவுக்கு அப்போஸ்தலிக்க முதன்மை இடம் அளித்ததின் பொருள் என்ன?

மத்16: 17அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். 18எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. 19விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.

இயேசு பேதுருவுக்கு திருத்தூதர்கள் மத்தியில் தலைமை நிலையைஒயும், தனிப்பட்ட இபணியை ஒப்படைத்தர். 

தன்னை கடவுளின் மகன் என்று பேதுருவுக்கு வெளிப்படுத்தியது தனது தந்தை என்பதை அறிந்துகொண்ட இயேசு அந்த சிற்ப்பான இடத்தையும் பணியையும் பேதுருவிடம் ஒப்படைத்தார்.  இயேசு பேதுருவுக்கு இரண்டு சிறப்பு நிலைகளை அளித்தார்.

 i.    பாதாளத்தின் எந்த தீய சக்திகளாலும் அசைக்கமுடியாத பாறையாகவும், அடித்தளமாகவும்  பேதுருவை கொண்டு அதன்மேல் தனது திருச்சபையை கிறிஸ்து நிறுவினார். திருச்சபை சந்திக்கவிருக்கும் அத்தனை துன்பங்கள், சோதனைகள், இடறல்கள், எதிப்புகள், வீழ்ச்சிகளிலும் தனது நம்பிக்கையில் உறுதியாய் இருப்பதோடு தனது சகோதரர்களையும் அதே நம்பிக்கையில் நிலைத்திருக்க உற்திப்படுத்துவதே பேதுருவின் தலையாய பணி.

ii.    இயேசு சிறப்புமிக்க ஓர் அதிகாரத்தையும்  பேதுருவிடம் ஒப்படைத்தார்.  இங்கு திறவுகோல் என்பது இறவனின் உறைவிடமாகிய திருச்சபையை நிர்வகிக்கும் அல்லது வழிநடத்தும் அதிகாரத்தைக் குறிக்கிறது.  இந்த ஆளுகைக்குறிய சம்மதத்தை தனது உயிர்ப்பிற்குப்பின் பேதுருவுக்கு அளித்தார். யோவா21:15-17. பேதுருவிடம் மூன்று முறை “என் ஆடுகளைப் பேணிவளர்” என்றுகூறி திருச்சபையை கட்டிக்காக்கும் பணியினை அவரிடம் ஒப்படைத்தார்.

 

 

விண்ணரசின் முன்சுவை

103      தாபோர் மலையில் இயேசுவின் உரு மாற்றத்தின் நோக்கம் என்ன?

தந்தையாம் கடவுள் தனது மைந்தனின் விண்ணக மாட்சியை அவர் உலகில் வாழும்போதே சீடர்கள் வழியாக உலகுக்கு வெளிப்படுத்த விரும்பினார்.  இயேசுவின் இறப்பையும் உயிர்ப்பையும் (இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பின் மறைபொருளை) அப்போஸ்தலர்கள் புரிந்துகொள்ளவும் அதனை ஏற்றுக் கொள்ளும் வலிமையையும், மனப்பக்குவத்தையும் அவர்களுக்குக் கொடுப்பதே இயேசுவின் உருமாற்றாத்தின் நோக்கம். [554-556, 568]

மத்17:1-3 இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.

மத்17: 5அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.

அந்த மாட்சியின் உன்னத்தத்தை உணர்ந்த பேதுரு (மத்17:4) இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?” என்றார்.

அவர்கள் மலையில் இருந்து இறங்கியபின் தாபோர் மலை நிகழ்வின் நோக்கத்தை விளக்குகிறார். (மத்17:22-23) “இயேசு அவர்களிடம், “மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார். அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்; ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்” என்றார்.  (மாற்8:31-31 32) “மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.  இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார்.

என் தந்தையின் இல்லத்தில் எனது மாட்சியைக் கண்டீர்கள்.  அனால் இந்த உலகில் எனது நிலை அதுவல்ல; மாறாக மனிதரை பாவங்களிலிருந்து மீட்கத் துன்பப்பட்டு சிலுவையில் அறையுண்டு மரிக்கவேண்டும்.  தன் கொடூர சிலுவை மரணத்தை தாங்கக் கூடிய சக்தியை தன் சீடர்களுக்குக் கொடுப்பதே தாபோர் மலையில் தோற்றம் மாறியதின் நோக்கம்.

104      இயேசு பாஸ்கா கொண்டாட எருசலேமை நோக்கி செல்லும் போது தன் சாவைப் பற்றி அறிந்திருந்தாரா? 

ஆம் அறிந்திருந்தார்.  இயேசு தன் சீடர்களுக்கு மூன்றுமுறை தனது சிலுவைப்பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பு பற்றி முன்னறிவித்திருந்தார்.  [557-560, 569-570]

  i.     லூக்26:2 2“பாஸ்கா விழா இரண்டு நாள்களில் வரவிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அப்பொழுது மானிட மகன்.சிலுவையில் அறையப்படுவதற்கெனக் காட்டிக்கொடுக்கப் படுவார்” என்றார்.

 ii.     லூக்9:51-52இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார்.

iii.     மத்16:21; மத்17:22-23; மத்20:17-19

105      இயேசுவின்  எருசலேமின் நுழைவு எதைக் குறிக்கிறது?

            i.     இறையரசின் வருகையைக் குறிக்கிறது

           ii.     அரசரும் மெசியாவுமான இயேசு தனது பாஸ்காவான மரித்தலையும் உயிப்பையும் நிறைவேற்றப் போகிறார் என்பதைக் குறிக்கிறது.

எனவேதான் திருச்சபை குருத்து ஞாயிறு அன்று புனித வார  வழிபாட்டு கொண்டாட்டங்களை அர்த்தத்தோடு துவங்கி வைக்கிறது.[560]

512 to 560 குறிப்புகளின் சுருக்கம்

கிறிஸ்துவின் வாழ்வில் அடங்கியுள்ள மறைபொருள்கள்

v    கிறிஸ்துவின் வாழ்வு முழுமையுமே ஒரு மறைபொருள்

v    இயேசுவின் குழந்தைப் பருவத்திலும் மறைந்த வாழ்விலும் உள்ள மறைபொருள்கள்

v    இயெசுவின் பொது வாழ்வில் அடங்கியுள்ள மறைபொருள்கள்

 

v  கிறிஸ்துவின் வாழ்வு முழுவதுமே ஒரு தொடர் போதனையாகவே அமைந்திருந்தது: அவரது அமைதி காத்தல், அருள் அடையாளங்கள் (புதுமைகள்), பரிவு, செபித்தல், மக்களிடம் காட்டிய அன்பு, சிறுவர்களிடமும் ஏழைகளிடமும் கொண்டிருந்த தனி பாசம் உலகத்தின் மீட்புக்காக சிலுவைச் சாவை ஏற்கச் சித்தமானது மற்றும் அவரது உயிர்ப்பு அனைத்தும் அவர் வார்த்தையின் செயலாக்கமாகவும், திருவெளிப்பாட்டின் நிறைவாகவும் அமைந்துள்ளன.[561]

v  என் பிள்ளைகளே, உங்களில் கிறிஸ்து உருவாகும்வரை உங்களுக்காக மீண்டும் பேறுகால வேதனையுறுகிறேன். கலா 4:19[562]

v  கிறிஸ்து தங்களில் உருவாகும் வரை கிறிஸ்துவின் சீடர்கள் கிறிஸ்துவைப்போல் தங்களையே மாற்றிக்கொள்ள வேண்டும்.

v  இடையர் ஆனாலும் ஞானி ஆனாலும்  தனது தெய்வீகத்தையும் வல்லமையையும் தனக்குள் கொண்டிருந்த புதிதாய் பிறந்திருந்த வலுவற்ற அந்த குழந்தையை நெருங்க முடியாது.  மாறாக தங்களையே தாழ்த்தி முழங்கால் படியிட்டு வணங்குபவர்களுக்கே, பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த அந்த குழந்தையின் தெய்வீக தரிசனம் கிடைக்கும்.[563]

v  நாசரேத்தில் தனது மறைந்த வாழ்வான முப்பது ஆண்டுகளில் தாய் மரியாளுக்கும் தந்தை யோசேப்பிற்கும் பணிந்து வாழ்ந்தார்.  எளிமையான தச்சுத்தொழிலைச் தெய்தார்.  இத்தகைய வாழ்வால் இயேசு அன்றாட குடும்ப வாழ்விலும், செய்யும் தொழிலும் புனிதத்தை கடைப்பிடிக்க முடியும் என வாழ்ந்து காட்டினார்.[564]

v  இயெசுவின் பொது வாழ்வு அவர் யோவானிடம் திருமுழுக்குப்பெற்றதில் துவங்குகிறது.  அப்பொழுது துவங்கி மீட்பின் செயல்களுக்காய் அற்பணிக்கப்பட்ட “துன்புறும் ஊழியராகவே” இயேசுவாழ்ந்தார்.  அந்த அற்பன வாழ்வை தன் பாடுகளாகிய மற்றுமொரு திருமுழுக்கின் வழியாக நிறைவுசெய்தார். லூக்12:50.[565]

v   ‘பணிவுள்ள மெசியா’, தந்தையின் மீட்புத்திட்டதில் உறுதியுடன் இருந்து சாத்தானின் சோதனைகள் அனைத்தையும் தகத்தெறிந்து வெற்றியாளராய் வந்ததையே பாலைவனத்தில் இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்ட நிகழ்வு காட்டுகிறது.[566]

v  இறையரசு இந்த பூமியில் கிறிஸ்துவால் நிறுவப்பட்டது.  கிறிஸ்து தனது பிரசன்னத்தாலும் செயல்களாலும் இறையரசை மனிதர்முன் ஒளிரச் செய்தார். திருச்சபையே அதன் வித்தும் ஆரம்பமுமாகும்.  அதன் திறவுகோல் பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்டது.[567]

v  தனது பாடுகளுக்குமுன் திருத்தூதர்களை திடப்படுத்துவதே கிறிஸ்து  உருமாறியதின் நோக்கம்.  அந்த பாடுகளுக்காக கல்வாரிமலைக்கு ஏறிச்செல்வதின் முன் நிகழ்வாகவே சீடர்களை உயர்ந்த மலைமேல் அழைத்துச் சென்று உருமாறினார்.[568]

v  இந்த உருமாற்றத்தின் வழியாக கிறிஸ்து திருவருட்சாதனங்களில் தனது உடலில் ஒளிரும் மாட்சியின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். தனது உடலில் ஒளிரும் மாட்சியின் எதிர்நோக்கை திருவருட்சாதனங்களில் இருப்பதை இந்த உருமாற்றத்தின் வழியாக கிறிஸ்து வெளிப்படுத்துகிறார்.[569]

v  பாவிகளால் தமக்கு உண்டான எதிர்ப்பால் தனக்கு வரப்போகும் கொடூரமான சாவை இயேசு அறிந்திருந்தும் தாமாகவே முன்வந்து எருசலேம் நோக்கிச் செண்றார்.  (எபி 12:3).  இயேசு எருசலேமுக்குள் நுழைந்த நிகழ்வு இறைஅரசு இந்த உலகிற்கு வர இருப்பதை குறிக்கிறது. அரசரும் அருட்பொளிவு செய்யப்பட்டவருமானவரை குழைந்தைகளும் ஏழையரின் உள்ளத்தோரும் அழைத்துச் சென்ற நிகழ்வு இயேசுவின் இறப்பிலும் உயிர்த்தெழுதலிலும்   முழுமை பெறும் என்பதைக் குறிக்கிறது. [570] 

போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் அரையுண்டு மரித்து அடக்கப்பட்டார்

 

106     இயேசு தனது இறப்பிற்கும் உயிர்ப்புக்கும் ஏன் யூதர்களின் பாஸ்கா திருநாளைத் தெரிவு செய்தார்?

பாஸ்கா என்பது இஸ்ரயேல் மக்கள் எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டதை கொண்டாடும்  திருவிழா. பஸ்கா திருவிழாவின் போது இஸ்ரயேல் மக்கள் எகிப்தியரின் அடிமைத்தனத்தில் இருந்து மீட்கப்பட்டது போல் கிறிஸ்து மனித குலத்தை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் சாவின் பிடியிலிருந்தும் மீட்டார்.  இந்த மீட்புச் செயலுக்கு பாஸ்காத் திருவிழாவே அர்த்தமுள்ள நாட்கள் என்பதால் இயேசு  தனது இறப்பிற்கும் உயிர்ப்புக்கும் யூதர்களின் பாஸ்கா திருநாளைத் தெரிவு செய்தார்[571-573]

பாஸ்கா திருவிழாவின்போது இஸ்ரயேல் மக்கள் மாசுமறுவற்ற செம்மறியாட்டை பலி கொடுப்பார்கள்.  பாஸ்கா திருவிருந்தை தம் சீடருடன் உண்டபோது தன்னயே பாஸ்கா செம்மறியாக தன் சீடர்களுக்கு உண்ணக் கொடுத்தார்.  (1கொரி5:7) ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். எபி9:25  தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை.

மனிதரை கடவுளிடம் ஒப்புறவாக்குவதற்காக பாஸ்கா செம்மறியாகத் தன்னையே பலியாகக் கொடுத்தார்.   இயேசு எருசலேம் சென்றது எகிப்தியரின் அடிமைத்தனத்தைவிட பெரிய அடிமைத்தனத்திலிருந்து (பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து) மனுக்குலத்தை மீட்க.

தனது மரணத்தாலும் உயிர்ப்பாலும் என்ன நடக்கவிருக்கிறது என்பதை உருவகமாகக் காட்டவே யூதர்களின் பாஸ்கா திருநாளை தெரிவு செய்தார்

 

107      உலகத்திற்கு அமைதியையும் மீட்பையும் கொணர்ந்த இயேசுவுக்கு ஏன் மரண தண்டனை? அதுவும் கொடூரமான சிலுவைச் சாவு?

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞருக்கும் பரிசேயருக்கும் இயேசு ஒரு செய்தியை தெளிவுபடுத்த விரும்பினார்.  தான் செய்வதனைத்தும் கடவுள் அளித்த அதிகாரத்தால். தான் செய்வது ஒரு போலியான, முறண்பாடான ஏமாற்று வித்தையல்ல. இயேசுவின் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த யூத சட்டதிட்டங்கள் பாரம்பரியங்கள் சம்பிரதாயங்கள் அனைத்தையும் இயேசு வண்மையாகக் கண்டித்தார்.  கடவுள் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும் அப்படியிருக்க இவர் எப்படி உன் பாவங்கள் மன்னிக்கலாம்.   ஓய்வுநாள் சட்டதிட்டங்கள் மீற முடியாதவை.  இவர் எப்படி அவற்றை மீறலாம். இவைஅனைத்தும் யூத மதத்திற்கு எதிரான தப்பறை கொள்கைகள்.  எனவே இவன் ஒரு போலி இறைவாக்கினன்.  இத்தகைய குற்றங்களுக்கு யூத சட்டத்தின்படி மரண்தண்டனை. [574-576]

லூக் 5: 21,24; 13:14-16

571 to 591 குறிப்புகளின் சுருக்கம்

போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் அரையுண்டு மரித்து அடக்கப்பட்டார்

v  இயேசு திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ அழிக்கவில்லை மாறாக அவற்றை  முழுமையாக நிறைவேற்றினார்.  இவ்வாறு திருச்சட்டங்களின் உண்மையான அர்த்தத்தை விளக்கினார்; சீனாய் உடன்படிக்கையை மீறி மக்கள் செய்த குற்றங்களிலிருந்து இயேசுவின் சாவு மீட்பளித்தது. எபி 9:15[592]

v  யூதர்களின் பாஸ்கா திருவிழாவின் போது இயேசு எருசலேம் ஆலத்திற்கு சென்று அதை நேசித்தார் மற்றும் மகிமைப் படுத்தினார்.  “உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்”(யோவா2:17).  எருசலேம் ஆலயம் இயேசுவின் உடல் என்னும் மறைபொருளை முன்குறிக்கிறது.  அதேபோல் இயேசு அந்த ஆலயத்தின் அழிவைப்பற்றிக் கூறியது, தான் கொலைசெய்யப்படவிருப்பதையும் அதன் மூலம் மீட்பின் வரலாற்றில் ஒரு புது யுகத்தை உருவாக்க இருப்பதையும் முன்குறித்துச் சொல்லப்பட்டதாகும். இயேசு பாவங்களை மன்னித்த செயல் அவரை இரட்சகராகவும், கடவுளாகவும் உலகுக்குக் காட்டியது.  கடவுள் மனிதனானதை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் ‘தன்னையே கடவுளாக உயர்த்திக்கொள்ளும் ஒரு மனிதனாகவே’ இயேசுவைப் பார்த்ததால் அவரை  ‘கடவுளைப் பழிப்பவர்’ என்று தீர்ப்பிட்டனர் (யோவா10:33 இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்” என்றார்கள்.)[593-594]

          இயேசு சிலுவையில் அறையுண்டு மரித்தார்

108      யூதர்கள்தான் இயேசுவின் சிலுவைச் சாவுக்குக் காரணமான குற்றவாளிகளா?

தனி ஒரு மனிதரையோ, ஒரு இனத்தவரையோ (யூதர்கள்) இயேசுவின் சிலுவைச் சாவுக்குக் காரணமான குற்றவாளிகள் எனக் கூறமுடியாது.  உலகத்தில் உள்ள அனைத்து பாவிகளும்தான் இயேசுவின் சிலுவைச் சாவுக்கு காரணமானவர்கள் என்பது திருச்சபையின் நிலைப்பாடு.  பல யூத மற்றும் ரோமைஅமைப்புகளும், அதிகாரத்தில் இருந்தவர்களும்; எடுத்துக்காட்டாக கயபா, யூதாஸ், ஏரோது, போஞ்சு பிலாத்து போன்றவர்கள் இயேசுவுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு காரணமாக இருந்தாலும்கூட யாரெல்லாம் குற்றவாளிகள் என்பதை இறைவன் மட்டுமே அறிவார். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்களோ அல்லது யூத குலம் முழுவதுமேதான் காரணமென்றுகூறுவது நியாயமற்ற கூற்று. [597-598]

109     தன் ஒரே அன்பு மகன் சிலுவையில் அறையுண்டு இறக்க வேண்டும் என்பது தந்தையின் சித்தமா?

இயெசுவின் கொடூரமான சாவு சந்தர்ப்ப சூழ்நிலையால் நிகழ்ந்த ஒன்று அல்ல. மாறாக தந்தையால் முன்குறித்த திட்டத்தின் படியும் தந்தையின் சித்தத்தின் படியுமே நிகழ்ந்தது.   திப2:23 கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்துக் கொன்றீர்கள்.  நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார் (2கொரி5:21).  தந்தை எந்த அளவிற்கு கொடூரமான சாவை தம் மகனுக்குக் கொடுத்தாரோ அந்த அளவு கிறிஸ்துவிற்கு தந்தைமேல் கொண்ட அன்பும், கீழ்படிதலும் இருந்தது (யோவா12:27மேலும் இயேசு, “இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ‘தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்’ என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன்.) தந்தையும் மகனும் மனிதரிடம் கொண்டிருந்த அன்பு சிலுவைச் சாவால் என்பிக்கப்பட்டுள்ளது.   [599-609, 620]

ஆம்;  தந்தையின் சித்தத்தின் படியும், அவர் வகுத்த மீட்பின் திட்டத்தின் படியுமே அனைத்தும் நிறைவேறின.  ஆனால் எதற்காக?

           யோவான் 3:16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

1 யோவான் 4:9 நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.

இந்த இறைத் திட்டத்தில் பல உண்மைகள் கடவுளால் நமக்கு வெளிப்படுத்தப் படுகிறன.

  i.     கடவுள் மனிதர்களாகிய நம் மேல் வைத்திருந்த அன்பின் அளவு.  நம்மைச் சாவிலிருந்து மீட்க இத்தகைய ஒரு கொடூரமான மீட்புத் திட்டதை கடவுள் நடக்கப் பண்ணினார்

 ii.     தந்தையும் மகனும் இம்மியும் இணை பிரியாது ஒத்துழைத்தது கடவுள் நம்மேல் கொண்டிருந்த அன்பின் தன்மையைக் காட்டுகிறது..

iii.     கடவுள் மனிதர்மேல் வைத்திருந்த அளவுகடந்த அன்பால் தனக்கும் மனிதருக்கும் இடையே ஒரு பரிமாற்றத்தை நிகழ்த்த சித்தமானார்.

அ)அவரோடு நித்தியத்திற்கும் விண்ணகத்தில் மகிழ்ந்திருக்கும் பேற்றை நமக்குக் கொடுக்க சித்தமானார்.

ஆ)நம்மிடமிருந்த துன்பம், விரக்த்தி, கைவிடப்பட்ட நிலை, சாவு அனைத்தையும் அவர்மேல் சுமந்துகொண்டு நமக்காக  சிலுவையில் அறையப்பட்டு இறக்கச் சித்தமானார்.

iv.     நாம் வாழ்வு பெறும்பொருட்டு தம் ஒரே மகனை பலிகொடுக்கச் சித்தமானர்.

 

110     கடைசி இரவு உணவின் போது நிகழ்ந்தவை யாவை?

கடைசி இரவு உணவின் போது தனது அளவற்ற அன்பை மூன்று வழிகளில் வெளிப்படுத்தினார்

  i.     தன் சீடர்களின் பாதங்களைக் கழுவினார்: இயேசு நம்மில் ஒருவர் என்பதையும் நமக்கு பணிவிடை புரியவுமே இந்த்த உலகத்திற்கு வந்ததை உணர்த்தினார்.  நம்மையும் அவ்வாறே பணி செய்ய வேண்டினார்.

 ii.     நற்கருணையை ஏற்படுத்தினார்.  லூக்22:19-20 பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, “இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை.  அதாவது அ)உலக முடிவுபரியந்தம் உடலோடும், உயிரோடும் நம்மொடு வாழ சித்தமானார் ஆ)கடவுளுக்கும் நமக்கும் நித்தியத்துக்குமான  ஓர் உடன்படிக்கையை தனது இரத்தத்தால் ஏற்படுத்தினார்

iii.     குருத்துவத்தை நிறுவினார். லூக்கா 22:19 பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். 1 கொரிந்தியர் 11:24 கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார்.  நற்கருணையை ஏற்படுத்திய தனது செயலை உலகம் முடியும் மட்டும் செய்யப் பணித்தார்.  உலகம் முடியுமட்டும் குருக்கள் திருபலியில் இதை நிறைவேற்றி வருகின்றனர்.  [610-611]

111     தான் கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள் கெத்சமனித் தோட்டதில் இயேசு சாவின் பயத்தை உணர்ந்தாரா? தனது சாவை எண்ணிப் பயந்தாரா?

இயேசு உண்மையான மனித சுபாவத்தில் வாழ்ந்ததால் நம்மிடம் இருந்த எல்லா பலவீனங்களும் அவரிடம் இருந்தன.  எனவே தன் சிலுவைச் சாவை எண்ணிப் பயந்தார்.  அந்த இரவில் தன் தந்தையாலும் நண்பர்கள் மற்றும் சீடர்களாலும் கைவிடப்பட்ட நிலையில் அவர் அனுபவித்த பயத்தாலும், வேதனையாலும் இரத்த நாளங்கள் வெடித்து இரத்தம் பெரும் வியர்வைத்துளிகளாய் வெளிவந்தன. [612]

v   மாற்14:34-36 அவர், “எனது உள்ளம் சாவுவருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள்” என்று அவர்களிடம் கூறினார். சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார். “அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று கூறினார்.

v   லூக்22:44 அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.

v   மத்26:42மீண்டும் சென்று, “என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்” என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.

v   மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து இறைவசனங்களும் அவர் தன் சாவை ஏண்ணி எந்த அளவு பயந்தார் எனவும் எத்துனை ஒரு பெரிய மனப்போராட்டத்திற்குப் பின்தான் தந்தையின் சித்தத்திற்கு பணிந்தார் என்பதையும் நாம் காண்கிறோம்.

112     இயேசு நம்மை மீட்பதற்காக ஏன், மற்றெந்த வழிகளையும் விட, சிலுவைச் சாவை தேர்ந்தெடுத்தார்? 

 i.    இயேசுவின் காலத்தில் சிலுவையில் அறைந்து கொல்வது என்பது மற்றெல்லா தண்டனைகளைக் காட்டிலும் அவமானத்துக்குரியதாகவும், மிகக் கொடூரமானதாகவும் கருதப்பட்டது.  (உதாரணமாக ரோமைக் குடிமக்களை, அவர்கள் எத்தனை பெரிய தவறு செய்திருந்தாலும், அவர்களை சிலுவை மரணத்துக்கு உட்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தது – அத்தனை அவமானச் சாவாகச் சிலுவைச்சாவு கருதப்பட்டது)

ii.    இயேசுவை கொலை செய்த இடமும் (சிலுவை), விதமும், மிகவும் அவமானத்துக்குறியதாக மட்டுமல்ல, மிகவும் கொடூரமானதாகவும் இருந்தன. எசா53:2-10.

iii.    மனிதர் அனைவரின் பாவங்களையும் போக்கி அனைவரையும் தந்தையுடன் ஒப்புரவாக்கவும், விண்ணரசை அவர்கள் உரிமையாக்கிக்கொள்ளவும், இதுவே உச்சக்கட்ட பரிகாரப்பலியாக இயேசு, நமது மீட்பர், கருதினார். [613-617, 622-623]

iv.     பிலி2:5-8 கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

 v.     தான் மனிதர்மேல் வைத்திருந்த அன்பை முழுமையாக வெளிப்படுத்த விரும்பிய தந்தை தன் ஒரே மகன் இயேசுவை சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு உயிர் துறக்க ஒப்படைத்தார்.

vi.     ” என் கஷ்டத்தையும், வேதனையையும் பற்றிக் கடவுளுக்கு என்ன தெரியும்” என எந்த மனிதரும் கூற முடியாத அளவுக்கு துன்பத்தை இயேசுவின் மேல் வைத்தார்.

113 “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்  என்று இயேசு கூறுவதன் பொருள் என்ன? கிறிஸ்தவர்கள் துன்பப்பட வேண்டும் என கடவுள் விரும்புகிறாரா?

கிறிஸ்தவர்கள் துன்பத்தை நாடிச்செல்லவேண்டும் என்பது இதன் பொருள் அல்ல;  கடவுள் மனிதர்கள் துன்பப்பட வேண்டும் என்று விரும்புவதும் இல்லை.  ஆனால் எதிர்பாராமல் அல்லது எதிர்பாராத சூழலில் நாம் துன்புற நேர்ந்தால் அந்த துன்பத்தை இயேசுவின் துன்பங்களோடு இணைத்து கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பது இறைவனுக்கு ஏற்புடைய செயலாகும் என்பதை 1பேது2:21ல் அறிந்துகொள்கிறோம் – “கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்” . [618]

v நமக்கும் பிறருக்கும் ஏற்படும் துன்பங்களை நீக்குவது ஒரு கிறிஸ்தவனின் கடமை.  இருப்பினும் துன்பங்கள் உலகில் இருக்கத்தான் செய்யும்.

v நமது துன்பங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வதும், தாங்கிக்கொள்வதும்; பிறர் துன்பங்களில் அவர்களுக்கு தோள் கொடுப்பதும் நல்ல கிறிஸ்தவப் பண்பு.

v அப்படிச் செய்யும் போது நமது துன்பங்கள் இயேசுவின் அளவுகடந்த அன்பில் ஐக்கியமாகி அதுவே ஒரு ஆன்மீக சக்தியாகி இந்த உலகத்தில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும்.

 

595 to 618 குறிப்புகளின் சுருக்கம்

இயேசு சிலுவையில் அறையுண்டு மரித்தார்

v  மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நமது பாவ்ங்களுக்காக மரித்தார். கடவுள் நம் மேல் கொண்ட அன்பின் நிமித்தம் நம்மை மீட்க சித்தமானார்.  அந்த அன்பு எத்தகையது என்றால் தன் ஒரே மகனை நமது பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார்.  கடவுள் கிறிஸ்துவின் வழியாய் மனிதரை தம்முடன் ஒப்புரவாக்க சித்தமானார். (2 கொரி 5:19).[619-620]

v  நம்மை நமது பாவங்களிலிருந்து மீட்க தன்னையே கையளித்தார்.  தான் பாடுபட போவதற்கு முந்தின நாள்  இறுதி  இராவுணவின் போது “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல்’ என்று கூறியது அந்த அப்பம் அவரது மீட்பின் அடையாளம் மட்டுமல்ல அதற்கும் மேலாக உடலின் உண்மைப் பிரசன்னத்தை குறிப்பதாகவும் அமைந்தது. [621]

v  உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல; மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தமாகும் (1பேது1:18-19). கடவுள் “உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார் (யோவா13:1).  எனவேதான் கிறிஸ்து “பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (மத் 20:28). [622]

v  தன் தந்தையின்பால் கொண்டிருந்த அளவற்ற அன்பாலும் கீழ்படிதலாலும் கிறிஸ்து “சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து;  துன்புறும் ஊழியரான அவர்;  தன் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்து தனது பணியை நிறைவேற்றினார் (எசா53:10). இயெசுவின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆனார்கள் (உரோ5:19); அவர் பலரை நேர்மையாளராக்கினார்(எசா53:11).623]

கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டார்

114       இயேசு இறந்தது உண்மையா?  அல்லது இறந்தது போல் ஒரு மாயையை உண்டாக்கி உயித்ததுபோல் எழுந்து வந்தாரா?

v  இயேசு இறந்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் முற்றிலும் உண்மை என்பது பல ஆதாரங்கள் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளன;  அவற்றிர்க்கு நம்பத்தகுந்தவர்களால் சான்றும் பகரப்பட்டுள்ளன. [627]

v  “யோவா19:33-34 33பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை. 34ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார் உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.” எனவே இயேசு சிலுவையில் மரித்தார் என்பது யூதர்களாலேயே பிரகடனப்படுத்தப்பட்ட நிகழ்வு.

115      இயேசு அடக்கம் செய்யப்பட்டார் என்பதன் அர்த்தம் என்ன?

இறைவன் தன் மீட்புத்திட்டத்தில்

v தம் மகன் மனிதரின் பாவங்களுக்காய் மரிக்க வேண்டும்; அதன்வழியாக அவர்

v சாவின் தன்மையை சுவைக்கவேண்டும்

v சாவினால் ஏற்படும் நிலையை பட்டறிய வேண்டும்

v சிலுவையில் மரித்ததிலிருந்து இறந்தோரிடமிருந்து உயிர்தெழும் வரை தனது ஆன்மாவும், உடலும் பிரிந்திருக்கும் நிலை எப்படிப்பட்டது என்பதை அறியவேண்டும் என முன்குறித்து வைத்தார்

v மரித்த கிறிஸ்து கல்லறையில் எந்த நிலையில் இருந்தார், எவ்வாறு பாதாளத்திற்கு இறங்கிச் சென்றார் என்பதும் மறைபொருளாகவே உள்ளது.

v கடவுள் தனது படைபுச் செயலை முடித்து ஏழாம் நாள் ஓய்ந்திருந்ததையும், கிறிஸ்து தனது மீட்புச் செயலை முடித்து இறந்தபின் கல்லறையில் ஓய்ந்திருந்ததையும் புனித சனிக்கிழமை மறைபொருளாக நமக்கு உணர்த்துகிறது.[625-626]

கிறிஸ்துவோடு அடக்கம் செய்யப்பட்டோம்

116      கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வு நமக்கு விடுக்கும் செய்தி என்ன?

4இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். 5அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். உரோ6:4-5 [628]

கொலோ2:12நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள்.

624 to 628 குறிப்புகளின் சுருக்கம்

இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டார்

v  அனைவருடைய நலனுக்காகவும் இயேசு கிறிஸ்து சாவுக்கு உட்பட்டார்(எபி 2:9). எனவே மனிதராகப் பிறந்த கடவுளின் மகனான இயேசு கிறிஸ்துவே உண்மையில் மரித்து அடக்கம் செய்யப்பட்டார். [629]

v  கிறிஸ்துவின் உடலும் ஆவியும் சாவினால் பிரிக்கப்பட்டிருந்தாலும் அவை அவரது தெய்வீகத் தன்மையால் ஆட்கொள்ளப்பட்ட நிலையிலேயே இருந்தன.  எனவே இயேசு கிறிஸ்துவின் உடல் அழிவுக்குட்படவில்லை. (திப 13:37).[630]

மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயித்தெழுந்தார்

117  கிறிஸ்து உயிர்த்ததை எற்றுக்கொள்ளாத ஒருவன் கிறிஸ்தவனாக இருக்க முடியுமா?

நிச்சயமாக முடியாது.

 “1கொரி15:14  கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்.” எனவே கடவுளின் மீட்புத் திட்டமே இயேசு மரித்து உயிர்த்தலே.  இந்த அடிப்படை வேத சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாத எவரும் கிறிஸ்தவராக இருக்கவே முடியாது. [631, 638, 651]

 

118  கிறிஸ்து உயிர்த்ததை சீடர்கள் எவ்வாறு நம்பினார்கள்

முதலில் நம்பிக்கை இழந்த சீடர்கள் பின்பு அவர் உயிர்த்ததை நம்பினார்கள். ஆம் இயேசு உயிர்த்தபின் பல இடங்களில் பல நேரங்களில் அவர்களுக்குத் தோன்றி அவர்களோடு உரையாடினார்;  அவர் தங்களோடு உயிருடன் இருப்பதை உணர்ந்தார்கள்.  உயிர்த்த இயேசுவோடு அவர்கள் கொண்டிருந்த அந்த உறவுதான் அவர்களிடமிருந்த அவநம்பிக்கை, பயம், விரக்தி, என்ற கட்டுகளை அறுத்தெறிந்தது; அந்த உறவுதான் மகிழ்ச்சி நிறைந்த நம்பிக்கையை அவர்களில் நிரப்பியது. இயேசுவின் இறப்பையும் உயிர்ப்பையும் உறுதியாக நம்பினார்கள், அறிக்கையிட்டார்கள்.  [640-644, 656]

லூக்24:21 எம்மாவு சீடர்களில் ஒருவரான கிளயோப்பா “அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம்.”

இயேசுவின் கொடூரமான சாவு அவருடைய சீடர்களின் நம்பிக்கை எதிபார்ப்பு அனைத்தையும் சுக்குநூறாக தகர்த்தெறிந்துவிட்டது.  இயேசுவின் கொடூரமான சிலுவைச் சாவிற்குப் பின் அவரது சீடர்கள் அவரைவிட்டு ஓடிவிட்டனர்;  பூட்டிய கதவுகளுக்கு பின்னே அடைபட்டுப் போனார்கள்.  இயேசுவின் மேல் வைத்திருந்த அனைத்து நம்பிக்கையையும் இழந்து போனார்கள்.  அதே சீடர்கள்தாம் பின்பு இயேசு உயிர்த்ததை உறுதியாக நம்பினார்கள்.

லூக்24: 31அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள்.  36சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று அவர்களை வாழ்த்தினார்.  50பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். 51அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். 52அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள்.

யோவா20: 27பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்” என்றார்.

28தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்றார்.

30வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார்.  31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

119    இயேசு உயிர்த்ததற்கு ஆதாரங்கள் உள்ளனவா?

இயேசு உயிர்த்ததற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. ஆனால் இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் மற்றும்  இயேசுவின் சீடர்கள் அளித்த மிக உறுதியான சாட்சியங்களும், இயேசுவின் வாழ்வில் இறுதிநாட்களில்  எருசலேமில் நடந்த நிகழ்வுகளும், வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள சான்றுகளும் இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்ததை மிக உறுதியாக எடுத்துரைக்கின்றன. [639-644, 647, 656-657]

v  1கொரி15: 3நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே; மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, 4அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். 5பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். 6பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்து விட்டனர். 7பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். 8எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

v  லூக்24: 2கல்லறை வாயிலிருந்து கல்புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். 3அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை. 4அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர். 5இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களை நோக்கி, “உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? என்றனர்.

v  யோவா20: 6அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார் 7இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. 8பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.

v  அன்றிலிருந்து இன்றுவரை பலரும் இயேசுவின் உயிர்த்தெழுந்த அனுபவத்தை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இயேசுவும் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

120    இயேசு உயிர்த்தபின், அவர் உலகில் வாழ்ந்தபோது மனிதரால் தொட்டு உணரக்கூடிய, உடலைப் பெற்றிருந்தாரா?

v  இயேசு தம் சீடர்களை தன் உடலை தொட்டு உணர அனுமதித்தார்

v  அவர்களோடு உணவருந்தினார்

v  தனது பாடுகளின் போது ஏற்பட்ட காயங்களைக் காட்டினார்

v  இருப்பினும் அது இந்த உலகைச் சார்ந்த உடல் அல்ல, மாறாகத் தன் தந்தையின் விண்ணக அரசைச் சார்ந்த உடலாக  அது இருந்தது.

v  இடம் மற்றும் காலத்தின் நியதிகளுக்கு உட்பட்ட மனித உடல் அல்ல அது. எனவேதான்  அவரால்

q மூடிய கதவுகள் வழியாக உள்ளே வரமுடிந்தது

q சீடர்களுக்கு பல இடங்களில் காட்சியளிக்க முடிந்தது

q பல சமயங்களில் சீடர்களால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. [645-646]

Ø யோவா20:14 இப்படிச் சொல்லிவிட்டு அவர் (மகதலா மரியா) திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கே நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை. (மத் 28:1 - 10; மாற் 16:1 - 8; லூக் 24:1 - 12)

Ø லூக்24:14அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள். 15இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். 16ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.

எனவே உயிர்ப்பு என்பது அவர் இவ்வுலக வாழ்வுக்கு மீண்டும் வருவதன்று. மாறாக வேறு ஒரு வாழ்வுக்குள் அதாவது விண்ணக வாழ்வுக்குள் நுழையும் வழியாகவே  இயேசுவின் உயிர்ப்பு இருந்தது.  அது மாட்சிமைக்குறிய உடல்; தன் தந்தையோடு அரசாட்சி செய்யும் உடல்.  உரோ6:9-10 9இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம். 10அவர் இறந்தார்; பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்; அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார்.

121 இயேசுவின் உயிர்ப்பு இந்த உலகத்தில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவந்தது?

சாவு என்பது நமது வாழ்வின் முடிவல்ல என்ற நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொண்டுவந்தது.  சாவு இயேசுவின் மீது மட்டுமல்ல அவரில் நம்பிக்கை வைத்துள்ள நம் அனைவரின் மீதும் கூட ஆட்சி செலுத்த முடியாது. . [655, 658]

v  உரோ6:11அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்; கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.. 14ஏனெனில் நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல; மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்.

638 to 655 குறிப்புகளின் சுருக்கம்

மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்

v  கிறிஸ்து உயிர்த்தார் என்பது நமது விசுவாசம். உயிர்த்த இயேசுவை நேரில் சந்தித்த திருத்தூதர்களின் வரலாற்று சான்றுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.  அதே வேளையில் கிறிஸ்துவின் மனிதத்தன்மை கடவுளின் மகிமைக்குள் நுழைந்தது என்பது வரலாற்றை கடந்த மறைபொருள். [656]   

v  கடவுளின் வல்லமையால் கிறிஸ்துவின் உடல் சாவின் பிடியிலிருந்தும் அழிவிலிருந்தும் விடுவிக்கப்பட்டது என்பதையே வெறுமையான கல்லறையும் அங்கு கிடந்த துணிகளும் குறிக்கின்றன.  அவை உயிர்த்த இயேசுவை எதிர்கொள்ளும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை திருத்தூதர்களுக்குக் கொடுத்தன.[657]

v  எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார் (கொலோ 1:18), என்பதே நாமும் உயிர்த்தெழுவோம் என்பதின் நம்பிக்கை.  இதில் நமது ஆன்மா இறந்த நொடியில் உயிர்த்த நிலயை அடைகிறது(உரோ 6:4).  ஆனால் நமது உடல் இறுதி நாளில்தான் உயிபெற்றெழும்.   (உரோ8:11).[658]

அவர் விண்ணேற்றம் அடைந்து தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்

122    இயேசுவின் விண்ணேற்றம் என்பதன் பொருள் என்ன? இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு விடுக்கும் செய்தி என்ன?

v  இறைத்தன்மை மறைக்கப்பட்டு, சாதாரண மனிதத் தோற்றத்தோடு நாற்பது நாட்களாக தம்மைத் திருத்தூதர்களுக்குக் காண்பித்த பிறகு கிறிஸ்து விண்ணேற்றம் அடைந்து தந்தையின் வலப்பக்கத்தில் அமர்ந்தார். தந்தையோடும் தூய ஆவியோடும் நித்தியத்திற்கும் வாழ்கிறார்.  இயேசுவின் விண்ணேற்றத்தோடு நம் கண்களால் மனிதத் தோற்றத்தில் இந்த உலகில் அவரைப் பார்ப்பது முடிவுக்கு வருகிறது. தனது விண்ணேற்றத்தால் இயேசு மனுக்குலம் முழுவதோடும்கடவுளின் மாட்சியில் நுழைகிறார்.  யோவா12:32 “நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்”.  இயேசுவின் விண்ணேற்றத்தால் தந்தையாம் கடவுள், மனித சாயலில் தன் மகன் வழியாக மனிதரோடு இன்னும் நெருக்கமாகிறார். [659-667]

 

அவர் விண்ணகம் ஏறிச் சென்று தந்தையின் வலப்பக்கம் அமர்ந்துள்ளார்

659 to 664 குறிப்புகளின் சுருக்கம்

v  இயேசு தனது மனித உடலோடு  விண்ணகத்திற்குள் நுழைந்தார் என்பதையும் அதேபோல் மீண்டும் வருவார் என்பதையும்  கிறிஸ்துவின் விண்ணேற்பு உறுதிப்படுத்துகிறது.  அவர் மீண்டும் வரும்வரை அவரது மனித உடல் மனிதர் கண்களுக்கு மறைவாய் உள்ளது.[665] 

v  இயேசு கிறிஸ்து நமக்கு முன் மகிமையோடு விண்ணகம் சென்றுள்ளார்.  கிறிஸ்து திருச்சபையின் தலை என்பதால் உடலின் உறுப்புக்கள்  ஆகிய நாமும் ஒரு நாள் விண்ணகம் சென்று அவரோடு நித்தியத்திற்கும் வாழ்வோம் என்ற நம்பிக்கயோடு வாழ்கிறோம்.[666]

v  இயேசு கிறிஸ்து ஒரேமுறை நம் அனைவருக்காகவும் தூயகத்தில் நுழைந்துள்ளார்.  தொடர்ந்து நமக்காக தந்தையிடம் பரிந்துபேசுபவராக உள்ளார்.  தூய ஆவியை என்றென்றைக்கும் நம் மேல் பொழிவதாகம் வக்களிக்கின்றார்.[667]

வாழ்வோரையும் இறந்தோரையும் நடுத்தீர்க்க மீண்டும் வருவார்

123     இயேசு உலகனைத்திற்கும் ஆண்டவர் என ஏன் கூறுகிறோம்?

உலகமும் அதில் உள்ள அனைத்தும் அவருக்காகவே படைக்கப்பட்டன.   மனுக்குலத்தை மீட்டவரும், அதை தீர்ப்பிட இருப்பவரும் அவரே.  அனைவரும் மண்டியிட்டு ஆராதிக்கப்பட வேண்டியவரும் அவரே. [668-674, 680]

யோவான் 1:3 அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.   கொலோ1:16 ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.

கொரிந்தியர் 8:6 ஆனால் நமக்குக் கடவுள் ஒருவரே; அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன; அவருக்காக நாம் இருக்கின்றோம். அவ்வாறே, நமக்கு ஆண்டவரும் ஒருவரே; அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன; அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம்.

லூக் 21:26-28 ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.” ((மத் 24:29 - 31; மாற் 13:24 - 27)

பிலிப்பியர் 2: 10-11 ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக “இயேசு கிறிஸ்து ஆண்டவர்” என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

 

124     உலக முடிவு எவ்வாறு இருக்கும்?

உலகம் முடியும் போது அனைவரும் காண இயேசு கிறிஸ்து மாட்சியோடு வானிலிருந்து இறங்கி வருவார்[675-677]

மத்24:3-14; மாற் 13:3 - 13; லூக் 21:7 – 19; திவெ 21:4

       i.          பலர் என் பெயரை வைத்துக் கொண்டு வந்து, ‘நானே மெசியா’ என்று சொல்லிப் பலரை நெறி தவறச் செய்வர்.

      ii.          போர் முழக்கங்களையும் போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கப் போகிறீர்கள்.

     iii.          நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பல இடங்களில் பஞ்சமும் நில நடுக்கங்களும் ஏற்படும்.

    iv.          பின்பு உங்களைத் துன்புறுத்திக் கொல்வதற்கென ஒப்புவிப்பர். என் பெயரின் பொருட்டு எல்லா மக்கள் இனத்தவரும் உங்களை வெறுப்பர். அப்பொழுது பலர் நம்பிக்கையை இழந்துவிடுவர்; ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பர்; ஒருவரையொருவர் வெறுப்பர்.

      v.          நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்.

    vi.          உலகமெங்கும் உள்ள எல்லா மக்களினத்தாரும் ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணரசைப்பற்றிய இந்நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்படும்.

   vii.          அதன் பின்பு முடிவு வரும்.

  viii.          இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்.

125     உலகின் முடிவில் வாழ்வோரையும் இறந்தோரையும் கிறிஸ்து எவ்விதம் தீர்ப்பிடுவார்?

i.    மத்25:31-46  31“வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். 32எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். 33ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். 34பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.  41பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். 46இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.

ii.    மத்தேயு 3:12; லூக்கா 3:17.  அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்”

iii.    மத்தேயு 13:30,40. அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ‘முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள். எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.

iv.    1 கொரிந்தியர் 3:13. ஆனால், அவரவருடைய வேலைப்பாடு தெரிந்துவிடும்; தீர்ப்பு நாள் அதைத் தெளிவுப்படுத்தும். அந்நாள் நெருப்பு மயமாய் வெளிப்படும். அந்நெருப்பு அவரவருடைய வேலை எத்தகையது என்பதைக் காட்டும்.

v.    2 கொரிந்தியர் 5:10 ஏனெனில் நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும். [678-679, 681-682]

668 to 679 குறிப்புகளின் சுருக்கம்

வாழ்வோரையும் இறந்தோரையும் நடுத்தீர்க்க மீண்டும் வருவார்

v  கிறிஸ்து இப்போது திருச்சபையின் வழியாக ஆட்சி செலுத்தி வருகிறார்.  இருப்பினும் உலகம் முழுவதும் அவரது ஆட்சியின் கீழ் வரவில்லை.  தீய சக்திகளின் பெரியதொரு இறுதித் தாக்குதலுக்குப் பின்பே கிறிஸ்துவின் அரசாட்சி முழுமையாக நிறுவப்படும்.[680]

v  உலகின் இறுதி நாள் வரை கோதுமையும் களைகளும் ஒன்றாய் வளர்வதுபோல் நல்லோரும் தீயோரும் ஒன்றாய் இருப்பர்.  இறுதித் தீர்ப்பின் நாளன்று அன்று தீயோரை அழித்து நல்லோர்க்கு நிலைவாழ்வு அளிக்க கிறிஸ்து மகிமையோடு வருவார்.[681]

v  உலகம் முடியும் நாளில் வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட கிறிஸ்து மாட்சியுடன் வருவார்.  அப்போது அனைவரின் உள்ளத்தில் மறைந்திருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவார்.  அவரவர் செயல்களுக்குத் தக்கவும் இறவனின் அருளை ஏற்றுக்கொண்டது அல்லது புறக்கணித்ததற்கு ஏற்பவும் தீர்ப்பு வழங்குவார்.[682]

அதிகாரம் - 3

தூய ஆவியாரை விசுவசிக்கிறேன்

126     “தூய ஆவியாரை நம்புகிறேன்” எனத் திருச்சபை அறிக்கையிடுவதின் பொருள் என்ன?

மூன்றாம் ஆளாகிய கடவுள் தூய ஆவியார் எனவும்; இவர் தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படுகிறவர் எனவும் விசுவசித்து, அறிக்கையிட்டு அவரை வழிபடுதலுமே “தூய ஆவியாரை நம்புகிறேன்” என்பதன் பொருள் ஆகும். [683- 686]

v தூய ஆவி நம் இதயங்களில் பொழியப்ப்டும் போது  ‘விண்ணகத் தந்தையின் பிள்ளைகள் நாம் என்ற’ பேற்றை பெற்றுள்ளோம் என்பதை அறிந்து கொள்கிறோம்.

v தூய ஆவியாரின் வல்லமையை நாம் பெறும் போது இந்த உலகத்தின் போக்கை நம்மால் மாற்ற இயலும்.

v இயேசு தான் இறப்பதற்கு முன் தன் சீடர்களுக்கு ஒரு உறுதி அளித்தார். யோவா14:  நான் உங்களை விட்டு பிரிந்தபின் “உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்”.  பெந்தகோஸ்தே நாளன்று தூய ஆவியார் சீடர்கள்மேல் இறங்கி வந்தபோது இயேசு கூறியதன் பொருளை உணர்ந்துகொண்டார்கள்.

v இறைவாக்கு உரைக்கவும், நோயாளிகளைக் குணப்படுத்தவும், பல வல்ல செயல்கள் செய்யவும் அவர்களால் முடிந்தது.  தாங்கள் கொண்டிருந்த விசுவாசத்தின் மட்டில் மகிழ்ச்சியையும், தூய ஆவியின் வல்லமையையும் அறிந்துகொண்டார்கள்.

 

127      இயேசுவின் வாழ்வில் தூய ஆவியாரின் பங்கு என்ன?

   i.    காலங்களின் தொடக்கம் முதல் இறுதிவரை தந்தை தம் மகனை அனுப்பும் போதெல்லாம் தூய ஆவியாரையும் அனுப்புகிறார்.

  ii.    தூய ஆவியாரின் துணையின்றி நாம் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்ள முடியாது.(யோவா15:26)

 iii.    இயேசுவின் இவ்வுலக வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் தூய ஆவியாரின்  செயலைக் காண முடியும்.  [689-691, 702-731]

v தூய ஆவியார்தான் இயேசு மரியாளின் உதிரத்தில் உற்பவிப்பதற்கு காரணமானவர் (மத்1:18).

v தூய ஆவியார்தான் இயேசு கடவுளின் மகன் என்று சான்று பகர்ந்தார்,

Ø இயேசு திருமுழுக்குப் பெற்று எழுந்தபோது  லூக்3: 22தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்”

Ø லூக்4: 18-19“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.”

v இவ்வுலக வாழ்வில் தூய ஆவியானவரே இயேசுவை வழிநடத்தினார் மாற்1:12 உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

v இவ்வுலக வாழ்வில் இறுதிவரை இயேசுவுக்குத் துணை நின்றார் (யோவா19:30 அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்).

v தான் உயிர்த்தபின் இயேசு தமது சீடர்களுக்கு தூய ஆவியாரை துணையாளராகக் கொடுத்தார். யோவா20:22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

v பெந்தகோஸ்தே நாளன்று தம் சீடர்கள் வழியாகத் தூய ஆவியாரை திருச்சபைக்குத் துணையாளராகவும், வழிகாட்டியாகவும் கொடுத்தார் (திப2:1-4).

128      தூய ஆவியாரின் பல்வேறு பெயர்கள் யாவை?

Ø தமத்திருத்துவத்தின் மூன்றாம் ஆளுக்கு உரித்தான பெயர் ‘தூய ஆவியார்’

Ø இயேசு அவரைத் ‘துணையாளர்’, ‘தேற்றுபவர்’,  ‘பரிந்துரையாளர்’, உண்மையின் ஆவியானவர் என்றும் அழைத்தர்.

Ø புதிய ஏற்பாட்டில் ‘கிறிஸ்துவின் ஆவியார்’,  ‘ஆண்டவரின் ஆவியார்’,  ‘கடவுளின் ஆவியார்’, ‘மாட்சியின் ஆவியார்’, ‘வாக்குறுதியின் ஆவியார்’ மற்றும்  ‘கண்டித்து உணர்த்தும் ஆவியார்’ எனவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Ø ஆதிக்கிறிஸ்தவர்கள் தூய ஆவியாரை குணப்படுத்தும் தைலமாகவும், உயிருள்ள ஊற்றுத் தண்ணீராகவும்,  சுழல் காற்றாகவும், சுட்டெரிக்கும் நெருப்பாகவும் உணர்ந்தனர். [691-693]

129      தூய ஆவியாரைக் குறித்துக்காட்ட என்னென்ன அடையாளங்கள் பயன் படுத்தப் படுகின்றன?

v கிறிஸ்துவின் குத்தித் திறக்கப்பட்ட இதயத்திலிருந்து பொங்கி வழிவதும், திருமுழுக்குப் பெற்றவர்களின் தாகம் தீர்ப்பதுமான ‘உயிருள்ள தண்ணீர்’

v உறுதிப்பூசுதல் மற்றும் நோயில்பூசுதல் போன்ற அருள் அடையாளங்களில்  ‘எண்ணெய்’

v தூய்மைப்படுத்தும் ‘தீ சுவாலை’

v இறைமாட்சியை வெளிப்படுத்தும் ‘ஒளிரும்/இருண்ட மேகம்’,  ‘புயல் காற்று’

v தூய ஆவியாரை பொழியும் ‘கைகள்’

v வெள்ளப்பெருக்கு வடிந்துவிட்டதை நோவாவுக்கு வெளிப்படுத்தவும், இயேசுவின் திருமுழுக்கின்போது  இயேசுவை கடவுளாக சான்றுபகர ‘புறா’ .

130     “இறைவாக்கினர் வழியாகத் தூய ஆவியார் பேசியுள்ளார்” என்பதன் பொருள் என்ன?

தூய ஆவியால் தூண்டப்பட்டு இறைவன் பெயரால் பேசுபவரே “இறைவக்கினர்”.  பழைய ஏற்பாட்டு காலத்தில் இறைவன் தன் சார்பாகத் தயக்கமின்றி பேசவும், இஸ்ரயேல் மக்களை அவர்கள் எதிபார்த்திருந்த மெசியாவின் வருகைக்காக தயார்ப் படுத்தவும் தான் தேர்ந்துகொண்ட மனிதர்களை பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்பினார். [683-688, 702-720]

v எசாயா, ஜெரேமியா, எசெக்கியேல் போன்ற இறைவக்கினர்கள் வழியாக பேசியவர் தூய அவியானவரே.

v இத்தகைய இறைவாக்கினர் வரிசையில் இறுதியாக வந்த திருமுழுக்கு யோவான் இயேசுவின் வருகையை முன்னறிவித்தது மட்டுமல்லாமல், அவர் வந்தபின் அவரைச் சுட்டிக்காட்டினார்;  அவரைப்பற்றி சான்று பகர்ந்தார்.

v “எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை மத்3:11. 

v “இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார் மாற்1:2.

v யோவா1: 29, 32-34 “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். …. தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: “தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ‘தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்.”

v எபி 1:1-2 1பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.

131    தூய ஆவியார் மரியா வழியாக எவ்வாறு செயலாற்றினார்?

கிறிஸ்துவின் வருகைக்காகப் பழைய ஏற்பாட்டின் எதிர்பார்ப்புகள், தயாரிப்புகள் அனைத்தையும் தூய ஆவியார் மரியா வழியாக நிறைவுக்குக் கொண்டுவந்தார். மரியாவும் கடவுளின் திட்டத்திற்குத் தன்னை முழுமையாகக் கையளித்தார் – லூக்1:38 பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். தூய ஆவியார் மரியாவை கடவுளின் தாயாக உயர்த்தியதின் வழியாக கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்லாது மாந்தர் அனைவருக்கும் ஒரு அன்னையை அருளியுள்ளார். [721-726]

i.     இறை மகனை மனித உடலோடு பெற்றெடுக்கும் பொருட்டு, மரியாவைத் தனிப்பட்ட முறையில் தமது அருளால் நிரப்பி அவரை அமல உற்பவியாக்கினார்; அதாவது கன்னிமையை மேன்மைப்படுத்தினார்.

ii.     புதுமைகளுக்கெல்லாம் பெரிய புதுமையான வார்த்தை மனுவுருவானதை தூய ஆவியால் சாத்தியமாக்க மரியா உதவினார்.

iii.     தூய ஆவியாரின் வல்லமை மரியாவோடு இருந்ததால் இயேசுவின் சோதனைகள், துன்பங்கள், ஏன் சிலுவைச்சாவிலும் கூட இயேசுவுக்கு துணையாக, ஆறுதலாக, பக்கபலமாக இருந்தார்.  அந்த சிலுவையின் அடியில்தான் இயேசு மரியாவை இந்த மனுக்குலத்தின் தாயாக உயர்த்தினார்.

iv.     அனைத்தின் மகுடமாக பெந்தக்கோஸ்து நாளில் மரியா பன்னிருவரோடு இருந்து தூய ஆவியாரின் வல்லமையைப்பெற்று திருச்சபையின் செயல்படுகளுக்கு உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் இருந்தார்.

132     பெந்தக்கோஸ்த்து நாளில் நிகழ்ந்தது என்ன?

இயேசு தாம் உயிர்த்த ஐம்பதாம் நாளான பெந்தக்கோஸ்த்து நாளன்று தூய ஆவியை அன்னை மரியாள் மீதும், திருத்தூதர்கள் மீதும் (திருச்சபையின் மீதும்) நிறைவாகப் பொழிந்தார். அதனால் கோழைகளாக இருந்த திருத்தூதர்கள் துணிவுடன் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்தார்கள். அன்றுதான் தாய் திருச்சபையின் பிறந்த நாள்; கத்தொலிக்கத் திருச்சபை என்ற சகாப்த்தத்தின் துவக்க நாள். [731-733]

v கிறிஸ்துவின் பணியும் ஆவியாரின் பணியும் திருச்சபையின் பணியாக மாறின.

v ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு திருத்தூதர்களிடம் தூய ஆவியால் திருமுழுக்குப் பெற்றனர்.

v திருத்தூதர்கள் பேசியதை மக்கள் தத்தம் மொழிகளில் பேசக்கேட்டு மலைத்துப் போயினர். இந்த நிகழ்வால் திருச்சபை எல்லா இனத்தவருக்கும், எல்லா மொழி பேசுபவர்களுக்கும் சொந்தமானது என உணர்த்தப்பட்டது.

v இன்றுவரை தூய ஆவியானவர் திருச்சபையின் உயிராகவும், ஆதாரமாகவும் இருந்து வழிநடத்தி வருகிறார்.

133     திருச்சபையில் தூய ஆவியார் எவ்வகையில் செயலாற்றுகிறார்?

தூய ஆவியார் திருச்சபையை  

ü கட்டி எழுப்புகிறார்

ü உயிரூட்டுகிறார்,

ü புனிதப்படுத்துகிறார்.

ü வழிநடத்துகிறார்

ü தூண்டுகோலாய் இருக்கிறார்

ü நம்மை மூவொரு கடவுளோடு இன்னும் அதிகமாக ஐக்கியப்படுத்துகிறார் மற்றும்

[733-741, 747]

i.     கடந்த ஈராயிரமாண்டுகளாகத் திருச்சபைக்கு ஏற்பட்டத் துன்பங்கள், சவால்கள், இடையூறுகள், அச்சுறுத்தல்கள், தோல்விகள் அனைத்திலுமிருந்து அதனைக் கட்டிக்காத்து வந்திருக்கிறார்.  இந்தக் காலக்கட்டதில் வாழ்ந்து மரித்த, புனிதர்கள் மற்றும் மறைசாட்சிகள் தூய ஆவியாரின் இந்த பணிக்குச் சாட்சிகள். 

ii.     மக்களைத் திருச்சபையின் பணிகளுக்கு அழைத்து அவர்கள் பணிக்குத் தேவையான கனிகளைக் கொடுத்து அவர்களை உறுதிப் படுத்துகிறார்.

iii.     பிறப்பு நிலை (ஜென்ம) பாவத்தால் நாம் இழந்த இறைச் சாயலை திருமுழுக்கு வழியாக மீண்டும் பெற்றுத் தருகிறார்.

iv.     நமது பாவங்களை இயேசுவின் திருஇரத்தத்தால் கழுவி (ஒப்புறவு அருட்சாதனம் வழியாக) நம்மை மூவொரு கடவுளுக்குள் ஐக்கியமாக்குகிறார்.

v.     திருவருட்சாதனங்களால் நம்மை பலப்படுத்தி நம்மை இறைச்சயலில் வளர்த்து வருகிறார்.  நற்செய்தியை நம் வாழ்வாக்குகிறார்.  இன்றும் தூய உள்ளத்தோடு அவரிடம் கேட்பவர்களுக்கு அவரது கனிகளைப் பொழிகிறார்.

யோவா16:12“நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. 13உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.

திப2: 4அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்.  5அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். 6அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர்.

134     நமது வாழ்வில் தூய ஆவியார் எவ்வாறு செயலாற்றுகிறார்?

என்னை இறைவனின் விருப்பத்திற்குச் செவிமடுக்க வைக்கிறார்.  நான் செபிக்கவும் மற்றவர்களோடு செபத்தில் ஒன்றித்திருக்கவும் செய்கிறார்.  “நமது ஆன்மாவின் சாந்தமான விருந்தாளி தூய ஆவியார்” என்று புனித அகஸ்த்தினார் கூறுகிறார். [738-741]

     i.     நாம் தனிமையில், அமைதியில் அவரை நினைக்கும்போது நம்மில் வருகிறார், நம்மோடு பேசுகிறார்.  நமது மனச்சாட்சியின் குரலாகவும், இது நல்லது, இது தீயது, இதைச் செய், இதை செய்யாதே என்று நமக்கு உணர்த்தும் ஒரு உந்துசக்தியுமாவார்.  இறைவேண்டலின் ஆசிரியரும் அவரே.

    ii.     உடலோடும், உயிரோடும் நம்மில் வாழ்கிறார்;  எனவேதான் (1கொரி6:19) தூய பவுல்  “உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல” என்று எழுதுகிறார்.

  iii.     மேலும் கூறுகிறார்

உரோமையர் 13:14 தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.

எபேசியர் 4:24 கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்.

எபேசியர் 6:11 அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள்.

    iv.          கிறிஸ்து திருவருட் சாதனங்கள் வழியாகத் திருச்சபையின் உறுப்பினர் அனைவருக்கும் தூய ஆவியாரை அதாவது கடவுளின் அருளை வழங்குகிறார்.

683 to 741 குறிப்புகளின் சுருக்கம்

தூய ஆவியாரை விசுவசிக்கிறேன்

v  நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி “அப்பா, தந்தையே எனக் கூப்பிடுகிறது(கலா 4:6).[742]

v  காலத்தின் தொடக்கம் முதல் முடிவுவரை எப்போதெல்லாம் தந்தை தம் மகனை அனுப்புகிறாரோ அப்போதெல்லாம் தூய ஆவியாரையும் அவரோடு அனுப்புகிறார்.  அவர்கள் ஒன்றிணைந்து இணைபிரியாது செயலாற்றுகிறார்கள்.[743]

v  காலம் நிறைவுற்றபோது கிறிஸ்து  கடவுளின் மக்கள் மத்தியில் வருவதற்கு வேண்டிய ஏற்பாட்டை மரியாளிடம் தூய ஆவியார் நிறைவு செய்தார்.  தூய ஆவியாரின் வல்லமையால் தந்தை  “இம்மனுவேல் அல்லது கடவுள் நம்மோடு” ஆகிய தம் மகனை உலகுக்கு அளித்தார்.[744]

v  கடவுளின் மகன் மனுவுரு எடுத்தபோது அவரை தூய ஆவியாரின் அருட்பொழிவால் (மெசியாவாக) கிறிஸ்துவாகத் தந்தை திருநிலைப்படுத்தினார். (திபா 2:6-7). இந்த இயேசுவைக் அவரது இறப்பாலும் உயிர்ப்பாலும் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார்.   அவருடைய நிறைவிலிருந்து தூய ஆவியாரை திருத்தூதர்கள் மேலும் திருச்சபையின் மேலும் பொழிந்தார்.[745]

v  கிறிஸ்து தூய ஆவியாரை திருச்சபையின் உறுப்பினர் மேல் பொழிந்தார்.  அதன் வழியாக திருச்சபையைக் கட்டி எழுப்பி, உயிர்பெறச் செய்து அதை புனிதப்படுத்தினார்.  தூய தமத்திருத்துவமும் மனிதரும் இணைந்த ஒன்றிப்பின் திருவருட்சாதனமாக திருச்சபை விளங்குகிறது.[746-747]

கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்

135      “தூய கத்தோலிக்கத் திருச்சபையை நம்புகிறேன்”

இறைத் திட்டத்தில் திருச்சபை

132     “திருச்சபை” என்னும் சொல்லின்பொருள் என்ன?

kyriake  என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் அனைத்து நாடுகளிலிருந்தும் “அழைக்கப்பட்ட  கடவுளின் பிள்ளைகள்”  என்பதாகும் .   ekklesia  என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் திருமுழுக்கின் வழியாக  கிறிஸ்து என்ற உடலின் உருப்புக்கள்” என்பதாகும்.  இந்த இரு அர்தங்களை மையமாக வைத்தே ஆங்கிலத்தில்  “Church” என்ற சொல்லும்,  தமிழில்  “திருச்சபை” என்ற சொல்லும் பெறப்பட்டுள்ளன. [748-757]

v , மூவொரு கடவுளை விசுவசித்து தூய ஆவியாரால் திருமுழுக்குப் பெற்றவர்களே “அழைக்கப் பட்டவர்கள்” ஆவர். இவர்கள் கடவுளின் பிள்ளைகளாகவும், கிறிஸ்துவின் உறுப்புக்களாகவும், தூய ஆவியாரின் கோவில்களாகவும் திகழ்கின்றனர்.

v இந்த “அழைக்கப் பட்டவர்கள்”  ஆகிய நம் அனைவரையும் ஒன்றிணைத்த அவையே (சபையே) “திருச்சபை” ஆகும்.

v தூய பவுலின் வரிகளில்   எபே5:23“ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோல ---------------- கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். கொலோ1:18 “திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே”. ஆம் கிறிஸ்துவே திருச்சபையின் தலை, நாம் திருச்சபையின் உடல்.

v திருவருட் சாதனங்களை பெற்று இறை வார்த்தையில் வாழும் போது கிறிஸ்து நம்முள்ளும் நாம் கிறிஸ்த்துவுக்குள்ளும் இருக்கிறோம் (வாழ்கிறோம்).  இந்த உறவில் கட்டியெழுப்பப் பட்டதுதான் திருச்சபை.

v கிறிஸ்துவே மணமகன்; திருச்சபையே அவரது மணமகள் என்று இயேசு கூறியதிலிருந்து (யோவா3:29) கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் உள்ள உறவு பிரிக்க இயலா உறவு என்பது மட்டுமல்ல, நாம் பாவிகளாய் இருந்தாலும் கூட அவர் நம்மேல் கொண்ட அன்பு, உறவு மாறாதது என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது.

133     இயேசு திருச்சபையை ஸ்தாபித்ததின் மற்றும் பராமரிப்பதன் நோக்கம் என்ன?

கிறிஸ்து திருச்சபையை நிருவியதற்கு இரு பெரும் காரணங்களைக் கூறலாம்

i.      நம்மை, தனியொரு மனிதனாக அல்ல மாறாக ஒட்டுமொத்த மனுக்குலத்தையும் மீட்க.

ii.      மனுக்குலம் முழுவதையும் “ஒரே மந்தையும் ஒரே ஆயனும்” என நடத்திச் செல்ல. [758-781, 802-804]

v தொநூ4:9 ஆண்டவர் காயினிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார்.  ஒவ்வொரு மனிதனும் தனக்கு அடுத்துருப்பவர் மீது பொறுப்புள்ளவன் என்ற நியதி இறைவனின் படைப்புத் திட்டதிலேயே உள்ள ஒன்று.

v தனிமனித சிந்தனையும் வாழ்க்கைமுறையும் சுயநல நாட்டமுடையது,  பிறர் அன்புக்கு எதிரானது.   மூவொரு கடவுள் சமூக உறவின் வெளிப்பாடு.  அதனாலேயே அவர் மனிதனை சமூக உறவில் படைத்தார்.  சமூக உறவில் வாழவேண்டுமென்பதே அவரது திட்டம், விருப்பம்.  அவரது மீட்ப்புத் திட்டமும் தனிமனிதனை அடிப்படையாகக் கொண்டது அல்ல; மாறாக ஒட்டுமொத்த மனுக்குலத்தை மையமாகக் கொண்டது. இதுவே இயேசு திருச்சபையை ஸ்தாபித்ததின் மற்றும் பராமரிப்பதன் நோக்கம்.

v லேவியர் 19:18 பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!

v மாற்கு 12:31 ‘உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார்.

v லூக்கா 10:27 அவர் மறுமொழியாக, ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’ என்று எழுதியுள்ளது” என்றார்.

v உரோமையர் 13:9 ஏனெனில், “விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே” என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், “உன் மீது அன்பு கூர்வது போல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன.

v யாக்கோபு 2:8 “உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!” என்னும் இறையாட்சியின் சட்டம் மறைநூலில் உள்ளது. இதை நீங்கள் கடைப்பிடித்தால் நல்லது.

134     திருச்சபையின் பணி என்ன?  

இயேசு கிறிஸ்து தொடங்கி வைத்த இறையாட்சியை அனைத்து நடுகளின் மக்களுக்கும் அறிவித்து அதை நிறுவுவதே திருச்சபையின் பணி. மற்றும் இறை வார்த்தையை உலகின் கடையெல்லை வரை அறிவிப்பதும் ஆகும். [763-769, 774-776, 780]

  i.     இந்த இறை ஆட்சியின் விதையாகவும், தொடக்கமாகவும் திருச்சபை இந்த மண்ணுலகில் அமைந்துள்ளது.

 ii.     இயேசு கிறிஸ்து நமக்குக் கொடையாகக் கொடுத்த திருவருட்சாதனங்களைத் தொடர்ந்து நிறைவேற்றி வருவது.

iii.     அத்தனை பலவீனங்கள், எதிர்ப்புக்கள், அச்சுறுத்தல்கள் மத்தியிலும் திருச்சபை, இந்த உலகில் இயேசு விதைத்துச் சென்ற, இறையரசை வளர்த்துக் கட்டிக்காத்து வருவது.

iv.     இதன் வழியாக திருச்சபை விண்ணகத்தின் முன் சுவையாகத் திகழ்வது.

135     திருச்சபை ஒரு நிறுவனம் என்ற நிலையில் இல்லாமல் ஒர் மறைபொருளாகத் திகழ்வது எவ்வாறு?

காணக்கூடிய மனித பண்புகளையும், காண இயலாத இறைப் பண்புகளையும் தன்னுள் கொண்டிருப்பதாலேயே திருச்சபை ஒரு பணிசெய்யும் நிறுவனமாக இல்லாமல் ஒரு மறைபொருளான சமூகமாகத் திகழ்கிறது. [770-773, 779]

Ø  திருச்சபையை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ‘சாதனைகள், சோதனைகள், தவறுகள், ஏன் குற்றங்களையும் கூட உள்ளடக்கிய ஒரு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டுள்ள நிறுவனமாகத்தான் தோன்றும். இதையே காணக்கூடிய மனித பண்புகள் எனக் குறிப்பிடுகிறோம்.   ஆனால் இது மிகவும் மேலோட்டமான பார்வை.

Ø  ஆனால் கிறிஸ்து நாம் பாவம் செய்தோம் என்பதற்காக நம்மை வெறுக்கவில்லை, நாம் அவரை புறக்கணித்தோம் என்பதற்காக நம்மை ஒதுக்கவில்லை.  மாறாக பாவிகளையும் நேசித்தார், பாவிகளைத் தேடிவந்தார்.  அவரை நாம் தினமும் நோகச் செய்தாலும், காட்டிக்கொடுத்தாலும், மறுதலித்தாலும்கூட நம்மை நேசிப்பவராகவே இருக்கிறார்.  இதையே காண இயலாத இறை பண்பு என்கிறோம்

திருச்சபையில் பாவம் என்ற மனிதமும் அன்பு, இறக்கம், மன்னிப்பு என்ற தெய்வீகமும் பிரிக்க முடியாத உறவுகளாய் உள்ளன.  இதைத்தான் “திருச்சபை ஒரு மறைபொருளாய்த் திகழ்கின்றது” என்று கூறுகிறோம்.

748 to 776 குறிப்புகளின் சுருக்கம்

தூய கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.

v  திருச்சபை என்பதன் பொருள் “திருக்கூட்டம் ”.  அதாவது

Ø கடவுளின் வார்த்தையால் அழைக்கப்பட்டு ஒன்றுகூட்டப்பட்டவர்கள், அதாவது ஒன்றுசேர்ந்த கடவுளின் மக்கள்

Ø கிறிஸ்துவின் உடலால் ஊட்டம் பெற்று கிறிஸ்துவின் உடல் உறுப்புகளாவதற்கு ஒன்றுசேர்க்கப்பட்டவர்கள்.[777]

v  திருச்சபை

Ø இறைதிட்டத்தின் வழியும் இலக்கும் ஆகும்.

Ø படைப்பில் முன்குறித்து வைக்கப்பட்டது.

Ø பழைய உடன்படிக்கையில் தயாரிக்கப் பட்டது.

Ø இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளாலும் செயல்களாலும் நிறுவப்பட்டது.

Ø சிலுவை மரணத்தாலும் உயிர்ப்பாலும் முழுமைபெற்றது.

Ø தூய ஆவியாரின் வல்லமையாலும், வரங்களாலும், கொடைகளாலும் (மீட்ப்பின் மறைபொருளென) அருட்பொழிவு செய்யப்பட்டது.

Ø மீட்கப்பட்ட அனைவரும் விண்ணகத்தில் ஒன்றுசேர்க்கப்படும் போது முழுமை அடைவது.

Ø மறைபொருளான கிறிஸ்துவின் உடல்

Ø காணக்கூடிய, ஆன்மீக மற்றும் விசுவாசத்தை அடித்தளமாகக் கொண்ட படிநிலை அமைப்பு

Ø ஒன்றே என்றாலும் மனிதம் மற்றும் தெய்வீகம் என்ற இரு கூறுகளை உள்ளடக்கியது. 

Ø இந்த உலகில் மீட்பின் அருட்சாதனமாகவும் இறைவனையும் மனிதனையும் ஒன்றிணைக்கும் அடையாளமாகவும், கருவியாகவும் விளங்குகிறது.

இவை அனைத்தையும் விசுவாசத்தைக் கொண்டே ஏற்றுக்கொள்ள முடியும்.[778-780]

திருச்சபை –கடவுளின் மக்கள், கிறிஸ்துவின் உடல், தூய ஆவியாரின் ஆலயம்

136     “கடவுளின் மக்கள்’ என்பதின் தனித் தன்மை அல்லது தனிச் சிறப்பு என்ன?

“கடவுளின் மக்கள்” “திருச்சபை” இவை ஒரே அர்த்தமுள்ள இரு சொற்கள் எனக் கொள்ளலாம் (synonemes). இறைவனே இதை ஏற்படுத்தியவர்.  இயேசுவே இதன் தலைவர்.  பரிசுத்த ஆவியாரே அதன் வல்லமை.  திருமுழுக்கே இதன் நுழை வாயில்.  நாம் அனவரும் கடவுளின் மக்கள் என்பதே அதன் மாட்சி.  அன்பே அதன் சட்டம் அதுவே அதன் சாசனம்.  கடவுளின் பிள்ளைகளுக்குறிய மாண்பையும், சுதந்திரத்தையும் தங்கள் தனித்துவமாகக் கொண்டவர்கள். [781-786]

v  நாம் அனைவரும்

Ø  இறைவனுக்கு, இறைவனில் நம்பிக்கை உள்ளவர்களாகவும்

Ø  இறை ஆட்சியைத் தேடுபவர்களாகவும்

Ø  இறை ஆட்சியை இந்த மண்ணில் மலரச் செய்பவர்களாகவும்  இருக்கிறோம்.

v  உலக மக்களினங்களுக்கு மத்தியில் இறைமக்களுக்கு இணையானவர்கள் எவருமில்லை.

v  இந்த உலகிற்கு உப்பாக வாழ்பவர்கள்.

v  உலகின் இருளை அகற்றும் ஒளி அவர்கள்.

v  இறை ஆட்சியை தங்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர்கள்( மத்6:33).

v  கிறிஸ்துவின் குருத்துவப் பணியிலும் இறைவாக்குப் பணியிலும் அவருக்கு உடன் உழைப்பாளர்களாக வாழ்பவர்கள்.

v  ஏழைகளுக்கும் துன்புறுவோருக்கும் கிறிஸ்துவின் வழியில் தொண்டு செய்பவர்கள். 

v   “ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ,  உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்ற உறுதியான நம்பிக்கை (உரோ838-39) கொண்டிருப்போர்.

137     “திருச்சபை கிறிஸ்துவின் உடல்” என்பதின் பொருள் என்ன?

திருமுழுக்கும் திவ்யநற்கருணையும் கிறிஸ்தவர்களையும் கிறிஸ்துவையும் பிரிக்க இயலாத உறவில் இணைக்கின்றன. மனித உடலும் தலையும் எவ்வாறு பிரிக்க இயலாதவாறு இணைந்துள்ளதோ அதேபோல் திருச்சபை கிறிஸ்துவோடு ஒன்றாய் உள்ளது. [787-795]

v  கிறிஸ்து தனது பணிவாழ்வின் துவக்கத்திலிருந்தே

Ø  தனது சீடர்களை தனது பணியில் ஈடுபடுத்தினார்

Ø  இறையாட்சியின் மறைபொருளை அவர்களுக்கு வெளிப்படுத்தினார்

Ø  தனது பணியில், மகிழ்சியில், துன்பங்களில் பங்களித்தார்

Ø  நானே திராட்சைச் செடி; நீங்கள் அதன் கொடிகள் என்று தனக்கும் தன் சீடர்களுக்கும் உள்ள உறவை ஆழமாக வெளிப்படுத்தினார்.

Ø  எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர் என்று தன்னையே திருச்சபைக்குத் தந்தார்.

v  மேலே கூறப்பட்டுள்ள அனைத்து செய்திகளும் “திருச்சபை கிறிஸ்துவின் உடல்” என்பதன் மூன்று கூறுகளைச் சுட்டிக் காட்டுகின்றன

                    i.          கிறிஸ்துவர்கள் அனைவரும் கிறிஸ்துவோடு ஒரே உடலாய் இருக்கிறோம் என்பதால் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்குள் ஒருவரோடு ஒருவர் இணைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது ஒரு மறைபொருள்.  இந்த பண்பு கிறிஸ்து நமக்கு உணர்த்தும் மிகப்பெரிய இறையியல்.

                   ii.          திருச்சபையின் தலையாக கிறிஸ்து உள்ளார்

                 iii.          கிறிஸ்துவின் மணமகளாகத் திருச்சபை திகழ்கிறது

138  கிறிஸ்துவின் மணமகளாகத் திருச்சபைத் திகழ்கிறது” என்பதன் பொருள் என்ன?

ஒருமணமகன் தன் மண மகளை எவ்வளவு உண்மையாகவும் ஆழமாகவும் நேசிப்பானோ அந்த அளவு கிறிஸ்து திருச்சபையை நேசிக்கிறார்.  முடிவு பரியந்தம் இந்த பந்தத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார் [796].

i.     ஒருவன் தன் காதலியைக் காண, பேச, அன்பு செய்ய எந்த அளவு ஏங்கிக் கொண்டிருப்பானோ அந்த அளவு கிறிஸ்து இறைமக்களின் அன்புக்காக ஏங்குகிறார்.

ii.     மணமகள் தன்னோடு இருப்பதில் மணமகன் எவ்வளவு ஆனந்தம் கொள்வானோ அந்த அளவு கிறிஸ்தவர்கள் அவரோடு இணைந்திருக்கும் போது இயேசு ஆனந்தம் கொள்கிறார்.

iii.     மணமகள் மணமகனை உதாசினப் படுத்தினாலோ, விலகிச்சென்றாலோ மணமகன் எவ்வளவு வேதனைப்படுவானோ அந்த அளவு இயேசு கிறிஸ்துவை நாம் அன்பு செய்யாத போதும், அவரைவிட்டு பாவத்தால் விலகிச்செல்லும் போதும் கிறிஸ்து அதே வேதனையை படுகிறார்.

iv.     கிறிஸ்துவின் இத்தகைய அன்புக்கு பதில் அன்பு செலுத்துகிறோமா அல்லது பாவத்தால் அவரை உதாசினப்படுத்தி அவரை விட்டு விலகிச் சென்று அவரது திருஇருதயத்தை நோகச் செய்கிறோமா?

 

139     “திருச்சபை தூய ஆவியாரின் கோவில்” என்பதன் பொருள் என்ன?

இந்த உலகில் தூய ஆவியாரின் வல்லமை முழுமையாக நிறைந்துள்ள இடம்தான் கத்தோலிக்கத் திருச்சபை. எனவேதான் கத்தோலிக்கத் திருச்சபையை தூய ஆவியார் வாழும் கோவில் என்று ஏற்றுக்கொள்கிறோம்.  [797-801, 809]

யூதர்கள் எருசலேம் தேவாலயத்தில் இறைவனை வழிபட்டார்கள்.  இப்போது அந்த தேவாலயம் இல்லை.  திருச்சபைதான் இன்றைய ‘எருசலேம் தேவாலயம்’ எனக் கருதப் படுகிறது.  ஆனால் இந்த புதிய ‘எருசலேம் தேவாலயம்’ எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் கட்டப் பட்டது அல்ல.  மத்:18:20 – “ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”  எனவே

v எங்கெல்லாம் நாம் கூடிச் செபிக்கிறோமோ அங்கெல்லாம் திருச்சபை ஸ்தாபிக்கப் படுகிறது.  பரிசுத்த ஆவியார் அதற்கு உயிர் அளிக்கிறார். 

v தூய ஆவியார் இறைவார்த்தையிலும், திருவருட்சாதனங்களின் அரும் அடையாளங்களிலும் உள்ளார். 

v இறைமக்களின் உள்ளங்களில் நிறைந்துள்ளார், 

v அவர்களின் செபத்தில் வெளிப்படுகிறார்.

v அவர்களை வழி நடத்துகிறார்; 

v தனது தனி வரங்களால் அவர்களை நிறப்புகிறார்; 

v அவரது கொடைகளை அவர்களுக்கு அளிக்கிறார்.

v யாரெல்லாம் தூய ஆவியாரின் நட்புறவில் இணைகிறார்களோ அவர்கள் அவரின் வல்லமையை, புதுமைகளை இன்றும் உணர்கிறார்கள்.

இதுவே நமது கத்தோலிக்க விசுவாசம். 

 “மனித உடலுக்கு உயிர்/ஆன்மா இருப்பதுபோல், கிரிஸ்துவின் உறுப்புகளுக்கு, அதாவது திருச்சபையாகிய கிறிஸ்துவின் உடலுக்குத் தூய ஆவியார் இருக்கிறார்”–புனித அகுஸ்தீன்

2கொரி6:16; 1கொரி3:16-17; 12:7,13எபே2:21; 4:16; திப20:32;

140     தூய ஆவியாரின் தனி வரங்கள் என்றால் என்ன? அவை யாவை?

தனிப்பட்டவர்கள் மீது பொழியப்படும் தூய ஆவியாரின் சிறப்பான கொடைகளே  ‘தனிவரங்கள்’ எனப்படும்.   அவை ஞானம், அறிவு, நம்பிக்கை, வல்ல செயல், இறைவாக்குரைத்தல், பகுத்தறிவு, பரவசப் பேச்சு, அப்பேச்சை விளக்கும் ஆற்றல் என்பன. இவை பிறர் நலன்களுக்காகவும், உலகின் தேவைகளுக்காகவும், குறிப்பாகத் திருச்சபையைக் கட்டி எழுப்புவதற்காகவும் பொழியப்படுகின்றன. [799-801]. 

1கொரி12:8-10; எபே4:7-13; கலா5:22-23

781 to 801 குறிப்புகளின் சுருக்கம்

திருச்சபை – இறைமக்கள், கிறிஸ்துவின் உடல், தூய ஆவியாரின் ஆலயம்

v  கிறிஸ்து இயேசு நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.தீத்2:14[802]

v   ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள்.(1 பேது2:9).[803]

v  விசுவாசத்தாலும் திருமுழுக்காலும் ஒருவர் கடவுளின் மக்களாகிறார்.  கடவுளின் மக்களாகப்  புதுப் பிறப்பெடுக்கவும் அதன் வழியாக கிறிஸ்துவில் ஒரே குடும்பமாகவும் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.[804] 

v  திருச்சபை கிறிஸ்துவின் உடல்.  இறந்து உயிர்த்த கிறிஸ்து தூய ஆவியார் வழியாகவும், திருவருட்சாதனங்கள், சிறப்பாக நற்கருணை, வழியாகவும் விசுவசிப்பவர்கள் அனைவரையும் தனது  ‘உடலாக’ ஆக்குகிறார்.[805]

v  திருச்சபை ஓருடல் என்றாலும் அதன் உறுப்பினர்களிடையே பன்மய தன்மையும் பலவகை செயல்பாடுகளும் உள்ளன.  அனைவரும் ஒருவரோடு ஒருவர் குறிப்பாக துன்பப் படுவோர், ஏழைகள், ஒதுக்கப் பட்டோரோடு இணைக்கப் பட்டுள்ளனர்.[806 ]

v  திருச்சபை என்ற இந்த உடலுக்கு கிறிஸ்துவே தலையாக இருக்கிறார்.  திருச்சபை கிறிஸ்துவிடமிருந்து வாழ்வைப் பெற்று, கிறிஸ்துவுக்காகவும், கிறிஸ்துவிலும் வாழ்கிறது.  கிறிஸ்துவும் திருச்சபையுடனும் திருச்சபையிலும் வாழ்கிறார்.[807]

v   திருச்சபை கிறிஸ்துவின் மணமகள்.  அவளை அன்பு செய்கிறார்; அவளுக்காகத் தன்னையே கையளித்தார்; தனது இரத்தத்தால் அவளை தூய்மையாக்கினார்.  திருச்சபையை மக்கள் பேறு மிக்க தாயாக்கினார்.[808]

v   திருச்சபை தூய ஆவியாரின் ஆலயம்.  ஆவியானவரே   திருச்சபையின் மறை உடலின் ஆன்மா. வாழ்வின் ஊற்று, பன்முகத் தன்மையில் ஒற்றுமை; அருங்கொடைகளின் மற்று அருள் வரங்களின் கருவூலம்.[809]

v  ஒற்றுமைக்கு இலக்கணமான மூவொரு கடவுளுக்குள் மக்களை ஒன்றிணைக்கும் பணி.[810]

 

 I Believe in One, Holy, Catholic, and Apostolic Church

ஒரே, தூய, கத்தோலிக்க திருத்தூதுத் (அப்போஸ்தலிக்க) திருச்சபையை விசுவசிக்கிறேன்

141     ஏன் ஒரு திருச்சபைதான் இருக்க முடியும்? கிறிஸ்துவின் ஒரே திருச்சபை எதில் உள்ளது?

கிறிஸ்து ஒருவரே. எனவே கிறிஸ்துவின் உடலும் ஒன்றே. கிறிஸ்து ஒரே மணமகன்.  ஏனவே கிறிஸ்துவின் மணமகளும் ஒன்றே.  எனவேதான் கிறிஸ்துவின் திருச்சபையும் ஒன்றே. திருச்சபை என்ற உடலும், அதன் தலையாக கிறிஸ்துவும் பிரிக்க இயலா நிலையில் உள்ளன.

கிறிஸ்துவின் ஒரே திருச்சபை இவ்வுலகில் நிறுவப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட சமூகமாக உள்ளது.  அது திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றல்களான திருத்தந்தையர்கள் மற்றும் அவர்களோடு ஒன்றிணைந்து இறைப்பணி செய்யும் ஆயர்களாலும் வழிநடத்தப் பட்டு வருகிறது.   [811-816, 866, 870]

கிறிஸ்து தனது திருச்சபையை திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு கட்டி எழுப்பினார்.  அந்த அடித்தளம் இன்றுவரை அந்த கட்டிடத்தை தாங்கி வருகிறது.  திருத்தூதர்களின் விசுவாசமும் நம்பிக்கையும், திருத்தூதர் பேதுரு துவங்கி இன்றுவரை திருத்தந்தையர்களின் தலைமையில் திருப்பணியாளர்கள் முலம் நம்மில் விதைக்கப் படுகின்றன.  கிறிஸ்துவால் திருத்தூதர்களிடம் கொடுக்கப்பட்ட திருவருட் சாதனங்களும் அதே ஆற்றலுடன் இன்றுவரை நம்மில் செயலாற்றுகின்றன.

எபே4:4-6  4நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. 5அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. 6எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

142     கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவர்கள் மட்டில் கத்தோலிக்கத் திருச்சபையின் கொள்கை மற்றும் அணுகுமுறை யாது?

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயரால் திருமுழுக்குப் பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் திருச்சபையைச் சேர்ந்தவர்கள்.  இந்த கோட்பாட்டின் படி கத்தோலிக்கத் திருச்சபையின் முழு ஒன்றிப்பிலிருந்து பிரிந்து சென்ற பிற திருச்சபைகளைச் சார்ந்தவர்களையும் கிறிஸ்தவர்களென்றும், கத்தோலிக்க சமூகத்தின் சகோதரர்கள், சகோதரிகள் என்றும் மதித்து நம் தாய்த் திருச்சபை அன்புடன் எற்றுக்கொள்கிறது. [817-819]

 

  i.     கிறிஸ்துவின் போதனைகளுக்கு மாறுபட்ட விளக்கங்களை கொடுத்ததாலும்,

 ii.     இறை வார்த்தைகளை மாறுபட்டு சித்தரித்ததாலும்,

iii.     கத்தோலிக்கத் திருச்சபையின் வேத சத்தியங்களையும், கோட்பாடுகளையும் முழுமையாக எற்றுக்கொள்ள மறுத்ததாலும்,

iv.     சில தனிமனித குறைபடுகள் மற்றும் தவறுகளாலும்,

 v.     ஒருவரை ஒருவர் புரிந்து ஏற்றுக் கொள்வதிலும் விட்டுக்கொடுத்தலிலும் முறையான அணுகுமுறையும் இல்லாததாலும்

திருச்சபையின் தொடக்க காலத்தில் இருந்தே கருத்து வேறுபாடுகளும், பிளவுகளும் அவ்வப்போது தலை தூக்கின. இருப்பினும் திருத்தூதர்கள் இத்தகைய மாற்றுக்கருத்துக்களை வன்மையாகக் கண்டித்ததால் பிரிவினைகள் தவிர்க்கப்பட்டன.  அடுத்தடுத்து வந்த நூற்றாண்டுகளில் இந்த ஏற்றுக்கொள்ளாமையும், பிளவுகளும்  அதிகமாகவும் ஆழமாகவும் தோன்றியதால் பெரிய சமூகங்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் முழு ஒன்றிப்பிலிருந்து பிரிந்ததால் பிரிவினை திருச்சபைகள் தோன்றின.  இத்தகைய நிகழ்வுகளுக்குக் கத்தோலிக்கத் திருச்சபையின் மற்றும் பிரிவினை திருச்சபைகளின் அதாவது இரு பக்க பிரதிநிதிகளுமே காரணமாக இருந்திருக்கிறார்கள். இன்றைய கிறிஸ்துவர்களை இந்த வரலாற்று பிரிவினை நிகழ்வுகளில் குற்றம் இழைத்தவர்களாகக் கருத முடியாது. 

இத்தகைய வேதனை மிக்க பிளவுகளுக்கு மத்தியிலும் நமக்கு ஆறுதலாய் இருப்பது: முதலாவது: கத்தோலிக்கத் திருச்சபையிலும், கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து பிரிந்து சென்ற மற்ற திருச்சபைகளிலும் மற்றும் திருச்சபை சாரா கிறிஸ்துவ குழுக்களிலும் (Ecclesial communities) உள்ள அனவரின் மீட்புப் பணியிலும் தூய ஆவியானவர் உடன் உழைக்கிறார். 

இரண்டாவது: பல்வேறு திருச்சபைகளிலும் உள்ள திருவிவிலியம், திருவருட் சாதனங்கள், விசுவாசம், நம்பிக்கை,  அன்பு மற்றும் அருட்கொடைகள் அனைத்தும் கிறிஸ்துவிடம் இருந்தே வருகின்றன.

மூன்றாவது: கிறிஸ்துவின் தூய ஆவியார் அனைத்து திருச்சபைகளிலும் உள்ளிருந்து செயலாற்றி அவற்றை ஒன்றிணைத்து வருகிறார்.  காரணம் ஒன்றாய் இணைந்திருப்பவை ஒன்றாய் செயலாற்றுகின்றன்…ஒன்றாய் வளர்ச்சி பெறுகிண்றன.

143     கிறிஸ்தவர்களின்  ஒன்றிப்புக்காக நாம் செய்யவேண்டியது என்ன?

யோவா17:21.  “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!”

கிறிஸ்து தனது திருச்சபைக்கு அருளிய பெரிய கொடையும்,  தனது திருச்சபைக்காத் தந்தையிடம் மன்றாடியதும் ‘திருச்சபையின் ஒற்றுமையே’.  அதே சமயம், இயேசு தான் இறப்பதற்கு முன் பெரிதும் கவலைப்  பட்டதும் தான் நிறுவ உள்ள திருச்சபையின் ஒற்றுமையைப் பற்றித்தான்.  இத்தகைய நற்செயலுக்காக நாம் ஆற்றக்கூடிய செயல்களைப் பற்றி தெரிந்து அதில் ஈடுபடுவதே இறைவனுக்கு ஏற்ற செயலாகும்.  [820-822]

  i.     அனைத்து கிறிஸ்தவர்களின் ஒற்றுமையையும் முழு ஒன்றிப்பிலிருக்கும் ஒரே திருச்சபையும் உருவாக்குவது ஒவ்வொரு கிறிஸ்தவனின், கிறிஸ்தவளின் அடிப்படை கடமை, அவர்கள் எந்த வயதினராய்  இருந்தாலும்.

 ii.      திருச்சபையில் உள்ள பிரிவினைகள் கிறிஸ்துவின் உடலில் உள்ள காயங்கள் என்பதை அறிவோம்.  அந்த காயங்கள் கிறிஸ்துவுக்கு மிகுந்த வேதனையையும் கசப்பையும் கொடுக்கின்றன என்பதை அறிவோம்.

iii.     பிரிவினைகள் ஒருவர் மேல் ஒருவருக்கு பகைமையையும் குரோதத்தையும் ஏற்படுத்த வல்லது.  இந்த பகைமை கிறிஸ்துவ விசுவாசத்தை பெரிதும் பலவீனப்படுத்தவல்லது மட்டுமல்ல,  கிறிஸ்துவ விசுவாசத்தின் நம்பகத்தன்மையை பெரிதும் பாதிக்க வல்லது.

எனவே காலதாமதமின்றி நாம் ஆற்றவேண்டிய செயல்கலாவன

  i.     திருச்சபைகளின் இணைப்புக்காக

 ii.     கிறிஸ்துவோடு இணைந்து

v செபிப்பது

v அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து ஆற்றுவது,

v முயற்சியின் பலன்களை முழுமை பெறச் செய்வது.

iii.     திருச்சபைகளின் ஒன்றிணைப்பின் வழி திருச்சபைக்கு நிரந்தரமான புத்துயிர் அளிக்கும் முயற்சியில் ஒருவர் ஒருவர் மேல் மிகுந்த நம்பிக்கை கொள்ள வேண்டும். 

iv.     நமது வாழ்வை நற்செய்தியின் மதிப்பீட்டின் படி அமைத்துக்கொள்ள வேண்டும்.  ஏனெனில் விவிலியமே அனைத்து திருச்சபையினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது செபமாகும்.

 v.     சகோதர பாசத்தோடு ஒருவர் மற்றவரைப் பற்றியும் ஒரு திருச்சபை அடுத்திருக்கும் திருச்சபை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.

vi.     சபைகளுக்குள்ளே சிறப்பாக பல்வேறு சபைகளில் உள்ள இறையியல் வல்லுனர்கள், நல் உறவுடன்,  நட்புறவுடன் கூடிய கலந்துரையாடலில் பங்குகொள்ள வேண்டும். 

vii.     ஒருகிணைந்த செப வழிப்பாட்டை ஏற்பாடு செய்து அனைவரும் சேர்ந்து செபிக்க வேண்டும்

viii.     அனைத்து சபை கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து மனித நேயத்துடன் கூடிய சமுதாய மேம்பாட்டு திட்டங்களில் சேவை செய்ய வேண்டும்.

 யோவா17:21-23. 21 “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!” இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும். 22நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன். 23இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும்.

144     திருச்சபை எவ்வாறு தூயதாக உள்ளது?

திருச்சபையை நிறுவியவரும், அதன் உள்ளிருந்து செயலாற்றுபவரும் கடவுள் ஆதலால் திருச்சபை தூயது ஆகும்.  தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் திருமுழுக்குப் பெறும் ஒவ்வொருவரும் தூய்மைப்படுத்தப்படுகிறார்கள். [823-829]

v  கிறிஸ்து திருச்சபையை தனது மனையாளாகக் கருதி, அவளைத் தூய்மையாக்க தம்மையே அதற்குக் கையளித்தார். அவளைத் தனது உடலாகப் பேணிக் காக்கின்றார்.  கிறிஸ்துவின் உடலாய் இருப்பதால் திருச்சபை புனிதமடைகிறது.

v  தூய ஆவியாரின் வல்லமையால் உயிர் பெறுகிறது.

v  மூவொரு கடவுள் நம்மைத் தொடும் போது அன்பில் வளர்கிறோம், புனிதமடைகிறோம், முழுமை பெறுகிறோம். 

v  அப்படி கடவுளால் தொடப்பட்டு கடவுளின் அன்பைப் பெற்று, அந்த அன்பை நம்மோடு பகிர்ந்து, விண்ணகத்திலிருந்து நம்மோடு உறவில் வாழ்ந்து, நமக்காக இறைவனிடம் பரிந்து பேசிக் கொண்டிருப்பவர்கள்தான் புனிதர்கள். 

v  அத்தகைய புனிதர்களும் அவர்களுள் முதன்மையானவரும், இறைவனின், கத்தோலிக்கத் திருச்சபையின் மற்றும் நமது தாயுமான அன்னை மரியாளும் விண்ணகத்திலிருந்து கத்தோலிக்கத் திருச்சபையை தொடர்ந்து புனிதப்படுத்தி வருகிறார்கள்.

v  நாமும் அந்த புனித நிலையை அடைய நமக்கு வழிகாட்டுகிறார்கள்.

v  இத்திருச்சபையில்தான் நம் மீட்புக்கான வழிமுறைகள் நிறைந்துள்ளன.  இத்திருச்சபையிலிருந்துதான் நாமும் புனிதத்தின் ஊற்றை பெற்றுக்கொள்கிறோம்.

145     ஏன் “கத்தோலிக்கத்’ திருச்சபை என்கிறோம்.

‘கத்தோலிக்’ என்ற சொல்லுக்கு ‘எங்கும் -Universal’, ‘முழுவதும் - Totality’,  ‘அனைத்தும் - Whole’ என்று பலவிதமாக பொருள் கொள்ளலாம். நம் திருச்சபையை  ‘கத்தோலிக்’ என்று அழைப்பதற்கு இரு கருத்துக்களைக் கூறலாம்.

          முதலாவது: நம் திருச்சபைக்குள் கிறிஸ்து உள்ளார்.  கிறிஸ்து எங்கெல்லாம் உள்ளாரோ அங்கெல்லாம் நம் திருச்சபை உள்ளது என்பது அதில் அடங்கியுள்ள உண்மை. இந்த அடிப்படைக் கருத்தின்படி பெந்தகோஸ்தே நாள் தொடங்கி கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் நாள்  மட்டும் அது கத்தோலிக்கத் திருச்சபையாகவே திகழும்.

          இரண்டாவது: மத்28:19-20 எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.  கிறிஸ்துவே தம் சீடர்களுக்கு கொடுத்த கட்டளையின் படி திருச்சபை உலகமெங்கும் ஸ்தாபிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். [830-831, 849-856]

எபே5:26-30. ஏனெனில் கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். 26வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். 27அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார். 28அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின்மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவராவார். 29தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார். 30ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள்.

146     திருச்சபைக்கும் யூதர்களுக்கும் உள்ள உறவு எத்தகையது?

இறைவன் அவர்களை

v தனது மக்களாகத் தேர்ந்துகொண்டதாலும்,

v அவர்களை அன்பு செய்ததாலும்

v முதன்முதலில் அவர்களோடு பேசியதாலும் (இறைவனுடைய வார்த்தைகளை முதன் முதலில் பெற்றுக்கொண்டவர்கள்.)

v அவரே ஒரு யூதராகப் பிறந்ததாலும்

யூதர்களை நமது மூத்த சகோதரர்களாகக் கருதுகிறோம்.  இந்த உண்மைகளே நம்மையும் யூதர்களையும் இணைக்கிறது.  கிறிஸ்துவே வாழும் இறைவனின் மகன் என்ற விசுவாசத்தில் நாமும் யூதர்களும் வேறுபட்டு இருக்கிறோம்.  இருப்பினும் மெசியாவின் இரண்டாம் வருகைக்கு காத்திருத்தலில் நாம் யூதர்களுடன் ஒன்றுபட்டுள்ளோம். [839-840]

Ø நமது விசுவாசத்தின் துவக்கம் அவர்களது விசுவாசம்

Ø அவர்களுடைய வேத நூல் நமது விவிலியத்தின் பழையஏற்பாடாகவும் முதல் பகுதியாகவும் அமைந்துள்ளது.

Ø  இரண்டாம் வத்திக்கான் சங்கம் கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததற்கு யூஊதர்கள் மேல் மட்டு குற்றம் சுமத்தக் கூடாது என்று தெளிவு படுத்தியுள்ளது..

147     நமது திருச்சபை மற்ற மதங்களை எவ்வாறு கண் நோக்குகிறது?

நமது திருச்சபை

q மற்ற மதங்களில் உள்ள நன்மை மற்றும் உண்மைகளை மதிக்கிறது.

q ‘மத சுதந்திரம் ஒரு மனித உரிமை’  என்ற கோட்பாட்டை மதிக்கிறது. 

q இருப்பினும் ‘கிறிஸ்து ஒருவரே மனித குலத்தின் மீட்பர்; அவரே வழியும், உண்மையும், வாழ்வும்’ என்பதை விசுவசித்து அறிக்கையிடுகிறது. [841-848]

இறைவனைத் தேடி நாடும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு நெருக்கமானவர்களே. இந்த நோக்கில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் நம்மோடு இன்னும் அதிகமாக ஒத்திருக்கிறார்கள்

       i.     அனைத்தையும் கடந்த, எல்லாம் வல்ல கடவுள் ஒருவரே என்ற கோட்பாட்டை விசுவசிப்பவர்கள் அவர்கள். [ கிறிஸ்துவம், யூதம் மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களும் மோனோதீஸம் = Monotheism =  ‘இறைவன் ஒருவரே’ என்ற மறைபொருளைக் கொண்ட மதங்கள்.]

      ii.     கடவுளே அனைத்தையும் படைத்தவர்; ஆபிரகாம் ஒருஇறைவாக்கினர் என்று விசுவசிப்பவர்கள்.

     iii.     அவர்கள் வேத புத்தகமாகிய குறானில் இயேசுவை இறைவாகினர்களில் ஒருவர் என்றும், மரியாள் அவரின் தாய் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

தனது மனச்சாட்சியின் படி வாழும் ஒருவர் கிறிஸ்துவையோ அல்லது கத்தோலிக்கத் திருச்சபயையோ அறியாதிருந்தாலும் அவரும் மீட்பை, முடிவில்லா வாழ்வை அடைவார் என்பது திருச்சபையின் போதனை. 

ஆனால் கிறிஸ்துவே வழியும், உண்மையும் வாழ்வும் என்று அறிந்த ஒருவர் கிறிஸ்துவை பின்பற்றவில்லையெனில் அவர் மீட்பை கண்டடைய முடியாது.  அவரைப் பொறுத்தவரை திருச்சபையால் அன்றி மீட்பு இல்லை (இதையே திருச்சபை Extra ecclesiam nulla salus அல்லது outside of the church there is no salvation என்று கூறுகிறது).

148     நமது திருச்சபையை  ‘அப்போஸ்தலிக்கத் திருச்சபை’ என்று ஏன் அழைக்கிறோம்?

 i.    அப்போஸ்தலர்களை அடித்தளமாகக்கொண்டு ஸ்தாபிக்கப் பட்டதாலும்,

ii.    அவர்களுடய விசுவாச பாரம்பரியத்தை நாம் மிக பற்றுறுதியாக ஏற்றுக்கொள்வதாலும்

iii.    அவர்களுடைய வழித்தோன்றல்களாகிய திருத்தந்தை மற்றும் ஆயர்களால் திருச்சபை ஆளப்படுவதாலும்

நமது திருச்சபையை அப்போஸ்த்தலிக்கத்  திருச்சபை என்று அழைக்கிறோம். [857-860, 869, 877]

v அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் பணிவாழ்வின் உடன் உழைப்பாளிகளாய் இருந்தவர்கள்.

v கிறிஸ்துவின் வாழ்வுக்கும், அரும் அடையாளங்களுக்கும், போதனைகளுக்கும், இறப்பு மற்றும் உயிர்ப்புக்கும் சாட்சிகளாய் இருந்தவர்கள்.

v தூய ஆவியை அவர்கள் மேல் பொழியப்பட்டவர்கள்.

v கிறிஸ்துவிடமிருந்து அப்போஸ்தலிக்க அதிகாரத்தைப் பெற்று உலகின் கடை எல்லைவரை நற்செய்தியை பறைசாற்றவும், திருச்சபையை நிறுவவும் கிறிஸ்துவின் தூதர்களாய் அனுப்பப் பெற்றவர்கள்.

v திருச்சபையில் ஒற்றுமையையும் ஸ்திரத்தன்மையையும் நிலை நிறுத்தியவர்கள்.

v திருத்தூதுப் பணியின் அப்போஸ்தலிக்க வாரிசுகளாகத், தேர்ந்து கொள்ளப்பட்டவர்களின் சிரமேல் கரங்களை வைத்து அப்பொஸ்தலிக்க  அதிகாரத்தை ஆயர்களுக்கும் அவர்கள் வழியாக குருக்களுக்கும் வழங்கியவர்கள்.

811 to 865 குறிப்புகளின் சுருக்கம்

தூய, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபை ஒன்றே

v  திருச்சபை

Ø  திருச்சபை என்பது ஒன்றே

Ø  ஏற்றுக்கொள்வது ஒரே கடவுளை

Ø  எற்றுக்கொண்டு அறிக்கையிடுவது ஒரே விசுவாசம்

Ø  பிறந்தது ஒரே திருமுழுக்கால்

Ø  இருப்பது ஒரே உடலாய்; அதனுள் உள்ள உயிர் தூய ஆவியார் ஒருவரே

Ø  வாழ்வது ஒரே நம்பிக்கையில்

Ø  பிரிவினைகளை களைவதில் அதன் முழுமை.

Ø  மணவாளனாம் கிறிஸ்து அவளைத் தூய்மைப்படுத்த தன்னையே கையளித்தார்.

Ø  அது புனிதமானது

Ø  கடவுளே அதன் படைப்பாளி

Ø  பாவிகள் உறுபினர்களாக இருந்தாலும் திருச்சபை பாவமற்றது

Ø  அதன் புனிதம் புனிதர்களில் மிளிர்கிறது; அன்னை மரியாளில்  முற்றிலும் புனிதமடைகிறது

Ø  உலகமெங்கும் நிறுவப்பட்டுள்ளதாலும், அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாலும் கத்தோலிக்கத் திருச்சபை என அது அழைக்கப் படுகிறது

Ø  இயல்பால் நற்செய்தியை அறிவிப்பது அதன் பணி

Ø  எல்லா மக்களிடையேயும், எல்லா காலங்களிலும் நற்செய்தி பணிபுரிய அனுப்பப்படுகிறது.  விசுவாசத்தின் முழுமையை அறிக்கையிடுகிறது.

Ø  பன்னிரு அப்போஸ்தலர்களை அழிவுறாத அடித்தளமாகக்கொண்டு எழுப்பப்பட்டதால் அப்போஸ்தலிக்கத் திருச்சபை என்று அழைக்கப்படுகிறது.

Ø  உண்மையில் தவறிழைக்க இயலாதது

Ø  பேதுருவை தலைவராகக் கொண்டு ஸ்தாபிக்கப் பட்டது

Ø  துவக்கத்தில் பேதுருவையும் அனைத்து திருத்தூதர்களைக் கொண்டும் அதன் பின் அவர்கள் வழிவந்தவர்களான திருத்தந்தையர்கள், திருத்தந்தையர்களோடு இணைந்து பணியாற்றும் ஆயர்களைக் கொண்டும் கிறிஸ்துவே ஆழ்கின்றார்.

Ø  எனவேதான் தூய கத்தோலிக்க அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன் என்று அறிக்கையிடுகிறோம்.

Ø  இருந்தபொழுதிலும், கடவுள் மற்றும் புனிதம் சார்ந்த உண்மைகள் திருச்சபைக்கும் வெளியிலும் காணக்கிடக்கின்றன.[866-870]

149      திருச்சபை- கிறிஸ்துவின் நம்பிக்கைக்கு உரியது- படிநிலை அமைப்பு –

பொதுநிலையினர் – அர்ப்பண வாழ்வு.

149     பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்கத் திருச்சபையின் கட்டமைப்பு எவ்வாறு அமைந்துள்ளது?

v திருச்சபை அங்கத்தினர்களை பொது நிலையினர் மற்றும் குருக்கள்/துறவரத்தார் என இரு வகைப்படுத்தலாம். அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்ற  கருத்தில் இருவரும் ஒரே மதிப்புடையவர்கள்.  வெவ்வேறு பணிகளைச் செய்கிறார்கள்  என்பதைத் தவிர அனைத்திலும் இரு பிரிவினருமே ஒரே முக்கியத்துவம் கொண்டவர்களே. 

v பொதுநிலையினர்: உலகில் உள்ள மாந்தர் அனைவரையும் இறையரசின் பாதையில் இட்டுச் செல்வதே பொதுநிலையினரின் பணியாகும்

v அருட்பொழிவுசெய்யப்பட்ட பணியாளர்கள்: திருச்சபை ஆளுகை, போதித்தல் மற்றும் அர்ச்சித்தல் ஆகிய பணிகள் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

v இந்த இரு நிலையிலுமே கற்பு, தரித்திரம்,  கீழ்ப்படிதல் ஆகிய வார்த்தைப்பாடுகளை ஏற்று, இறைவனுக்குத் தங்களை சிறப்பாக மற்றும் முழுமையாக அர்ப்பணித்தவர்கள் இருக்கிறார்கள். [871-876, 934,935]

கிறிஸ்தவர்கள்

q திருமுழுக்கின் வழியாக  கடவுளின்  மக்களாகி, கிறிஸ்துவுக்குள் ஓருடலாக ஆக்கப்பட்டவர்கள்

q இதன் வழியாக கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் குருத்துவத்திலும், இறைவாக்குப் பணியிலும், அதிகாரம் தாங்குவோரின் அவையிலும் அவரவர்களுக்கு உரிய வழியில் பங்கு பெறுகிறார்கள்.

q திருச்சபைக்கு இறைவன் கட்டளையிட்டுள்ள பணியில் நமது அழைத்தலுக்கு எற்றவாறு பங்கு கொள்ள வேண்டும்.  அதன் வழியாக கிறிஸ்துவின் உடலை கட்டிஎழுப்புவதில், திருமுழுக்கால் புதுப்பிறப்பு அடைந்த ஒவ்வொருவரும், தத்தம் சக்திக்கேற்ப, பங்கு கொள்ள வேண்டும்.

q தமது வாழ்வால் நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கு சாட்சிகளாய் இருப்பது நமதுகடமையுமாகும்.

q இறைவன் ஒவ்வொருவரையும் வெவ்வேறு பாதைகளில் தன்னுடன் பயணிக்க வைக்கிறார்.

v  பொதுநிலையினர் அனைத்துமக்களோடும் கலந்து வாழ்வதால் அவர்கள் குடும்பம், செய்யும் தொழில் மற்றும் ஆற்றும் பணி வழியாக இறைஅரசைக் கட்டி எழுப்பத் தேர்ந்தெடுக்கிறார்.  இந்த நோக்கங்களுக்காகத் திருமுழுக்கு மற்றும் உறுதி பூசுதல் வழியாக தேவையான கொடைகளை அளிக்கிறார்.

v  வேறு சிலரிடம் வேத போதக பணியை ஒப்படைத்துள்ளார். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள்: ஆளுகை, போதனை மற்றும் அருசாதனங்கள் வழியாக பொதுநிலையினரை அர்ச்சித்தல்.  இவர்கள் தங்கள் விருப்பதின் படி எந்தவொரு பணியையும் ஆற்றமுடியாது.  அவர்கள் சார்ந்துள்ள துறவர சபைகள் வழியாக இறைவனே அவர்கள் ஆற்றவேண்டிய பணிகளுக்கு அனுப்புகிறார். அதற்கு தேவையான தெய்வீக ஆற்றலை அந்தந்த சபைகள் வழியாகவே அளிக்கிறார். அந்த ஆற்றலைக்கொண்டே கிறிஸ்துவின் இடத்தில் இருந்து அருட்சாதனங்களை நிறைவேற்றுகிறார்கள். 

q எத்தகைய அழைப்பானாலும் அது இறைவனிடமிருந்தேவருகிறது என்று அறிந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்.  அனைத்து அழைப்புகளுக்கும் ஒரே நோக்கமே:  இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய திருச்சபையை அவரின் இரண்டாம் வருகையின் மட்டும் உலகின் கடை எல்லைவரை கொண்டுசென்று அனைவரையும் இறை ஆட்சிக்கு உட்படுத்துவது.

150     பொதுநிலையினர் எதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்?

சமுதாயத்தில் மக்கள் நடுவே தங்களது கிறிஸ்தவ வாழ்வாலும், பிறர் அன்பு சேவையாலும் (மத்25:35-40) இறையாட்சியை வளரச் செய்யவே அழைக்கப்பட்டுள்ளார்கள்.  [897-913, 940-943]

Ø  பொதுநிலையினர் இரண்டாம் தர கிறிஸ்தவர்கள் அல்ல.  ஏனெனில் பொது குருத்துவதில் சில பணிகளை அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.

Ø  நமது அன்றாட வாழ்வில் அனைத்து சூழ்நிலைகளிலும் உள்ள மக்கள் (படிக்கும் பள்ளி, கல்லூரி, நம் குடும்பம் அமைந்துள்ள் பகுதி) நற்செய்தியை அறியச்செய்வதும்,  இயேசு கிறிஸ்துவை அறியச்செய்வதும், அவரை அன்பு செய்ய வைப்பதுமே நமது முதன்மையான அழைத்தல்.

Ø   நாம் பணி செய்தாலும், தொழில் செய்தாலும்,  அரசியலில் இருந்தாலும் நமது விசுவாச வாழ்வு அங்கெல்லாம் ஒர் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தவேண்டும்.

Ø  திருச்சபையின் பணிகளுக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். ஆலய மற்றும் பங்கு பணிகளை முன்னின்று செய்யலாம்; பங்கு குழுக்களில் உறுப்பினர்களாக இருந்து சேவை செய்யலாம். 

Ø  சிறுவர்களும் இளைஞர்களும் திருச்சபையின் தேவைகளுக்கு நாம் எந்தவகைகளில் உதவலாம் என்பதில் எப்போதும் கருத்தாய் இருக்கவேண்டும்.

151     திருச்சபை ஏன் ஜனநாயக அமைப்பாக விளங்க முடியாது?

ஜனநாயக அமைப்பில் ஆள்பவர்களுக்கு ஆள்வதற்கு வேண்டிய அதிகாரம் மக்களிடமிருந்து வருகிறது.  ஆனால் திருச்சபையில் அனைத்து அதிகாரங்களும்  கிறிஸ்துவிடமிருந்து வருகிறது.  எனவேதான் திருச்சபையில் அதிகாரம் கிறிஸ்து>திருத்தந்தை>ஆயர்கள்>குருக்கள் என்ற “படிநிலைக் கட்டமைப்பு” (Hierarchical Structure) முறையில் செயல்படுகிறது. இருப்பினும் “கூட்டுப் பொறுப்பு” அல்லது ”பொறுப்புப் பகிர்வு” (Collegial Structure) என்ற விதிமுறையில் கிறிஸ்து திருச்சபையை நடத்திச் செல்கிறார். [874-879]

படிநிலைக் கட்டமைப்பு: திருச்சபயின் “படிநிலைக் கட்டமைப்பில்” அருட்பொழிவு செய்யப்பட்ட குருக்கள் வழியாக கிறிஸ்துவே செயலாற்றுகிறார் என்பதே நமது விசுவாசம்.  இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமானால் குருக்கள் தங்கள் சொந்த சக்தியாலோ ஆற்றலாலோ எந்த ஒரு இறைவனின் கொடையையும் மக்களுக்கு அளிப்பதில்லை, அளிக்கவும் முடியாது. உதாரணமாக குருக்கள் கிறிஸ்துவின் அதிகாரத்தினாலேயேயும் ஆற்றலாலேயும்தான் திருவருட்சாதனங்களை நிறைவேற்றுகிறார்கள் மற்றும் போதிக்கிறார்கள்.

கூட்டுப் பொறுப்பு அல்லது பொறுப்புப் பகிர்வு கட்டமைப்பு:

Ø கிறிஸ்து தனது முழு அதிகாரத்தையும் முழு விசுவாசத்தையும் தனது பன்னிரு திருத்தூதர்களிடம் ஒப்படைதார்.

Ø இந்த திருத்தூதர்களின் வழிவந்துகொண்டிருக்கும் அருட்பொழிவு செய்யப்பட்ட  அருட்பணியாளர்கள் திருத்தந்தையை தலைவராகவும்,  வத்திக்கானை தலைமைப் பீடமாகவும் (Petrine ministry presiding) கொண்டு திருச்சபையை ஆள்கிறார்கள்.

Ø கத்தோலிக்கத் திருச்சபையின் பல்வேறு அமைப்புகள்/ குழுக்கள் (councils of the church) (உதாரணம்: அன்பியங்கள், பங்கு பேரவை, பங்கு, மறைமாவட்டம், தமிழக ஆயர்கள் கூட்டமைப்பு போன்ற) இந்த கட்டமைப்பின் அடிப்படை மற்றும் அத்தியாவசியமான அங்கங்களாகும்.

Ø தூய ஆவியின் பலவகைப்பட்ட கொடைகளை மக்களுக்குப் பெற்றுத்தருவதற்கும், திருச்சபை உலகெங்கும் செயலாற்றுவதற்கும் (Universality of the Church) அருட்பணியாளர்களின் நிர்வாக அமைப்புகளும் (Synods) பொதுநிலையினரின் நிர்வாக அமைப்புகளும் (councils) மிகுந்த பயன் உள்ளவைகளாக உள்ளன.

152     திருத் தந்தையின் பொறுப்பு யாது?   

தூய பேதுருவின் ஸ்தானத்தில் அவர் பணியாற்றுவதாலும், ஆயர்கள் கல்லூரியின்/ கூட்டமைப்பின்  தலைவராக இருப்பதாலும்

   i.    அகில உலக ஆயர்களுக்குத் தலைவராக விளங்குகிறார்.

  ii.    திருச்சபையின்  முழுமையான ஒருமைப்பாட்டிற்கு முலமும், ஆதாரமும், உத்திரவாதமும் அவரே.

 iii.    கீழ் கண்ட பணிகளுக்கு முதன்மை அதிகாரியாக அதிகாரம் பெற்றவராக இருக்கிறார்

a.    மேய்ப்புப் பணி / ஆயர் பணி

b.    கத்தோலிக்கக் கோட்பாடுகளில் இறுதி முடிவெடுத்தல்

c.    ஒழுங்கு நடவடிக்கைகள் மீது இறுதி முடிவெடுத்தல். [880-882, 936-937]

v கிறிஸ்து பன்னிருவரை திருத்தூதர்களாக நியமித்த போது ஒரு நிலையான, உறுதியான அப்போஸ்தலிக்க அமைப்பாக (College)) நிறுவினார். மத்தேயு 16:18எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு*; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.  19விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார். இவ்வாராக இயேசு பேதுருவுக்குத் திருத்தூதர்களிடையே சிறப்பான முதன்மை ஸ்தானத்தைக் கொடுத்தார்.  இதன் வழி அவர் ஆதித் திருச்சபையின் தலைமை அதிகாரத்தைப் பெற்றார்.

v உரோமையை தலைமைப் பீடமாகக் கொண்ட திருத்தந்தை (தலைமை ஆயர்) தூய பேதுருவின் ஸ்தானத்திலும், திருச்சபையின் ஆயர்கள் மற்ற பதினோரு திருத்தூதர்களின் ஸ்தானத்திலும் ஒருவரோடு ஒருவர் முழுமையான புரிதலிலும், ஒற்றுமையிலும்  இருந்து திருச்சபையை ஆண்டுவருகிறார்கள்.

v உரோமை திருச்சபைக்கு அவர் (பேதுரு) தலைவராக இருந்ததாலும், உரோமை அவர் வேதசாட்சியாக மரித்த இடமாக இருந்ததாலும் உரோமையே தொடக்கத்திருச்சபையின் அதிகார மையமாகவும், திருச்சபையின் செயல்பாடுகள் பற்றிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் தலைமை பீடமாகவும் திகழ ஆரம்பித்தது.

v உரோமையிலிருந்து பிறப்பிக்கப்படும் அனைத்து கோட்பாடுகளும், கொள்கை முடிவுகளும், உத்தரவுகளும் உண்மையான, முழுமையான, களங்கமற்ற மற்றும் தூய்மையான அப்போஸ்தலிக்க நம்பிக்கை மற்றும் வேத சத்தியங்கள் என்பதால் ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகமும் உரோமை தலைமைப் பீடத்தை, அதன் வழிகாட்டுதலை, அதன் உத்தரவுகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

v இன்றுவரை உரோமையில் உள்ள தலைமை ஆயர் (திருத் தந்தை) தூய பேதுருவாகவே ஏற்றுக்கொள்ளப் படுகிறார்.  இயேசுக்கிறிஸ்துவே திருச்சபையின் தலைமை ஆயராக இருந்து திருத்தந்தை வழியாகச் செயலாற்றுகிறார் என்பதே நமது விசுவாசம்.

v எனவே திருத்தந்தை தலைமை ஆயராகவும், கத்தோலிக்கத் திருச்சபையின் கோட்பாடுகளின் பொறுப்பாளியாகவும் இருந்து உண்மையான விசுவாசத்தைக் கட்டிக்காத்து அதனை உலகமெங்கும் அறிவிப்பதைக் கண்காணிக்கின்றார்.

v விசுவாசம் மற்றும் ஒழுக்கம் இவற்றில் ஏற்றுக்கொள்ள முடியாத / மன்னிக்கமுடியாத தவறிழைக்கப் படும்போது

          i.     தவறான வேதபோதனையில் ஈடுபடும் ஆணையத்தின் (Commissions) போதிக்கும் அதிகாரத்தை  திரும்பப்பெறுதல்.

         ii.     அருட்பொழிவு செய்யப்பட்ட அருட்பணியாளர்களிடமிருந்து குருத்துவ அருட்சாதனத்தை ரத்து செய்தல்.

153     ஆயர்கள் திருத்தந்தைக்கு எதிராக பேசவோ செயலாற்றவோ முடியுமா?  அதேபோல் திருத்தந்தை ஆயர்களுக்கு எதிராக பேசவோ செயலாற்றவோ முடியுமா?

i.      ஆயர்கள் திருத்தந்தைக்கு எதிராக பேசவோ செயலாற்றவோ முடியாது;  மாறாக திருத்தந்தையுடன் இணைந்து அவரின் கட்டளைப்படிதான் பேசவோ செயலாற்றவோ முடியும்.

ii.      தெளிவாக வரயறுக்கபட்டுள்ள கோட்பாடுகளின் (cases) மட்டில் ஆயர்களின் ஒப்புதல் இன்றி திருத்தந்தை முடிவுகள் எடுக்க முடியும்.  [883-885, 880-890]

154     திருத்தந்தை தவறிழைக்கமுடியாதவரா?

ஆம்.  ஆனால் ஒரு மறை உண்மையை , தனது அதிகாரபூர்வமான இருக்கையில் அமர்ந்து தெளிவுபடுத்தும் போது மட்டும் திருத்தந்தை வழுவா வரம் கொண்டுள்ளார்.  அதாவது விசுவாசம் மற்றும் ஒழுக்க நெறிகள் பற்றி  அதிகாரபூர்வ எடுக்கும் போது, திருத்தந்தையோடு ஆயர்களின் குழுமமும் நீதித்தீர்ப்புகள் வழங்கும் போது வழுவாவரம் கொண்டுள்ளது.  உதாரணம்: திருச்சபை ஐக்கிய குழு எடுக்கும் முடிவுகள். [888-892]

திருத்தந்தையின் வழுவாவரம் அவருடைய ஒழுக்கநெறி மற்றும் அவரது அறிவுக்கூர்மையோடு தொடர்புடையது அல்ல.  உண்மையில் வழுவாவரம் திருச்சபையின் ஒரு பன்பைக் குறிக்கிறது.  ஏனெனில் இயேசு திருச்சபையை தூய ஆவியின் மூலம் உண்மையின் வழியில் நடத்திச்செல்கிறார்.  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விசுவாச சத்தியம் மறுக்கப்படும்போதோ அல்லது தவறு என்ற விவாதத்திற்கு உட்படும்போதோ எது உண்மை எது தவறு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு திருச்சபை இறுதி அதிகாரம் கொண்டிருக்கவேண்டும்.  இந்த அதிகாரத்தை திருத்தந்தை கொண்டிருக்கிறார்.  திருத்தந்தை பேதுருவின் நிலையிலும் தலைமை ஆயராகவும் உள்ளார்.  இதன் அடிப்படையில் மாற்றுகருத்துள்ள ஒரு விசுவாச சத்தியத்தை நெறிப்படுத்துவதற்கு திருத்தந்தை அதிகாரம் பெற்றுள்ளார்.  இந்த அதிகாரம் திருச்சபையின் விசுவாச பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக உள்ளது.  இந்த நெறிப்படுத்தப்பட்ட விசுவாச சத்தியம் எல்லா காலத்திற்கும் உறுதியானதும், நம்பிக்கக்குறியதுமாக  விசுவாசிகளுக்கு அளிக்கப்படுகிறது.  இதை விசுவாசக் கோட்பாட்டின் விளக்கமாக ஏற்றுக்கொள்கிறோம்.  புதிதான பெரிய விசுவாசக் கோட்பட்டை வரையறுப்பது மிகமிக அரிது. சமீபத்தில் இத்தகைய நிகழ்வு 1950ல் நடந்தது.

155     ஆயர்களின் பணி என்ன?

ஆயர்கள் தங்களிடம் ஒப்ப்படைக்கப்பட்டுள்ள மறைமாவட்டதின் பொறுப்பாளர்கள். அத்துடன் உலகம் முழுமைக்கான திருச்சபையின் அனைத்து பணிகளிலும் அவர்களுக்கு பங்கு உண்டு.  தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தையும், பொறுப்புக்களையும் சக ஆயர்களுடன் இணந்தும் திருத்தந்தயின் ஆழுகைக்கு கீழும் திருச்சபையின் தேவைகளுக்காகவும், நலன்களுக்காகவும் செயலாற்றுகிறார்கள். [886-887,893-896, 938-939]

i.     இவர்கள் கிறிஸ்துவால் தனிப்பட்ட முறையில் தேர்ந்துகொள்ளப்பட்டு அப்போஸ்தலிக்க பணிக்காய் அனுப்பப்பட்டவர்கள்.  எனவே கிறிஸ்துவின் திருத்தூதர்களாய் மற்றும் கிறிஸ்துவின் சாட்சிகளாய் இருப்பது இவர்களது தலையாய பணியாகும்.

ii.     எனவே அவர்கள் கிறிஸ்துவை மனிதரிடமும், மனிதரை கிறிஸ்துவிடமும் கொண்டு சேர்ப்பவர்கள்.   போதனைகள் மூலமும், அருட்சாதனங்களை வழங்குவதின் மூலமும் மற்றும் திருச்சபயை நிர்வகிப்பதின் மூலமும் இந்த பணியைய் செய்கிறார்கள்.

iii.     ஆயர் திருத்தந்தையின் முகவரோ அல்லது உதவியாளரோ அல்ல.  திருத்தூதர்களின் வழித்தோன்றல்கள் என்ற முறையில் ஓர் ஆயர் தனிப்பட்ட திருத்தூது அதிகாரத்தால் தன் கடமைகளை நிறைவேற்றுகிறார்.  இருப்பினும் திருத்தந்தையோடு இணைந்தும் அவருக்குப் பணிந்துமே செயலாற்றுகிறார்.

156      அருட்பணி அழைத்தலை ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் வாழ்வு முழுவதும் ஏழ்மையிலும், திருமணம் செய்துகொள்ளாது கற்போடும் மற்றும் கீழ்படிதலிலும் வாழவேண்டும் எனவும் ஏன் விரும்புகிறார்?

இறைவன் நம் மேல் அன்பு கொண்டுள்ளது மட்டுமல்ல நமது அன்பிற்காக ஏக்கத்தோடும் உள்ளார்.  நாம் அவருக்கு செலுத்தும் அன்பின் ஒர் வகைதான் நம்மையே முழுவதும் அவருக்கு அற்பணிப்பது.  எவ்வாறென்றால்  கிறிஸ்துவைப்போல் முழுமையான ஏழ்மை, கற்பு மற்றும் கீழ்ப்டிதலில்   வாழ்வது.  ஒருவர் இவ்வாறு வாழும்போது தனது அன்பு, சிந்தனை மற்றும் செயல் அனைத்தும் இறைவனையும் அடுத்திருப்பவர்களை மட்டுமே சார்ந்திருக்கும்.  [914-933, 944-945]

q திருச்சபை நிறுவப்பட்ட காலத்திலிருந்து தனிப்பட்ட சில கிறிஸ்தவர்கள் இறையாட்சியின் மதிப்பீடுகளுக்காக தங்களை முழுவதுமாக இயேசுவின் கரங்களில் ஒப்படைத்துவிட்டனர்.  

q மனிதரின் பார்வையில் மிக மதிப்புமிக்கதாகக் கருதப்பட்ட அவர்களது சொத்து, குறிக்கோள், லட்சியம், உலக இன்பங்கள் மற்றும் குடும்ப வாழ்வின் வழி கிடைக்கும் அன்பு, மகிழ்ச்சி அனைத்தையும் இறைவனுக்காகவும் இறையாட்சிக்குள் மற்றவரையும் கொண்டுவருவதற்காகவும் முழுமையாக இழந்தனர். அதுவே இறைவனை அன்புசெய்ய தங்களுக்கு முழு சுதந்திரத்தை அளிக்க வல்லது என்பதை உறுதியாக நம்பினார்கள்,

q உலகம்தான், உலகைச் சார்ந்தவைதான், அனைத்தும் என்பதை உதறித் தள்ளிவிட்டு தன் மணாளனான கிறிஸ்துவிடம் சேர்ந்து நித்திய காலத்திற்கும் அவரை முகமுகமாய் தரிசித்து அவரோடு வாழ்வதே உண்மையான உன்னதமான மகிழ்ச்சி என்பதை ஏற்றுக்கொண்டவர்கள்.

q திருமுழுக்கின்போது விதைக்கப்பட்ட அர்ப்பணம் என்ற பண்பு இத்தகைய வாழ்வின் வழிதான் முழுமைபெற முடியும் என்று விசுவசித்தவர்கள்.

871 to 933 குறிப்புகளின் சுருக்கம்

கிறிஸ்துவின் நம்பிக்கை – படிநிலை அமைப்பு, பொதுநிலையினர்; அர்ப்பண வாழ்வு

v  திருச்சபையில் அருட்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் என்ற இரு வகையினர் உள்ளனர்.  இரு பிரிவினரிடையேயும் நற்செய்தி காட்டும் வழியில் இறைவனுக்கு அர்பணிக்கப்பட்டவர்களும், இறைபணி ஆற்றுபவர்களும் உள்ளனர்.  இரு பிரிவினருமே மீட்புப் பணியில் கிறிஸ்துவின் உடன் உழைப்பாளிகளாக பணிசெய்கிறார்கள்.[934]

v  விசுவாசத்தை அறிக்கையிடவும் இறையரசை இந்த மண்ணில் ஊன்றச்செய்யவும் கிறிஸ்து திருத்தூதர்களையும் அவர்கள் வழிவந்தவர்களையும் அனுப்புகிறார்.  தனது இறையாட்சி பணியில் அவர்களுக்கு பங்களிக்கிறார். கிறிஸ்துவின் இடத்தில் இருந்து கிறிஸ்துவாக செயல்படும் அதிகாரத்தை கிறிஸ்துவிடமிருந்து இவர்கள் பெற்றுள்ளனர்.[935]

v  கிறிஸ்து புனித பேதுருவை  திருச்சபையின் அடித்தளமாக ஆக்கினார்.  விண்ணகத்தின் திறவுகோலை அவரிடம் ஒப்படைத்தார்.  உரோமை திருச்சபையின் ஆயர் பேதுருவின் வழிவருபவர் என்றும்  எனவே திருத்தந்தை என்றும் அழைக்கப் படுகிறார். திருத்தந்தை ஆயர்கள் குழுமத்தின் தலைவர் ஆவார். மேலும் இந்த உலகில் கிறிஸ்துவின் பிரதிநிதியாகவும்,  அகில உலகத் திருச்சபையின் ஆயராகவும் உள்ளார்.[936]

v  ஆன்மீகப் பணியில் இறுதியான முடிவெடுக்கும் தலைமைப் பீடம் இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.[937]

v  தூய ஆவியால் திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர்கள் திருத்தூதர்கள் வழி வருபவர்கள்.  அவர்கள் ஆளுகையில் உள்ள திருச்சபையின் அடித்தளம்;  அதன் ஒற்றுமைக்கு பொறுப்பாளிகள்.[938]

v  குருக்கள்,  அவர்களுடன் இணைந்து பணியாற்றுபவர்கள் துணையோடு

Ø கிறிஸ்தவ விசுவாசத்தை அதிகாரத்தோடு போதித்தல்

Ø இறைவழிபாடுகளை, சிறப்பாக நற்கருணையை கொண்டாடுதல்

Ø நல்ல மேய்ப்பர்களாக, அவர்கள் ஆளுகைக்கு உட்பட்ட திருச்சபையை, வழிநடத்துதல்

ஆகிய கடமைகள் ஆயர்களுடையது.[939]

v  பொதுநிலையினர் உலகத்தின் மத்தியில்  கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள்.  எனவே கிறிஸ்துவின் ஆற்றலைக் கொண்டு உலகிற்கு புளிக்காரமாக இருந்து திருத்தூது பணியாற்ற கடவுளால் அழைக்கப்பட்டுள்ளனர்.

v  கிறிஸ்துவின் குருத்துவத்திலே பங்கேற்கிறார்கள்

v  தனிமனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்ககை மற்றும் திருச்சபை வாழ்க்கை போன்ற பல பரிமாணங்களில் திருமுழுக்கு மற்றும் உறுதிபூசுதல் வழியாக தாங்கள் பெற்ற அருளை பிறருக்கு வெளிப்படுத்துகிறார்கள்.

v  அதன் வழியாக, [திருமுழுக்கு பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட,] புனித வாழ்வுக்கான அழைப்பினை நிறைவேற்றுகிறார்கள்.[941]

v  இறைவாக்குப் பணிக்கு தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்ற தகுதியில் எல்லா மனித இனங்களுக்கும், எல்லா சூழ்நிலைகளிலும் கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக இருக்க அழைக்கப்பட்டுள்ளார்கள்.[942]

v  இறைஅரசு பணிக்கு அழைக்கப்பட்டவர்கள் என்ற தகுதியில், தன்மேலும் உலகத்தின்மேலும் ஆட்சிசெய்யும் பாவத்தை வேரறுக்கவும் சுயநலத்தை வெறுத்து புனித வாழ்க்கை வாழவும் பொதுநிலையினர் ஆற்றல் பெற்றுள்ளனர்.[943]

v  விவிலிய வழிகாட்டுதலின் அடிப்படையில் ஏழ்மை, கற்பு மற்றும் கீழ்படிதல் என்ற வாழ்கை நெறிகளை ஏற்ப்பதாக இறைமக்கள் முன்னிலையில் அறிக்கையிட்டு; அது திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில்; அவற்றில் உறுதியாக வாழ்வதே கடவுளுக்கு ஏற்ற அர்ப்பண வாழ்வு.[944]

v  அர்பணவாழ்வை (consecrated life) தேர்ந்துகொண்டவர்கள், தாங்கள் பெற்ற திருமுழுக்கின் அருளை ஆழப்படுத்தி தங்களையே இறவனுக்கு முழுமையாக அர்ப்பணித்து அவரை அன்பு செய்கிறார்கள்.   இவ்வாறாக இறைவனின் பணியிலும் திருச்சபையின் அனைத்து நன்மைக்காகவும் இன்னுமாகத் தங்களை அர்பணித்து தங்களையே புனிதப் படுத்திக்கொள்கிறார்கள். 

871 to 933 குறிப்புகளின் சுருக்கம்

கிறிஸ்துவின் நம்பிக்கை – படிநிலை அமைப்பு, பொதுநிலையினர்; அர்ப்பண வாழ்வு

v  திருச்சபையில் அருட்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் என்ற இரு வகையினர் உள்ளனர்.  இரு பிரிவினரிடையேயும் நற்செய்தி காட்டும் வழியில் இறைவனுக்கு அர்பணிக்கப்பட்டவர்களும், இறைபணி ஆற்றுபவர்களும் உள்ளனர்.  இரு பிரிவினருமே மீட்புப் பணியில் கிறிஸ்துவின் உடன் உழைப்பாளிகளாக பணிசெய்கிறார்கள்.[934]

v  விசுவாசத்தை அறிக்கையிடவும் இறையரசை இந்த மண்ணில் ஊன்றச்செய்யவும் கிறிஸ்து திருத்தூதர்களையும் அவர்கள் வழிவந்தவர்களையும் அனுப்புகிறார்.  தனது இறையாட்சி பணியில் அவர்களுக்கு பங்களிக்கிறார். கிறிஸ்துவின் இடத்தில் இருந்து கிறிஸ்துவாக செயல்படும் அதிகாரத்தை கிறிஸ்துவிடமிருந்து இவர்கள் பெற்றுள்ளனர்.[935]

v  கிறிஸ்து புனித பேதுருவை  திருச்சபையின் அடித்தளமாக ஆக்கினார்.  விண்ணகத்தின் திறவுகோலை அவரிடம் ஒப்படைத்தார்.  உரோமை திருச்சபையின் ஆயர் பேதுருவின் வழிவருபவர் என்றும்  எனவே திருத்தந்தை என்றும் அழைக்கப் படுகிறார். திருத்தந்தை ஆயர்கள் குழுமத்தின் தலைவர் ஆவார். மேலும் இந்த உலகில் கிறிஸ்துவின் பிரதிநிதியாகவும்,  அகில உலகத் திருச்சபையின் ஆயராகவும் உள்ளார்.[936]

v  ஆன்மீகப் பணியில் இறுதியான முடிவெடுக்கும் தலைமைப் பீடம் இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.[937]

v  தூய ஆவியால் திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர்கள் திருத்தூதர்கள் வழி வருபவர்கள்.  அவர்கள் ஆளுகையில் உள்ள திருச்சபையின் அடித்தளம்;  அதன் ஒற்றுமைக்கு பொறுப்பாளிகள்.[938]

v  குருக்கள்,  அவர்களுடன் இணைந்து பணியாற்றுபவர்கள் துணையோடு

Ø கிறிஸ்தவ விசுவாசத்தை அதிகாரத்தோடு போதித்தல்

Ø இறைவழிபாடுகளை, சிறப்பாக நற்கருணையை கொண்டாடுதல்

Ø நல்ல மேய்ப்பர்களாக, அவர்கள் ஆளுகைக்கு உட்பட்ட திருச்சபையை, வழிநடத்துதல்

ஆகிய கடமைகள் ஆயர்களுடையது.[939]

v  பொதுநிலையினர் உலகத்தின் மத்தியில்  கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள்.  எனவே கிறிஸ்துவின் ஆற்றலைக் கொண்டு உலகிற்கு புளிக்காரமாக இருந்து திருத்தூது பணியாற்ற கடவுளால் அழைக்கப்பட்டுள்ளனர்.

v  கிறிஸ்துவின் குருத்துவத்திலே பங்கேற்கிறார்கள்

v  தனிமனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்ககை மற்றும் திருச்சபை வாழ்க்கை போன்ற பல பரிமாணங்களில் திருமுழுக்கு மற்றும் உறுதிபூசுதல் வழியாக தாங்கள் பெற்ற அருளை பிறருக்கு வெளிப்படுத்துகிறார்கள்.

v  அதன் வழியாக, [திருமுழுக்கு பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட,] புனித வாழ்வுக்கான அழைப்பினை நிறைவேற்றுகிறார்கள்.[941]

v  இறைவாக்குப் பணிக்கு தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்ற தகுதியில் எல்ல மனித இனங்களுக்கும், எல்லா சூழ்நிலைகளிலும் கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக இருக்க அழைக்கப்பட்டுள்ளார்கள்.[942]

v  இறைஅரசு பணிக்கு அழைக்கப்பட்டவர்கள் என்ற தகுதியில், தன்மேலும் உலகத்தின்மேலும் ஆட்சிசெய்யும் பாவத்தை வேரறுக்கவும் சுயநலத்தை வெறுத்து புனித வாழ்க்கை வாழவும் பொதுநிலையினர் ஆற்றல் பெற்றுள்ளனர்.[943]

v  விவிலிய வழிகாட்டுதலின் அடிப்படையில் ஏழ்மை, கற்பு மற்றும் கீழ்படிதல் என்ற வாழ்கை நெறிகளை ஏற்ப்பதாக இறைமக்கள் முன்னிலையில் அறிக்கையிட்டு; அது திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில்; அவற்றில் உறுதியாக வாழ்வதே கடவுளுக்கு ஏற்ற அர்ப்பண வாழ்வு .[944]

v  அர்பணவாழ்வை (consecrated life) தேர்ந்துகொண்டவர்கள், தாங்கள் பெற்ற திருமுழுக்கின் அருளை ஆழப்படுத்தி தங்களையே இறவனுக்கு முழுமையாக அர்ப்பணித்து அவரை அன்பு செய்கிறார்கள்.   இவ்வாறாக இறைவனின் பணியிலும் திருச்சபையின் அனைத்து நன்மைக்காகவும் இன்னுமாகத் தங்களை அர்பணித்து தங்களையே புனிதப் படுத்திக்கொள்கிறார்கள்.  .[945]

புனிதர்களின் உறவை விசுவசிக்கிறேன்

157     புனிதர்களின் உறவு என்றால் என்ன?

திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரை முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அன்புசெய்யும் அனவரும் (அவர்கள் உயிரோடு இருப்பவர்களானாலும் இறந்தவர்களானாலும்) ஒரே உறவில் வாழ்கிறோம்.  இந்த உறவையே அல்லது இந்த மறை உண்மையையே புனிதர்கள் உறவு என்கிறோம்.  இந்த உறவின் (Reachout) பரிமாணம் விண்ணகத்தையும், மண்ணகத்தையும் உள்ளடக்கியது.  நாம் அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஒரே உடலாய் இருக்கிறோம் என்பதே இந்த மறை உண்மையின் பொருள். [946-962]

Ø நாம் எண்ணுவதைவிட அல்லது கற்பனை செய்யக்கூடியதை விட திருச்சபை பெரிதும், உயிர் உள்ளதும் ஆகும்.

Ø இதன் உறுப்பினர்கள் 

q உயிரோடு இருப்பவர்களையும்,  இறந்தவர்களையும் [இறந்தவர்கள் என்பது வான்வீட்டில் வாழும் ஆன்மாக்களையும், இன்னும் உத்தரிக்கும் நிலையில் இருக்கும்  ஆன்மாக்களையும் உள்ளடக்கியது.]

q நமக்கு தெரிந்தவர்களையும் தெரியாதவர்களையும்

q பெரிய புனிதர்களையும், அதிகம் பேசப்படாதவர்களையும்(inconspicuous)

    உள்ளடக்கியது. 

Ø இறப்பையும் தாண்டி ஒருவரையொருவர் அன்பு செய்ய முடியும், ஒருவருக்ககொருவர் உதவ முடியும். 

Ø நமது பாதுகாவலர்கள், நாம் பெரிதும் மதிக்கும் புனிதர்கள் மட்டுமல்லாது வான்வீட்டில் இறைவனோடு இருக்கிறார்கள் என்று நாம் நம்பும் நமது உறவினர்கள், மற்றும்  நமது நண்பர்களையும் நமது ஜெபத்தின் மூலமும், வேண்டுதல்கள் மூலமும் நமக்காக இறைவனிடம் ஜெபிக்கவும் பரிந்துபேசவும் கேட்கலாம்.

Ø அதேபோல் நமது பரிந்துரை ஜெபத்தாலும், தவ முயற்சிகளாலும் உத்தரிக்கும் நிலையில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் ஆன்மாக்களுக்கு இறைவனிடமிருந்து பாவமன்னிப்பைப் பெற்றுக்கொடுத்து அந்த ஆன்மாக்களை மோட்ச ராஜ்யத்தில் கொண்டு சேர்க்க முடியும்.

Ø கிறிஸ்துவுக்காக நாம் செய்யும் செயல்கள், ஏற்றுக்கொள்ளும் துன்பங்கள் அனைத்தையும் பிறருடைய தேவைகளுக்காகவும், நன்மைகளுக்காகவும் ஒப்புக்கொடுக்க முடியும்.  இதன் எதிர்வினையாக கிறிஸ்துவுக்கு எதிராக நாம் செய்யும் பாவங்கள் நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் [நம் குழந்தைகள், அவர்கள் வழி சந்ததியினரையும்] பாதிக்கும் என்பதும் இந்த உறவின் ஒரு கசப்பான உண்மையும் கூட.

946 to 959 குறிப்புகளின் சுருக்கம்

புனிதர்களின் உறவு

i.          திருச்சபை என்பது ‘புனிதர்களின் உறவு’. இதன் விளக்கமாவது - புனிதப் படுத்தப்பட்டுள்ள பொருட்கள் சிறப்பாக நற்கருணை உடனான உறவு வழியாக கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டுள்ளோர் கிறிஸ்துவில் ஓருடலாய் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளனர்.

ii.          மனிதராய் பிறந்து கிறிஸ்துவுக்காகவும் மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து மரித்து புனிதராய் உயர்த்தப்பட்டவர்களுடன் நமக்கு உள்ள உறவையும் புனிதர்கள் உறவு என்கிறோம்.  கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து, கிறிஸ்துவுக்காகவும் பிறருக்காகவும் துன்பப்பட்டு கிறிஸ்துவுக்குள் மரிப்பவர்கள் அதன் பலனை அனைவருக்கும் அளிக்கிறார்கள்.[960]

v  புனிதர்கள் உறவு: அ) கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு இவ்வுலகில் வாழும் அனைவரும், ஆ) மரித்து உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்களும் மற்றும் இ) இந்த உலகில் வாழ்ந்து மரித்து தூய்மை ஆக்கப்பட்டு விண்ணகத்தில் வாழும் விண்ணகவாசிகளும், சேர்ந்து ஒரே உறவில் வாழ்கிறோம்; ஒரே திருச்சபையாய் இருக்கிறோம்.[961-962]

மரியாள் – கிறிஸ்துவின் தாய், திருச்சபையின் தாய்

158     புனிதர்கள் உறவில் அன்னை மரியாளுக்கு ஏன் அனைவருக்கும் மேலான இடம் அளிக்கப்பட்டுள்ளது?

i.    மரியாள் இறைவனின் தாய்

ii.    எனவே அன்னை மரியாளை விட அல்லது அவருக்கு இணையாக இந்த உலகில் எவருமே கிறிஸ்துவோடு பந்தத்தில் இருந்திருக்க முடியாது.

iii.    இந்த பந்தம் விண்ணகத்திலும் உள்ளது.  எனவேதான் தாயாம் திருச்சபைஅன்னையை தமத்திருத்துவத்தின் தாயாக உயர்த்தி;  விண்ணக மண்ணக அரசியாக பிரகடனப் படுத்தியுள்ளது.

iv.    கிறிஸ்து தான் மரிக்கும் முன் ‘இதோ உன் தாய்’ எனக்கூறி, நம் அனைவரின் தாயாக உயர்த்தினார்.  இந்த தாய் உறவினால்தான் அன்னை மரியாளுக்கு புனிதர்கள் உறவில் அனைவருக்கும் மேலான நிலை அளிக்கப்பட்டுள்ளது. [972]

இறைவனின் சித்தம் மிகவும் ஆபத்தானதும், வேதனை மிக்கதும் என அறிந்திருந்தும் அதற்கு மழுமனதோடு கீழ்படிந்தார்.  அன்னை மரியாள் இந்த உலகில் வாழ்ந்ததுபோல் வாழ்பவர்களும், மரியாள் கொண்டிருந்த நம்பிக்கை, தாழ்ச்சி, கீழ்படிதல் ஆகிய பண்புகளில் வாழ்பவர்களும் உறுதியாக விண்ணரசை அடைவார்கள்.

159     அன்னை மரியாள் நமக்கு உதவ முடியுமா?

முடியும்.  திருச்சபையின் தொடக்க காலத்திலிருந்தே நடந்துள்ள நிகழ்வுகள் இந்த உண்மையை நமக்கு தெளிவுபடுத்துகின்றன.  லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் இதற்கு சாட்சியமாகவும் உள்ளனர். [967-970]

v இயேசு தனது தாயை நமக்கும் தாயாக விட்டுச்சென்றதால் அன்னை மரியாள் நமக்கும் தாய்.

v நல்ல அன்னையர் என்றும் தம் பிள்ளைகளுக்கு துணையாக இருப்பர்.  நம் அன்னை மரியாளும் அப்படியே.

v அன்னை மரியாள் இந்த உலகத்தில் வாழ்ந்த போதே இயேசுவிடம் மற்றவர்களுடைய தேவைகளுக்காக பரிந்து பேசியுள்ளார்- கானாவூர் திருமணத்தில் மணமக்களின் சங்கடத்தைப் போக்கியவர்.

v எலிசபெத் கருவுற்றிருந்த காலத்தில் அவருக்கு உதவ விரைந்து சென்றவர்.

v பெந்தகோஸ்தெ நாளில் சீடர்கள் நடுவே இருந்து செபித்தவர்.

v அன்னை தமது பிள்ளைகள்மேல் கொண்டுள்ள அன்பு, பாசம், பரிவு என்றுமே குறைவு படாதது. எனவே நாம் உறுதியாக நம்பலாம் – அன்னை மரியாள் நமக்காக என்றும் இறைவனிடம் பரிவோடு பரிந்துபேசி நமக்கு வேண்டியவற்றைப் பெற்றுத்தருவார்.  இந்த நமது நம்பிக்கையால்தான் “இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வெண்டிக்கொள்ளும்” என அன்னையிடம் செபிக்கிறோம்.

160     அன்னை மரியாளை நாம் ஆராதிக்கலாமா?

கண்டிப்பாகக் கூடாது.  இறைவன் மட்டுமே ஆராதனைக்கு உரியவர். அனால் அன்னைக்கு நமது வணக்கத்தை செலுத்தலாம்.  அன்னை மரியாள் இறை இயேசுவின் தாய் என்பதாலும், அவர் விண்ணக மண்ணக அரசியாகப் போற்றப்படுவதாலும் புனிதர்கள் அனைவருக்கும் செலுத்தக்கூடிய சாதாரண வணக்கத்தைக் காட்டிலும் சிறப்பான வணக்கத்தை அன்னை மரியாளுக்கு செலுத்துகிறோம். [971]

v அராதனை என்பது படைத்தவரை, படைப்புக்கள் அனைத்தின் மீதும் அதிகாரம் கொண்டவரைக் கடவுள் என்று ஏற்று அவரை மட்டுமே வழிபடுவது.

v அன்னை மரியாள் நம்மைப் போல ஒரு படைப்பே.

v நன்பிக்கையின் அடிப்படையில் நமக்கும் தாய் அவர். தாய்க்கு உரிய வணக்கத்தை அவருக்கு செலுத்துகிறோம்.

v லூக்1:48  “ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்”. அன்னையே தன்னை தாழ்நிலையில் இருக்கும் இறைவனின் அடிமை என்று தெளிவு படுத்தியுள்ளார்.

v எனவேதான் அன்னைக்கு திருச்சபையால் அங்கிகரிக்கப்பட்ட திருத்தலங்கள் உள்ளன;  திருயாத்திரை செல்லும் இடங்கள் உள்ளன; திருச்சபை திருநாட்களை குறித்துக் கொடுத்துள்ளது; அன்னைக்கு பாடல்களையும் செபங்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது

v அத்தகைய சிறந்த செபங்களில் ஒன்றுதான் செபமாலை.  இது ஒரு மறை உண்மைகளின் தொகுப்பு ஆகும்.  எனவேதான் செபங்கள் அனைத்திலும் சிறந்ததாகவும் அன்னைக்கு பிடித்த ஒன்றாகவும் கருதப்படுகிறது.

963 to 972 குறிப்புகளின் சுருக்கம்

மரியாள் – கிறிஸ்துவின் தாய் – திருச்சபையின் தாய்

v  இறைமகன் மனுவுரு எடுக்க மரியாள் தனது சம்மதத்தை தெரிவித்தபோதே தன் மகன் நிகழ்த்தவிருக்கும் அனைத்திலும் உடனிருக்கவுவும் ஒத்துழைக்கவும் ஆரம்பித்துவிட்டார். மீட்பராகவும், மறைஉடலின் தலையாகவும் இயேசு கிறிஸ்து இருக்குமிடம் அனைத்திலும் அன்னை மரியாள் தாயாக இருக்கிறார்.[973]

v  பேறு பெற்றவரும் கன்னியுமான மரியாள்

Ø தனது மண்ணக வாழ்வு முடிந்ததும் ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்

Ø அங்கு தனது மகனின் உயிர்ப்பில் பங்குபெறுகிறார். 

Ø கிறிஸ்துவின் உடலான நம் அனைவரின் உயிர்த்தெழுதலுலை எதிர்நோக்கி இருக்கிறார்.[974]

v  இறைவனின் புனித அன்னையும், திருச்சபையின் தாயும் , புதிய ஏவாலுமான அன்னை மரியாள் விண்ணகத்தில் அன்னையின் நிலையில் இருந்து கிறிஸ்துவின் உடல் உறுப்புக்களாகிய நமக்காக செயலாற்றிக் கொண்டிருக்கிறார் என்று விசுவசிக்கிறோம்.[975]

பாவ மன்னிப்பை நம்புகிறேன்

[மறைக் கல்வியின் பாகம் இரண்டு- ‘கிறிஸ்தவ மறைபொருள்களின் கொண்டாட்டம்’ என்ற பகுதியில் திருச்சபையின் அருட்சாதனங்கள் பற்றி விரிவாகக் கற்க உள்ளோம். இங்கு பாவ மன்னிப்பில் திருமுழுக்கு மற்றும் ஒப்புறவு அருட்சாதனங்களின் பங்கு பற்றிய திருச்சபையின் அடிப்படை விசுவாசத்தை மட்டும் சுருக்கமாக கற்க உள்ளோம்]

161     பாவங்கள் எவ்வாறு மன்னிக்கப் படுகின்றன?

கிறிஸ்து உயிர்த்து விண்ணகம் செல்லும் முன் தூய ஆவியை திருத்தூதர்கள் மேல் பொழிந்து உலகில் மனிதரின் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்தார் (யோவா 20:22-230).  1. திருமுழுக்கு வழியாக நாம் பிறப்புநிலை பாவத்திலிருந்து கழுவப்பட்டு கிறிஸ்துவோடு இணைக்கப் படுகிறோம்.   2. திருமுழுக்கு பெற்றபின் நாம் உலகில் வாழும் நாட்களில் உலக தீய நாட்டங்களினால் கட்டிக்கொள்ளும் பாவங்களுக்கு ஒப்புறவு அருட்சாதனம்  (Sacrament of Penance) வழியாக மன்னிப்பைப் பெற்று  மீண்டும் இறைவனோடு இணைகப்படுகிறோம். [976-980]

162     திருச்சபை பாவத்தை மன்னிக்க முடியுமா?

முடியும்.  இயேசு தானே பாவங்களை மன்னித்தார். அதோடு பாவங்களை மன்னித்து மனிதரை பாவத்திலிருந்து விடுவிக்கும் பணியையும் அதிகாரத்தையும் திருச்சபைக்கு வழங்கியுள்ளார். [981-983, 986-987]

v பாவத்தை ஏற்று, அதற்காக மனம் வருந்தி, அதனை அறிக்கயிட்டு, மன்னிப்புப்பெற முன்வரும் எவருக்கும் தனது குருத்துவப் பணியின் அதிகாரத்தால் குருவானவர் அவரின் பாவங்களை மன்னிக்க முடியும். 

v குருவானவர்  பாவக்கறைகளை முழுமையாகா நீக்கியதின்விளைவாக ஒருவர் பாவத்தைக் கட்டிக்கொள்ளாத போது எத்தகைய பரிசுத்தத்தோடு இருந்தாரோஅதே பரிசுத்தமாக அவர் தூய்மையாக்கப்படுகிறார்.  இயேசு பாவங்களை மன்னிக்கும் இறைவல்லமையில் குருவானவருக்கு பங்களித்திருப்பதால் மட்டுமே இது சாத்தியமாகிறது.

v லூக்24:47‘பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும்’.  யோவா20:23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.

v திருத்தூதர்களும் அவர்கள் வழி வருபவர்களும் (ஆஆயர்கள், குருக்கள்) இயேசுவிடமிருந்து பெற்றுக்கொண்ட அதிகாரத்தின் வழியாக இந்த ஒப்புறவு பணியைச் செய்துவருகிறார்கள்.

v பாவ வழியை விட்டு விலகி வரும் எவருக்கும் இரக்கத்தின் வாயிலை, மன்னிப்பின் வாயிலை திருச்சபை எப்போதும் திறந்தே வைத்திருக்க வேண்டும்.  காரணம் இயேசு அனைவரையும் மீட்கவே தன்னை பலியாகக் கொடுத்தார்.  எவ்வளவு பெரிய பாவமாக இருந்தாலும், ஒருவர் உண்மையிலேயே  வருந்தி, திருந்தி  மன்னிப்பு வேண்டினால் திருச்சபையால் மன்னிக்க இயலும்.

976 to 983 குறிப்புகளின் சுருக்கம்

பாவமன்னிப்பை விசுவசிக்கிறேன்

v  உயிர்த்த கிறிஸ்து தனது அப்போஸ்தலர்களுக்கு தூய ஆவியாரை அளித்த போதே பாவங்களை மன்னிக்கும் அதிக்காரத்தையும் அவர்களுக்கு அளித்தார். எனவே தூய ஆவியாரை விசுவசிக்கிறேன் என்று அறிக்கயிடுவதும் பாவமன்னிப்பை விசுவசிக்கிறேன் என்பதும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.[984]

v  திருமுழுக்குதான் பாவங்களை மன்னிக்கும் அருட்சாதனம். அதுவே நம்மை, நமக்காக மரித்து உயிர்து நமக்கு தூய ஆவியாரை அளித்த,  கிறிஸ்துவுடன் இணைக்கிறது.[985]

v  கிறிஸ்துவின் தீர்மானத்தின் படி திருமுழுக்குப் பெற்ற அனைவரின் பாவங்களையும் மன்னிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. ஆயர்கள் குருக்கள் வழியாக ஒப்புறவு அருட்சாதனத்தில் அதை (பாவ மன்னிப்பை) செயல்படுத்துகிறது.[986] 

v  பாவமன்னிப்பைப் பொறுத்தமட்டில் திருவட்சாதனமும் , அதனை நிறைவேற்றும் குருவும் கருவிகளே.  ஆண்டவரும் நம் மீட்பருமாகிய  இயேசு கிறிஸ்துவே நம்மை பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தி அருள் வாழ்வுக்கு தகுதியுள்ளவர்களாக ஆக்குகிறார்.[987]

உடலின் உயிர்ப்பை விசுவசிக்கிறேன்

163      இறந்தோர் உயிர்த்தெழுவர் என்று ஏன் விசுவசிக்கிறோம்.

கிறிஸ்து மரித்து உயிர்த்தார், நித்தியத்திற்கும் வாழ்கிறார்,  தனது நித்திய வாழ்வில் நமக்கும் பங்கு அளிக்கிறார்.  கிறிஸ்துவின் இந்த வாக்குறுதியின் அடிப்படையில்தான்  “இறந்தோர் உயிர்த்தெழுவர்” விசுவசிக்கிறோம்.  [988-991]

யோவா11:25“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.

1கொரி15:13-14, 19-20 13இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும். 14கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும். 19கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம். 20ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது

164      உடல் என்னும் சொல்லின் பொருள் என்ன?

உலக பாவ நாட்டங்களுக்கு பலவீனமானதும் மற்றும் சாவுக்கு உட்படக் கூடியதுமான மனிதனை “உடல்’” என்று குறிப்பிடப்படுகிறது.  [990]

165     உடலின் உயிர்ப்பு’  என்பதன் பொருள் என்ன?

நமது இறப்புக்குப்பின் நமது ஆன்மா வாழ்கிறது.  அதுபோல் இறப்பிற்குப்பின் சாவுக்குறிய நமது உடலும் ஒரு நாள் சாவுக்கு உட்பட முடியாத ‘உடலாக’ எழுப்பப்படும் என்பதே ‘உடலின் உயிர்ப்பு’  என்பதன் பொருள். [990]

166     உடலின் உயிர்ப்பை ஏன் விசுவசிக்கிறோம்?

மனுக்குலத்தை மீட்டெடுக்க இறைவன்  இயேசுக்கிறிஸ்துவின் வழியாக மனித உடலெடுத்து உலகிற்கு வந்தார்.  இறைவன் மனித உடலை தாழ்வுக்குறிய ஒன்றாகக் கருதவில்லை.  எனவே ஆன்மாவை மட்டும் அல்ல ஆன்மாவோடு உடலையும் மீட்க சித்தமானார். [988-991, 997-1001, 1015]

நாம் நம்பும் இரு மறை உண்மைகள்:

i.     கிறிஸ்து உண்மையாகவே சாவிலிருந்து உயிர்த்தார்; நித்தியத்திற்கும் வாழ்கிறார்.

ii.     கிறிஸ்துவே இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்:மத் 22:32.‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே’ என்று அவர் கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்”.  மாற் 12:27அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்”.  லூக் 20:38அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார்.

iii.     கிறிஸ்துவை உயித்தெழச் செய்த அதே இறைவன் இறுதிநாளில் நம் அனைவரையும் உயிர்த்தெழச்செய்வார்.  நாமும் கிறிஸ்துவோடு நித்தியத்திற்கும் வாழ்வோம்

1 கொரி15:20 ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

1 கொரிந்தியர் 15:52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்; நாமும் மாற்றுரு பெறுவோம்.

உரோ8:21அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது

167      நாம் இறக்கும் போது என்ன நிகழ்கிறது?

நாம் இறக்கும் போது

i.    நமது ஆன்மா நமது உடலில் இருந்து பிரிக்கப்படுகிறது.

ii.    உடல் உருக்குலைய ஆரம்பிக்கிறது

iii.    அதே சமயம் ஆன்மா இறைவனிடம் செல்கிறது.

iv.    இறுதி நாளில் உயித்தெழப்போகும் தன் உடலுடன் இணையக் காத்திருக்கிறது.

[992-1004, 1016-1018]

v எவ்வாறு நாம் உயித்தெழுவோம் என்பது ஒரு மறைபொருள்.

v உயித்தெழுந்தபின் நமது உடலின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பது நமக்கு எதுவுமே தெரியாது.

v பழைய எருசலேம் தேவாலயம் ஒரு இடத்தில் அமைந்துள்ள ஒரு ஆலயம், ஒரு கட்டிடம்.  அது அழிவுற்று புதிய எருசலேம் மலர்ந்தது.  அது எந்த ஒரு இடத்திலும் கட்டப்பட்டதல்ல மாறாக உலகமெங்கும் கிறிஸ்துவை விசுவசித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட மாந்தர் அனைவரையும் குறிக்கிறது.

v தூய பவுல் ஒன்றை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறார்: 1கொரி15:43-44 மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர்பெற்று எழுகிறது. 1கொரி15:35-37“இறந்தோர் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? எத்தகைய உடலோடு வருவார்கள்?” என ஒருவர் கேட்கலாம். அறிவிலியே, நீ விதைக்கும் விதை மடிந்தாலொழிய உயிர்பெறாது. முளைத்த பயிராக நீ அதை விதைக்கவில்லை; மாறாக வெறும் கோதுமை மணியையோ மற்றெந்த விதையையோதான் விதைக்கிறாய்.

லூக்கா 18:30;  யோவான் 3:15;  யோவான் 3:16;  யோவான் 4:14;  யோவான் 4:36;  யோவான் 5:39;  யோவான் 6:27;  யோவான் 6:40;  யோவான் 6:68;  யோவான் 12:25;  யோவான் 17:3; திருத்தூதர் பணிகள் 13:48; உரோமையர் 5:21; உரோமையர் 6:22; உரோமையர் 6:23;  1 யோவான் 1:2;  1 யோவான் 2:25;  1 யோவான் 3:15;  1 யோவான் 5:13;  1 யோவான் 5:20.

168      நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளும்போது நமது இறப்பின் போது கிறிஸ்து எவ்வாறு நமக்கு உதவுகிறார்?

கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளும் ஒவ்வொருவரையும் அவர்களது மரண வேளையில் அவர்களை சந்தித்து முடிவில்லா பேரின்ப வீட்டிற்கு அவரே அவர்களை அழைத்துச் செல்வார். புனித தெரெசா (லிசியுக்ஸ்) கூறுகிறார்: இந்த உலகில் இருந்து என்னை எடுத்துச் செல்வது இறைவன் – சாவல்ல. [1005-1014, 1016, 1019]

v கிறிஸ்துவின் பாடுகளையும் மரணத்தையும் நம் கண்முன் கொண்டுவந்தால் மரணம் என்பது ஒரு எளிதான நிகழ்வாகத்தான் நமக்குத் தோன்றும். 

v இறைவன் நம்மை அழைக்கும் போது ‘இதோ வருகிறேன்’ என்று சொல்வது நாம் இறைவன் மேல் கொண்டுள்ள அன்பின் மற்றும்  நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.

v கிறிஸ்துவும் கெத்சமனித் தோட்டதில் அதையேதான் செய்தார்.

v மரண வேளையில் ஒருவர் அவ்வாறு கூறும் போது கிறிஸ்துவின் சிலுவைப்பலியில் அவர் தன்னையும் இணைத்துக்கொள்கிறார். எனவே பெரிய பாவம் அவரிடம் இல்லாத நிலையில் இயேசுவோடு அவரும் உயிர்த்து விண்ணகம் செல்கிறார்.

v 2திமோ2:11“நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்;

v உரோ14:8 8வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே, வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்.

988 to 1014 குறிப்புகளின் சுருக்கம்

உடலின் உயிர்ப்பை விசுவசிக்கிறேன்

v  மனிதரின் மீட்புக்கு ஆதாரமாக இருந்து இயக்குவது மனித உடலே. 

Ø மனித உடலைப் படைத்தவர் இறைவனே

Ø அவர் மனித உடல் எடுத்தது அதை மீட்பதற்காகவே

Ø உடல் உயிரோடு எழுப்பப்படும். 

Ø உடலின் படைப்பும் அதன் மீட்பும் உயிர்ப்பில்தான் முழுமை பெறுகிறது.[1015]

v  இறப்பின் போது ஆன்மா உடலைவிட்டு பிரிகிறது.  உயிர்ப்பின் போது நமது உடலுக்கு அழியாத்தன்மையைக்கொடுத்து நமது ஆன்மாவுடன் மீண்டும் இணையச் செய்கிறார்.  கிறிஸ்து உயிர்த்து நித்தியத்திற்கும் வாழ்வதுபோலவே இறுதிநாளில் நாமும் உயிருடம் எழுப்பப்பட்டு நித்தியத்திற்கும் அவரோடு வாழ்வோம்.[1016]

v  உயித்தெழுதலின் போது நாம் இப்போது கொண்டிருக்கும் உடலோடு உயிர்ப்போம்.   அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால் ஆவிக்குரிய உடலும் உண்டு. (1 Cor 15:42-44). இதுவே நமது விசுவாசம்.[1017]

v  பிறப்புநிலை பாவத்தினால் மனிதன் சாவை சந்திக்கிறான். பாவம் செய்யாதிருந்தால் சாவிலிருந்து அவன் விடுதலை பெற்றிருப்பான்.[1018] 

v  இறைமகன் இயேசு தன் தந்தையின் சித்தத்தையும் விருப்பதையும் நிறைவுபெறச் செய்வதற்காக சிலுவைச்சாவுக்கு தன்னையே மனமுவந்து கையளித்தார்.  தன் சாவின் வழியாக சாவையே வெற்றிகொண்டார்.  நம் அனைவரின் மீட்பையும் சாத்தியமாக்கினார்.[1019]

 

நிலைவாழ்வை விசுவசிக்கிறேன்

நிலைவாழ்வு என்றால் என்ன?

இறப்பிற்க்குப் பிறகு உடனேதொடங்கும் வாழ்வு இது.  முடிவே இல்லாத தன்மை உடயையதால் இந்த வாழ்வை நிலைவாழ்வு என்று அழைக்கிறோம். ஒரு மனிதன் இறந்த அந்த நொடியில் அவனது ஆன்மா ஒரு குறிப்பிட்ட தீர்ப்பின் வழியாக நித்தியத்திற்குமான ஒரு சம்பாவனையை பரிசாக அல்லது தண்டனையாகப் பெறுகிறது.  தீர்ப்பை வழங்குவது  ‘வாழ்வோரின் மற்றும் இறந்தோரின் ஒரே நீதிபதியான’ கிறிஸ்துவே. [1020]

169      தீர்ப்பு எத்தனை வகைப்படும்? அவை யாவை?

தீர்ப்பு இரண்டு வகைப்படும். 

       i.     தனித் தீர்ப்பு: ஒரு மனிதன் இறந்த அந்த நொடியில் அவன் ஆன்மாவுக்கு வழங்கப்படுவது தனித் தீர்ப்பு.  ஒருவரின் நம்பிக்கைக்கும், பிறர் அன்பு செயல்களுக்கும் ஏற்பத் தன் அழியா ஆன்மாவில் கடவுளிடமிருந்து கைமாறு பெற்றுக்கொள்வர்.  அந்த கைமாறு இருவகைப்படும்.

v  உடனடியாகவோ அல்லது தகுந்த தூய்மையாக்குதலுக்குப் பிறகோ (உத்தரிக்கும் நிலையின் முடிவுக்குப் பிறகோ) விண்ணகப் பேரின்பத்தை  அடைவர். 

v  நரகத்தின் முடிவில்லா தண்டனையை அடைவர்.

      ii.          பொதுத் தீர்ப்பு: இது இறுதித் தீர்ப்பு எனவும் அழைக்கப் படுகிறது. உலகின் இறுதி நாளில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இருக்கும்.  அப்போது கிறிஸ்து நடுவர் இருக்கையில் அமர்ந்து அளிக்கும் தீர்ப்பே பொதுத் தீர்ப்பு என அழைக்கப் படுகிறது. மத்25:31-46. [1021-1022]

v தனித் தீர்ப்பில் ஆன்மா ஏற்கனவே கைமாறாகப் பெற்றுக்கொண்ட வெகுமதியிலோ அல்லது தண்டனையிலோ உயிர்த்த உடல் நித்தியத்திற்கும் வாழும்.

 

170      விண்ணகம் என்றால் என்ன?

இறைவனின் கருணையிலும், நட்புறவிலும் மரிக்கும் ஒருவர் முழுவதும் தூய்மை ஆக்கப்பட்டபின் நித்தியத்திற்கும் கிறிஸ்துவோடு வாழ்கிறார். நித்தியத்திற்கும்  இறைவனை அவரது உண்மையான தோற்றத்தில் முகமுகமாய் தரிசுத்துக் கொண்டிருப்பார். விண்ணேற்பு அடைந்த கிறிஸ்துவோடும், வானதூதர்கள், புனிதர்கள் அனைவரோடும் அன்னை மரியாளோடும் விண்ணக மாட்சியில் நித்தியத்திற்கும் வாழ்வார்.  இத்தகைய பாக்கியத்தால் அவர் கடவுளைப்போலவே தோன்றுவார்.  தூய மூவொரு கடவுளின் அன்பிலும், உறவிலும், மாட்ச்சியிலும், மற்றும் அன்னை மரியாள், வானதூதர்கள், புனிதர்கள் அனைவரோடும் நித்தியத்திற்கும் முடிவில்லா பேரின்பத்தில் வாழும் ஒரு உன்னத நிலையையே விண்ணகம் என்று அழைக்கிறோம். [1023-1026, 1053]

கொரி13:12 ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.

 

 

171      உத்தரிக்கும் நிலை அல்லது தூய்மைபெறும் நிலை என்றால் என்ன?

இறைவனின் நட்புறவிலும், கருணையிலும் இறந்தவர்களிடம், விண்ணக பேரின்பத்தில் நுழைய தடயையாய் இருக்கும், இன்னும் கழுவப்பட வேண்டிய, பாவ கறைகள் இருக்கக் கூடும்.  இத்தகையவர்களின் ஆன்மா விண்ணக பேரின்பத்தில் நுழைய அவசியமான புனிதத் தன்மையை அடைய தூய்மைப் படுத்தும் நிலைக்கு  உட்படுத்தப் படுகிறார்கள்.  இந்த நிலையைத்தான்  “உத்தரிக்கும் ஸ்தலம்” அல்லது  “தூய்மை பெறும் நிலை” என்று அழைக்கிறோம். [1030-1031]

v “தூய்மை பெறும் நிலை” நரகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலை. 

v ‘தூய ஆவியாருக்கு எதிராக கட்டிக்கொள்ளும் பாவங்களுக்கு’ என்றுமே மன்னிப்பு கிடையாது என்று கிறிஸ்துவே தெளிவுப்டுத்தியுள்ளார்.

v சில பாவங்களுக்கு இந்த உலகிலேயே ஒப்புறவு அருட்சாதனம் வழியாக மன்னிப்புப் பெறலாம்.  மன்னிப்புப் பெறாத இத்தகைய பாவங்களிலிருந்து அடுத்த நிலையில் (“தூய்மை பெறும் நிலை”) தூய்மை அடையலாம் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

v இந்த கோட்பாட்டை கத்தோலிக்கத் திருச்சபையும்  “ஃப்ளோரன்ஸ் மற்றும் ட்ரெண்ட் அமர்வில்” வகுத்துள்ளது.

v மத்26:75; மாற்14:72; லூக்22:61,62 ‘ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்: “இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார்’.  அந்த நேரத்தில் பேதுருவுக்கு இருந்த உணர்வுகள், அனுபவித்த மன வேதனை, பட்ட அவமானம் இவற்றை “தூய்மை பெறும் நிலை”யில் இருக்கும் ஆன்மாவின் வேதனையை ஒப்பிடலாம்.

v நம்மில் பெருபாலானோர் இறக்கும் தருவாயில் பேதுருவின் நிலையிலேதான் இருப்போம். 

v நம் மரணவேளையில் இயேசு அன்போடும் கருணையோடும் நம்மை நோக்கும் போது நமது  அருவருக்கத்தக்க பாவங்களும், பிறர் அன்பில்லா செய்ல்களும் நம் கண்முன் வந்து பேதுரு அனுபவித்த அதே அவமானமும், வேதனை மிகுந்த துக்கமும் நம்மை சுட்டெரிப்பதை அனுபவிப்போம்.  அதற்காக மனம் நொந்து அழுவோம்.  இந்த வேதனைதான் நம்மை நமது பாவங்களிலிருந்து முற்றிலுமாகத் தூய்மைப்படுத்தி முடிவில்லா பேரின்பத்தைக் கொடுக்கும் விண்ணத்தில் நம்மை கொண்டுசேர்க்கும்.

 

172      தூய்மை பெறும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்கு நாம் உதவ முடியுமா? எவ்வாறு?

நம்மால் உதவ முடியும்.  திருமுழுக்கால் புதுப்பிறப்படைந்த அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஒரே உறவில் ஒருவரோடு ஒருவர் இணைக்கப் பெற்றுள்ளோம். இந்த மறைஉண்மையின்படி தூய்மை பெறும் நிலையில் வேதனைப் பட்டுக்கொண்டிருக்கும் ஆன்மாக்களோடு இணைக்கப்பட்டுள்ளோம்.  எனவே தூய்மை பெறும் நிலையில்  வேதனையில் வாழும் அந்த ஆன்மாக்களுக்கு நாம் உதவ முடியும்.

ஒரு மனிதன் இறந்தபின் தனக்குத்தானே எதுவும் செய்துகொள்ள முடியாது.  அந்த வல்லமை இறப்போடு முடிவுக்கு வந்துவிட்டது.  ஆனால் இவ்வுலகில் வாழும் நாம் அவர்கள் தேவைகளுக்கு உதவ முடியும்.  

v திருச்சபை பாரம்பரியத்தில் இறந்தவர்களுக்காக செபிக்கும் பழக்கத்தின் நோக்கம் இதுவே.

v திருச்சபையின் தொடக்க காலத்திலிருந்தே இறந்தோரின் ஆன்மா தூய்மைப் படுத்தப்பட

Ø இற்ந்தோரை நினைவுகூறல்

Ø செபித்தல்

Ø அனைத்திலும் உயர்ந்ததான திருப்பலி ஒப்புக்கொடுத்தல்

Ø பிறருக்கு தான தர்மம் செய்தல்

Ø தவ முயற்சிகளைக் கடைப்பிடித்தல்

போன்ற செயல்களை திருச்சபை பரிந்துரை செய்கிறது. அத்தகைய ஆன்மாக்களுக்காக அவர்களின் மீட்ப்புக்காக இத்தகைய உதவிகளைச் தாராளமாகச் செய்வது நமது கடமையும் ஆகும். [1032, 1414]

 

173      நரகம் என்றால் என்ன?

இறைவனை அன்பு செய்யாத போது அல்லது அன்பு செய்ய மறுக்கும் போது நாம் அவரைவிட்டு பிரிந்து சென்று விடுகிறோம்.  நாம் இறைவனுக்கு எதிராகவும், தனக்கு எதிராகவும் தனக்கு அடுத்திருப்பவருக்கு எதிராகாவும் பாவம் செய்யும் போது கடவுளின் அன்பிலிருந்து பிரிந்து சென்றுவிடுகிறோம். அன்பு செய்யாத எவரும் சாவுக்கு உள்ளாவார்கள்.  இத்தகைய சாவுக்குரிய பவத்தை (சாவானபாவத்தை) செய்துவிட்டு அதற்காக வருந்தாமலும், இறைவனின் இறக்கம் மிகுந்த மன்னிப்பையும் அன்பையும் நாடாமலும், பெறாமலும் இறந்தால் அவர் ‘தன் சொந்த விருப்பத்தின்’ பேரிலேயே நித்தியத்திற்கும் கடவுளை விட்டு பிரிந்திருக்கிறார்.  இவ்வாறு இறைவனையும் விண்ணுலகவாசிகள் அனைவரையும் நித்தியத்திற்கும் பிரிந்திருக்கும் நிலைதான் நரகம் என்பது.  [1033- 1037]

மத்தேயு 5:22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.

மத்25:41,45,46. பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்..  46இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.

மாற்9: 42“என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது. 43உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. 44உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். 45நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. 46உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். 47நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. 48நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.

 

174      கடவுள் எல்லயற்ற நன்மைத்தனம் நிறைந்தவராய் இருந்தால் நரகம் எப்படி இருக்க முடியும்?

இறைவன் யாரையும் நரகத்திற்கென்று முன்குறித்து வைப்பதில்லை.  மாறாக ஒருவர் இறைவன் அளித்துள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி, இறைவனின் இறக்கம் நிறைந்த அன்பை உதறிவிட்டு, தன் சுய முடிவின்படி சாவான பாவத்தைக் கட்டிக்கொண்டு அதில் நிலைத்திருந்து மரித்தால் மட்டுமே நித்தியத்திற்கும் இறைவனைப் பிரிந்து நரகத்திற்குத் தீர்ப்பிடப் படுகிறார். [1036-1037]

ஒருவர் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் அவனது மனமாற்றத்திற்காகவும் மீட்புக்காகவும் ஏக்கத்துடன் இறைவன் காத்திருக்கிறார். இருப்பினும் முடிவெடுக்கும் சுதந்திரத்தை மனிதனுக்கு அளித்துள்ளார்.  அவன் எடுக்கும் முடிவுக்கு மதிப்பளிக்கிறார். இதைத்தான் செய்யவேண்டும், இதையெல்லாம் செய்யாதே என்று நம்மை கட்டாயப் படுத்துவதில்லை. எனக்கு விண்ணகம் வேண்டாம்,  நரகத்திற்கு செல்லும் வழியில்தான் செல்வேன் என்று முடிவெடுத்தால் அவர் அளித்த சுதந்திரத்தின் காரணமாக செய்வதறியாது இருந்துவிடுகிறார்.

இறைவன் நமக்குக் குறித்துள்ள நாளையும் நேரத்தையும்  நாம் அறிய முடியாதென்பதால் இயேசுகிறிஸ்து நமக்கு அறிவுறுத்தியதுபோல் அந்த நேரத்திற்காக எப்பொதும் விழிப்பாகவும் தயாராகவும் இருத்தல் அவசியம்.  அப்போதுதான் நாம் இறந்தவுடன் மணமகனான கிறிஸ்துவுடனும், விண்ணக தூதர்களோடும் திருமண விருந்துக்குள் (விண்ணக மாட்சியில்) நுழைய தகுதி உள்ளவர்களாக இருப்போம். மாறாக பயனற்ற சோம்பேரி ஊழியனைப்போல் வாழ்ந்தால் இறைவன் நம்மைநோக்கி “பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்று கூறுவார்.  மத் 8:12;  13:42; 13:50;  22:13;  24:51;   25:30

2பேத்3:9 ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார்.

175      பொதுத் தீர்ப்பு என்றால் என்ன?

இது இறுதித் தீர்ப்பு எனவும் அழைக்கப் படுகிறது. உலகின் இறுதி நாளில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இருக்கும். விண்ணக தூதர் அனிகளோடு கிறிஸ்து விண்ணகத்திலிருந்து இறங்கி வருவார்.  கிறிஸ்துவின் குரலைக்கேட்டு கல்லறைகளில்  இருந்து இறந்தோர் உயிபெற்று எழுவர்.  அப்போது கிறிஸ்து நடுவர் இருக்கையில் அமர்ந்திருப்பார். அனைத்து நாடுகளின் மக்களும் அவர்முன் ஒன்றுகூட்டப் படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.  நல்லோர் விண்ணக மாட்சியில் நிலைவாழ்வு பெறவும் தீயோர்  நரக வேதனையை நித்தியத்திற்கும் அனுபவிக்கவும் கிறிஸ்து அளிக்கும் தீர்ப்பே பொதுத் தீர்ப்பு என அழைக்கப் படுகிறது. மத்25:31-46 (Jn 5:29). [1038-1041, 1058-1059]

v நடுவர் மன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கும் நாள்

v கிறிஸ்து விண்ணக மகிமையோடு வரும் நாள்.

v மறைவாய் இருந்த நம் எண்ணங்கள், செயல்கள், இறைவனோடும், அடுத்திருப்பவரோடும் நமக்குள்ள உறவு, அனைத்தும் வெளிப்படும் நாள்.

v படைப்பின்  நோக்கத்தை தெளிவாய் அறியும் நாள்

v இறைவனின் மீட்புத் திட்டத்தை அதன் வியத்தகு வழிகளை உணரும் நாள். 

v இறைவன் எல்லாம் வல்லவர் என்றபோதிலும் உலகில் தீய சக்திகளின் ஆதிக்கத்தின் பொருளை உணரும் நாள்.

v ஒருவர் நித்தியதிற்குமான விண்ணக மாட்சிக்கு செல்கிறாரா அல்லது நித்தியாத்திற்கும் இறைவனைப் பிரிந்து நரகத்தில் வாழப்போகிறாரா என்று முடிவுசெய்யும் நிகழ்வு.

v  நிலைவாழ்வுக்கு தீர்ப்புப் பெற்றவர்கள் தூய ஆன்மாவோடும் தூய உடலோடும் இறைவனின் மகிமையில் முடிவில்லா காலத்திற்கும் அவரைப்போற்றி புகழ்ந்துகொண்டிருப்பார்கள்.

v பொதுத் தீர்ப்பு நமக்கு விடுக்கும் செய்தி:  தந்தை குறித்துள்ள நேரமும் காலமும் உங்களுக்குத் தெரியாது.  எனவே இதுவே ஏற்றகாலம் என்று பாவ வழிகளைவிட்டு மனந்திரும்புங்கள்.  ஆண்டவர் மாட்சியுடன் நம்மை மீட்டுக்கொள்ள வருவார் எனும் மகிழ்சியான நம்பிக்கையையும் அதே வேளையில் நம்மில் தீர்ப்பப்பற்றி இறை அச்சத்தை ஏற்படுத்தி விண்ணக வாழ்வுக்கு நம்மைத் தயாரிக்க உதவுகிறது.

v 2பேது3:13அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

v மத்25:31-46.

புதிய விண்ணகம் மற்றும் புதிய மண்ணகம் பற்றிய எதிர்நோக்கு

176     உலகம் எவ்வாறு முடிவுக்கு வரும்?

  i.    உலகம் முடியும் நாளன்று புதிய விண்ணகமும் புதிய மண்ணகனும் படைக்கப்படும். (விண்ணகமும் மண்ணகனும் புதுப்பிக்கப்படும்) இது விண்ணக எருசலேம் என அழைக்கப்படும்.

ii.    தீயவற்றின் கவர்ச்சியும் சக்தியும் மறைந்துபோகும்.

iii.    கடவுளின் அரசு முழுமை பெறும்

iv.    மீட்கப்பட்டவர்கள் ஒரு நண்பரைப் பார்ப்பதுபோல் இறைவனை முகமுகமாய் தரிசிப்பார்கள். அவர்களின் அமைதி மற்றும் நீதியின் மேல் கொண்டுள்ள ஆவல் நிறைவு பெறும்.

v.     மூவொரு கடவுள்

v அவர்களோடு வாசம் செய்வார்.

v அவர்களின் கண்ணீரைத் துடைப்பார்

    vi.          அங்கு இறப்போ, துக்கமோ, அழுகையோ, துபதுயரங்களோ இருக்காது. [1042-1050, 1060]

       i.          இரைவனின் திருவருட்சாதனமாக விளங்கும் திருச்சபைத் தனது இவ்வுலக திருப்பயணத்தை நிறைவு செய்யும்.  மனித குலம் எந்த நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டாதோ அதாவது மூவொரு கடவுளோடு சங்கமிக்கும் அந்த நிகழ்வை உணரும்.

      ii.          கிறிஸ்துவோடு இணைந்தவர்கள் ‘மீட்க்கப்பட்ட சமூகத்தை’, ‘கடவுளின் தூய நகரத்தை’ ஏற்படுத்துவார்கள்.

     iii.          மாசற்ற செம்மறியின் மணமகளாகத் திகழ்வார்கள்.  அந்த மணமகள் இனிமேல் ஒருபோதும் தன்னை பாவத்தால் காயப்படுத்த்கிக் கொள்ளமாட்டாள். கறைபடுத்திக் கொள்ள மாட்டாள்.

976 to 1050 குறிப்புகளின் சுருக்கம்

நிலைவாழ்வை விசுவசிக்கிறேன்

v  வாழ்வோரின், இறந்தோரின் நீதிபதியான கிறிஸ்து ஒவ்வொரு மனிதனும் இறந்தவுடன் அவன் உலகில் வாழ்ந்தபோது செய்த பாவ  புண்ணியங்களுக்கேற்ப அவனது ஆன்மாவிற்கு நித்திய பலனை அளிக்கிறார். [1051]

v  கிறிஸ்துவின் அருளில் மரிக்கும் ஆன்மாக்கள் இறப்பிற்கு பின்பும் கூட இறைவனின் மக்களாக வாழ்கிறார்கள் என்பது நமது விசுவாசம். உயிர்ப்பின் நாளில் இந்த ஆன்மாக்கள் தங்கள் உடலோடு இணையும் போது சாவு நித்தியத்திற்கும் வெற்றிகொள்ளப்படும்.[1052] 

v  விண்ணகத் திருச்சபை என்பது இயேசுவையும் அன்னை மரியாளையும் அவர்களை சுற்றி இருக்கும் எண்ணற்ற ஆன்மாக்களையும்  உள்ளடக்கியதாகும் என்று நாம் விசுவசிக்கிறோம்.  விண்ணகத் திருச்சபை கடவுளின் அருள் பிரசன்னத்தால் நிறைந்திருக்கும். அந்த ஆன்மாக்கள்:

Ø அங்கு இறைவனை அவரின் உண்மையான தன்மையில் முகமுகமாய்த் தரிசித்துக் கொண்டிருப்பார்கள். 

Ø கிறிஸ்துவால் வழிநடத்தப்படும் இறை ஆட்சியில் வானதூதர்களோடு பல நிலைகளில் நட்புறவில் இருப்பார்கள். 

Ø சகோதர நேயத்தோடு நமது பலவீனங்களில் துணை நிற்பார்கள். 

Ø நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுவார்கள்.[1053]

 

v  இறைவனின் கருணையிலும் நட்புறவிலும் இறப்பவர்கள், இறக்கும் போது முழுவதும் தூய்மையாக இல்லாமல் இருந்தால்,  அவர்கள் மீட்கப்படுவது உறுதியாயினும், இறை மகிழ்ச்சியில் நுழைய தேவையான புனிதத்தைப் பெற, தங்களது இறப்பிற்குப்பின் தூய்மைக்கு உட்படுத்தப் படுகிறார்கள். [1054]

v  “புனிதர்கள் உறவு” என்ற நம்பிக்கையால், திருச்சபை இறந்தோருக்காய் கடவுளின்  இரக்கத்திற்காக செபிக்க, சிறப்பாக அவர்களுக்காய் திருப்பலி ஒப்புக்கொடுக்க, நமக்கு அறிவுறுத்துகிறது.[1055] 

v  கிறிஸ்துவின் படிப்பினைகளை மேற்கோள் காட்டி “துன்பமும் புலம்பலும் நிறைந்த  நித்திய சாவே நரகம் என திருச்சபை நம்மை எச்சரிக்கிறது. (மத்5:22,29; 22:13; 25:41)[1056]

v  நம் மனம் ஏங்கும் உண்மையான வாழ்வையும் மகிழ்வையும் கடவுளிடம் மட்டுமே பெறமுடியும். அதை அடைவதற்கே நாம் படைக்கப் பட்டோம்.  அத்தகைய வாழ்வையும் கடவுளையும் விட்டு நித்தியத்திற்கும் பிரிந்திருப்பதே நரகம் ஆகும்.[1057]

v  ஒருவரும் மீட்பை இழக்கக்கூடாது என்பதே திருச்சபையின் மன்றாட்டு. ஒருவர் தன்னைத்தானே மீட்டுக்கொள்ள இயலாது என்பது எத்துனை உண்மையோ அதே அளவு உண்மை அனைத்து மனிதரும் மீட்படைய வேண்டுமென கடவுள் விரும்புகிறார் என்பதும். மனிதரால் இது இயலாதது எனினும் கடவுளால் எல்லாம் இயலும்”.   1திமோ2:4; மத்19:26.[1058]

v   “தீர்ப்பு நாளில்  நாம் அனைவருமே நமது சொந்த உடலோடு,   நம்மைக் குறித்துகடவுளுக்குக் கணக்குக் கொடுக்க, கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன் நிறுத்தப்படுவோம்” என்பது கத்தோலிக்கத் திருச்சபையின் உறுதியான விசுவாச அறிக்கை.[1059]

v  காலம் நிறைவுறும் போது கடவுளின் அரசு முழுமை பெற்று வரும்.  அப்போது நீதிமான்கள் மாட்சிமை பொருந்திய உடலோடும் ஆன்மாவோடும் கிறிஸ்துவோடு இறையாட்சியில் பங்குபெறுவார்கள்.  அகிலம் முழுவதும் மாற்று உருபெறும். கடவுளே நித்தியத்திற்கும் அனைத்திலும் அனைத்துமாக இருப்பார்.[1060]

v  ஆமென்

177     நம்பிக்கை அறிக்கையின் முடிவில் வரும் “ஆமென்”என்பதன் பொருள் என்ன?

v  “ஆமென்” என்று சொல்லும் போது ஒவ்வொரு நம்பிக்கை அறிக்கையையும்  ‘உண்மை’ என்று பிரகடனப் படுத்துகிறோம்;  காரணம் இறைவன் நம்மை (தந்தை மகன் தூய ஆவியாரின் பெயரால் திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரையும்) கிறிஸ்துவ நம்பிக்கைகளுக்குச் சாட்சிகளாக நியமித்துள்ளார். “ஆமென்”  என்று சொல்லும் ஒருவர் முழுமன சம்மதத்தோடும், மகிழ்வோடும் இறைவனின் படைப்புச் செயலையும் மீட்புச் செயலையும் ஏற்று அறிக்கையிடுகிறார். [1061-1065]

v  ஆமென் என்பது ஒரு எபிரேயச் சொல். இச்சொல் நம்பிக்கை, ஈடுபாடு, நம்பகத்தன்மை, நேர்மை,  மற்றும் நிபந்தனையற்ற கீழ்படிதல் ஆகிய சொற்களின் அர்த்தங்களை உள்ளடக்கியது. ஆமென் என்று சொல்லும் ஒருவர் கிரிஸ்துவ நம்பிக்கை அறிக்கையில் கையொப்பம் இடுவதற்குச் சமம் என்று புனித் அகுஸ்தினார் கூறுகிறார்.ஆமென் என்று சொல்லும்போது கிரிஸ்துவின் வழியாக நாம் இறைவனை மகிமைப் படுத்துகிறோம். 2கொரி1:20 அவர் (கிறிஸ்து) சொல்லும் “ஆம்” வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப்புகழும்போது அவர் வழியாக “ஆமென்” எனச் சொல்லுகிறோம்

 

 

 

நிறைவு சிந்தனை

v  யாக்2:14என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா?

v  15ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, 16“நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;” என்பாரென்றால் அதனால் பயன் என்ன? 17அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும். 18ஆனால், “ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன” என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்; செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன். 19கடவுள் ஒருவரே என்பதை நீங்கள் நம்புகிறீர்கள்; நல்லதுதான். பேய்களுங்கூட அவ்வாறு நம்பி அச்சத்தால் நடுங்குகின்றன.  20அறிவிலிகளே, செயலற்ற நம்பிக்கை பயனற்றது என நான் எடுத்துக்காட்ட வேண்டுமா? 21நம் மூதாதையாகிய ஆபிரகாமைப் பாருங்கள். தம் மகன் ஈசாக்கைப் பீடத்தின்மேல் பலிகொடுத்தபோது அவர் செய்த செயல்களினால் அல்லவோ கடவுளுக்கு ஏற்புடையவரானார்? 22அவரது நம்பிக்கையும் செயல்களும் இணைந்து செயல்பட்டன என்றும், செயல்கள் நம்பிக்கையை நிறைவுபெறச் செய்தன என்றும் இதிலிருந்து புலப்படுகிறது அல்லவா? 23“ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் அவர் கடவுளின் நண்பர் என்றும் பெயர் பெற்றார். 24எனவே மனிதர் நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர் எனத் தெரிகிறது. 25அவ்வாறே, இராகாபு என்ற விலைமகள் தூதர்களை வரவேற்று வேறு வழியாக அனுப்பியபோது, செயல்களால் அல்லவா கடவுளுக்கு ஏற்புடையவரானார்! 26உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே.

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Fifty steps to a happy marriage life

 50 steps to a happy marriage life  Start each day with a kiss. *    Wear your wedding ring at all times. *    Date once a week. *    ...